Sunday, February 24, 2013

சிவாஜி மௌலானாவின் ஞாபக வீதியில்...

செயிட் ஓ சிவாஜி மெளலானா, தலைநகரில் பிரபலமானவர்களில் ஒருவர். தலைநகரின் கலையுலகிலும், வியாபார உலகிலும் நன்கு அறிமுகமான மனிதர். இரண்டாம் குறுக்குத்தெரு மெளலானா பில்டிங்கின் உரிமையாளர் தொழிலதிபர், இரத்தினக்கல் வியாபாரி எனப் பல முகங்கள். இவரை மெளலானா என்றால் பலருக்குப் புரிவதில்லை. சிவாஜி மெளலானா என்றால்தான் பலருக்கும் புரியும்.

சிங்கள படவுலகில் குறிப்பிட்ட சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். அதவத்தகே வேதனா, என்கிற சிங்களப்படத்தில் ‘ஹாலம்’ என்கிற இந்திய நடிகையுடன் ஒரு பாடலுக்கு குத்து டான்சும் போட்டிருக்கிறார்.

சிவாஜி, இந்தப் பெயரைக் கேட்டாலே அதிருமே! தமிழ் கூறும் நல்லுலகில் காலத்தால் அழிக்க முடியாத பெயர்களில் மிகவும் முக்கியமான பெயர். இந்தப் பெயரை கொண்டவர்கள் பெரும்பாலும் பெரிய மனிதர்கள்தான். மராட்டிய மன்னன் சிவாஜி, நடிகர் திலகம் சிவாஜி, சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற சூப்பர் ஸ்டார் போன்றவர்களை குறிப்பிடலாம். இந்தப் பெயர்களால் சிவாஜி நடிப்புலகில் சக்கரவர்த்தியாக தமிழர்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர். அவரின் பாதிப்பு கலையுலகில் பலருக்கும் இருந்து வருகிறது.

அவரின் பாதிப்பு இல்லாத ஒரு தமிழ் கலைஞனை பார்க்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் சிவாஜியின் மனதைவென்ற ஒரு ரசிகனாக நண்பனாக இருந்தவர்தான் சிவாஜி மெளலானா. அங்க அசைவுகள், பேச்சு, நடை உடைபாவனை என்று தனது ஒவ்வொரு அசைவிலும் சிவாஜியை ஞாபகப்படுத்துகிறார் மெளலானா. அவரோடு பேசுவோர் ‘உங்களோடு பேசும் போது சிவாஜியோடு பேசுவது மாதிரியே’ இருக்கு என்கிறார்களாம். அப்போதெல்லாம் மெளலானாவுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்குமாம்.

“சிவாஜி எவ்வளவு பெரிய மனிதர்! அவரின் பெயரைச் சொல்லி என்னை எல்லோரும் அழைக்கும் போது எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது. உண்மையில் எனது பெயருக்கு முன்னால் சிவாஜி என்கிற பெயரை நானாக போட்டுக் கொள்ளவில்லை.

எனது உடல் அசைவு, நடை உடை பாவனைகளை வைத்தே எனது நண்பர்களால் நான் சிவாஜி மெளலானா என்று அழைக்கப் படுகிறேன்” என்று சொன்னவர் ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தினார்.

“ஒரு முறை சென்னையிலுள்ள அன்னை இல்லத்தில் வைத்து சிவாஜியும் நானும் அருகருகே அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது சிவாஜி சிகரெட்டை ஒரு ஸ்டைலாக பிடித்து புகைவிட்டார். நானும் சிகரெட் பிடிக்கும் போது அதே மாதிரி பிடித்து புகைவிட்டேன்.
இது தற்செயலாகத்தான் நடந்தது. அவரை நான் கொப்பி பண்ணவில்லை. ஆனால் நான்தான் சிவாஜி மெளலானா ஆச்சே! ஆனால் அதை கவனித்த சிவாஜி ‘ஏன்டா படவா, என்னையே கிண்டல் பன்றியா....?’ என்று சொல்லிச் சிரித்தார். என்று அந்தக்கால இனிக்கும் ஞாபகங்களில் மிதந்தார் சிவாஜி மெளலானா.

“கொழும்பு தெமட்டக்கொடையில் தான் நான் பிறந்தேன். குடும்பத்தில் நான் ஒன்பதாவது ஆள். வசதியான குடும்பம். மருதானை சென்ஜோசப் கல்லூரியில் என் ஆரம்பக் கல்வியை கற்றேன். அந்த நாட்கள் ரொம்பவும் இனிமையானவை.

பள்ளியில் படித்த நாட்களில் பெரும்பாலும் பாடசாலைக்கு கட்அடித்துவிட்டு சினிமாவுக்குத்தான் செல்வேன். புதுபடம் ரிலீசாகுதென்றால் முதல் நாளே படம் பார்க்க எனது நண்பர்களோடு பிளேன் பண்ணுவேன். அந்த குழுவில் ரவீந்திரன், எனசிலின் மாதவன், அரசன் இல்லை ஆகியோர் இருப்பார்கள். அவர்களோடு சினிமாவுக்கு செல்வேன். ஒலிம்பியா, காமினி, தியேட்டர்களில் அதிகமான படங்களை பார்த்திருக்கிறேன்.

இப்போது காமினி தியேட்டர் இல்லை. ஜூலை கலவரத்தில் எரித்து விட்டார்கள். அந்த இடத்தில் உள்ள பஸ் தரிப்பிடம் இன்றும் ‘காமினி ஹோல்’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

எனது நண்பர் குழுவில் ஒருவரான ‘அரசன் இல்லை’ இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரின் பெயரே வித்தியாசமானதுதான்’ என்று சொல்லும் சிவாஜி மெளலானா, தனக்கு பிரியமான ‘தோசை டயட்’ பற்றியும் விவேகானந்தா லொட்ஜ் பற்றியும் சொல்கிறார்.

வெள்ளவத்தையில் விவேகானந்தா லொட்ஜ் இருக்கிறது. நான் என் நண்பர்களோடு சென்று ருசியாக சாப்பிடும் இடம் அது. இன்றும் அந்த வழியாக நான் காரில் கடந்து செல்லும் போது அந்த விவேகானந்தா லொட்ஜை பார்த்ததும் பழைய ஞாபகம் வரும்.

ஒருநாள் காரை நிறுத்திவிட்டு அந்த ஹோட்டலுக்குள் சென்றேன். நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அன்று நான் பார்த்த அதே முதலாளி இன்றும் அதே கல்லாவில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்னைப் பற்றி சொன்னேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு ரொம்பவும் சந்தோசப் பட்டார்.”

சின்ன வயதில் நீங்கள் செய்த குறும்பு?

என்ற கேள்வியைத் தொடுத்ததும் மெளலானாவுக்கு ரொம்பவும் சந்தோசம். திடீரென்று அவருக்கு இருபது வயது குறைந்தது போன்று ஒரு மலர்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது.

“நிறைய இருக்கு.... சின்ன வயசிலே எனது அண்ணன் காமில் என்னை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக காரின் பின் கதவை திறந்து விட்டு அவர் முன் கதவை திறந்து சாரதியின் ஆசனத்தில் அமர்வார். நான் அந்த நொடியை பயன்படுத்திக் கொண்டு காரின் உள்ளே சென்று அமர்வது போல பாசாங்கு செய்து அவர் காரை ஸ்டாட் செய்வதற்குள் மறுபக்கக் கதவைத் திறந்து வெளியே வந்து வீட்டிற்குள் ஓடிவிடுவேன். பிறகு என்னை வீட்டார்கள் தூக்கிக்கொண்டு வந்து காரில் போட்டு பாடசாலைக்கு அனுப்புவார்கள்.
 
