Saturday, March 7, 2015

தேவதாசி வரலாறு -5

பெருங்கோவில்களை அரசர்கள் ஏன் அமைத்தார்கள்?


அருள் சத்தியநாதன்

கோவில்களை இன்று நாம் இறைவனை வணங்கும் இடம் என்று மட்டுமே அறிகின்றோம். பண்டைய கோவில்கள் என்றால், வணங்குவதற்கு மட்டுமின்றி அதன் கலையம்சங்களுக்காகவும் பலர் அங்கே சென்று வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற பண்டைய கோவில்கள் வசீகரிப்பதற்கு, அவை கலைக்கோவில்களாக விளங்குவதே காரணம்.
பண்டைய காலத்தில் கோவில்களை அரசர்கள் தாம் வணங்குவதற்காக மட்டும் அமைக்கவில்லை. ஒரு கோவிலை அமைப்பது என்பது செலவுமிக்கக் காரியம். பல வருடங்கள் பிடிக்கும். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வேலை செய்வதன்மூலமே ஒரு பெருங்கோவிலை அமைக்க முடியும். இவ்வளவு காலத்தையும், பொருளையும் விழுங்கும் ஒரு கோவிலை அமைப்பதற்கு அரசனின் கடவுள் பக்தி மட்டுமே காரணமாக இருக்க முடியாது. தான் அமைக்கும் கோவில் தன் சிறப்புகளைச் சொல்வதாக, தன் ஆட்சியின் மேன்மையை பேசுவதாக இருக்க வேண்டும் என அரசன் விரும்பினான். இதனால்தான் சிற்பங்களையும் வேலைப்பாடுகளையும் கொண்டதாக இக்கோவில்கள் அமைந்தன.

ஆயிரம் வருடங்களுக்கு முன் தஞ்சையில் ஒரு பிரமாண்டமான கோவிலை இராஜராஜ சோழனால் அமைக்க முடிந்தது என்றால், அதற்கு அவன் பேரரசனாக விளங்கியதே காரணம். பல நாடுகளையும் வென்று அதன்மூலம் பொன்னும், மணியும், அடிமைகளையும், தொழில்திறன் கொண்டவர்களையும் அவனால் தஞ்சைக்குக் கொண்டுவர முடிந்தது. எனவே, அவன் தன் நாட்டின் வளத்தையும், தன் கீர்த்தியையும் ஒரு பிரமாண்டமான கோவில் அமைப்பதன் மூலம் வெளிப்படுத்தினான். அழகிய, நேர்த்தியான, கலை நுணுக்கங்கள் கொண்ட ஒரு கோவிலை ஒரு அரசனால் அமைக்க முடிகிறது என்பதன் பொருள், அந்த அரசன் செல்வச் செழிப்பான வீரம் நிறைந்த நாடுடையவன் என்பதை வெளிப்படுத்துவதேயாகும்.

இது அன்றைய மன்னர் கலாசாரம். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பொதுவானது.

மேலும் அன்றைய கோவில்கள், வங்கிகள் போன்று செயற்பட்டுள்ளன. அரண்மனை கஜானாவில் தன் செல்வத்தை வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் அரசர்கள் செல்வத்தின் ஒரு பகுதியை கோவில்களில் வைத்திருந்தனர். மூலவர் அலங்காரமாகவும் அரச செல்வம் வைக்கப்பட்டிருந்தது. மூல மூர்த்தி பொன்னாலும், உயர் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதோடு பொன் மற்றும் இரத்தினங்களினால் கோவில் சுவர்களும், உத்திரங்களும் அதன் மேற்புறமும் அலங்கரிக்கப்பட்டன. மன்னனின் கீர்த்தியை இவை வெளிப்படுத்தின.

