Saturday, April 27, 2013

ஒளிப்பதிவாளர் வி.வாமதேவனின் ஞாபக வீதியில்…

'தீ' யில் நடிக்க வந்த அந்த பரட்டைத் தலை மனிதன்...

சந்திப்பு: மணி ஸ்ரீகாந்தன்

இலங்கை சிங்களத் திரைப்படத் துறையில் சுடர்விட்டுப் பிரகாசித்த தமிழர்களில் வாமதேவன் முக்கியமானவர். 1957 இல் ‘வனலிய’ என்ற சிங்களத் திரைப்படத்தில் உதவி கமராமேனாக தன் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த வாமதேவன், ஒளிப்பதிவாளராக, ஒளிப்பதிவு இயக்குநராக, வெளிநாட்டு படங்களில் உதவி ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு இயக்குநராக பணிபுரிந்து, முன்னணி ஒளிப்பதிவாளராக பெயரெடுத்தவர். 1996 வரை சிங்களத் திரையுலகில் பிரகாசித்தவர். மொத்தம் 57 படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

1952இல் வெளியான எலிபண்ட் போய், 1959இல் வெளியான ‘த்ரீ யெலோ தெட்ஸ்’ ஆகிய படங்களில் பணியாற்றிய இவருக்கு, காமினி பொன்சேகாவின் ‘ரம்பேஜ்’, ‘கொடிவல்கய’ (1982), நொமியென் மினிஸ்சு (1995) ஆகிய படங்கள் புகழ் சேர்த்தவற்றில் சில. சிங்களத் திரையுலகில் வாமதேவன் ஒரு சகாப்தம்.

  “பாட புத்தகங்களுக்கு பதிலாக சினிமா புத்தகங்களை பையில் வைத்துக்கொண்டு பாடசாலை செல்வதுதான் என் வழக்கம். பாடம் நடைபெறும் நேரத்தில் என் கையில் பேசும்படம் சினிமா சஞ்சிகை தான் இருக்கும்.

என்னை தட்டிக் கேட்கவோ, தண்டிக்கவோ அந்தப் பாடசாலையில் யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. படிக்கிற வயதில் நான் தனிக்காட்டு ராஜாவாக திரிந்த காலம் அது.
யாழ்ப்பாணத்தில் நான் கல்வி கற்க ஆரம்பித்த போதே என் சேட்டைகளும் தொடங்கிவிட்டன. என் சேட்டைகளை சகித்துக்கொள்ள முடியாத சில பள்ளி நிர்வாகங்கள் என்னை பாடசாலையிலிருந்து வெளியேற்றின.

இதனால் பத்தாம் வகுப்புக்குள் நான் பிரவேசம் செய்யும் போது நான் எட்டு பாடசாலைகளில் படித்திருந்தேன். எப்படி என் சாதனை? அதாவது அவ்வளவு வெறுக்கப்படும் மாணவனாக நான் இருந்திருக்கிறேன்!

ஒருமுறை வகுப்பறையில் சினிமா புத்தகத்தில் நான் மூழ்கியிருந்தேன். என்னை அழைத்த ஆறுமுகம் சேர் ‘ஏன்டா இப்படி சினிமா புத்தகங்களை பார்த்து கெட்டுப் போற? சினிமா உனக்கு சோறு போடாது! உன் வாழ்க்கைக்கு அடித்தளமா அமையப் போவது கல்விதான்; சினிமாவல்ல. நீயும் கெட்டு மற்றவர்களையும் கெட்டுப் போகச் செய்கிறாயே!

இதற்கு பதிலாக எங்காவது வெளியில் போய் வேலை செய்யலாம்... குடும்பத்திற்காகவது நன்மையாக இருக்கும்’ என்று அட்வைஸ் செய்தார்’ என்று தனது வீறாப்பான மாணவ பருவத்தை மீட்டுகிறார் வாமதேவன்.

அச்சுவேலியில் வைரமுத்து - செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனாக பிறந்தவர் வாமதேவன்.

ஆம்பக் கல்வி சங்கானை தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பம். பாடசாலையில் எந்த ஆசிரியருக்கும் இவரைப் பிடிக்காது. அந்தளவுக்கு இவர் மாணவ சண்டியனாக இருந்திருக்கிறார்.

“வெள்ளைச் சட்டையுடன் வரும் ஆசிரியர்கள் வகுப்பை விட்டு வெளியேறிச் செல்லும் போது தீந்தைப் பேனையின் மூடியை கழற்றி ஆசிரியரின் முதுகுப்புறமாக விசிறியடிப்பேன். மை கறைபட்டது ஆசிரியர்களுக்குத் தெரியாது.

1957ல் சிலோன் ஸ்டூடியோவில் பிடிக்கப்பட்ட இப்படத்தில்
பிரேம்நாத் மொராயஸ், வானகுரு, மல்லிகா காந்தாவெல,
கிருஷ்ணா ரஜனி, டி. வை. எம். சாமி (ஒளிப்பதிவாளர்),
டி கே. பாபு (ஒப்பனையாளர்), ரூபசேன, ஜின்னாபாபுஜி (இயக்குநர்)
 ஏ. டி. அரஸ் (உதவி இயக்குநர்),
 வீ. வாமதேவன் உதவி ஒளிப்பதிவாளர்.
சக மாணவர்கள் இதை கவனித்தாலும் காணாதவாறு இருந்து விடுவார்கள். சண்டியனான என்னுடன் பகைத்துக்கொள்ள விரும்புவதில்லை.

