Monday, February 6, 2023

வேலூர் முத்து மண்டபத்தில் கண்டி ராஜா விழா




கண்டியை கடைசியாக ஆட்சி செய்த மன்னன்  ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை!
நமது பாடப் புத்தகத்திலும் கண்டி மன்னர் பற்றிய பாடம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் புதிய அறிமுகம் தேவையில்லைதான் ஆனாலும், மன்னரின் கைதுக்குப் பிறகு ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்பது நம்மில் பலருக்குத் தெரியாத விடயம்.

இலங்கையில் எழுதப்பட்டுள்ள வரலாற்றுகளின்படி சிங்களவர்கள் கண்டி மன்னனை கடைசி சிங்கள மன்னன் என்றும், கண்ணுசாமி நாயக்கர் என்ற இயற் பெயர் மன்னருக்கு இருப்பதால் தமிழர்கள் அவரை கண்டியின் கடைசி தமிழ் மன்னன் என்று அழைத்தார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல கண்டியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஆட்சி செய்திருந்தாலும் அவர் பிறப்பால் ஒரு தெலுங்கர் என்பதுதான் உண்மை.
அந்தக் காலத்தில் சிங்களத்தை கொச்சையாக பேசும் தமிழர்களின் பேச்சு வழக்கை ‘அந்தர தெமல’ என்று அழைப்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் ஆந்திர தமிழ் என்பதாகும்.  
கண்ணுசாமி நாயக்கருக்கு சகோதரர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு அக்கா மட்டும்தான் அம்மா பெயர் சுப்பம்மாள் வெங்கடபெருமாள்.
கண்டி மன்னரின் பூர்வீக மண் என்றால் அது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளிக்குறிச்சி என்ற ஊர்தான், அந்த ஊரில்தான் கண்ணுசாமி நாயக்கரின் இரத்த உறவுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட வாரிசு போட்டியின் காரணமாக கண்ணுசாமி குடும்பம் மதுரையிலிருந்து வெளியேறி புதுக்கோட்டை மகாராஜாவின் பாதுகாப்பில் பூலான் பட்டியில் சிறிது காலம் கண்ணுசாமியின் குடும்பத்தினர் வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இன்றைக்கும்  அந்த ஊரில் கண்டி ராஜாவுக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அந்த ஊரோட பேரு விராச்சிலை. அங்குள்ள அம்மன் கோவிலில் கண்டி மன்னரின் வாரிசுகளுக்கு புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் மூலமாக முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று வரை அங்கே அது வழக்கத்தில் இருந்து வருகிறது.


அந்தக் காலத்தில் தமிழகம் தனி மாநிலமாக இருக்கவில்லை தெலுங்கர்களும் தமிழர்களும் ஒரே நிலப்பரப்பில் செரிந்து வாழ்ந்த காலக்கட்டம். அதனால் அந்த நாட்களில் நாயக்கர்கள் எல்லோரும் சரளமாக தமிழ் பேசுவார்கள்.
பூலான் பட்டியில் வாழ்ந்த கண்ணுசாமி குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்துக்கு சென்றவர்கள் அங்கே ராமேஸ்வர பெரிய கோவிலில் தெய்வீக பணியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.அதன் பிறகு கண்ணுசாமியின் தந்தை இறந்துவிட கண்டியை ஆட்சி செய்த இராஜாதி ராஜசிங்கனின் மனைவியின் தம்பியான கண்ணுசாமியை கண்டிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.


அதன் பிறகு கண்ணுசாமி நாயக்கர் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனாக 1798 ல் முடிசூடிய மன்னன் ஆங்கிலேயேர்கள் 1815ல் கண்டியை கைப்பற்றும் வரை பதினேழு வருட காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார்.

மன்னரை கைது செய்த ஆங்கிலேயே அதிகாரிகள் மீண்டும் ஒரு புரட்சியை நாயக்கர்கள் செய்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மன்னரின் இரத்த உறவுகள் அனைவரையும் கூண்டோடு இந்தியாவிற்கு நாடு கடத்திவிட முடிவு செய்தார்கள் அதன்படி கண்டி ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது.