சிவாஜியுடன் சிவாஜி
சில நாட்களில் எட்டு மணிக்கு பாடசாலை செல்ல வேண்டும்மென்றால் யாருக்கும் தெரியாமல் வீட்டிலுள்ள கடிகாரத்தின் முள்ளை ஒன்பது மணியாக மாற்றிவைத்து விட்டு நேரமாகி விட்டது இனி செல்லமுடியாது என்று சொல்லி விடுவேன்.

வீட்டிலுள்ளோரும் நேரமாகி விட்டதாக நினைத்து என்னை பாடசாலைக்கு அனுப்பாது நிறுத்தி விடுவார்கள். இப்படிப் பலநாள் செய்திருக்கிறேன். அவர்களிடம் மாட்டிக் கொள்ளவே இல்லை. அவ்வளவு அற்புதமாக நடிப்பேன். மருதானை சென் ஜோசப் கல்லூரிக்குப் பக்கத்தில் ஒரு முதியோர் இல்லம் இருந்தது. அங்கே நிறைய வாழை மரங்கள் வளர்ந்திருக்கும். எங்கள் கல்லூரியில் இருந்து பார்த்தால் தெரியும். அங்கே செல்வதென்றால் மதில்மேல் ஏறி மறுபக்கம் குதித்துத்தான் செல்லவேண்டும்.

நானும் எனது நண்பர்களும் அந்த வாழைத்தோட்டத்தில் பழங்கள் பழுத்திருக்கா என்று பார்க்க மதில்மேல் ஏறுவோம். அப்படி பழுத்திருந்தால் பாண் வாங்கிச் சென்று அந்த வாழைத்தோட்டத்தின் மத்தியில் பெரிய துண்டு விரித்து அதில் அமர்ந்து பாணோடு வாழைப்பழத்தையும் பறித்து சாப்பிடுவோம்.

பிக்னிக் செல்பவர்கள் உல்லாசமாக சாப்பிடுவார்களே அதுமாதிரிதான். அப்படி நாங்கள் திருட்டுத்தனமாக வாழைப்பழம் பறித்துச் சாப்பிடுவது முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது.

இப்படி தொடர்ந்த எமது வாழைப்பழ வேட்டைக்கு ஒரு நாள் ஆபத்து வந்தது.

அந்த இல்லத்தின் தலைவிக்கு எப்படியோ விசயம் தெரிந்து ஒருநாள் நாங்கள் வாழைப்பழம் பறித்து சாப்பிவதை கண்டு துரத்திக்கொண்டு வந்தார்.

நாங்கள் பாண் கீழே விரிக்கும் சீட் போன்ற வற்றை அப்படியே விட்டு விட்டு தட்டுத் தடுமாறி மதில்மேல் ஏறித் தப்பினோம். தலை தப்பியதே புண்ணியம் என்று அன்றோடு அந்த வேலைக்கு குட்பை சொல்லிவிட்டேன். அதன் பிறகு ஒரு சம்பவம் நடந்தது.

அதை இன்று நினைத்தாலும் என் மனசு பகீரென்கிறது. சென் ஜோசப் கல்லூரியின் விஞ்ஞான கூடத்தில் படிப்பிக்க வந்த ஆறுமுகம் சேருக்கு அவர் அமரும் ஆசனத்தில் எங்களோடு படித்த ஒரு முரட்டு மாணவன் ‘ஆசிட்டை’ ஊற்றி வைத்திருந்தான். அது தெரியாத ஆறுமுகம் சேர் அதில் அமர்ந்ததும் துடித்துப் போனார்.

இன்று நினைத்தாலும் அந்த காட்சி அப்படியே என் கண்முன்னால் தெரியுது’ என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் மெளலானா. சிவாஜியுடனான நட்பு பற்றி கேட்டோம்.

“அது ஒரு பசுமையான காலம். இலங்கையில் ஜெமினிகணேசன் ரசிகர் மன்றம் இயங்கிவந்த காலம். நான் சிவாஜியின் ரசிகனாகத் தான் இருந்தேன். அந்த சமயத்தில் ரசிகர் மன்றத்தின் அழைப்பின் பேரில் நடிகர் ஜெமினிகணேசன் இலங்கைக்கு வந்திருந்தார். அப்போது ஜெமினி சங்க மன்றத்தின் தலைவராக பி. எம். ஏ. சலாவுதீன் இருந்தார். அவர் ஊடாக நான் ஜெமினியை சந்தித்தேன். அவருடனான சந்திப்பில் அவர் என்னை இந்தியாவுக்கு சூட்டிங் பார்க்க அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.
 
நடிகை ராஜஸ்ரீ,மற்றும் அவரது சகோதரியுடன்
மௌலானா
 பிறகு ஒரு நாள் நான் இந்தியாவிற்கு சென்று ஜெமினியை சந்தித்து அவருடன் சூட்டிங் பார்க்க ஏ. வி. எம். ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். அங்கே ‘ராமன் எத்தனை ராமனடி’ படப்பிடிப்புக்காக சிவாஜி வருவதாக செய்தி அடிபட்டது. நானும் சிவாஜியின் வருகைக்காக காத்திருந்தேன். அப்போது காரில் வந்து இறங்கினார் சிவாஜி. அவரை கண்டதும் எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. நான் சினிமாவில் பார்த்த அந்த நாயகன் என் கண்ணெதிரே நின்றபோது உடம்பு விதிர்த்துப் போனது. அவர் அருகில் சென்று என்னை சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஜெமினி. சிவாஜி என் கைகளைப் பற்றினார். அவரின் கை பட்டதும் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த மாதிரி உணர்ந்தேன்.

ஆனந்த சுகம் அது! “சூட்டிங் பார்க்க வந்தியா?” என்றபடி நடந்தார்.

நான் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவனைப் போல ஜெமினியை மறந்து சிவாஜியின் பின்னே சென்று விட்டேன்.

அப்போது அவர் பின்னால் சென்றவன் தான். அதற்கு பிறகு நானும் ஜெமினியை மறந்து விட்டேன்.

ராமன் எத்தனை ராமனடி படப்பிடிப்பில் அவர் அன்று பேசிய வசனம் இன்றும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது.

சிவாஜியின் அம்மாவாக எஸ். என். லக்ஷ்மி நிற்க, அவரை பார்த்து சிவாஜி சொல்கிறார்:

“இருட்டில இருந்த என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும் ஒரு பொண்ணுதான். வெளிச்சத்தில இருந்த என்னை இருட்டிற்கு கொண்டு போனதும் ஒரு பொண்ணுதான். சுகத்தை தாங்கின எனக்கு துக்கத்த தாங்க முடியலையே ஆயா!” என்று சொல்வார்.

அந்த படப்பிடிப்பை பார்த்ததுமே நான் திணறிவிட்டேன். அடடா இப்படி ஒரு கலைஞனை இவ்வளவு காலமா கவனிக்காமல் விட்டு விட்டேனே’ என்று தோன்றியது. அதன் பிறகு எனது நட்பு அவருடன் தொடர்ந்தது. சென்னைக்கு சென்றால் அன்னை இல்லத்தில் தங்குமளவுக்கு வளர்ந்திருந்தது. நான் அவரை அண்ணன் என்றுதான் அழைப்பேன். பதிலுக்கு அவர் ‘படவா, ராஸ்கல்’ என்று சொல்வார்.
 
சிவாஜியின் அரவனைப்பில்
 அது அவரின் அதீத அன்பின் வெளிப்பாடுதான். ஒருமுறை இலங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு ராம்குமார், பிரபு வந்திருந்தார்கள். சிவாஜியும் வருவதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை.