கோவில் கிடங்குகளில் உணவுப் பண்டங்கள், குறிப்பாகத் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. அரச வருவாயின் ஒரு பகுதி இன்று ஏழை மக்களின் வறுமையைப் போக்கும் உதவித் திட்டங்களாக செயற்படுத்தப்படுவதைப் போலவே அன்று, கோவில்கள் ஊடாக ஏழைகளுக்கு தானியங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. கோவில் மண்டபங்கள் வழிப்போக்கர் தங்கும் இடமாகவும் விளங்கியது. மொத்தத்தில் கோவில் என்பது பல் நோக்கங்களைக் கொண்டதாகவும் குறிப்பாக அரசின், அரசனின் கீர்த்தியை எடுத்துக் காட்டுவதாகவும் விளங்கின.

இக்கோவில்களில் ஆடல் மகளிர்கள் நியமிக்கப்பட்டதும் இவ்வகையில்தான். ஒரு நாட்டுக்கு அல்லது மாநிலத்துக்கு ஒரு முக்கிய பிரமுகர் விஜயம் செய்கிறார் என்றால் அவரை விமான நிலையத்திலோ அல்லது வைபவமொன்றிலோ வரவேற்கும்போது ஆடல் பாடல்களுடன் வரவேற்கும் பண்பு இன்றும் வழக்கில் உள்ளது. அந்தந்த மண்ணுக்குரிய பண்புகள் இப்பாடல்களிலும் நடன அசைவுகளிலும் வெளிப்படுவது வழக்கம். பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்றாலும் இதே பண்பைக் காண முடியும். அரசவைகளிலும் அரசனையும், மந்திரி பிரதானிகளையும், விருந்தினர்களையும் மகிழ்ச்சிப்படுத்த நடன மணியினர் இருந்தனர். ஒரு பிரமுகரை வரவேற்று அவரை சிறப்பு அதிதியாகப் போற்றும்போது அங்கே ஆடலும் பாடலும் அவசியமாகிறது. நிச்சயமாக இது அப்பிரமுகரை மகிழ்ச்சிப்படுத்தும், கௌரவப்படுத்தும்.

கோவில்களில் ஆடல் மகளிர் நியமிக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, தன்னை மகிழ்ச்சியாகவும் பிரச்சினைகளை தற்காலிகமாக மறந்திருக்கவும் எப்படி அரசவை ஆடல் பாடல்கள் மன்னனுக்கு உதவுகின்றனவோ அவ்வாறே தான் அமைத்த கோவில்களிலும் கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவும், அவன் திருவருளைப் பெறவும், வழிபாட்டு முறைகள் அலங்கார ரூபத்துடன் நடத்தப்படுவதற்கும் உதவும் வகையில் ஆடல் மகளிர்மாரை அரசர்கள் கோவில்களில் பணிபுரிய அமர்த்தினர் என்பதே பொருத்தமான பதிலாகும்.

ஆரம்ப காலத்தில் இப்பணியைச் செய்வதற்கு அரசவை நடன மணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் கோவில்களில் மட்டுமே ஆடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கோவில் மகளிர் தேவதாசியர் என வழங்கப்பட்ட அதே சமயம், அரசவை ஆடல் மகளிர், இராஜதாசியர் என அழைக்கப்பட்டனர். இராஜதாசியர் கோவில்களில் நடனமாடுவதில்லை. எனினும் அரசன் கோவிலுக்கு வரும்போது அவனுடன் வரும் வழக்கம் இருந்தது.

