கண்டியை கடைசியாக ஆட்சி செய்த மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை!
நமது பாடப் புத்தகத்திலும் கண்டி மன்னர் பற்றிய பாடம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் புதிய அறிமுகம் தேவையில்லைதான் ஆனாலும், மன்னரின் கைதுக்குப் பிறகு ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்பது நம்மில் பலருக்குத் தெரியாத விடயம்.
இலங்கையில் எழுதப்பட்டுள்ள வரலாற்றுகளின்படி சிங்களவர்கள் கண்டி மன்னனை கடைசி சிங்கள மன்னன் என்றும், கண்ணுசாமி நாயக்கர் என்ற இயற் பெயர் மன்னருக்கு இருப்பதால் தமிழர்கள் அவரை கண்டியின் கடைசி தமிழ் மன்னன் என்று அழைத்தார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல கண்டியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஆட்சி செய்திருந்தாலும் அவர் பிறப்பால் ஒரு தெலுங்கர் என்பதுதான் உண்மை.அந்தக் காலத்தில் சிங்களத்தை கொச்சையாக பேசும் தமிழர்களின் பேச்சு வழக்கை ‘அந்தர தெமல’ என்று அழைப்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் ஆந்திர தமிழ் என்பதாகும்.
கண்ணுசாமி நாயக்கருக்கு சகோதரர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு அக்கா மட்டும்தான் அம்மா பெயர் சுப்பம்மாள் வெங்கடபெருமாள்.
கண்டி மன்னரின் பூர்வீக மண் என்றால் அது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளிக்குறிச்சி என்ற ஊர்தான், அந்த ஊரில்தான் கண்ணுசாமி நாயக்கரின் இரத்த உறவுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட வாரிசு போட்டியின் காரணமாக கண்ணுசாமி குடும்பம் மதுரையிலிருந்து வெளியேறி புதுக்கோட்டை மகாராஜாவின் பாதுகாப்பில் பூலான் பட்டியில் சிறிது காலம் கண்ணுசாமியின் குடும்பத்தினர் வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இன்றைக்கும் அந்த ஊரில் கண்டி ராஜாவுக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அந்த ஊரோட பேரு விராச்சிலை. அங்குள்ள அம்மன் கோவிலில் கண்டி மன்னரின் வாரிசுகளுக்கு புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் மூலமாக முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று வரை அங்கே அது வழக்கத்தில் இருந்து வருகிறது.
அந்தக் காலத்தில் தமிழகம் தனி மாநிலமாக இருக்கவில்லை தெலுங்கர்களும் தமிழர்களும் ஒரே நிலப்பரப்பில் செரிந்து வாழ்ந்த காலக்கட்டம். அதனால் அந்த நாட்களில் நாயக்கர்கள் எல்லோரும் சரளமாக தமிழ் பேசுவார்கள்.
பூலான் பட்டியில் வாழ்ந்த கண்ணுசாமி குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்துக்கு சென்றவர்கள் அங்கே ராமேஸ்வர பெரிய கோவிலில் தெய்வீக பணியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.அதன் பிறகு கண்ணுசாமியின் தந்தை இறந்துவிட கண்டியை ஆட்சி செய்த இராஜாதி ராஜசிங்கனின் மனைவியின் தம்பியான கண்ணுசாமியை கண்டிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு கண்ணுசாமி நாயக்கர் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனாக 1798 ல் முடிசூடிய மன்னன் ஆங்கிலேயேர்கள் 1815ல் கண்டியை கைப்பற்றும் வரை பதினேழு வருட காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார்.
மன்னரை கைது செய்த ஆங்கிலேயே அதிகாரிகள் மீண்டும் ஒரு புரட்சியை நாயக்கர்கள் செய்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மன்னரின் இரத்த உறவுகள் அனைவரையும் கூண்டோடு இந்தியாவிற்கு நாடு கடத்திவிட முடிவு செய்தார்கள் அதன்படி கண்டி ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது.
1815 பெப்ரவரி 2 ம் திகதி கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேய அதிகாரிகள் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. எஹலபொல நிலமே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந் நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள். ஒப்பந்தத்தின் ஆங்கில நகலை ஆளுனரின் சார்பில் கலந்துக் கொண்ட டொய்லி வாசித்தார். அதைத் தொடர்ந்து சிங்களத்தில் ஏப்ரகாம் டி. சேரம் வாசித்தார்.
ஒப்பந்தத்தில் 14 சிங்களத் தலைவர்கள் கைச்சாத்திட்டனர். அவர்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முப்பாட்டன் உட்பட ஏழு பேர் தமிழில் ஒப்பமிட்டனர். ஒப்பந்தத்தில் முக்கியமாக மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனுக்கு இனி கண்டியில் எந்த அரசுரிமையும் கிடையாது அதே போல் அவரது வாரிசுகளுக்கும் எந்த உரிமையையும் கோர முடியாது, மன்னரின் வம்சத்தை சேர்ந்த, உறவினர்களான ஆண்கள் எவரும் கண்டியில் தங்கக் கூடாது. கண்டி அரசுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் இனி பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இயங்கும். ஆளுனரின் எழுத்து மூல உத்தரவின்றி எவருக்கும் மரணதண்டனை வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.கண்டி ஒப்பந்தம் நிறைவுபெற்றவுடனேயே மன்னரின் உறவினர்கள் அனைவரும் இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படடார்கள். மன்னரும், மகா ராணிகளும் சில மாதங்களுக்கு பிறகு 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பலில் இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.