1815 பெப்ரவரி 2 ம் திகதி கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேய அதிகாரிகள் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. எஹலபொல நிலமே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந் நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள். ஒப்பந்தத்தின் ஆங்கில நகலை ஆளுனரின் சார்பில் கலந்துக் கொண்ட டொய்லி வாசித்தார். அதைத் தொடர்ந்து சிங்களத்தில் ஏப்ரகாம் டி. சேரம் வாசித்தார்.
ஒப்பந்தத்தில் 14 சிங்களத் தலைவர்கள் கைச்சாத்திட்டனர். அவர்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முப்பாட்டன் உட்பட ஏழு பேர் தமிழில் ஒப்பமிட்டனர். ஒப்பந்தத்தில் முக்கியமாக மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனுக்கு இனி கண்டியில் எந்த அரசுரிமையும் கிடையாது அதே போல் அவரது வாரிசுகளுக்கும் எந்த உரிமையையும் கோர முடியாது, மன்னரின் வம்சத்தை சேர்ந்த, உறவினர்களான ஆண்கள் எவரும் கண்டியில் தங்கக் கூடாது. கண்டி அரசுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் இனி பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இயங்கும். ஆளுனரின் எழுத்து மூல உத்தரவின்றி எவருக்கும் மரணதண்டனை வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
கண்டி ஒப்பந்தம் நிறைவுபெற்றவுடனேயே மன்னரின் உறவினர்கள் அனைவரும் இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படடார்கள். மன்னரும், மகா ராணிகளும் சில மாதங்களுக்கு பிறகு 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பலில் இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.

இலங்கை அப்போது மதராஸ் கவர்னரின் ஆளுகையிலே இருந்திருக்கிறது. வெலிக்கடை சிறைச்சாலை அமைவதற்கு முன்பாகவே அமைக்கப்பட்ட பெரிய சிறைச்சாலைதான் தமிழகத்திலுள்ள வேலூர் சிறைச்சாலை, அப்போது இலங்கையில் பெரிய குற்றங்களை செய்த கைதிகளை வேலூருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
எனவே கண்டி மன்னரை கைது செய்த ஆங்கிலேயர்கள் அவரை வேலூருக்கு குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார்கள்.
வேலூர் சிறைச்சாலையில் 16 ஆண்டுகளை கழித்த மன்னர் சிறையிலேயே 1832 ஜனவரி 30 ஆம் திகதி இறந்துவிட்டார். மன்னரின் மனைவிகளில் இருவருக்கு சிறைச்சாலையிலேயே குழந்தையும் பிறந்திருக்கிறது.
அதன் பிறகு மன்னரின் வாரிசுகள் தமிழகத்தில் பல பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.


மன்னர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வேலூர் பாலாற்றங்கரையிலேயே அடக்கம் செய்து, அந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் மன்னருக்கு ஒரு கல்லறையை அமைத்திருந்தார்கள் கால ஓட்டத்தில் கல்லறை கவனிப்பாரற்று சிதிலமடைந்து போக, 1990களில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முத்து மண்டபமாக கட்டியெழுப்பி அதனை உத்தியோகப்பூர்வமாக திறந்துவைத்தார்.
கண்டி மன்னர் உயிர் நீத்த ஜனவரி- 30ம் திகதியை மன்னரின் நினைவு நாளாக குருபூஜை விழா என்ற பெயரில் அவரின் வாரிசுகள் மன்னரின் கல்லறை அமையப் பெற்றுள்ள முத்து மண்டபத்தில் விழா எடுத்து வருகிறார்கள்.
இலங்கையின் பஞ்சாங்க கலண்டர்களில் ஜனவரி 30ம் திகதியை ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் நினைவு நாள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.


ஆனால் இலங்கையை பொருத்தவரையில் மன்னரின் நினைவு நாள் கலண்டரில் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கிறதே தவிர மன்னரின் நினைவு நாள் விழா இங்கே கொண்டாடப்படுவதில்லை.
தமிழ் நாட்டில் இந்த நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்படுவது இங்குள்ள அனேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மன்னரின் உறவினர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தமிழர்களாவே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு தமது தாய் மொழியான தெலுங்கு பேச முடியவில்லை.

கர்நாடகா, ஆந்திராவில் வாழ்பவர்கள் தெலுங்கிலேயே பேசுகிறார்கள் அவர்களால் தமிழ் பேச முடியவில்லை.