ஒருமுறை ஆர்ட் மாஸ்டர் என்னை பிரம்பால் தலையில் அடித்துவிட்டார். எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. தாயில்லாத பிள்ளையைத் தான் தலையில் அடிப்பார்கள்’ என்ற பழமொழி எங்க ஊரில் ரொம்பவும் பிரசித்தம்.

அதனால் வந்த கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்ட் மாஸ்டரின் சட்டையை பிடித்து உலுக்கி கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டு அடுத்த நொடியே மதில்மேல் ஏறிக் குதித்து வீட்டுக்கு ஓடிவிட்டேன். வீட்டில் நடந்ததை சொன்னேன். வீட்டில் உள்ளோருக்கு ஆர்ட் மாஸ்டர் மீது தான் ஆத்திரம்.

‘எப்படி என் பிள்ளையை தலையில் அடிக்கலாம் என்ற வாதமே மேலோங்கியது.

எங்கள் ஊரில் எனது சித்தப்பா தங்கராஜா பெரிய செல்வாக்கான மனிதர். கவர்னர் என்றுதான் அவரை எல்லோரும் அழைப்பார்கள். அவருக்கும் ஆர்ட் மாஸ்டர் மீது பயங்கர ஆத்திரம் எகிறியது.

ஸ்கூல் முடிந்து அவன் வரட்டும் என்று கத்திக்கொண்டிருந்தார். விசயம் பாடசாலைக்கு தெரியவர பதறியடித்துக் கொண்டு எனது வீட்டுக்கு ஓடி வந்தார் பாடசாலை அதிபர். எனது சித்தப்பாவை சமாதானப்படுத்தி நிலைமையை சமாளித்தார். அதன் பிறகு அந்தப் பாடசாலையில் என்னை அந்த வாத்தியார் திரும்பியும் பார்ப்பதில்லை.

ருக்மணிதேவியுடன்...
என் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பாடசாலையில்தான் அப்படியென்றால் வீட்டிலும் எனக்கு நல்ல பெயர் கிடையாது. இரவு காட்சி சினிமா பார்க்கப் போவதென்றால் நான் படுக்கையில் படுத்திருப்பது போல தலையணை மீது போர்வையை போர்த்தி சரிசெய்து விட்டு யாருக்கும் தெரியாமல் போய்விடுவேன்.

அக்காலத்தில் வாடகை சைக்கிள் டைனமோ வெளிச்சம் இல்லாமல் 50 சதம் என்றும் விளக்கு வெளிச்சம் உள்ளது 75 சதம் என்பதாகக் கிடைக்கும். 50 சதம் கொடுத்து வெளிச்ச வசதி இல்லாத வாடகை சைக்கிளை வாங்கி ஏற்கனவே திருடி வைத்திருக்கும் லைட்டை அந்த சைக்கிளில் பொருத்தி ஓட்டிச் செல்வேன்.

லைட் இல்லாமல் சைக்கிளில் போனால் பொலிசில் பிடிப்பார்கள். தவராஜா, தங்கராஜா, கிருஷ்ணலிங்கம் ஆகியோரும் என்னோடு சைக்கிளில் வருவார்கள். அச்சுவேலியிலிருந்து நெல்லியடிக்கு ஆறு கிலோ மீட்டர். அங்கே மகாத்மா தியேட்டர் மற்றும் லக்ஷ்மி தியேட்டரில் சினிமா பார்ப்போம்.

அதுதவிர யாழ்ப்பாணம் வெலிங்டன், வின்சர், மனோஹரா தியேட்டர்களுக்குச் செல்வோம். அச்சுவேலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 12 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். நான் எம். ஜி. ஆர். பைத்தியம்.

தலைவர் படத்தை முதல்நாள் ரிலீஸ் அன்றே பார்த்துவிடுவேன். பார்க்கக் கிடைக்காவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும்.

சினிமாவின் பாதிப்பு சின்ன வயசிலேயே என்னுள் வளரத் தொடங்கிவிட்டது. அப்போது நெல்லியடி மகாத்மா தியேட்டரில் துளிவிஷம் என்ற திரைப்படத்தை காண்பித்தார்கள்.

அதில் முக்கமாலா என்ற தெலுங்கு நடிகர் நடித்திருந்தார். ஒரு காட்சியில் கண்ணாடி உடைத்துக் கொண்டு வெளியே வந்து குதிரையில் அமர்ந்து சென்று வருவது போன்று ஒரு காட்சி வரும். இந்த காட்சிக்காகவே இந்தப் படத்தை நான் பல தடவை பார்த்திருக்கிறேன்.

எம். மஸ்தான் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். அவரின் தீவிர ரசிகனாக நான் மாறுவதற்கு இப்படம் வித்திட்டது.

பாடசாலை ஆசிரியர்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது என்று சொன்னேன்... ஆனால் மிஸ் விஸ்வலிங்கம் டீச்சருக்கு என்மீது ரொம்பப் பிரியம். எனக்கும் அவள்மீது இஷ்டம். டீச்சர் வீதியில் போனால் தங்க ரதம் ஆடி அசைந்து போவது போல் இருக்கும்.

எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். அந்த டீச்சருக்கு வயது ஒரு இருபதைத் தாண்டியிருக்கும். டீச்சரை யாராவது ஏதாவது சொன்னா அவர்களை அடிக்கவே போயிடுவேன். அந்தளவுக்கு ஒரு அன்பு. அதற்கு என்ன பெயரென்றே எனக்கு இன்றைக்கு வரைக்கும் தெரியாது.’ என்று சொல்லும் வாமதேவன் நண்பர்களோடு செம்மீன் பிடித்த கதையை சுவை பட இப்படிச் சொல்கிறார்.