நான் ராம்குமாரிடம் அண்ணன் ஏன் வரவில்லை என்று கேட்டேன்.

அதற்கு ராம்குமார் ‘இலங்கையில் ஒரு சிவாஜி இருக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு போங்கள்’ என்று அப்பா சொன்னார் என்றார். இதைக் கேட்ட எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

எவ்வளவு பெரிய நடிகர்! நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்! என்று நினைத்தேன்.

ஒருமுறை அவர் பைலட் பிரேம் நாத் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்த போது மற்றொரு சம்பவம் நடைபெற்றது. அண்ணனுக்கு எங்க வீட்டு சாப்பாடென்றால் ரொம்ப பிடிக்கும். அவரின் வேண்டுகோள்படி அன்றைக்கு பகல் சாப்பாட்டை நான் எடுத்துக் கொண்டு சிவாஜி தங்கியிருந்த ஆமர் வீதி ‘பிரைட்டன் ரெஸ்ட்’ ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். அப்போது காலை பதினொரு மணியிருக்கும். அப்போது அண்ணன் வத்தளை விஜயாஸ்டூடியேவில் படப்பிடிப்பில் இருந்தார். நான் சாப்பாடு இருக்கும் அடுக்கு கேரியரை சிவாஜியின் மனேஜர் குருமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.

அவர் அதை சிவாஜியின் அறையில் வைக்காமல் வேறு ஒரு அறையில் வைத்திருக்கிறார். சிவாஜிக்கு முன்னதாகவே அங்கு வந்த விஜயகுமாரியும் மஞ்சுலாவும் அந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டு விட்டார்களாம். பிறகு நல்ல பசியோடு வந்த அண்ணன் சாப்பாடு கேரியரை திறந்து பார்க்க அதில் ஒரு பருக்கை கூட இல்லாததை கண்டு கோபத்தில் குருமூர்த்தியை கூப்பிட்டு திட்டியிருக்கிறார். சாப்பிட்டவங்க கொஞ்சம்கூட மிச்சம் வைக்கலேயேன்று தான் அண்ணனுக்கு கோபம்”

இப்படி சிவாஜியுடனான நட்பை சுவைபட சொல்லும் சிவாஜி மெளலானாவிடம் அவரின் அந்தக்கால காதல் அனுபவங்கள் பற்றி கேட்டோம்.

எம்மை பார்த்து ஒரு புன்முறுவலோடு இப்போ நான் சொல்லப்போவது காதல்னு சொல்ல முடியாது.

ஆனாலும் அதுவும் ஒரு இதுதான் என்றவர் அதைச் சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு மேமன் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் இருந்தார். அவருடன் தான் நான் கெரம் விளையாடுவேன். அவரின் தங்கை ரொம்ப அழகானவள்.

அவளை பார்ப்பதற்காகவே அவர் வீட்டிற்கு கெரம் விளையாடச் செல்வேன். அவரிடம் அந்த உணர்வை சொல்லத் தெரியாத வயது. அப்போதெல்லாம் ‘கெரம்’ போட்டிகள் கொழும்பில் நடைபெறும். வழக்கமாக வை. எம். சி. ஏ. வில் தான் போட்டிகள் நடைபெறுவதுண்டு. ஒரு நாள் நடைபெற்ற போட்டியில் நானும் எனது மேமன் நண்பரும் கெரம் போட்டியில் மோதினோம். அப்படி விளையாடிக் கொண்டிருக்கையில் நான் வெற்றி பெறும் நிலைக்கு வந்து விட்டேன். வெற்றிக்கு கடைசி சில நிமிடங்கள் தான் இருந்தன.
 
திருமணத்தனறு..
அப்போது நான் ஒருதலையாக காதலிக்கும் மேமனின் தங்கை என் அருகே வந்து அமர்ந்தாள். அவளின் உடம்பு என் மீது மெல்லிய வாசனையுடன் உரசிய போது ஏற்பட்ட ஸ்பரிசம் என் உடம்பை செக்கண்டுகளில் சூடேற்றியது என்னவோ ஆகிப்போனேன்.

என் கண்களுக்கு கெரம் போர்ட்டில் இருக்கும் காய்கள் எதுவுமே தெரியவில்லை. அவ்வளவுதான், நான் தோற்றே போனேன். இது திட்டமிட்டே மேமன் செய்த சதியா, இல்லை யதேச்சையாக நடைபெற்ற சம்பவமா என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் கடைசிவரை அவளிடம் என் காதலை சொல்லவில்லை. இன்று அவள் எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை......” என்றவர் தனது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்கிறார்.

“கோட்டை இன்டர்கொண்டினன்டல் ஹோட்டலில் எமது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு கொல்வின் ஆர். டீ. சில்வா, ஜே. ஆர். ஜெயவர்த்தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

எம்.பி. ஜவர்ஷா என்ற போட்டோகிராப்பர் வீட்டிற்கு வந்து புகைப்படம் எடுத்தார். தேனிலவுக்கு காலி, அம்பாந்தோட்டைக்கு சென்றோம். அந்தக் காலத்தில் ஹனிமூனுக்கு செல்வதென்றால் தனியாக போக முடியாது. நம்மளோடு பத்து பதினைந்து பேர் கூடவே வருவாங்க. இரவில் தூங்கும் நேரத்தில மட்டும் தான் புதுமணத்தம்பதிகள் தனியாக இருக்க முடியும்.

மற்ற நேரங்களில் எல்லாம் நம்மைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். இந்தக்காலத்தில ஹனிமூன் போறவங்க ரொம்ப கொடுத்து வைத்தவங்க” என்று பெருமூச்சு விடுகிறார் மெளலானா.
சிவாஜி மௌலானா,மேஜர் சுந்தர்ராஜன்,
மற்றும் மிப்தார்
 வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள் யாராவது இருக்கிறார்களா மெளலானா?

கொஞ்சம் யோசித்து விட்டு சொன்னார்.

“என் தந்தையாருடைய தம்பி மகன் மிப்தார். அவரும் நானும் நண்பர்கள் போல்தான் பழகினோம். எனது நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் அவர்தான் உடனிருப்பார். கண்ணதாசனுக்கு எப்படி கலைஞரோ, அவர் மாதிரிதான் மிப்தாரும் நானும்.

மிப்தாருடன்தான் முதல் முதலாக சிகரெட் குடித்து பழகினேன். பாத்ரூமில் கதவை சாத்திக் கொண்டு ‘விக்டர்’ என்ற பெயருடைய சிகரெட்டை குடிப்போம். முதன் முதலாக சிகரெட்டை குடிக்கும் போது நெஞ்சு எரிந்தது. இருமல் வந்து கொண்டே இருந்தது. ஒரு வகையில் என் சிகரெட் பழக்கத்திற்கு வித்திட்டவர் மிப்தாராகத்தான் இருக்க வேண்டும். ஒரு முறை சினிமா பார்க்க எங்களிடம் காசு இல்லை, பொறளை ரெக்ஸ் தியேட்டரில் ‘சைனாடவுன்’ என்ற படம் வெளியாகிய புதுசு.

எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டுமே என்ற பதை பதைப்பு.

வோர்ட் பிளேஸ்ல இருந்த எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் நிறைய பலா மரங்கள் இருந்தன. திடீரென்று மிப்தார் கொடுத்த ஐடியாவின்படி நானும் மிப்தாரும் மதில் ஏறி குதித்து, அடுத்த வீட்டு பலாக்காய்களை பறித்தோம்.