கண்டி மன்னரின் உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் மன்னரின் போட்டோ பூஜை அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. மன்னரின் குருபூஜை நடைபெறும் ஜனவரி 30ம் திகதி கண்டி மன்னரின் ரத்த உறவுகள் அனைவரும் தவறாமல் வேலூர்,  முத்து மண்டபத்திற்கு வந்து விடுகிறார்கள்.
இந்த ஆண்டும் மன்னரின் 191வது நினைவு நாள், குரு பூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கண்டி மன்னரின் ஏழாவது தலைமுறை வாரிசான மதுரைச் சேர்ந்த அசோக்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அசோக்ராஜா மதுரையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்டவர் பிறப்பால் தெலுங்கர் என்றாலும்,  தமிழை தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அசோக்ராஜாவின் தாத்தா இலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கண்டி பென்சன் பெற்றவர் பல ஆண்டுகளாக கண்டி பென்சன் பெற்றதற்கான பத்திரம் அவரிடம் இருக்கிறது.
அந்தக் காலத்தில் மன்னர்களின் ஆட்சிப் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதற்கு பிறகு மன்னர் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டாலும் அவர்கள் ராஜபோகமாக வாழ்வதற்காக மாதாந்தம் மானிய தொகையாக மன்னர் குடும்பங்களுக்கு பென்சன் அனுப்பப்படுவது வழமைதான் அதன்படியே கண்டி மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை திரைச் சேரியில் இருந்து இந்தியாவுக்கு  பணம் தொடர்ச்சியாக அனுப்பட்டு வந்த நிலையில் 1964ல் ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்டி பென்சன் முறைமையை அடியோடு நிறுத்தினார்.

“கண்டி பென்சன் இல்லேனாலும் கௌரவமாக வாழ்கிறோம் தொடர்ச்சியாக எமது பாட்டனான கண்ணுசாமி நாயக்கரின் நினைவு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் பரம்பரை என்பதில் பெருமை கொள்கின்றோம்.
கண்டி மன்னர் நினைவு நாளை, அரசு விழாவாக அறிவிக்கும்படி  தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.  
விரைவில் அதற்கான அரசாணை கிடைக்கும்னு எதிர்பார்க்கின்றோம் என்று” என்று தமிழன் நாளிதழுக்கு கண்டி மன்னர் வாரிசு அசோக்ராஜா தெரிவித்தார்.🔴

நன்றி: தமிழன் நாளிதழ்- 05-02-2023

Saturday, February 4, 2023

அகோரிகளின் ஆட்டம் - 1

 

களஆய்வு, படப்பிடிப்பு- ஒளிப்படக் காதலன் ஈஸ்வர்.

இந்து சமயத்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு பெரு நிகழ்வுதான் கும்பமேளா!
இந்தியாவில் லட்சக்கணக்காண மக்கள் ஒன்று கூடும் ஒரு பிரமாண்ட திருவிழாவாக கும்பமேளா நிகழ்வு பார்க்கப்படுகிறது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் இந்த பிரமாண்ட விழா நடைபெறுகிறது.
வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற போது பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களிலும் விழுந்தன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.


இவ் விழாவிற்கான சரியான திகதியை இந்து சோதிட சாத்திரத்தில் சொல்லப்படுவதை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. அதாவது குருபகவான் கும்ப ராசியிலும், சூரியபகவான் மேச ராசியிலும் பிரவேசிக்கின்ற நாளில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இந்த திருவிழா ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய அளவிலும் கொண்டாடப்படுமாம்.
அந்த கொண்டாட்டத்தை ‘அர்த் கும்ப்’ என்று அழைக்கிறார்கள். அரை கும்பமேளா என்பது அதன் அர்த்தம்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா கடந்த மார்ச் முதலாம் திகதியிலிருந்து சித்திரை 14 வரை ஹரித்துவாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பண்டைய நகரமான ஹரித்துவாரில் கங்கை நதியின் ஆற்றுப்படுகையிலே இந்த விழா நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனாலும் ஏறக்குறைய 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்று கும்பமேளா நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளாரக கலந்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த ஈஸ்வர் எம்மிடம் தெரிவித்தார்.



சென்னை நாளிதழ்களில் சுதந்திர புகைப்படக்கலைஞராக பணியாற்றும் ஈஸ்வர் ஒளிப்படக் காதலனின் நீண்டநாள் கனவுகளில் ஒன்றுதானாம் கும்பமேளாவுக்கு செல்வது. அந்தக் கனவு இந்த ஆண்டு நிறைவேறியதில் ஈஸ்வர்  ரொம்பவே மகிழ்ச்சியோடு இருக்கிறார்.

