Saturday, October 19, 2019

ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறதாமே, ஜெயலலிதாவின் வேடத்துக்கு நடிகை ஷகீலா பொருத்தமாக இருப்பார் என்பது எனது கணிப்பு…?

MANI SRIKANTHAN
ஆர்.சுதர்ஷன்- வவுனியா.

என்ன சுதர்ஷன் ஜெயலலிதாவை இப்படி சொல்லிட்டீங்களே…
‘ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன்’ என்ற பாடல் காட்சியை பாருங்கள். அப்புறம் உங்களின் கருத்தை சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஷகீலா ஒரு வேளை வயதான ஜெயலலிதாவின் வேடத்துக்கு பொருந்தலாம்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் படமாகும் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் வேடத்தில் நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
MANI SRIKANTHAN
தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் கொலின்ஸ் வடிவமைக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மேக்கப் போட்டு பார்க்கப்பட்டதாம்.
ஜெயலலிதாவின் வேடம் கங்கனா ரணாவத்துக்கு கனகச்சிதமாக பொருந்தியும் விட்டிருக்கிறதாம். ஆகவே உங்கள் ஷகீலா தெரிவு சரிபட்டு வராது!

திரிஷாவுக்கு அடுத்த இடத்தில் மூத்த நடிகை அந்தஸ்தை யாருக்கு கொடுக்கலாம்.?
ஆர். கீதா- கிராண்பாஸ், கொழும்பு-14

சந்தேகமேயில்லாமல் தமன்னாவுக்கு கொடுக்கலாம். 13 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். சைரா நரசிம்மா ரெட்டி, பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன் என்று அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ள நிலையில் இப்போதும் பிஸியாக அவர் இருப்பது சாதனைதானே!
MANI SRIKANTHAN
“எல்லாரையும் போல நானும் லட்சியத்தோடுதான் சினிமா துறைக்கு வந்தேன். அந்த லட்சியத்தை முதல் படத்திலேயே அடைந்து விட்டேன். 13 வருடங்கள் கதாநாயகியாக எனது பயணம் நீடித்துக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெயரையும் புகழையும் முன்பே எதிர்பார்க்கவில்லை. சினிமா என்றால் எனக்கு விருப்பம். அதனால்தான் நடிகையானேன்.
நட்சத்திர அந்தஸ்து என்பது சினிமாவுக்கு வந்த புதிதில் என் மனதில் இருக்கவில்லை. நடிகையாக கேமரா முன்னால் வந்ததுமே எனது லட்சியம் நிறைவேறி விட்டது. மற்றதெல்லாம் போனஸ்தான். எந்தத் துறையாக இருந்தாலும் செய்கிற வேலையை விருப்பத்தோடு செய்தால் எல்லாமே நம்மை தேடி வரும்.” என்று சமீபத்தில் தமன்னா ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கும் பொன் மொழிகள்.

வரலாற்று படங்கள் வெற்றிப் பெறுமா..?
கே.எப்.எச். அஸ்னா- கெக்கிராவை.

இந்தியாவில் அதிக பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படங்கள் இரண்டும் மெகா வெற்றியை கொடுத்ததே மறந்து விட்டீர்களா…
இப்போது இந்திய பெறுமதியில் 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் வேலையும் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும்படி கதாநாயகர்களிடம் மணிரத்னம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். சரித்திர காலத்து கதை என்பதால் மன்னர் உள்பட அனைத்து ஆண் கதாபாத்திரங்களுக்கும் தலை முடி நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார். அதன்படி நடிகர்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
தாய்லாந்தில் உள்ள காடுகளில் 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்தப் போகிறார்கள்.
MANI SRIKANTHAN
இதே வேளை பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இராமாயணம் படத்தை மலையாளத்தில்  எடுக்கின்றனர். இது மூன்று பாகங்களாக மூன்று மொழிகளில் தயாராகிறது.
பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிக்கின்றார்கள்.
இந்த படத்தில் இராமன் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். சீதையாக நடிக்க சினேகாவிடம் பேசி வந்தனர். தற்போது அவருக்கு பதில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராவணன் வேடத்துக்கு பிரபாசின் தோற்றம் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

பராட்டா சூரி நாயகனாக நடிக்கப் போகிறாராமே, சரிபட்டு வருமா?
என்.ரேகா-  மொரட்டுவை.