இது தவிர, மன்னன் போர்களில் வெற்றிபெற்று நாடு திரும்பும்போது வெற்றி கொண்ட நாட்டின் செல்வங்களை தனது நாட்டுக்கு கொண்டு வந்தான். இது, போர் பொருளாதாரம். இச்செல்வங்களில் அடிமைகளாக்கப்பட்ட பெண்களும் அடக்கம். கொல்லப்பட்ட எதிரி நாட்டு வீரர்களின், மந்திரி பிரதானிகளின் மனைவியர், மகள்மாரும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டு அந்தபுரங்களில் தங்க வைக்கப்பட்டனர். அரசன் தான் எடுத்துக்கொண்ட பெண்கள் போக ஏனைய பெண்களில் சிலரை கோவில் பெண்களாகக் கோவில்களுக்கு அளித்தான். ஏனைய பெண்கள் படைத்தளபதிகள் மத்தியில் பகிரப்படுவது வழக்கம். அன்றைக்கு பெண்களுக்கு இருந்த மதிப்பு இவ்வளவுதான்! இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பெண்கள் நீண்ட இருள் சூழ்ந்த பாதையைக் கடந்து வந்திருப்பது தெரியும்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார் தன் மகள் நீலாதேவியை திருவரங்கக் கடவுளுக்கு தேவதாசியாக அர்ப்பணித்ததை (வரலாற்றில் தேவதாசியர் நூல் பக். 105 - ஆதாரம்: திருவாங்கூர் தொல்லியல் வரிசை ப. பக். 102 - 114) உறையூர் மன்னன் தந்த சோழன் மகள் சோழவல்லி தன்னைத்தானே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டதையும், இங்கே தனிப்பட்ட ரீதியாகவும் இத்தொண்டுக்கு பெண்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதை ஆதாரமாகக் காட்ட முடியும். சிலர் தமக்கு மகள் பிறப்பாள் என எதிர்பார்த்திருந்து மகள் பேறு கிடைக்காத நிலையில் ஏழைப்பெண்களை வாங்கி கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கமும் சோழர் காலத்தில் இருந்திருக்கிறது.

இராஜராஜசோழன் காலத்தில் ஒருவர் 700 காசுகளுக்கு நான்கு பெண்களை வாங்கி திருவாலங்காட்டு கோவிலுக்கு தேவரடியாராக அர்ப்பணித்ததாக ஒரு கல்வெட்டு செய்தி உள்ளது.   

வறுமை காரணமாக ஆண்கள் தம்மை அடிமைகளாக விற்றுக்கொள்வதும் பெண்கள் வறுமை காரணமாக செல்வந்தர், கோவில்கள் மற்றும் மடங்களுக்கு தம்மை விற்றுக்கொண்டு தொண்டு செய்வதும் பண்டைய தமிழகத்தில் இடம்பெற்று வந்த ஒன்றுதான். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின்போது வறுமை தாங்க முடியாத சில குடும்பங்கள் தம்மை குடும்பத்தோடு கோவிலுக்கு விற்றுக்கொண்டதாகவும் இவர்களில் தேவரடியார் பணிக்கு பெண்களும் ஏனைய கோவில் பணிகளுக்கு ஏனையோரும் நியமிக்கப்பட்டதாகவும் பண்டைய செய்திகள் உள்ளன. எனவே, இக்கல்வெட்டு செய்திகளின் ஊடாக சோழர் ஆட்சிக் காலத்தில் தேவதாசியர் அடிமைமுறை மற்றும் விற்பனை முறை நடைமுறையில் இருந்ததை அறிய முடிகிறது.

இத்தேவதாசியினருக்கு இலச்சினை இடும் வழக்கமும் சோழர் காலத்தில் இருந்திருக்கிறது. சைவ, வைணவ தேவதாசியரை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சைவாலய தேவதாசியினருக்கு சூல சின்னமும் வைணவ தேவதாசியினருக்கு சக்கரச்சின்னமும் பொறிக்கப்பட்டது.

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் கோவில் பணி செய்ய முன்வந்ததால், இவர்கள் அனைவரும் தேவரடியார் குலத்திலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இக்காலத்தை தேவரடியார் மரபு உருவாகிக்கொண்டிருந்த பருவம் என்றும் கொள்ளலாம். தேவதாசி மரபுக்கு வெளியில் இருந்து பெண்கள் கோவில்களுக்கு எடுத்துக் கொள்ளப்படக்கூடாது என்பதாலும், தேவதாசி குலத்தினரிடையே பொட்டு கட்டி விடும் வழக்கமும் தமது குழந்தைகளை தாய் வழியாக அறியும் வழக்கமும் தோற்றம் பெற்றிருக்கலாம். தேவதாசியர் தாம் பெற்றெடுக்கும் பெண் குழந்தைகளை பாட்டு, நடனம் என்பனவற்றில் பயிற்றுவித்து அவர்கள் வயதுக்கு வந்ததும் பொட்டு கட்டும் சடங்கை நடத்தி கோவிலுக்கு அர்ப்பணித்து விடுவார்கள். இதன்மூலம் தமது சந்ததியினர் தொடர்ந்தும் கோவில் பணி செய்வதன் மூலம் அந்த இடத்தை வெளியார் பிடித்து விடக்கூடிய ஆபத்தைத் தவிர்த்துக் கொண்டார்கள். கோவில் காணியிலேயே கோவில் அளித்த வீடுகளில் அவர்களால் தொடர்ந்து தங்கியிருக்க முடிந்ததோடு கோவில்களில் இருந்து கிடைக்கக் கூடிய பணம், உடைகள், உணவு என்பனவற்றைத் தொடர்ந்து அனுபவித்து வரவும் முடிந்தது.