தொண்டமானாறு மன்னார் கடலோடு கலக்கும் இடத்தை வள்ளக்கடல் என்று சொல்வார்கள். அங்கே முழங்காலளவு தான் தண்ணீர் இருக்கும். செம்மீன் பிடிப்பவர்கள் மாலையானதும் ஈக்கில்களால் செய்யப்பட்ட கூடையை தண்ணீரில் கவிழ்த்து வைத்துவிட்டு சென்றிருப்பார்கள்.

அதற்குள்  மீன் நுழைந்தால் மறுபடியும் வெளியே வர முடியாது. எனவே மீன்பிடிப்பவர்கள் அடுத்த நாள் காலையிலே வந்து அந்த கூடையை எடுப்பார்கள் நானும் எனது நண்பர்களும் நள்ளிரவே வள்ளக் கடலுக்கு சென்று கூடையில் சிக்கியிருக்கும் மீன்களை பிடித்து எடுத்துச் சென்று விடுவோம். பக்கத்து தோட்டத்திலிருக்கும் மரவள்ளிக் கிழக்கை தோண்டியெடுத்து அவித்து மீனோடு சாப்பிடுவோம்.

இதில் என்ன வேடிக்கை என்றால், மரவள்ளி கிழங்கு திருடும் போது கூட வரும் நண்பர்களுக்குத் தெரியாமல் அவர்களின் தோட்டங்களிலேயே திருடி வந்து சம்பந்தப்பட்ட நண்பர்களோடே உட்கார்ந்து சாப்பிடுவதுதான்.

அடுத்த நாள் அவர்களே வந்து, ‘மச்சான், யாரோ என் வீட்டுத் தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கை திருடி இருக்காங்கடா என்று என்னிடமே சொல்வார்கள். நான் தெரியாத மாதிரி இருந்து விடுவேன்’ என்று தான் அடித்த கூத்துக்களை மெய்சிலிர்க்க சொல்லும் வாமதேவன் கொழும்பிற்கு வந்த கதையைக் கொஞ்சம் கேட்போம்.

‘எனது அப்பாவின் ஊர் சங்கானை. அங்கே சண்டித்துரை என்ற ஒரு சண்டியர் இருந்தார். அடிக்கடி சிறைக்கு சென்று வருவதுதான் அவர் வேலை. அம்மா என்னை திட்டும் போது ‘நீ ஒன்றுக்கும் உருப்பட மாட்ட... அந்த சண்டித்துரை மாதிரி நீயும் வருவாய்.

கடைசியில் ஜெயில்தான் உன் காலம் கழியும்’ என்று சொல்வார். நான் கொழும்பு வரும்போது அம்மா எனக்கு கொடுத்த ஆசீர்வாதமும் இதுதான்.

நான் அச்சுவேலியிலிருந்து கொழும்பு வந்தபோது ரொம்பவும் சந்தோசப்பட்டது எனது பாடசாலை ஆசிரியர்கள் தான். விஸ்வலிங்கம் டீச்சருக்கு கவலைதான். ஆனால் அவளின் முயற்சியில்தான் நான் கொழும்பு வந்தேன்.

வரும்போது எனது உறவினரான பாருபிள்ளைதான் என் கை செலவுக்கு பதினைந்து ரூபா பணம் கொடுத்து, ‘கொழும்புக்கு போகும் நீ அங்க போய் இங்க மாதிரி ஆடாதடா. பத்திரமா இரு’ என்று என்னை வழியனுப்பி வைத்தார்.

கொழும்பில் விஸ்வலிங்கத்தின் சகோதரர் புவனசுந்தரத்தின் வீட்டில்தான் இருந்தேன். இந்தியாவிற்கு சென்று சினிமா ஒளிப்பதிவு பற்றி கற்று வரவேண்டும் என்பதுதான் என் இலட்சியமாக இருந்தது. கொழும்பில் மெய்கண்டான் பிரஸ், சுதந்திரன் பத்திரிகை போன்றவற்றில் வேலைசெய்தேன்.

அப்போதுதான் புதுச் செட்டி வீதியில் இருந்த சுவைர் அமீர் எனக்கு நண்பரானார். அவர் கலையார்வம் கொண்டவர்.

நாடக தயாரிப்பாளராகவும் இருந்தார். அவருடன் நாடகம் பார்க்கப் போவேன்.

பிறகு சிலோன் தியேட்டரில் வேலை செய்த மகேந்திரன் ஊடாக சிலோன் ஸ்டூடியோவில் ஒளிப்பதிவாளர் சாமியின் உதவியாளராக வேலை கிடைத்தது. சாமி ஒரு இந்தியர் ரொம்பவும் கண்டிப்பானவர்.

அவர் வாயிலிருந்து எப்போதும் கெட்ட வார்த்தைதான் வரும். யாராவது மரியாதையாக திட்டினாலே ஆத்திரப்பட்டு அடிக்கப் போகும் நான் சாமி என்னை தரக்குறைவாக பேசும் போதெல்லாம் தாங்கிக்கொண்டேன். வேலையை கற்றுக்கொள்ள வேண்டுமே என்ற வெறிதான் என்னுள் இருந்தது.