மிப்தார்தான் மரம் ஏறி காய்களை பறித்துப் போட்டார். பிறகு ஆளுக்கு இருபத்தைந்து காய்களை உரப்பையில் போட்டு தூக்கி கொண்டு போய் மருதானை மார்க்கட்டில் விற்றோம். கிடைத்த பணத்தில் சைனாடவுன் பார்த்தோம்.

அந்த நண்பரை என்னால் மறக்க முடியாது, என்ற மெளலானாவிடம் இன்றும் நீங்கள் பயப்படுகிற விடயம் என்ன என்று கேட்டோம். “கடவுளுக்கு” என்று ஒரே வார்த்ததையில் பதிலளித்த மெளலானா ஸ்டைலாக சிகரெட்டை உதட்டில் வைத்து பற்றவைத்தபடி திரும்புகிறார்.

அந்த அசைவில் அப்படியே சிவாஜியின் உருவம் தெரிகிறது.

உலகத்தில் ஒருவர் மாதிரியே ஏழுபேர் இருப்பார்களாம்.

மிகுதி ஆறு பேரைத்தான் தேடிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் தான் அச்சு அசலாக இங்கே இருக்கிறாரே!

கே.எஸ் சிவகுமாரனின் ஞாபக வீதியில்…

"பவளக்கொடி படம் எப்படி?'' என்று அப்பா கேட்ட போது குலை நடுங்கிப் போனேன்"



பேட்டி – மணி ஸ்ரீகாந்தன்


தமிழில் இலக்கியம், திறனாய்வுத் துறைகளில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மிகத் திறமையாக ஈடுபட்டு வரும் இவர் உங்களுக்கு தெரிந்தவர்தான். அவர் தான் கே. எஸ். சிவகுமாரன். மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடிக் கிராமத்தில் பிறந்த இவருக்கு தற்போது 72 வயதாகிறது.


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட இவர் ஆங்கில இலக்கியப் புலமை மிக்கவர். ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவரும் மிகிச் சிலத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்.

ஓமான் நாட்டில் 1998 முதல் 2002ம் ஆண்டு வரை ஆங்கில இலக்கியம் கற்பித்து வந்திருக்கும் இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராக சேவையாற்றிருக்கிறார்.

அமெரிக்காவிலும் இப்பணி தொடர்ந்தது. கொழும்பு இலக்கிய வட்டாரங்களில் புகுந்து புறப்பட்டு வரும் கே. எஸ். பல நூல்களின் ஆசிரியர்.

நம் நாட்டின் பிரபல நாளேடுகளிலும் இலங்கை வானொலியிலும் முக்கிய பதவிகளை வகித்த இவரின் எழுத்துப்பணி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் அது இவரின் இரத்தத்தில் ஊறிப் போன ஒன்று தணிக்கைச் சபை உறுப்பினரான இவரை மாலை மயங்கும் ஒரு அந்திப்பொழுதில் நினைத்தாலே இனிக்கும் தமது அந்தக்கால அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“என்னடா புளியந்தீவுக்கு பக்கத்தில் சிங்களவாடி என்கிற பெயர் வருதே என்று பார்க்கிறீர்களா? அந்தக் காலத்தில்ல மட்டக்களப்பு பகுதியில் சிங்களவர்கள் முதலில் இங்குதான் தங்கியிருந்தார்கள்.

அதுதான் சிங்களவாடி என்ற பெயர் வரக் காரணம்!” என்று தனது ஊரின் பெயருக்கு விளக்கம் தந்த கே. எஸ். சிவகுமாரன் மேலும் தொடர்ந்தார்.

என் பெற்றோர்கள் திருகோணமலையையும் மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். முன்னோர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். என் அம்மம்மா கேரளாவைச் சேர்ந்தவராக  இருக்க வேண்டும்.
அவரின் பெயர் அம்மனி பிள்ளை.... பாருங்கள் பெயரிலேயே மலையாள வாடைவீசுகிறது! அம்மனி பிள்ளையின் கணவர் அதாவது என் அப்பப்பா கேரளாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புகையிலை வியாபாரம் செய்திருக்கிறார்.

அப்போதுதான் அம்முமபிள்ளையை இலங்கைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று புன்னகையுடன் ஆரம்பித்த சிவகுமாரன், என்னைப் பார்க்கும் போது அந்த மலையாள சாயல் தெரியலையா? என்று சிரிக்கிறார்.

சிறுவயதில் நீங்கள் செய்த குறும்பை கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லுங்களேன் என்று சிவகுமாரனை அந்த கறுப்பு- வெள்ளை காலத்து கலர் கனவுகளை நோக்கி அழைத்துச் சென்றோம்.

“வரலாற்றில் பதிவு செய்யுமளவுக்கு நான் பெரிய குறும்பு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவிப் பிள்ளை. ரொம்பவும் சமத்து என்றுதான் சொல்லவேண்டும். மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியில்தான் என் வீடு அமைந்திருந்தது. ‘லேக்ரோட்’ என்று அதைச் சொல்வார்கள். என் வீட்டிற்கு முன்னால்தான் மட்டக்களப்பு வாவி. எனக்கு சகோதரர்கள் ஐவர். பஞ்சபாண்டவர்கள் நாங்கள்.

அதில் நான்தான் கலைத்துறையில் கொஞ்சம் நாட்டம் உடையவன். பாடசாலை விடுமுறை நாட்களில் என் உறவினரும் நண்பருமான கே. சிவலிங்கத்துடன் சேர்ந்து என் வீட்டிலேயே நாடகம் போடுவேன்.
இளமைத் தோற்றம்

அந்த நாடகம் என் வீட்டில்தான் அரங்கேறும். பெரும்பாலும் நாடகங்களில் நான் வில்லன் வேடம்தான் போட்டிருக்கிறேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப நல்லவன். நான் போடும் நாடகத்தை என் உறவுக்காரர்கள் மட்டுமே பார்த்து ரசிப்பார்கள்.

நாடகம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் தலா ஐந்து சதம் வீதம் கட்டணமாக வசூலிப்போம். கிடைக்கும் தொகைக்கு புத்தகங்கள் வாங்குவோம்.

அப்படி வாங்கும் புத்தகங்களை எல்லாம் சேர்த்து வீட்டிலேயே ஒரு நூலகத்தை நடத்தினேன். அந்த நூலகத்துக்கு கிருஷ்ணா லைப்ரரி என்று பெயரும் வைத்திருந்தேன்.

ஒருநாள் நானும் எனது தம்பியும் சேர்ந்து பாடசாலையில் குத்துசண்டை பார்க்கப் போகிறோம் என்று அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு சினிமா பார்க்கப் போனோம். அதுவும் இரவுக்காட்சி.

இன்றைக்கு மாதிரி பெரிய தியேட்டர் எல்லாம் அப்போது கிடையாது. கொட்டகை தியேட்டர்தான். மண் தரையிலும் பெஞ்சிலும் அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த கொட்டகைத் தியேட்டரின் பெயர் சீதா டோக்கீஸ்.

அன்று திரைப்படங்களை ஆங்கிலத்தில் டோக்கீஸ் என்றுதான் அழைப்பார்கள். தமிழில் பேசும் படம் என்று சொல்லலாம். கே. ஆர். ராமசாமி நாயகனாக நடித்த பவளக்கொடி படம் வெற்றிகரமாக அந்தக் கொட்டகையில் ஓடிக்கொண்டிருந்தது.