“கும்பமேளாவின் பெரிய ஹைலைட்டான விசயம் அகோரிகளின் வருகைதான். அகோரிகளின் மர்மம் நிறைந்த வாழ்க்கை பதிவுகளை நிறைய வாசித்திருக்கின்றேன். ஆனாலும் அவர்களை நேரில் பார்த்து படம் எடுத்தது ரொம்பவே வித்தியாசமான அனுபவம்தான்.
ஆட்டம், பாட்டம் என்று நிர்வாண அகோரிகள் ரொம்பவே ஜாலியாக இருக்கிறார்கள். கஞ்சா சுருட்டை வாயில் வைத்து அடி வயிறு வரை மூச்சை இழுத்து புகையை வெளிவிடும்  அழகு அலாதியானது. அவர்கள் விடும் கஞ்சா புகையில் அவர்களின் அகோரமான முகமும் மறைந்து விடுகிறது.
அந்த காட்சிகளை எனது கேமராவில் க்ளிக் செய்த போது சில அகோரிகள் இங்கேவா என்னைப் புகைப்படம் எடு என்று கூறி போஸ்சும் கொடுத்து நான் எடுத்த புகைப்படத்தை பார்த்து  கறை படிந்த பற்கள் காட்டி சிரித்தப்படியே, நன்றாக வந்துள்ளது என்று ஆசிர்வதித்தனர்.
அகோரிகள் ஆசீர்வதித்தில் மகிழ்ச்சிதான் என்றாலும், அவர்களின் தோற்றம் எனக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.”
என்று சொல்லி ஈஸ்வர் சிலீர்த்துப் போகின்றார்.

மகா சிவராத்திரிக்கு முந்தைய பத்து நாட்களும் சாதுக்களும்,  அகோரிகளும் ஹரித்துவாரின் வீதிகளில் ஊர்வலமாக சென்று மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார்களாம். தலைமை குரு தேரில் வலம் வரும்போது அவரோடு அகோரிகளும் வீதி உலா வருகிறார்கள்.
சாதுக்கள் மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் போது பக்தர்கள் காணிக்கைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களையும் சாதுக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனாலும் சாதுக்கள் அதனை பெற்றுக் கொள்ளவதில்லை சாதுக்களோடு வரும் உதவியாளர்கள் அவற்றை பெற்று கொள்வதையும் அவதானிக்க முடிக்கிறதாம்.

சென்னையிலிருந்து ஹரித்துவாருக்கு நேரிடையாக ரயில் சேவை இல்லை. அதனால் சென்னையிலிருந்து தில்லி நிஜாமுதீனுக்கு ரயிலில் சென்று அங்கிருந்து ஹரித்துவாருக்கு மற்றொரு ரயிலில் பயணிக்க வேண்டும்.
கோரோனா மெடிக்கல் ரிசால்ட் பெற்றவர்கள் மட்டுமே ஹரித்துவாருக்கு பயணிக்க முடியும் எனவே நானும் அதற்கு தயாராக அனைத்து மருத்துவ சான்றிதழ்களையும் முறையாக எடுத்துக் கொண்டு எனது பயணத்தை ஆரம்பித்தேன்.
“கடந்த மார்ச் 7ம் திகதி ஞாயிறு இரவு 7.30க்கு எமது ஹரித்துவார் பயணம் சென்னையிலிருந்து தொடங்கி ஒன்பதாம் திகதி காலை 8 மணிக்கு ஹரித்துவாரை சென்றடைந்தோம்.

இந்தியாவின் மிகவும் பழமையான நகாரங்களில் ஒன்றுதான் ஹரித்துவார். அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து விட்டு மஹா சிவராத்திரியான 11ம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி குளித்துவிட்டு அகோரிகளும், சாதுக்களும் புனித நீராடும் கங்கை நதிக்கரையில் அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றேன். அந்த அதிகாலையிலும் அத்தனை கூட்டம் அந்த கங்கை ஆற்றின் பாலத்தின் மேலிருந்து பார்க்கையில் கட்டெறும்பு கூட்டம் ஊர்ந்து செல்வது போல் தோன்றியது அவ்வளவு கூட்டம்.
இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி குரு சங்கராச்சாரியார் இந்துக்களையும், அவர்களது கோயில்களையும் காக்க வேண்டி ஏழுவகையான சாதுக்கள் சபைகளை அமைத்தார். அதன் பிறகு அப்பட்டியலில் மேலும் ஆறு சபைகள் இணைக்கப்பட மொத்தம் 13 வகையான சபைகள் உருவானதாக சொல்லப்படுகிறது.