ஒரு நாள் நான் டிப்டொப்பாக ஆடை அணிந்து படப்பிடிப்புக்கு போனேன். என்னைக் கவனித்த சாமி ‘டேய் வாடா இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்க... பொண்ணு பார்க்க வந்தியா? என்று நக்கலாகக் கேட்டார்.

அதன்பின் அவர் செய்த காரியம் என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. கீழே கிடந்த சேற்றை அள்ளி என் சட்டையில் தேய்த்தார். என் சட்டையை அலங்கோலப்படுத்திய பின்னர் ‘இப்போ போய் வேலை செய்’ என்று துரத்தினார். அப்படிப் பட்ட ஒரு மோசமான மனிதர் அவர்.

அதன்பிறகு இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்றது. தூக்கமே இல்லை. மூன்றாவது நாள் சாமியிடம் சென்று ‘மூன்று நாள் தூக்கம் இல்ல சேர்... எனக்கு நாளை மட்டும் ஒரு நாள் லீவு தாங்க சேர்!’ என்று கெஞ்சினேன்.

சாமி சிரித்துக்கொண்டே ‘அடடா! மறந்தே போச்சே எனக்கு! மூன்று நாளா கஷ்டப்பட்டு வேலை செய்திருக்க... பாவம் நீ! உனக்கு லீவு தராம வேறு யாருக்குடா தருவேன்?’ என்று அவர் ஆரம்பித்த போது நான் உச்சி குளிர்ந்து போனேன். சாமி தொடர் ந்தார்.

‘அதனால் நீ இப்பவே போ... ஆனால் இனி திரும்ப வேலைக்கு வராதே!’ என்று சாமி முடித்தபோது நான் ஆடிப்போய்விட்டேன்.
‘தீ’படப்பிடிப்பில் ரஜினி,(கொழும்பு கொம்பனி வீதியில்)
பிறகென்ன! மறுபடியும் தூக்கமில்லாமல் வேலை செய்யத் தொடங்கினேன். சாமி எப்போ லீவு தருவாரோ அப்போதுதான் லீவு கிடைக்கும். அதன் பிறகு லெனின் மொறாயஸ் எங்களோடு வந்து இணைந்து கொண்டார்! என்று தமது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தை விபரித்த வாமதேவனும் காமினி பொன்சேகாவும் நல்ல நண்பர்களாம்

‘காமினியின் பெரும்பாலான படங்களுக்கு நான்தான் கெமராமேனாக வேலை செய்திருக்கிறேன். காமினியும் நானும் இணைந்து வேலைசெய்த ‘நொமியன மினுசுன்’ படம் பற்றி சொல்லியேயாக வேண்டும்.

இராணுவ அதிகாரி வேடத்தில் இன்றைய ஜனாதிபதி நடித்தார். அப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். காமினி என்னிடம், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆமி டிரஸ் தைக்க வேண்டும் என்றும் அளவெடுத்துக் கொண்டு வரும்படியும் என்னிடம் சொன்னார்.

நான் ஒரு டெய்லரை அழைத்துக்கொண்டு அவரை அளவெடுத்துக் கொண்டு வந்தேன். அதன் பிறகு படப்பிடிப்பில்தான் நான் அவரை சந்தித்தேன். அவர் நடித்த காட்சிகளை ஒன்று இரண்டு டேக்குகளிலேயே ஓகே செய்தோம். அந்தளவுக்கு திறமையான கஞைராக அவர் இருந்தார்.

கூச்சமில்லாமல் கெமராவுக்கு முகம் கொடுத்தார். அவர் கெமராவுக்கு முன்னால் நின்ற போது நடிப்பில் நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு கலைஞனை பார்ப்பது மாதிரி இருந்தது.

சிறந்த நடிகராக வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இந்த நாட்டுக்கு நல்ல தலைவனாக வந்திருக்கிறார். அவர் ஜனாதிபதியான பிறகு நான் அவரை சந்திக்கவில்லை. எனக்கு இன்றும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.’

‘நூற்றுக்கணக்கான சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றிய வாமதேவன் தமிழில் வி. பி. கணேசன் நடித்த ‘நான் உங்கள் தோழன்’ படத்தில் மட்டுமே ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

சில தமிழ்ப் படங்கள் உருவாகவும் இவர் காரணமாக இருந்திருக்கிறார். ரஜினி நடிப்பில் இலங்கையில் தயாரான ‘தீ’ படம் பற்றிய அவரது அனுபவம் அலாதியானது.

ஒருநாள் மகாராஜா, ராஜமகேந்திரன், காமினி பொன்சேகா ஆகியோருடன் நான் பேசிக்கொண்டிருந்த போது நீங்கள் ஒரு தமிழ் படம் எடுத்தால் என்ன என்று கேட்டேன். அதை ராஜா மகேந்திரன் ஏற்றுக்கொண்டார். செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில்தான் ‘தீ’ பட த்தை எடுக்க முன்வந்தார்.

படப்பிடிப்பு தொடங்கியதும், தீ பட கதாநாயகனான ரஜினியை நான் அப்போதுதான் பார்த்தேன். ஒரு ஒல்லியான கரிய உருவம், எண்ணெய் பார்க்காத பரட்டைத் தலை, சிகரட் புகைத்து வெள்ளைபடிந்துபோன உதடு... இவரா ஹீரோ என்று வியந்தேன்.

அவரைப் பார்த்து நம்பிக்கை இழந்துபோன நான் படத்திற்கு பெரிதாக செலவு செய்யாதீர்கள் என்று மகாராஜாவிடம் அறிவுரை கூறிவிட்டு வந்துவிட்டேன். ரஜினியுடன் நான் பேசவில்லை.