MANI SRIKANTHAN
கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார்.
நாயகர்களாக நடிக்க ஆசைப்பட்டு காணாமல் போன நகைச்சுவை நடிகர்கள்தான் அதிகம். அந்த லிஸ்டில் சூரி வருவாரா என்பதை காலம் தான் முடிவு செய்யும். ஆனாலும் சூரி ரொம்பவும் உசாரான பேர்வழி, ரொம்ப கவனமாக இருப்பார் என்று கோடம்பாக்க நண்பர்கள் சொல்கிறார்கள்.
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமான சூரி இதுவரை 60 பது படங்களில் நடித்துள்ளார். இப்போது வெற்றிமாறன் இயக்கவுள்ள படத்திலேயே இவர் நாயகனாக நடிக்க இருப்பதாகக் கேள்வி.🔴

Saturday, October 5, 2019

பள்ளேகொடையில் முதல் தமிழ் நூலகம்!


-மணி ஸ்ரீகாந்தன்


‘ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!’ என்று ஜுலியஸ் சீசர் குறிப்பிடுகிறார்.
புத்தக வாசிப்பு என்பது ஒரு மனிதனை முழுமனிதனாக மாற்றும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்து.

ஆனால் நம்மில் எத்தனை பேர் வாசிக்கிறோம், என்று பார்த்தால் அது மிகவும் குறைவான எண்ணிக்கையே காட்டுகிறது.
நம் நாட்டை பொறுத்த வரையில் சிங்களத்தில் நிறைய வாசிப்பு பழக்கம் இருக்கிறது. தமிழில் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கையில் நடைபெறும் புத்தக கண்காட்சிகளுக்கு வரும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டாலே அதனை புரிந்துகொள்ளலாம்.
mani srikanthan
பள்ளேகொடை நூலகம்
 வடக்கு, கிழக்கு என்று பார்த்தால் அங்கே ஓரளவுக்கு வாசிகசாலைகள் அமைக்கப்பட்டு, வகுப்பறைகளுக்கு வெளியேயும் வாசிப்பு பரவாலாக நடைபெறுகிறது.
ஆனால் மலையகத்தில் பரவலாக இல்லை என்றாலும், விரல்விட்டு எண்ணும் அளவுக்கு ஓரிரு நூலகங்கள் மாத்திரமே உள்ளன.
சிறுதோட்ட பகுதிகளை உள்ளடக்கிய காலி, களுத்துறை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் நூலகங்கள் மருந்துக்கும் இல்லை. ஓரிரு பாடசாலைகளில் நூலகங்கள் இருந்தாலும் அவை முறையான பராமரிப்பு இல்லாமலும், நூல்கள் வாசிக்கப்படாமலும் தூசு படிந்து கிடக்கின்றன.

இதெற்கெல்லாம் முக்கிய காரணம் ஆசிரியர்களே! ‘சிலபஸ்’ கல்வி மட்டுமே போதுமானது என்று அவர்கள் கருதுவதால் மாணவர்களை மேலதிக வாசிப்புக்கு அவர்கள் தூண்டுவதில்லை.
இதனாலேயே நம்மில் படைப்பாளர்கள் உருவாகுவதில்லை. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு நகரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் இங்கே அப்படி இல்லை. நமக்கு தெரிந்து மலையகத்தை எடுத்துக்கொண்டால் எழுத்தாளர்களில் தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, மு.சிவலிங்கம், பிரமிளா பிரதீபன்,பாலா சங்குபிள்ளை உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே சொல்ல முடியும்.

mani srikanthan
வாசிப்பு பழக்கம் மட்டுமே நல்ல ஆளுமைகளையும், படைப்பாளர்களையும் உருவாக்கும் இதனை நாம் பள்ளிகளில் இருந்துதான் தொடங்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும். ஆனால் நம்மில் ஆசிரியர்களுக்கும் வாசிப்பு பழக்கம் என்பது பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியர் தொழிலுக்கு வந்துவிட்டாலே அவர்கள் கல்வியில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து விட்டதாக நினைப்பதாக ஒரு கூற்று உண்டு.