நானும் தம்பியும் அதை ரொம்பவும் ரசித்துப் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வந்த போது நல்ல இருட்டு. பயத்தைப் போக்க வீடு வரைக்கும் படத்தில் இடம் பெற்ற ‘அன்னம் வாங்கலியோ அம்மா அன்னம் வாங்கலியோ’ என்ற பாடலை பாடிக்கொண்டே வீட்டிற்கு வந்தோம்.

பிறகு இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நானும் தம்பியும் படுத்துக் கொண்டோம். வீட்டாருக்கு தெரியாமல் படம் பார்த்துவிட்டோம். அதுவும் குறிப்பாக அப்பாவை ஏமாற்றிவிட்டோம் என்ற சந்தோஷம். தம்பியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

“டேய் தம்பி, நம்ம ‘பவளக் கொடி’ பார்த்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. எப்படியோ தப்பித்தோம்” என்று பெருமூச்சு விட்டபடி நிம்மதியாகத் தூங்கினோம்.

மறுநாள் காலை பாடசாலை செல்ல நானும் தம்பியும் தயாரானோம். அப்போது அப்பா எங்களிடம் வந்து, “அன்னம் வாங்கலியோ பாட்டு நல்லா இருக்காடா!” என்று கேட்டார். எனக்கு நெஞ்சு பகீரென்றது.

அடுத்த நொடியே ‘பவளக்கொடி எப்படி?’ என்றார். நானும் தம்பியும் மூச்சடைத்து நின்றோம். வீட்டுக்கு முன்னால் எங்களுக்கென்றே திமிசு கட்டையாக வளர்ந்திருந்த மல்லிகை செடியின் கிளையை ஒடித்து எனக்கும் தம்பிக்கும் செமத்தியாக பூசை கொடுத்தார்.

சீதா டோக்கீஸ்சில் படம் பார்த்த விசயம் அப்பாவுக்கு எப்படித் தெரியவந்தது என்று எனக்கு இது வரை தெரியவில்ல. ஒருவேளை அன்றிரவு நான் தூங்கும் போது தூக்கத்தில ஏதும் வாய் உளறி அன்னம் வாங்கலியோ... பாட்டை பாடிவிட்டேனோ தெரியவில்லை.

என்னதான் அடித்தாலும் அப்பா ரொம்ப நல்லவர். எங்கள் ஊரில் ஒரு முஸ்லிம் தையல்காரர் இருந்தார். அவர் பெயர் சரியாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. ‘டெய்லர் ஷா’ என்றுதான் நினைக்கிறேன். அவர் கடையில்தான் எனக்குப்பிடித்த உடையெல்லாம் தைத்துத் தருவார் அப்பா.

எனது உடையெல்லாம் மேல் நாட்டு பாணியில் தான் இருக்கும். ஈழத்து சிறுகதை படைப்பாளர்களின் முன்னோடியாக இருந்தவர் இந்த டெய்லர் ஷாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
தந்தையுடன் கே.எஸ். அருகே தம்பி
ஆனாலும் எனக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. காலப்போக்கில் எங்க ஊரிலிருந்து அந்த டெய்லர் மறைந்து போனார். கடையும்தான்.

இப்படி நினைவலைகளில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்த கே. எஸ்ஸிடம் தங்களின் அந்தக் கால காதல் அனுபவங்களைச் சொல்லுங்களேன் என்றோம்.

“நான் சின்ன வயசிலேயே ரொம்பவும் பயந்தாங் கொள்ளி. ஆனால் படிப்பிலகெட்டி.

ஆரம்பக் கல்வியை தமிழ் பாடசாலையில் படித்துவிட்டு பிறகு ஆங்கிலப் பாடசாலையில் என்னை முதலாம் வகுப்பில் சேர்க்கும் போது பிரச்சினை எழுந்தது.
ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்ப கல்வியை படித்திருந்தால் தான் கற்பது இலகுவானது என்பது அவர்களின் வாதம்.
ஆனால் நான் ஆங்கிலத்தை வீட்டிலே கற்றுத் தேர்ந்துவிட்டேன். பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்ந்த பிறகு எனது படிப்பைப் பார்த்த அதிபர் வியந்து என்னை இரண்டாம் வகுப்பில் விடாமல் மூன்றாம் வகுப்புக்கு உயர்ந்தினார். படிக்கும் காலத்தில் நான் ரொம்பவும் அழகாக இருந்திருக்கிறேன். (இப்போவும் வசீகரமாகத்தானே இருக்கிறீர்கள்!) அதனால் என்னோடு பெண் பிள்ளைகள் பேசுவற்கு ப்ரியப்படுவார்கள்.

ஆனால் நான்தான் அவர்களை விட்டு கொஞ்சம் விலகியே நின்றேன். அந்தளவிற்கு எனக்கு கூச்ச சுபாவம். எனக்கு பத்து, பதினைந்து வயதாகும் போதே எனக்குள் செக்ஸ் உணர்வு வர ஆரம்பித்து விட்டதை நான் உணர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு அழகான பெண்பிள்ளை இருந்தாள். அவள் என்னோடு சேர்ந்துதான் விளையாடுவாள்.

குட்டைப் பாவாடை அணிவாள். அவள் மீது எனக்கு காதல் மாதிரி ஒரு ஈர்ப்பு. அதை அவளிடம் நான் சொல்லவில்லை. சொல்லவும் தெரியவில்லை என்பதுதான் சரி.

எப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று என் மனசு சொல்லும். அவள் என் அருகே வந்தாலேயே போதும் என் உடம்பில ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்வலை ஏற்படும். மனது கிடந்து தவியாய் தவிக்கும். ஆனால் என்ன செய்வது?

எனக்குத்தான் தைரியம் இல்லையே! அதைக் காதல் என்று சொல்வதைவிட ஒரு தலை காமம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னோடு படிக்கும் பொடியன்களுக்கும் அவள் மீது காதல்தான. எங்கள் வீட்டருகில் எங்களோடு கிரிக்கெட் விளையாட வரும் சாக்கில் அவளையும் எட்டிப்பார்ப்பார்கள். எனக்கு அப்போதெல்லாம் ஆத்திரம் பொத்திக்கொண்டுவரும்.

சின்ன வயதிலேயே எனக்கும், தம்பிக்கும் அப்பா நீச்சல் பழக்குவார். நான் கடைசிவரைக்கும் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை. தம்பி கற்றக்கொண்டான். படிக்கும் வகுப்பில் எனக்கு பிரச்சினை என்றால் தம்பிதான் எனக்காக சண்டை பிடிப்பான். அப்படியொரு பயந்தான்கொள்ளி நான்.

பிறகு நான் கொழும்பிற்கு வந்த பிறகு அவளையும் மறந்துவிட்டேன். அவள் இப்போது திருமணம் முடித்து குழந்தை குட்டிகளோடு எங்கேயோ சிறப்பாக ஆனால் என்னைப் போலவே வயதானவளாக வாழ்ந்து கொண்டிருப்பாள். ஹும்....

கொழும்பில் ஹேமாஸ் பில்டிங்கில் இயங்கிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உதவி பணிப்பாளராக நான் கடமையாற்றி வந்தேன். அங்கே என்னோடு பணியாற்றிய பெண்கள் அனைவருமே வசீகரமான உடைகளில் பளிச்சென வேலைக்கு வருவார்கள. என்னோடு வழிய வழிய வந்து பேசுவார்கள். எனக்கும் அவர்களோடு நெருங்கிப் பழக ஆசைதான்.

ஆனால் எனக்குள் இருந்த கூச்ச சுபாவம் அவர்களை என்னிடம் நெருங்கவிடாமல் செய்துவிட்டது. பிறகு ஒருநாள் ‘லயனல் வென்ட்’ அரங்கில் ஒரு நாடகம் பார்க்கச் சென்றேன். அதில் நடனம் ஆடிய ஒரு பெண்ணின் அழகில் நான் மயங்கிப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
மு. தளையசிங்கத்துடன் கே.எஸ்.