அப்போது நானும் இலங்கை சிங்கள படவுலகில் புகழின் உச்சத்தில் இருந்த நேரம். அதனால் ரஜினி எனக்கு பெரிய ஆளாகப் படவில்லை.

ஆனால் இன்று அவர் எங்கேயோபோய்விட் டார்’ என்று சொல்லும் வாமதேவன், வத்தளை விஜயா ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்த போது பாலுமகேந்திரா என்ற ஒரு பையனும் தனக்கு உதவியாளராக வேலை செய்தான் என்றும் சொல்கிறார்.

‘பிறகு அவன் இந்தியாவில் உள்ள புனே திரைப்படக் கல்லூரிக்கு படிக்கச் சென்று மறுபடியும் விஜயா ஸ்டியோவிற்கு வந்தான். இங்கே சினிமாவில் அவருக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. அவன் இந்தியாவிற்கு சென்றுவிட்டான். அதன்பிறகு அந்தப் பையன் தான் தமிழ்த் திரையுலகில் பெரியளவில் பேசப்படுகின்ற பாலு மகேந்திராவானான்...’ என்று கூறுகிறார் வாமதேவன்.

காதல் உங்கள் வாழ்வில் குறுக்கிடவில்லையா? என்று அவரிடம் கேட்டோம்.

‘நான் பூநகரியில் படித்த போது டிப்டொப்பாக டிரஸ் அணிந்து பாடசாலைக்கு செல்வேன். மற்ற பையன்கள் எல்லாம் ஒரு மாதிரியா தான் இருப்பாங்க. அந்த பாடசாலையில் நான்தான் ஹீரோ.

அங்கே இருந்த ஒரு மாணவியின் மேல் எனக்கு காதல்பிறந்தது. ஆனால் அதை சொல்லத்தெரியாத வயது... எப்போதும் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை... ஆனால் சிறிது காலத்திலேயே அந்தப் பாடசாலையை விட்டு நான் விலகிச் சென்றுவிட்டேன். அதோடு அவளையும் பார்க்க முடியாமல் போய் விட்டது.

ஆனால் என் மனதை விட்டு அவள் ஞாபகங்கள் மறையவில்லை. இந்த சம்பவத்தை என் அன்புக்குரிய ஆசிரியை விஸ்வலிங்கத்திடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறேன். அதன் பிறகு ஆமர் வீதியில் நான் தங்கியிருந்த போது ஒரு நாள் காலை வேலையில் என் நண்பர்கள் என்னை அவசரமாக எழுப்பி ‘டேய் மச்சான் ரோட்டுல சரோஜாதேவி ஸ்கூலுக்கு போகுது வந்து பாருடா...’ என்றார்கள்.

‘சும்மா இருங்கடா!’ என்று நான் தூங்கிவிட்டேன் அடுத்த நாளும் நண்பர்கள் என்னை எழுப்பி ‘ஓடி வாடா’ சரோஜாதேவி வருகிறது’ என்றார்கள். நானும் போனால்போகிறது என்று ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். நான் அவளை பார்க்கும் போது அவள் என்னைக் கடந்து சென்று விட்டாள்.

அவளின் பின்னழகுதான் தெரிந்தது- நீளமான கூந்தல் ஆடி அசைந்து சென்றதைப் பார்த்ததுமே அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் கிளர்ந்தெழுந்தது. அடுத்தநாள் காலையிலேயே வீட்டு வாசலில் நின்று அவள் வருகிறாளா என்று பார்த்தேன். வந்தாள். நண்பர்கள் சொன்னது உண்மைதான் அவள் சரோஜாதேவிதான். அதன் பிறகு விடுவேனா! நான் வீசிய வலையில் வசமாக அந்த மீன் மாட்டிக்கொள்ள என் காதல் கல்யாணத்தில் முடிந்தது. காமினி என்னை எப்போது பார்த்தாலும் ‘வாமா ஸ்கூல் யுனிபோம் என்றால் விடமாட்டான் என்பார்’ என்று தமது காதல் அனுபவங்களை இனிக்க இனிக்கச் சொன்னார்.

வாழ்க்கையில் எதையாவது இழந்திருக்கிறீர்களா? என்று கேட்டதும் ‘செல்வத்தை’ என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். வாழ்க்கையை பற்றி சில வார்த்தைகள் கேட்டோம்.

‘வாழ்க்கை வாழ்வதற்கே. மேடு, பள்ளம் உள்ள ரோடு மாதிரிதான் வாழ்க்கை துக்கம், சந்தோசம் என்றும் இரண்டும் மாறி மாறி வரும். ஆனால் நான் வாழ்க்கையில் ரொம்பவும் சந்தோசமாக இருந்திருக்கிறேன்.

வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய அனைத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன். வாழ்க்கை மிக அழகான அனுபவம். அதை அனுபவிக்க தெரிந்திருக்க வேண்டும்’ என்று கூறி முடித்தார் ஒளிப்பதிவாளர் வாமதேவன்.