மேல் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள மாவட்டம்தான் களுத்துறை. இந்த மாவட்டத்தில் தமிழர்கள் வசிக்கும் 56 தோட்டங்களும், 37தமிழ் பாடசாலைகளும் இருக்கின்றன.
இங்கெல்லாம் இரு நூறுக்கும் அதிகமான ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளதோடு, இன்னும் பல ஆலயங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
தோட்ட மக்கள் உழைக்கும் பணத்தில் பெருந்தொகையை ஆலயங்களுக்கே செலவிடுகிறார்கள். ஆனாலும் இந்த மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

இதில் இன்னொரு வெட்கக்கேடான விடயம் என்னவென்றால் இந்த மாவட்டத்தில் சில பாடசாலைகளில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
‘கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இருப்பதால் சாமியை காயப்போடக் கூடாது’ என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிய குருக்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.
அதோடு வருடந்தோரும் வருசாபிஷேகம் செய்யப்பட்டு ஊரில் உள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
கோயில் கட்டிய அதிபர்களிடம் இதுப்பற்றி கேட்டால்,
‘நம்ம பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகத்தான்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் கோயில் கட்டிய பள்ளிகளில் கல்வி  வளர்ச்சி கண்டுவிட்டதாக தெரியவில்லையே!

mani srikanthan
து.செல்வகுமார்
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயமும் இருக்கிறது. இவர்கள் சொல்லுகிற கடவுள்கள் பிறந்த மண்ணில் (தமிழகத்தில்) பள்ளிகளில் கோயில்கள் இல்லை, சமயம் பாடமாகவும் இல்லை. ஆனால் அவர்கள்தான் மருத்துவத்திலும், அறிவியலிலும் உயர்ந்து இருக்கிறார்கள். நிலவுக்கு ரொக்கட்டும் அனுப்புகிறார்கள்.

“ஒரு  கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்” என்றாராம் மகாத்மா காந்தி.
வாசிப்பு என்பது ஒரு ஆத்மார்த்தமான விசயம் என்பதை நம்மவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல், ஆன்மீகத்தால் ஒரு அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்கலாம் என்று நினைப்பது மடமை.

இதே வேளை களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகமை பள்ளேகொடை என்ற தோட்டத்தில் உள்ள சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு சிறிய நூலகத்தை அமைத்திருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு நாம் அந்தப் பகுதிக்கு ஒரு விசிட் அடித்தோம்.

பள்ளேகொடை தோட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை கட்டடத்தையே நூலகமாக மாற்றி எமக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள்.
வாசி, வாசிக்கப்படுவாய் என்ற அழகான பேனர் வாசகத்தை கடந்து உள்ளே சென்று பார்த்தோம். ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களால் அந்த அறை நிறைந்து காணப்பட்டது.
அம்பேத்கர், பெரியார். பெர்னாட்ஷா, என்று நமக்கு நிறைவான தலைப்புகளில் சில புத்தகங்கள் கண்ணில்பட்டன.