Saturday, February 23, 2013

அந்தக் கால நினைவுகளோடு கலைஞர் கே.சந்திரசேகரன்




கே. சந்திரசேகரன், இலங்கை வானொலி நேயர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். நேயர்களுக்கு ஆளை தெரிகிறதோ இல்லையோ ஆனால் இவரின் குரலை கேட்டாலே பெயரை சொல்லிவிடுமளவுக்கு இலங்கை வானொலியில் வெற்றிக்கொடி நாட்டியவர். சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வானொலி நாடகங்களில் நடித்திருக்கும் இவரின் கலைப் பயணம் தொலைக்காட்சி, சினிமா என்று இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அவரின் அந்தக்கால அனுபவங்களை திரும்பவும் மீட்டிப் பார்க்கும் எண்ணத்தில்

கே. சந்திரசேகரனை ஞாபக வீதியிலே பயணம் செய்யவதற்காக அழைத்து வந்தோம். அவரின் இனிமையான அந்தப் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது.
‘தெமட்டகொடை சமந்தா தியேட்டரில் நான் உதவி மனேஜராக பணியாற்றிவந்த காலம். ஒரு நாள் தியேட்டரில் டிக்கட் பரிசோதனை செய்தபோது ஒரு வாலிபன் கெலரிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு மூன்றாம் வகுப்பில் அமர்ந்து படம் பார்ப்பது தெரியவர அவனை வெளியில் அழைத்து வந்தார்கள்.

நான் அவனை விசாரித்த போது அவன் என்னுடன் வாய்த் தர்க்கம் செய்ய எனக்கு ஆத்திரம் வந்து அவனை பளார் என்று கன்னத்தில் அறைந்துவிட்டேன். நிலை தடுமாறிய அவன் முட்கம்பி வேலியில் விழுந்தான். அதனால் அவனுக்கு உடம்பில் பல இடங்களில் முட்கம்பி கிழித்து இரத்தம் வடிந்தது. அவன் மீது பரிதாபப்பட்ட நான், அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று காயத்திற்கு மருந்து போட்டு அவனை ஒரு டேக்ஸியில் ஏற்றி அவனின் வீட்டிற்கு அழைத்து சென்றேன்.

‘சாலமுல்ல’ என்ற ஒரு சிங்கள கிராமத்திற்குள் எங்கள் டேக்ஸி நுழைந்த சில நிமிடங்களில் ஒரு வீட்டிற்கு முன்னால் ஆட்டோ நிற்க காயப்பட்ட வாலிபன் கீழே இறங்க அந்த வீட்டிலிருந்த ஆண்களும் பெண்களும் ‘அய்யோ மகனே என்ன நடந்தது’ என்று கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். அப்போதுதான் நான் செய்த தவறு எனக்கு விளங்கியது.

ஒருவனை அடித்துவிட்டு அவன் ஊருக்கே சென்றிருக்கிறேன் என்பது. அதை நினைக்கும் போதே என் இரத்தம் தண்ணீராகிப் போவது போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இதயம் பட படக்க டேக்ஸியிலிருந்து கீழே இறங்காமல் உள்ளேயே அமர்ந்திருந்தேன்.

ஓடிவந்தவர்கள் அவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்த போது அவன் சொன்னான் ‘வீதியில் தடுக்கி விழுந்து விட்டேன் இந்த அங்கிள் தான் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்து போட்டு என்னை இங்கு அழைத்து வந்தார் என்றான். எனக்கு அப்போதுதான் போன உயிர் திரும்ப வந்தது. அவன் இப்படி சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த குழப்படிக்கார இளைஞனிடமும் எவ்வளவு ஒரு நல்ல எண்ணம் மறைந்திருக்கிறது.

ராஜத்துரோகி நாடகத்தில்
  இன்றும் சமந்தா தியேட்டரை நான் கடந்து போகும் போதெல்லாம் அந்த இளைஞன் என் ஞாபகத்திற்கு வருகிறான்.... இன்று அவனை சந்திக்க ஆசைப்படுகிறேன். அவன் எங்கிருக்கிறானோ... என்று அந்த சம்பவத்தை சுவைபட கூறிய சந்திரசேகரன் தன் பூர்வீகம் பற்றி இப்படி சொல்கிறார்.

இந்திய வம்சாவளி தமிழரான என் பூர்வீகம் தெமட்டகொடைதான். அப்பா காளிமுத்து, அம்மா பார்வதி. அவர்களுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் நான் ஆறாவது.

அப்பா தெமட்டகொடை ரயில் நிலைய ஊழியராக பணிபுரிந்ததால் ரயில் நிலைய விடுதியில்தான் நான் பிறந்தேன்.

எங்கள் குடும்பத்தில் நான்தான் ரொம்பவும் சுட்டி பையனாம். அப்பாவுக்கு ரயில் நிலயைத்தில் தரும் காக்கி சீருடையை தான் நானும் போட்டுக்கொண்டு திரிவேன். ஆடை அணிவதில் கூட ஒரு ஒழுக்கமில்லாமல் நான் இருந்திருக்கிறேன்.

என் சின்ன வயசிலேயே வயதுக்கு மீறிய முதிர்ச்சி என் குரலில் தெரிந்தது.

சிறுவர் மலர் நிகழ்ச்சியில் நான் பங்குபற்றிய போது வானொலி மாமாவுக்கு ஒரு கடிதம் வந்ததும் அதில் ‘மாமா சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பதினொரு வயதிற்குட்பட்டவர்களே பங்குபற்ற வேண்டும் என்று சொல்லியிருகிறீர்கள் ஆனால் கே. சந்திரசேகரனின் குரலைக் கேட்டால் இருபது வயதை கடந்தவர் போல் தெரிகிறதே... என்று குறிப்பிட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை நிகழ்ச்சியில் நானே வாசித்தேன். அப்போது எனக்கு பனிரெண்டு வயதுதான். பிறகு படிப்படியாக சிறுவர் மலர் நிகழ்ச்சியில் எனக்கான சந்தர்ப்பம் குறைந்தது. அதன் பிறகு இளைஞர் மன்றம், நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் நான் பஸ் தரிப்பு நியைத்தில் நின்று கொண்டிருந்த போது எனக்கு பின்னால் நின்றிருந்த இரண்டு சகோதரிகள் ‘ஏண்டி நேற்று இளைஞர் மன்றம் நிக ழ்ச்சி கேட்டியா அதில் கே. சந்திரசேகரன் என்றவரோட குரலை கேட்டியா ரொம்பவும் சுவீட்டா இருக்கு’ என்றார்கள். அவர்கள் அப்படி சொன்னதும் எனக்கு ஆகாயத்தில் பறப்பது போல ஒரு இன்பம் ஏற்பட்டது.
தனது அக்கா புவனேஸ்வரி,
தம்பி விஸ்வநாதன் ஆகியோருடன்
அதன் பிறகுதான் என் அப்பாவிடம் சென்று அடம்பிடித்து எனக்கு அழகான சேர்ட் வேண்டும் என்று கேட்டேன்.

காக்கி உடையை அதன் பிறகு நான் உடுத்துவதே இல்லை.