(தொடரும்) 

Monday, March 2, 2015

கொழும்பு வாணிவிலாஸ் ஸ்தாபக அதிபர் சுப்பாராமனின் சிறப்புப் பேட்டி

நேர் கண்டவர் : மணி ஸ்ரீகாந்தன்

'வாணி விலாசுக்கு எதிரில் ஒரு பால் பண்ணை இருந்தது. ஹோட்டலுக்கு அங்கிருந்துதான் பால் வரும். விற்றது போக மிகுதி பாலை அக்கம் பக்கத்தாருக்கு இலவசமாகக் கொடுத்து விடுவோம்'

'அன்றைக்கு சிலர் நன்றாக சாப்பிட்டு விட்டு பில் கொடுக்காமல் ஓடி விடுவார்கள். கேட்டால், ஒளிந்திருந்து ஹோட்டலுக்கு கல் எறிவார்கள்'

இலங்கை சைவ உணவக வரலாற்றில் கொழும்பு வாணி விலாஸ்சுக்கும் ஒரு தனி இடம் இருக்கிறது. கடல் தாண்டி வந்த திருநெல்வேலிக்காரர்களின் கைமணம் ஐம்பதாண்டுகளைக் கடந்து இன்னமும் சுவை குன்றாமல் அப்படியே இருப்பது ஆச்சரியம், ஆனால் உண்மை.

தனது பதின்மூன்றாவது வயதில் முண்டா பணியனுடன் கொழும்பிற்கு வந்த வாணி விலாஸின் அதிபர் சுப்பாராமனின் அனுபவங்களும், திருநெல்வேலி இருட்டுக் கடை அல்லாவைப் போல இனிப்பாகத்தான் இருக்கிறது.

"என் மாமா சுப்பா ரெட்டியார்தான் என்னை கொழும்புக்கு கூட்டி வந்தார். வறுமையின் காரணமாகத்தான் பிழைப்புக்காக வந்தேன். ஆனா நான் அன்று அணிந்த பனியனை 'பாடி'னு சொல்லுவாங்க. கையில்லாத பனியனைப் போலத்தான் இருக்கும். ஆனால் முரட்டு பருத்தித்துணியால் தைக்கபட்டிருக்கும். இந்த பாடி, வேட்டியோட 'இர்வின்' என்ற கப்பலில் இலங்கை வந்தேன்.
அந்தக் காலத்துப் பயணம் இப்போ மாதிரி இலகுவானதாக இல்லை. ரொம்ப சிரமமான பயணம். திருநெல்வேலியிலிருந்து தனுஷ்கோடிக்கு நீராவி ரயிலில் வந்து அங்கிருந்து கப்பலில் ஏறினேன். நாலு மணி நேரத்தில் மன்னாருக்கு வந்து விடலாம். பிறகு மீண்டும் நீராவி கோச்சியில் ஏறி கொழும்பிற்கு வந்தேன். அந்தக் கப்பல் பயணம் ரொம்பவும் ஜொலியாக இருந்தது. எல்லோரும் தரையிலும் பெஞ்சிலுமாக அமர்ந்து கதை பேசியபடியே கொழும்பிற்கு வந்ததை இன்று நினைத்தாலும் இனிக்கிறது" என்று அந்தக் காலத்து நினைவுகளை அசைபோடும் சுப்பாராமன் அந்தக் கப்பல் பயணத்தில் தான் சந்தித்த ஒரு ஐரோப்பிய தம்பதியைப் பற்றிச் சொல்கிறார்.