“நமக்கு தெரிந்த அன்பர்களிடம் கேட்டு புத்தகங்களை வாங்கி இங்கே வைத்திருக்கிறோம், இன்னும் இந்த நூலகத்தை விரிவுபடுத்தணும், ஆனால் அதற்கு ஒரு பெரிய கட்டடம் தேவை. இதுக்கு யாராவது நல்ல மனம் படைத்த அரசியல்வாதிகள் உதவினால் நன்றியோடு இருப்போம்” என்று கோரிக்கை வைக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வா கவியிடம், “நூலகம் அமைக்கும் யோசனை எப்படி வந்தது?” என்று நாம் ஆச்சரியத்துடன் கேட்டோம்.

mani srikanthan
ப.ரொகான்
“ஆனந்தா விளையாட்டு கழகத்தின் பொருளாளர் ரொஹான் என்னிடம் வந்து இந்த நூலகம் அமைக்கும் எண்ணத்தை சொன்னார் உடனே எங்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இந்த நூலகத்தை உருவாக்கினோம்.
‘நூலகம் இல்லாத ஒரு ஊரை நான் ஒரு ஊராகவே மதிப்பதில்லை’ன்னு தோழர் லெனின் சொல்லியிருக்கிறாராம். அப்படி பார்த்தால் களுத்துறையில் இருக்கும் ஒரே ஊர் அது எங்க ஊருதாங்க” என்று நெஞ்சு நிமிர்த்தி செல்வா சிரிக்கிறார்.

இந்த நூலகம் உருவாவதற்கு ப.ரொகான்,  து.செல்வகுமார், சா.டிலான்,லோ.நிலேஷ் பிரவீன் உள்ளிட்டோர் தூண்களாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள்.அவர்களோடு ஆனந்தா விளையாட்டு கழக தலைவர் பா.குருபரன், செயலாளர் பா.மோகனதாஸ் உள்ளிட்ட பலர் ஆதரவாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

களுத்துறை மாவட்டத்துக்கான முன் மாதிரி நூலகம் அமைவதற்கு காரணமாக இருந்த ரொஹானிடம் பேசினோம்,
“கல்வி ரீதியில் இந்த மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இன்றைய காலத்துக்கு நமக்கு தேவையானது கல்வியும் நல்ல கருத்தியல் சிந்தனைகளும் தான். எமக்கு கிடைக்காத இது போன்ற விசயங்கள் எமது வருங்கால சந்ததிகளுக்கு நாம் அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவரினதும் கடமைதானே”என்ற ரொஹானின் கண்களில் எதையோ சாதித்துவிட்ட மாதிரி ஒரு பூரிப்பு!
mani srikanthan
இந்த இளைஞர்களின் தூர நோக்கு பார்வையும், சமுதாய அக்கறையும் நம் எல்லோருக்கும் இருப்பது அவசியம், ஆனாலும் இதனை ஊக்கப்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? புளத்சிங்கள பகுதியில் உள்ள ஒரு பிரபலமான தமிழ் பாடசாலைக்கு மனோ கணேசனின் அபிவிருத்தி நிதியிலிருந்து 11லட்சம் ரூபாவை நூலக கட்டடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, இப்போது அந்தக் கட்டடம் ஒரு கணித வகுப்பறையாக இயங்கி வருகிறது. ‘நூலகத்தில் ஏன் நூல்கள் இல்லை, நூல்களுக்கு என்ன நடந்தது?’ என்று ஒரு சமூக தன்னார்வலர் பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்தப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், ‘பாடசாலைக்காக அமைத்து தரப்படும் கட்டடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிப்போம். அதனை யாரும் கேள்வி கேட்கமுடியாது’ என்று பதிலளித்து இருக்கிறார்கள்.
அந்த பாடசாலையின் வாசிகசாலைக்காக இருந்த புத்தகங்களுக்கு என்ன நடந்தது? என்று தேடிப் பார்த்ததில் அந்த நூல்கள் ஒரு ஒதுக்குப்புறமான அறையில் தூசுப்படிந்து அநாதரவாக கிடக்கின்றனவாம்.
‘அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி’
என்கிறார், ஜோன்மெக்காலே. ஆனால் இவர்களின் சிந்தனையும் எண்ணமும் வேறு மாதிரி இருக்கிறதே....🔴