உண்மையை சொல்லப் போனால் இந்த கலைதான் என்னை ஒரு அழகான மனிதனாக மாற்றியது என்று சொல்லலாம். ஊர் சுற்றி திரிந்த என்னை ஒழுக்க முள்ளவனாக மாற்றியது கலைதான். தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில்தான் என் அரிவரி தொடங்கியது. ஆ. பொன்னுத்துரை மாஸ்டர் தான் எனக்கு அகரம் கற்பித்த ஆசான். அதே பள்ளியில்தான் நண்பர் ஹமீதும் படித்தார். எங்கள் இருவரின் கலைப் பயணத்திற்கும் அத்திவாரமிட்டது அந்த பள்ளிதான்.


ஒரு முறை, அங்கே ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

அதில் ஜான்சிராணியாக பி. எச். அப்துல் ஹமீத் நடித்தார். அவருடன் மேலும் பல நடிகர்கள் நடித்தார்கள். என்னை அந்த நாடகத்திற்கு தெரிவு செய்யவில்லை. என்னை தெரிவு செய்யாதது எனக்கு கவலையாக இருந்தது. அவர்கள் நடித்த நாடகத்தை பார்த்து விட்டு நானும் என்னுடன் படித்த சில மாணவர்களும் வகுப்பில் எங்களுக்குள் நாடகத்தில் பேசுவது போல் வசனம் பேசுவோம். இதை கவனித்த எங்கள் பள்ளி ஆசிரியர் நாடகத்தில் நடிக்க ஒரு ஆள் தேவை எங்கே உங்களுக்குள் திறமை இருக்கிறதா என்று பார்ப்போம். என்று நாடகத்திற்கான வசனம் எழுதப்பட்ட ‘ஸ்கிரிப்டை’ தந்தார்.

அதில் ‘அணையப் போகும் விளக்கு ஓங்கி எரிகிறது ஆட்சியை இழக்கப் போகும் நீ ஆணவத்தோடு பேசுகிறாயா! விளக்கை நோக்கி வரும் விட்டில் பூச்சியே வா!’ என்ற வசனம் எழுத்தப்பட்டிருந்தது. அந்த வசனம் முடியும் இடத்தில் ‘சிரிப்பு’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதை படித்த சக மாணவர்கள் சிரிப்பு என்ற இடத்தில் புன்னகைத்தார்கள். ஹீ... ஹீ... என்றார்கள். ஆனால் நான் மட்டும் பி. எஸ். வீரப்பா மாதிரி ஹ ஹ்ஹ ஹா... என்று சிரித்தேன்’ அப்படி சிரித்ததும் நீ தான் கதையின் நாயகன். என்று என்னை தெரிவு செய்தார்கள். பிறகுதான் எனக்கு தெரியவந்தது அவர்கள் தந்தது வெள்ளைக்கார கதாபாத்திரமென்று. பிறகு என் கை, காலுக்கெல்லாம் வெள்ளை உறை போட்டு, முகத்திற்கு ஏதோ வெள்ளைப் பொடியை பூசி நான் வெள்ளைக்காரனாக நடித்தேன்.

இதைப் பார்த்த சச்சி மாஸ்டர் நாடக மாஸ்டரிடம் ‘உங்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா வெள்ளைக்காரனாக நடிக்க இந்த கறுப்பு பையனா கிடைத்தான்’ என்றார். என்று தமது கலையுலகத்தின் ஆரம்ப காலத்தை ஞாபகப்படுத்திய கே. சந்திரசேகரன் அந்தப் பாடசாலையில் படிப்பித்த சுப்ரமணியம் மாஸ்டரை மறக்க முடியாது. எங்கள் வகுப்பில் கணக்கில் புலி நான்தான். எல்லோரும் என் கணித கொப்பியைத்தான் பார்த்து கொப்பி அடிப்பார்கள். வகுப்பின் கணித ஆசிரியர்தான் சுப்ரமணியம். நான் என்னதான் அதிகமாக புள்ளிகள் வாங்கினாலும் என்னை தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அடிப்பதே அவரின் வேலை.... ஏன் அப்படி அவர் என்னை அடித்தார் என்பதற்கான காரணம் அப்போது எனக்கு தெரியவில்லை.

ஒரு நாள் சுப்ரமணியம் மாஸ்டர் எங்கள் பாடசாலையிலிருந்து மாற்றலாகி வேறு பாடசாலை செல்வதற்காக பிரியாவிடை வைபவம் நடைபெற்றது. அந்த வைபவம் நிறைவடைந்ததும் சுப்ரமணியம் மாஸ்டர் என்னை தனியாக அழைத்தார். ‘தம்பி உன்னை நிறைய தடவை அடிச்சிருக்கேன் ஏன் தெரியுமா, எங்கே நீ கெட்டுப் போய்விடக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காகத்தான் என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து அழுதார். அப்போதுதான் ஒன்றை புரிந்து கொண்டேன். நம்மீது பாசத்தையும், நேசத்தையும், கொண்டவர்கள் எம்மை தண்டிப்பது எங்கள் நன்மைக்காகத்தான் என்று. தமது பள்ளிப் பருவத்தை விபரித்து கூறத் தொடங்கிய சந்திரசேகரன், அவரின் நண்பர் செப ஜோசப் எட்வர்ட் பற்றியும் சில விடியங்களை மீட்டிப் பார்க்கிறார்.

‘உண்மையிலேயே ஹமீத் வானொலி நிலையத்திற்கு செல்வதற்கு காரணமே இந்த எட்வர்ட் தான். சிறுவர் மலர் நிகழ்ச்சியிலிருந்து அவருக்கு கடிதம் வந்தபோதுதான் ஹமீதையும் தன் உடன் அழைத்துச் சென்றார். நன்றாக எழுத கூடியவர் கவிஞர். கலைஞர். இன்று அவர் கலைத்துறையில் இருந்திருந்தால் நிறைய சாதித்திருக்கலாம் ஆனால் அவர் அத்துறையில் இல்லை நீர்கொழும்பு பகுதியில் வசிப்பதாக அறிகிறோம் எந்த தொடர்பும் இல்லை. அவர் ஒரு முறை என்னையும், ஹமீதையும் பார்த்து சொன்னார் உங்கள் இருவரையும் போல் எனது குரல் வளம் இல்லையே என்றார்.

அதற்கு ஹமீத் ‘அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி தண்ணீர் தொட்டியில் கழுத்தளவு தண்ணீரில் இருந்து ஹா... ஹ... என்று கத்தினால் குரல் வளம் நன்றாக வரும்’ என்று விளையாட்டாக சொல்ல நாங்கள் சொன்னதை உண்மைதான் என்று நம்பிய செப ஜோசப் மறுநாள் காலையில் கழுத்தளவு தண்ணீரில் அமர்ந்து கத்தியிருக்கிறார். விஷயம் தெரிந்த நாங்கள் இன்னும் கொஞ்சம் ஜோசப்புக்கு விளையாட்டு காட்டலாம் என்ற எண்ணத்தில் கையையும், காலையும் கட்டிவைத்துக் கொண்டு காலையில் எழும்பி கா... கா....என்று கத்திப் பாருங்கள் குரல் வளம் வளரும் என்று ஹமீத் கூறியதை மறுபடியும் நம்பிய ஜோசப், அடுத்த நாளும் காலையில் இந்த பயிற்சியை செய்ய நானும் ஹமீதும் அதை மறைந்திருந்து பார்த்தோம். என்று தமது இளமைக்கால அனுபவங்களை இனிக்க இனிக்க சொல்லும் சேகர், ‘எனது இளமைக்காலம் பற்றி கூறும்போது ஹமீத் பற்றி கூறாவிட்டால் அது நிறைவாக இருக்காது.