Thursday, April 25, 2013

இலக்கிய ஆர்வலர் எஸ்.ராமனின் ஞாபக வீதியில்…

"எனது மொழி ஆர்வத்திற்கு வித்திட்ட திராவிடக் கழகம்''


 நேரில்: மணி ஸ்ரீகாந்தன்

இலக்கிய வட்டத்தில் ராமனுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அநேக இலக்கிய அன்பர்களுக்கு இவரைத் தெரிகிறது. இலக்கிய உலகில் இவர் ஒன்றும் பெரிய படைப்புகளைத் தரவில்லைதான். ஆனாலும் பேங்ஷால் வீதியில் உள்ள ‘கோல்டன் கபே’யில் பெயருக்கு தகுந்தாற் போலவே நாவுக்கு ருசியாக உணவையும், அறிவுக்கு தீனியையும் வழங்கி வருகிறார். இவர் தொகுத்தெழுதிய சிதறிய முத்துக்கள், பொன் மொழிகளில் பெண்மணிகள் உள்ளிட்ட இரண்டு நூல்களையும் அவரின் உணவகத்தில் விற்பனைக்கு வைத்திருக்கிறார். படிப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. வெறும் உணவகத்தின் உரிமையாளராக மாத்திரமல்ல, இந்த நிறுவனத்திலிருந்து கொண்டே பல நல்லிதயங்களின் நட்பையும் பெற்று, அதைச் சிறப்பாகவும் பாதுகாத்து வருகிறார். அந்திசாயும் ஒரு மாலைப் பொழுதில் அவரின் அந்தக்கால அனுபவங்களை எம்மோடு இப்படி பகிர்ந்து கொள்கிறார்.

படம் பார்ப்பதென்றால் நண்பர்களுடன் ஒரு கூட்டமாகத்தான் வருவோம். எனக்கு பிடித்த நடிகர் எஸ். எஸ். கொக்கோ, அவர் மாதிரி நானும் வரவேண்டும் என்றுதான் சின்ன வயதிலே ஆசைப்பட்டேன்.
டிக்கெட் விலை ஐந்து பைசாதான். ஒரே சமமான மண் தரையில் அமர்ந்திருக்கும் போது முன்னாடி அமர்ந்திருப்பவர் எங்களை மறைத்துக் கொண்டிருப்பார். அதற்கு நாங்கள் ஒரு வேலை செய்வோம். மணலை குவித்து அதன் மேல் உட்கார்ந்து கொள்வோம். இப்போது நாங்கள் எங்கள் பின்னாடி அமர்ந்திருப்பவர்களுக்கு பிரச்சினையாக இருப்போம். அதற்கு பின்னாடி
அமர்ந்திருப்பவர்கள் ஒரு வேலை செய்வார்கள். படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் எங்களை நாங்கள் மறந்திருக்கும் அந்த நேரத்தில் எங்களின் மணல் குவியலை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பின்னாலிருந்து பறித்துவிட நாங்கள் அப்படியே பழையபடி கீழே சரிந்து விடுவோம். இந்த விசயம் தரையில் அமர்ந்து படம் பார்த்தவர்களுக்கு புரியும் என்று சிரிக்கிறார் ராமன். தனது பூர்வீகம் பற்றி ராமன் கூறும்போது,

‘திருநெல்வேலிதான் எனது சொந்த ஊர். அங்கே மூலைக்கரைப்பட்டி என்ற ஒரு பின்தங்கிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எனது அப்பாவின் பெயர் சங்கர நாராயண ரெட்டியார். அம்மா ஆளம்மாள். என் அப்பா நல்ல உயரம் முறுக்கு மீசை வைத்து ரொம்பவும் கம்பீரமாக இருப்பார். கட்டபொம்மனின் மண்தானே. அதனால் அந்த மண்ணின் வீரம் என் அப்பாவின் தோற்றத்திலும் அப்படியே இருந்தது. ரொம்பவும் வறுமையான குடும்பம் எங்களுடையது.
அப்பா சமையல்காரராக வேலை செய்தார். இலங்கையின் ரூபா அப்போ ரொம்ப பெறுமதியாக இருந்தது. இலங்கை ஒரு ரூபாய்க்கு இந்தியாவில் இரண்டு ரூபாய் தந்தார்களாம். அதனால் அப்பா இலங்கையில்தான் வேலை செய்தார். வருடத்திற்கு ஒருமுறை திருநெல்வேலிக்கு வருவார். அவர் வரும்போது இலங்கையிலிருந்து பிஸ்கட் வாங்கி வருவார். அது ரொம்பவும் ருஷியாக இருக்கும். அப்பா கொண்டு வரும் அந்த பிஸ்கட்டுகளுக்காக நாங்கள் அப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருப்போம். நான் படித்தது குறைவுதான். பகுத்தறிவுதான் அதிகம். மூலைக்கரை ஆரம்ப பாடசாலை எங்கள் வீட்டுப் பக்கத்தில்தான் இருந்தது. முதல் நாள் ஸ்கூலுக்கு என்னை அம்மாதான் அழைத்துக் கொண்டு சென்றார். எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியரை எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆரம்பத்தில் எழுத்தாணியை கொண்டு ஓலையில்தான் எழுதி படித்தேன். அது மட்டும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது.