"அவங்க நன்றாகவே தமிழ் பேசினாங்க. நாலு மாதமாக மதுரையில் தங்கி இருந்தாங்களாம். அந்த வெள்ளைக்கார துரை காலையில ஐந்தரை மணிக்கெல்லாம் எழும்பி மதுரை வீதிகளில் நடை பயில போவாராம். அப்போது அங்கே வீடுகளில் வசிக்கும் பெண்கள் முற்றத்திற்கு சாணம் தெளித்து, கோலம் போடும் அழகையும், தங்கள் கணவர்மார் வேலைக்குப் போகும்போது வாசல் வரை வந்து இன்முகத்தோடு அலுவலகம் அனுப்பி வைக்கும் காட்சிகளையும் நெகிழ்ச்சியுடன் சொல்லி பெருமைப்பட்டார்.

ஆனா எங்க நாட்டு (பிரிட்டன்) கலாசாரம் அப்படி அல்ல. அது ரொம்ப மோசம். இப்போ சிலோனுக்கு என்னோட வர்ர இவ அங்கே போனதும் வேறு ஒருவனுடன் போய் விடுவாள்..." என்று தன் மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டே சகஜமாக பேசிய அந்த துரையும்.

'அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் தமிழ்நாட்டில் தமிழனாக பிறக்க வேண்டும்' என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. அடடே, நம்ம நாட்டு கலாசாரத்தில் இவ்வளவு விசயம் இருக்கிறதா? இது தெரியாதவங்க வெள்ளைக்காரனை உசத்தியா நினைச்சுட்டு இருக்கானே! என்று நானும் தமிழனின் பெருமையை எண்ணி பெருமிதம் கொண்டேன். ஆனா இன்னைக்கு நம்ம கலாசாரம் அப்படியா இருக்கு? மெட்ராசில் கல்யாணமான பொண்ணுங்க கழுத்தில் தாலியைக் காணோம். வேலைக்கு போகும் சமயத்தில் 'இது எதுக்குன்னு' வீட்டுல மாட்டி வச்சிட்டு வர்றாங்க. வீட்டில் இருக்கும் போது மட்டும் கழுத்தில் மாட்டிக்குவாங்களாம். ஐ. டி. கம்பனியும், கோல் சென்டரும் நம்ம ஊருக்கு வந்ததோடயே கலாசாரமும் செத்துப் போயிடுச்சு! டீவியை போட்டா நாடகத்தில் வரும் வில்லன்கள் எல்லோருமே பொம்பளைங்களாகத்தான் இருக்கிறாங்க. அதுங்க தண்ணி, சிகரட் பாவிப்பதாக வேற காட்டுறாங்க" என்று நம் சமூகத்தின் மீது வெறுப்பை வீசும் சுப்பாராமனின் முகத்தில் கவலை ரேகைகள்.
தனது மகன், மகளுடன்
சுப்பாராமன்
மெகா சீரியல்களில் நாதஸ்வரம், வம்சம், தென்றல், வாணி ராணி என்று சன் டீவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் பெயர்களை பிழையின்றி வரிசைப்படுத்துகிறார். சீரியல்களை தவறாமல் பார்ப்பீர்களோ என்று கேட்டால், பதில் சிரிப்பாகவே வந்து விழுகிறது.

சுப்பராமனுக்கு எழுப்பத்தேழு வயது கடந்து விட்டிருந்தாலும் இன்னும் அவரின் பேச்சு தளர்ந்து போகாமல் பதில்கள் டாண் டாண் என வந்து விழுகிறது.

"என் மாமா சுப்பா ரெட்டியோடு கொழும்புக்கு வந்த நான், மேட்டுத் தெருவில் இருக்கும் சென் லூசியாஸ் பாடசாலையில் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படிச்சேன். அதன் பிறகு என் மாமா கடையில் வேலைக்கு ஆள் இல்லைன்னு என்னையும் உதவிக்கு வைத்துக் கொண்டார். அதனால் என் படிப்பும் பாதியோடு நின்று விட்டது. ஹோட்டலில் எல்லா வேலைகளையும் செய்தேன். என் மாமாவுக்கு ரொம்பவும் விசுவாசமாகவும் இருந்தேன்.