கோவிட் நேரம் என்பதால் அஹாடா என்ற இடத்தில் ஒரு திறந்த வெளியில் சபைகளைச் சேர்ந்த சாதுக்கள் தங்குவதற்காக சமூக இடைவெளியுடன் கூடாரங்களை இந்திய அரசு அமைத்து கொடுத்திருந்தது.  அந்த கூடாரங்களில் அகோரிகள் குழுக்களாக தங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்த கூடாரத்துக்குள் கஞ்சா போதையிலேயே அகோரிகள் இருந்தார்கள், சிவனின் நினைவாக இருப்பதற்காகவே அவர்கள் கஞ்சாவை புகைப்பதாக ஒரு அகோரி அவருக்கு தெரிந்து உடைந்த ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார்.
அகோரிகளில் பெரும்பாலும் இந்தி மொழி பேசுகிற அகோரிகளே அதிகமாக இருந்தார்கள், தமிழ் அகோரிகள் யாராவது இருப்பார்களா என்று அகோரிகள் கூட்டத்திற்குள் புகுந்து தேடிப் பார்த்தேன் மருந்துக்கு கூட தமிழர்கள் அதில் இல்லை.
நாம் அறிந்து நான் கடவுள் ஆர்யா மட்டும்தான் தமிழ் அகோரியா இருக்கணும், என்று சிரித்துவிட்டு ஈஸ்வர் தொடர்ந்தார்.
“அகோரிகள் பெரும்பாலும் இந்தி, உருது, உள்ளிட்ட அவர்களின் தாய் மொழியிலேயே பேசுவதால் அவர்களிடம் எந்த தகவலையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
நாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ அல்லது ஒரு சுப நிகழ்ச்சிக்கு செல்லும்போது எப்படி உற்சாகமாக புறப்பட தாயாராவோமோ அதைப் போல் சாதுக்களும் அவர்களின் குருமார்களும் புனித நீராட தயாராகி கொண்டிருந்தனர் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது மணி காலை 7.30  அப்போது ஒரு தலைமை சாது அந்த இடத்திற்கு வந்து அனைவரிடமும் ‘எல்லோரும் தயாராகுங்கள் கங்கா நதிக் கரைக்கு புனித நீராட செல்லலாம் என்று கூறியதும் சாதுக்களும் அகோரிகளும் பெரும் ஆரவாரத்துடன் கங்கா நதிக் கரையை நோக்கிய உற்சாகமாக நடக்கத் தொடங்கினார்கள்.
குருமார்கள் அலங்கரித்த குதிரை வண்டியில் அமர்ந்து பயணித்தார்கள்.
பொது மக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி இருந்தனர் அவர்களை காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மக்கள் சாதுக்களின் ஊர்வலத்தைக்காண ஆவலுடன் ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் இருந்தனர்.
சரியாக காலை எட்டு பதினைந்துக்கு ஒரு ஹெலிகாப்டர் வானில் நான்கு முறை பறந்து லட்சக்கணக்கில் கூடியிருந்த சாதுக்கள் மீது மலர் தூவி விட்டு சென்றது.


காவல்துறையினர் ராணுவ வீரர்கள் மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்போடு கங்கா ஆரத்தி நடைபெறும் அர்கி பொடி எனும் இந்த இடத்திற்கு அதாவது இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த ஊர்வலம் நடந்தது.
கங்கை ஆற்றினை நெருங்கிய உடன் குருமார்கள் கங்கை ஆற்றின் படியில்  நிர்வான சாதுக்கள் சூழ்ந்து நிற்க கங்கை ஆற்றிற்கு பூஜை செய்து ஒரே நேரத்தில் அனைவரும் புனித நீராடினர்.
சாதுக்கள் நீராடும் இடத்திற்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கங்கையில் சாதுக்களின் நீராடல் காட்சிகளை விதவிதமான கோணத்தில் எனது கேமராவில் க்ளிக் செய்து கொண்டேன்.
நீராடல் முடிந்தது சாதுக்களும், அகோரிகளும் சிவனின் ஆலயத்தை நோக்கி ஆரவார ஆட்டத்துடன் நடக்க ஆரம்பித்தார்கள்…

நிர்வாண ஆட்டம் தொடரும்…