மனைவி சரோஜாவுடன் ராமன்.
எங்கள் ஊரைச் சேர்ந்த வேலு, கருப்பையா ஆகியோரும் அந்த பள்ளியில் படித்தார்கள். எனக்கு அவங்கதான் நண்பர்கள்.
அவர்களோடுதான் விளையாடுவேன். சின்ன மூலைக்கரை குளத்தில்தான் குளிப்போம். நான் அதில் கரணம் போட்டு குளிப்பேன். அப்படி குளிப்பதில் எனக்கொரு அலாதி இன்பம். ஒரு நாள் நானும் நண்பர்களும் பாடசாலைவிட்டு வரும்போது வழியில் ஒரு மரத்தில் தேன் கூடு தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்த நாங்கள் அதை கல்லால் அடித்து கலைக்க, அது எங்களை துரத்த, நாங்கள் கத்திக்கொண்டு ஓடினோம். ஓடி ஒரு பற்றைக்குள் பதுங்கிக் கொண்டோம். அந்த பொல்லாத தேனீக்கள் சும்மா விடுமா. எனது முகத்தை குறிபார்த்து கொத்தித் தள்ளியது. நான் கத்திக்கொண்டு ஓடினேன். ரொம்ப தூரம் ஓடிய பிறகுதான் அந்த தேனீக்கள் எங்களை துரத்துவதை நிறுத்தியது. தேனீக்கள் கொத்தியதால் என் முகம் வீங்கிவிட்டது. இப்படியே வீட்டிற்கு போனால் வீட்டில் அம்மா அடிப்பாங்க என்று பயந்து கொண்டு எனது உறவினர்கள் வீட்டில் சென்று தங்கிவிட்டு அடுத்த நாள் வீக்கம் வற்றிய பிறகுதான் வீட்டிற்கே சென்றேன். நாலாவதோடு நம்ம படிப்பு நின்றுவிட்டது. அதற்கு மேல் தொடர முடியவில்லை. அந்தளவுக்கு வறுமை. நான் பாடசாலை சென்ற அந்தக் காலத்தில் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் மாட்டு சாணத்தை அள்ளிவந்து ‘வரட்டி’ தட்டி சுவரில் அடித்து காய வைத்து விற்பதுதான் என் வேலையாக இருந்தது என்கிறார் இவர்.

எப்போது கொழும்பிற்கு வந்தீர்கள்?

‘எவ்வளவு நாளைக்குதான் ‘வரட்டி’ தட்டுவது நானும் என் அப்பா மாதிரி உழைக்க வேண்டும் என்ற ஆசையில் கொழும்புக்கு புறப்பட்டேன். கட்டின துணியோடு வந்தார்கள் என்று சொல்வார்களே அதுமாதிரிதான் நானும் ஒரு துண்டு வேட்டியும், முண்டா பெனியனையும் போட்டுக்கிட்டு என் உறவினர் ஒருவருடன் வந்தேன். இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் பத்து நாள் தங்கி ராமானுஜம் கப்பலில் ஏறி கொழும்பிற்கு வந்தேன். இங்கு வந்த பிறகு அப்பா வேலை செய்த கொம்பனித்தெரு லட்சுமி விலாஸ் ஹோட்டலில் எனக்கு ஒரு வேலை வாங்கித் தந்தார்.

டொமினிக் ஜீவாவுடன்.
ஹோட்டலில் மேசை துடைக்கும் வேலை. ஆரம்பத்தில் எனக்கு மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் தந்தார்கள். அங்கே வேலை செய்தேன். லட்சுமி விலாஸ் ஹோட்டல் ஜாவா லேனில் இலக்கம் 23ல் தான் இருந்தது. அந்தக் கடைக்கு பக்கத்தில ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டிற்கு நான் காலை சாப்பாடு எடுத்துச் சென்று கொடுப்பேன். அந்த வீட்டு துரைக்கு பிள்ளைகள் இல்லை. அதனால் என் மீது ரொம்பவும் பாசம் காட்டினார்கள். சில காலங்களுக்கு பிறகு ‘லட்சுமி விலாஸ்’ ஹோட்டலின் நிர்வாகத்தை பக்கத்தில் இருந்த அந்த பெரிய வீட்டு துரை எடுத்தார். அப்போது அந்தக் கடையின் காசாளராக என்னை நியமித்தார்கள். அங்கே நான் ரொம்ப காலம் பணியாற்றினேன். அப்போது எனக்கு ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கொம்பனித்தெருவில் இருக்கும் சர்ச்சில் இரவு நேர ஆங்கில வகுப்பு நடைபெற்றது. அதில் சேர்ந்து ஆங்கிலம் கற்றேன். பிறகு எனது உறவினர் ஒருவர் 1953ல் பேங்சால் வீதியில் ‘கோல்டன் கபே’ என்ற கடையை தொடங்கிய போது அந்தக் கடைக்கு என்னை காசாளராக நியமித்தார்கள். அப்போது எனது தந்தையும் இந்தியாவிற்கு சென்று சொந்த ஊரிலேயே தங்கிவிடுவது என்ற முடிவோடு தாயகத்திற்கு சென்றுவிட, நான் இங்கேயே இருந்துவிட்டேன்.

இந்தியாவிற்கு சென்ற என் அப்பா சில வருடங்களுக்கு பிறகு இறந்துவிட, அவரின் மரணத்திற்கு கூட என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது. 48ல் கொழும்பிற்கு வந்த நான் இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகுதான் என் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றேன். அங்கே எல்லாமே மாறிப்போயிருந்தது. என் அம்மா வயதாகி இருந்தாள். என் சகோதரிகளும் குடும்பமாகி இருந்தார்கள். ஆனால் என் வீடும், எங்க குலசாமி அக்னி அம்மாள் கோவிலும் அப்படியே இருந்தது. நான் நல்ல நிலைக்கு உயர்ந்த பிறகு இவைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு தீர்மானம் போட்டேன். அதற்கு பிறகு கோல்டன் கபேயின் நிர்வாகத்தை என் உறவினர்களால் ஒழுங்காக நடத்த முடியாமல் போய்விட்டது. எனவே என்னிடம் இந்தக் கடையை கொடுத்து என்னையே நடத்திச் செல்லும்படி பணித்தார்கள். அதற்கு பிறகு ‘கோல்டன் கபே’யை நான் பொறுப்பெடுத்தேன். இப்போது என் குலதெய்வம் அக்னி அம்மாளின் கோவிலை திருத்தி அமைத்துவிட்டேன்.