வாணி விலாசுக்கு எதிரில் எங்களோட பெரிய மாட்டுப் பட்டி இருந்தது. அங்கே நூறு மாடுகள் வளர்க்கப்பட்டன. பால் வியாபாரமும் பெரிதாக நடந்தது. அப்போது கொழும்பில் மக்கள் தொகை மிகவும் குறைவு. அதனால் பால் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. அதனால் ஆமர் வீதி சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பால் விநியோகம் செய்தோம். ஹோட்டலில் பெரிய அண்டாவில் பால் கொதித்துக் கொண்டிருக்கும். தோட்டத்து ஆட்கள் வந்து கேட்டால் சும்மா கொடுப்போம். இந்த ஏரியா ஆளுங்க எல்லோரும் எங்க பாலை குடிச்சு வளர்ந்தவங்கதான்... 83 கலவரத்தில் எங்க கடை தப்பியதும் அந்தப் பால் தானம் செய்த புண்ணியம்தான் என்றே நினைக்கத் தோணுது" என்கிறார் சுப்பாராமன்.

"அந்தக் காலத்தில் பவுடர் பால் கிடையாது. அப்படி யாராவது வெளிநாட்டில இருந்து கொண்டு வந்து உணவகங்களில் பாவிப்பது தெரிந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது அவ்வளவு பெரிய குற்றம். ஆனால் இன்னைக்கு தெருவில் போட்டு பால் பவுடர் விக்கிறான், என்ன கொடுமை இது?" என்று கண்களில் வியப்புக் காட்டுகிறார் சுப்பாராமன்.

திருநெல்வேலி மூலைக்கரைப் பட்டியில் உள்ள முருகன்தான் இவரின் குல தெய்வமாம். இவரின் துணைவியாரின் பெயர் விஜயலட்சுமி,

"அந்தக் காலத்தில் உணவகங்கள் இப்போ மாதிரி நேர்த்தியாக இருக்காது. சும்மா ஒரு நாலு மேஜையை போட்டு, பெரிய குவளையில் தண்ணீரை வைத்து இலையைப் போட்டு பரிமாறுவோம். பரிமாறும் சர்வர் சிலரைத் தவிர பலர் மேல் சட்டை அணியாமல் வேட்டியோடுதான் வேலை பார்ப்பார்கள். அதை அப்போது பெரிய தவறாக யாரும் நினைக்கவில்லை. ஆமர்வீதியின் இந்தத் தெருவில் மாட்டு வண்டிதான் ஓடும். வாகனம் கிடையாது. டிராம் கார் மட்டும் ஒரு நாளைக்கு நாலு முறை போய் வரும். தெருக்கள் அமைதியாக கிடக்கும். மாட்டு வண்டி ஓடுவதால் வீதிகளில் சாணம் கிடக்கும். கள்வர்களும் அதிகமாகவே இருந்தார்கள். மாலை ஆறு மணிக்குப் பிறகு மக்கள் நடமாட்டம் குறைந்து விடும். குறிப்பாக கல்குழி (குவாரி வீதி கொழும்பு -12) வீதி பக்கம் மக்கள் போகவே அஞ்சுவார்கள். ஏனென்றால் அது கள்வர் குகையாக இருந்தது. அங்கே தெரியாமல் போனால் பணத்தையோ, நகையையோ பறிகொடுத்து விட்டுத்தான் வரவேண்டும்.
கொழும்பின் பெரும்பாலான முட்டுச்சந்துகள் வழிப்பறி நடக்கும் இடங்களாகவே காணப்பட்டன. காடைப் பையன்களாலும் எங்களுக்கும் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படும். இந்தக் கஸ்டமர்மார் சில சமயம் சாப்பிட்டு விட்டு பில் கட்டாமல் எழுந்து ஓடிவிடுவார்கள். அடுத்த நாள் ஆளைப் பிடித்து திட்டினால் மூனாவது நாள் வீதியில் நின்று கல்லால் எறிந்து விட்டு ஓடிவிடுவான்கள். நல்ல பழக்கங்கள் கஸ்டமர்மாரிடம் இருக்கவில்லை. வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தையே கொட்டும். அதற்குக் காரணமாக அப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது நிலமைகள் எவ்வளவோ மாறி விட்டது. சட்டம், ஒழுங்கு சரியாக இருப்பதால் எல்லோரும் மாறி விட்டார்கள். அன்றைக்கு ரௌடித்தனம் செய்த பரம்பரையைச் சேர்ந்தவங்க இன்னைக்கு பிச்சை எடுப்பதை பார்க்கிறேன். பார்த்தீர்களா காலச் சக்கரம் எப்படி சுத்துகிறது என்கிறதை..." என்று பல சம்பவங்களை கண்டு அனுபவித்த முதிர்ச்சியுடன் அவர் எம்முடன் பேசினார்.