இலங்கை அப்போது மதராஸ் கவர்னரின் ஆளுகையிலே இருந்திருக்கிறது. வெலிக்கடை சிறைச்சாலை அமைவதற்கு முன்பாகவே அமைக்கப்பட்ட பெரிய சிறைச்சாலைதான் தமிழகத்திலுள்ள வேலூர் சிறைச்சாலை, அப்போது இலங்கையில் பெரிய குற்றங்களை செய்த கைதிகளை வேலூருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
எனவே கண்டி மன்னரை கைது செய்த ஆங்கிலேயர்கள் அவரை வேலூருக்கு குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார்கள்.
வேலூர் சிறைச்சாலையில் 16 ஆண்டுகளை கழித்த மன்னர் சிறையிலேயே 1832 ஜனவரி 30 ஆம் திகதி இறந்துவிட்டார். மன்னரின் மனைவிகளில் இருவருக்கு சிறைச்சாலையிலேயே குழந்தையும் பிறந்திருக்கிறது.
அதன் பிறகு மன்னரின் வாரிசுகள் தமிழகத்தில் பல பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
மன்னர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வேலூர் பாலாற்றங்கரையிலேயே அடக்கம் செய்து, அந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் மன்னருக்கு ஒரு கல்லறையை அமைத்திருந்தார்கள் கால ஓட்டத்தில் கல்லறை கவனிப்பாரற்று சிதிலமடைந்து போக, 1990களில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முத்து மண்டபமாக கட்டியெழுப்பி அதனை உத்தியோகப்பூர்வமாக திறந்துவைத்தார்.
கண்டி மன்னர் உயிர் நீத்த ஜனவரி- 30ம் திகதியை மன்னரின் நினைவு நாளாக குருபூஜை விழா என்ற பெயரில் அவரின் வாரிசுகள் மன்னரின் கல்லறை அமையப் பெற்றுள்ள முத்து மண்டபத்தில் விழா எடுத்து வருகிறார்கள்.
இலங்கையின் பஞ்சாங்க கலண்டர்களில் ஜனவரி 30ம் திகதியை ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் நினைவு நாள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.
ஆனால் இலங்கையை பொருத்தவரையில் மன்னரின் நினைவு நாள் கலண்டரில் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கிறதே தவிர மன்னரின் நினைவு நாள் விழா இங்கே கொண்டாடப்படுவதில்லை.
தமிழ் நாட்டில் இந்த நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்படுவது இங்குள்ள அனேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மன்னரின் உறவினர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தமிழர்களாவே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு தமது தாய் மொழியான தெலுங்கு பேச முடியவில்லை.
கண்டி மன்னரின் உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் மன்னரின் போட்டோ பூஜை அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. மன்னரின் குருபூஜை நடைபெறும் ஜனவரி 30ம் திகதி கண்டி மன்னரின் ரத்த உறவுகள் அனைவரும் தவறாமல் வேலூர், முத்து மண்டபத்திற்கு வந்து விடுகிறார்கள்.
இந்த ஆண்டும் மன்னரின் 191வது நினைவு நாள், குரு பூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கண்டி மன்னரின் ஏழாவது தலைமுறை வாரிசான மதுரைச் சேர்ந்த அசோக்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அசோக்ராஜா மதுரையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்டவர் பிறப்பால் தெலுங்கர் என்றாலும், தமிழை தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அசோக்ராஜாவின் தாத்தா இலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கண்டி பென்சன் பெற்றவர் பல ஆண்டுகளாக கண்டி பென்சன் பெற்றதற்கான பத்திரம் அவரிடம் இருக்கிறது.
அந்தக் காலத்தில் மன்னர்களின் ஆட்சிப் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதற்கு பிறகு மன்னர் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டாலும் அவர்கள் ராஜபோகமாக வாழ்வதற்காக மாதாந்தம் மானிய தொகையாக மன்னர் குடும்பங்களுக்கு பென்சன் அனுப்பப்படுவது வழமைதான் அதன்படியே கண்டி மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை திரைச் சேரியில் இருந்து இந்தியாவுக்கு பணம் தொடர்ச்சியாக அனுப்பட்டு வந்த நிலையில் 1964ல் ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்டி பென்சன் முறைமையை அடியோடு நிறுத்தினார்.
“கண்டி பென்சன் இல்லேனாலும் கௌரவமாக வாழ்கிறோம் தொடர்ச்சியாக எமது பாட்டனான கண்ணுசாமி நாயக்கரின் நினைவு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் பரம்பரை என்பதில் பெருமை கொள்கின்றோம்.
கண்டி மன்னர் நினைவு நாளை, அரசு விழாவாக அறிவிக்கும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
விரைவில் அதற்கான அரசாணை கிடைக்கும்னு எதிர்பார்க்கின்றோம் என்று” என்று தமிழன் நாளிதழுக்கு கண்டி மன்னர் வாரிசு அசோக்ராஜா தெரிவித்தார்.🔴
நன்றி: தமிழன் நாளிதழ்- 05-02-2023