ஹமீதும் நானும் நல்ல நண்பர்கள். பாடசாலை முடிந்து நான் வீட்டிற்கு வந்தவுடன் ஹமீத் வீட்டிற்கு சென்று விடுவேன். அதன் பிறகு மாலையில் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். அவர் பள்ளிக்கு தொழச் செல்லும் போது நானும் கூடவே செல்வேன். அவர் பள்ளிக்குள் சென்று தொழுது விட்டு வரும்வரை நான் வெளியிலேயே நிற்பேன். குறிப்பாக நோன்பு நாட்களில் நான் தினமும் அவர்களின் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பது ஹமீதின் அம்மாவின் கட்டளை, அப்படி என்னால் போக முடியவில்லை என்றால் அந்த அம்மா எனது வீட்டிற்கு வந்து விடுவார்’ என்ன சேகர் நீ ஏன் நேற்று வரவில்லை. உனக்காக என்னென்ன செய்து வைத்திருந்தேன் தெரியுமா? என்பார்.

அவர் இஸ்லாமிய ஆச்சார முறைப்படி வாழ்ந்ததினால் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள வில்லையாம். இதை தெரிந்து கொண்ட நான் எப்படியாவது அவரை ஒரு படமாவது எடுத்தவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பத்துநாள் முயற்சி செய்து ஒரு கெமராவை யாரிடமோ இரவல் வாங்கி ஹமீதின் அம்மாவை படம் பிடித்தேன். ஒரு முறை ஹமீத் எங்கள் வீட்டில் சாப்பிட அமர்ந்து சாப்பாட்டு தட்டில் இருந்த சாதத்தை கோழிக்கறியுடன் பிசைந்து ஒரு பிடி வாயில் வைத்துவிட்டு கேட்டார், இந்தக் கோழிக் கறியை எங்கே வாங்குவீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் ‘எங்கள் வீட்டில்தான் அறுத்தோம். என்று பெருமையாக சொல்ல ஹமீத் வாயிலிருந்த சாப்பாட்டை துப்பிவிட்டு சொன்னார்.

இது குர்பான் செய்யப்படாத கோழி, நான் சாப்பிடக் கூடாது என்று. எனக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஆனாலும் அவருக்கு அப்போது பன்னிரெண்டு வயதுதான் இருக்கும். அப்போதே இஸ்லாத்தின் தார்மீக பண்பை முறையாக கடைப்பிடித்து வாழவேண்டும் என்று நினைத்திருக்கிறார். இன்றும் ஒருநல்ல இஸ்லாமியனாகவே வாழ்கிறார். அதோடு தான் இனத்தால் ஒரு தமிழன். மதத்தால் இஸ்லாமியன் என்று அவர் பகிரங்கமாக கூறுவதையிட்டு நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நம் நாட்டில் ஹமீதை தவிர வேறு யாரும் அப்படி சொல்வதில்லை என்று தனது உயிர் நண்பனின் பெருமைகளை பறைசாற்றும் சேகரிடம் காதல் பற்றி கேட்டோம்.

இந்தக் காலம் மாதிரி அல்ல அந்தக் காலம். பள்ளியில் படிக்கும் போது பெண் பிள்ளைகளை கண்டாலே சண்டைதான் பிடிப்போம். ‘காதல்’ என்ற உணர்வு எனக்கு வரவேயில்லை. எங்கள் வகுப்பில் தேவமணி என்ற மாணவி படித்தார். அவளோடு எப்போதும் நான் சண்டை பிடித்துக்கொண்டுதான் இருப்பேன். இதை கவனித்த ஆசிரியர் யோகரட்ணம் ‘உங்க ரெண்டு பேரையும் ஒரு அறைக்குள்ள போட்டு அடைச்சா வெளியே வரும்போதும் மூன்று பேராகத்தான் வருவீங்க’ என்றார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது அப்போது எனக்கு புரியவில்லை.

ஏனென்றால் காதல் பற்றி அறியாத வயது. பாடசாலை வாழ்க்கை முடிந்த பிறகுதான் யோகரட்ணம் மாஸ்டர் சொன்னதற்கான அர்த்தம் புரிந்தது. எனது திருமணம் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் விசாலயம்கோட்டை என்ற கிராமத்தில் நடந்தது. எனது முறைப் பெண்ணையே மணமுடித்தேன். என்ற சேகரிடம்; அது ஒரு காலம் என்று நீங்கள் குறிப்பிடுவது? ‘‘அப்பா ரயில்வேயிலிருந்து ஓய்வுபெற்ற பணத்தில் சொந்தமாக இடம் வாங்கி நாங்கள் கட்டிய அந்த பலகை வீடு அப்பா அம்மா சகோதரர்களுடன் ஓடி ஆடி விளையாடிய வீடு.
பி. எச். அப்துல் ஹமீதின் தாயார்.
இன்று அதை உடைத்து விட்டு சகல வசதிகளுடனும் இரண்டு மாடிவீடு கட்டியிருக்கிறேன். ஆனாலும் அந்தப் பலகை வீட்டு சுகம் இந்த மாடி வீட்டில் இல்லையே.. என்று ஏங்கும் அவர், இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறார். ஒரு மாலைப் பொழுதில் நானும் ஹமீதும் கிராண்ட்பாஸ் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். அப்போது எதிரில் ஒரு கடலை வண்டிக்காரன். எங்களிடம் ஐந்து சதம் மட்டுமே இருந்தது. சரி அந்த காசுக்கு கடலை வாங்கி இருவரும் சாப்பிடுவோம் என்று அந்த கடலை வண்டிக்காரனை நெருங்கினோம். ஹமீதை பார்த்த அந்த கடலைக்காரன். தம்பி நீங்க பி.எச். அப்துல் ஹமீத் தானே? என்றான்.

அவன் அப்படி கேட்டதும் நாங்கள் கடலை வாங்கும் ஐடியாவை விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தோம். ஐந்து சதத்தை கொடுத்து எப்படி ஒரு பொட்டலம் வாங்குவது. இருந்தாலும் பரவாயில்லை வாங்குவோம் என்ற எண்ணத்தில் நான் ஹமீதை பார்த்து கேட்டேன். ‘ஹமீத் உங்களுக்கு கடலை வேண்டுமா’ என்றேன். நிலமையை புரிந்துகொண்ட அவரும் வேணாம் நீங்களே சாப்பிடுங்கள்’ என்றார். உடனே ஐந்து சதத்தை கொடுத்து ஒரு கடலை பொட்டலத்தை வாங்கினேன். பிறகு நாங்கள் இருவரும் அந்த கடலை பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டுக்கொண்டே நடந்தோம். அது ஒரு காலம் என்று பெருமூச்சுவிடுகிறார்.

உங்கள் அப்பா எப்படி கண்டிப்பானவரா?

‘தப்புசெய்தால் தண்டனை தருவார். ஒரு நாள் தெமட்டகொடை வழியே நான் நடந்து போகும் போது சந்தியில் கிளங்கு பெட்டியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். என்னை கண்ட தும் தம்பி இந்த பெட்டியை அந்த கடை வரைக்கும் தூக்கி கொண்டு வா ஐந்து ரூபா தருகிறேன் என்றார். நானும் அவர் சொன்னபடியே பெட்டியை தூக்கி கொண்டுபோய் வைத்துவிட்டு அவரிடம் ஐந்து ரூபாவை பெற்றுக் கொண்டேன். முதன் முதலாக நான் ஐந்து ரூபா சம்பாதித்து விட்டேன் என்ற சந்தோசம். இதை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று வீட்டுக்கு ஓடினேன்.
1983 கலவரத்தின் பின் நாட்டை விட்டுச் செல்வது
என்ற எண்ணத்துடன் பிரியாவிடை பெற்றபோது
 ஹமீட் குடும்பத்தாருடன்.