உணவின் சுவை இப்போ எப்படி இருக்கிறது என்று மேலும் அவரை பேசவைத்தோம்.

"அப்போது ஒரு சுவை என்றால் இப்போ ஒரு சுவை. புதிய உணவுகளின் வருகையினால் ருசியும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ருசியைவிட விலையில் தான் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போ ஒரு போத்தல் பால் அறுபது சதத்திற்கும், ஒரு கப் பால் டீ இருபத்தைந்து சதத்திற்கு விற்பனையானது. இப்போது அந்த காசுக்கு மிட்டாய் கூட வாங்க முடியாது. எங்களோட மாட்டுப் பட்டிக்கான புல்கட்டு ஒன்றின் விலை 50 சதம். மட்டக்குளியில் உள்ள பாம் ரோடு, பேலியகொடை, வெல்லம்பிட்டி எல்லாம் காடுகளாக இருந்தன. அங்கே இருந்துதான் புல் வெட்டி எடுத்து வருவாங்க. என் மாமாவுக்கு மட்டக்குளியில் பி. சி. பெரேரா என்று ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு பொல்கஹாவெலயில் பெரிய தென்னந்தோட்டம் இருந்தது. அதில் அவர் இருநூறுக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்ந்தார். சில சமயங்களில் என் மாமாவுக்கு தந்தி அடிக்கும் அவர், 'பத்து மாடுகளை கூட்ஸ் ரயிலில் அனுப்புறேன்' என்று தகவல் அனுப்புவார். நாங்க உடனே ஸ்டேஷனுக்கு சென்று கூட்ஸ் ரயிலில் இருந்து மாடுகளை இறக்கி கூட்டிட்டு வருவோம். அவருக்கு அதற்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. நாங்க அவை போடும் கன்றுகளையும் மாட்டையும் கொடுத்துவிட்டால் போதும். பாலை நாங்களே எடுத்துக்குவோம். மாதத்திற்கு ஒருமுறை வரும் அந்த மனிதர் பட்டிக்குப் போய் மாடுகளை பார்வையிடுவார். அப்போ பணியில் இருக்கும் வேலை ஆட்கள் 'இதெல்லாம் அந்த மாடு போட்ட குட்டி தாங்கன்னு' சொல்லி அவரை மகிழ்ச்சிப்படுத்தி அவர் சந்தோஷத்தில் கொடுக்கும் பணத்தையும் வாங்கிக் கொள்வாங்க" என்று சொல்லிச் சிரிக்கிறார் சுப்பாராமன்.

ஆரம்பகாலத்தில் வாணி விலாசில் வேலை செய்து கொண்டே கோப்பிக் கொட்டைகளை பதமாக வறுத்து அதை அரவைக் கல்லில் அரைத்து பாரத் கோப்பி என்ற பெயரில் பாக்கட் செய்து விற்பனையும் செய்து வந்திருக்கிறார். அதனால் அவருக்கு கோப்பி மாமா என்ற சிறப்பு பெயரும் இருந்திருக்கிறது. உழைப்பால் உயர்ந்த சுப்பாராமனுக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.