திருநெல்வேலியில் ஒரு வீடு கட்டியிருக்கிறேன். மூலைக் கரைப் பட்டியிலிரு ந்த என் பரம்பரை வீட்டை அப்படியே வைத்திருக்கிறேன். என் அம்மா, அப்பா வாழ்ந்த வீடு அப்படியே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அந்த வீட்டை பார்க்கும் ஒவ்வொரு நிமிசமும் என் நினைவில் என் அம்மா, அப்பா வந்து போகிறார்கள் என்று சொல்லும் ராமனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா? என்று கேட்டதற்கு,

‘நான் ஒரு கடும் உழைப் பாளி. இருபத்திநான்கு மணி நேரம் ஹோட்டலில் வேலை செய்தது மட்டும்தான். எனக்கு எப்போதும் காதல் வந்ததில்லை. அதைப் பற்றி யோசித்ததும் இல்லை. முப்பத்தைந்து வயதில்தான் எனக்கு கல்யாணம் பேசி முடிச்சாங்க. நான் கட்டப்போற பொண்ணை மணவறையில் தான் பார்த்தேன். அக்கா தான் எனக்கு திருமணத்தை நடாத்தி வைத்தாள். திரு நெல்வேலியில் என் வீட்டு வாசல்ல பந்தல் போட்டு கல்யாணம் நடைபெற்றது. கல்யாணத்திற்கு என் உறவுக் காரர்கள் மட்டும்தான் வந்தி ருந்தார்கள். மனைவியின் பெயர் சரோஜா. திருநெல்வேலி டவுன்ல இருந்த சித்ரா ஸ்டூடியோவில தான் திருமணப் படம் பிடித்தோம். அந்த ஸ்டூடியோ இப்போவும் இருக்கிறது’ என்கிறார்.

மறக்க முடியாத நபர்?

எனக்கு ஒரு கடையை தந்து எனக்கும் இந்த சமூகத்தில் ஒரு அந்தஸ்து தந்த என் முதலாளி ஆர். கிருஸ்ண மூர்த்தியை மறக்கமுடியுமா... என்று பழசை மறக்க முடியாத ஒரு பண்பாலனாக விளங்குகிறார் ராமன்.

நீங்கள் சந்திக்க ஆசைப்பட்டு முடியாமல் போனது?

‘இந்தியாவிற்கு சென்று என் அப்பாவை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன் முடியாமல் போய் விட்டது. அப்பாவும் என்னை கடைசியா பார்த்துவிட வேண் டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அவரின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. என்று சொல்லும் போது துக்கம் ராமனின் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. வாழ்க்கையில் தவறவிட்டதாக நீங்கள் நினைத்து ஏங்குவது?

‘கல்விதான். நிறைய படித்திருக்கலாம். ஆனால் முடியாமல் போய்விட்டது. அதை நினைத்தால் இன்றும் ஏக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். என் மொழி ஆர்வத்திறகு வித்திட்டது  தி. மு. க. வின் அந்த எழுச்சிதான். அண்ணா, சிற்றரசு, இளஞ்செழியன், கலைஞர் உள்ளிட்ட தி. மு. க.வின் எழுச்சி நாயகர்களின் வீர பேச்சில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். நான் தமிழை நேசிக்கவும் முறையாக உச்சரிக்கவும் அவர்களே எனக்கு ஆசான்கள். என்று சொல்லும் ராமன் தான் படித்து சுவைத்த விடயங்களை தொகுத்து இரண்டு நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

ம்.... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது...

கொம்பனி வீதியின் லட்சுமி விலாஸ் கடை இன்றும் காலையில் அந்த வழியாக வரும்போது அந்தக் கடையின் ஞாபகம் வரும்... வீதியோரத்தில் நிற்கும் கை ரிக்க்ஷா... மாட்டு வண்டிகள் வாகன சத்தமில்லாத கொம்பனித்தெருவின் அமைதியான தெருக்கள் இன்று நினைத்தாலும் ரொம்பவும் பசுமையாக இருக்கும் அந்த நினைவுகள்... நினைத்தாலே இனிக்கும்.

தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி? என் வாழ்க்கை இனிமையானது, கஷ்டங்கள் நம்மைத் தேடி வருவதில்லை நாம்தான் கஷ்டங்களை உருவாக்குகிறோம். ‘உனக்கு கீழ் உள்ளவர்கள் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’ என்ற கண்ணதாசனின் தத்துவப்படி நடந்தால், வாழ்க்கை இனிமையானதாக அமைந்துவிடும் என்று தனது இனிக்கும் அனுபவங்களை ராமன் முடித்துக்கொள்கிறார்.

Monday, April 15, 2013

மன்சூர் அலிகானுடன் திக் திக் நேர்காணல்

"என் படம் டைமுக்கு வெளிவரலையோ மவனே அப்புறம்..."


நேர்காணல்: மணி ஸ்ரீகாந்தன்

"முடியை கோதிவிடுறவனும் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கிறவனும் சி.எம் ஆக முடியாது என்று சொன்னது சரியாகத்தான் இருந்தது."

 

 "பவர் ஸ்டார் தொப்பையில பெரியவரு, வயசில பெரியவரு, வழுக்கையில பெரியவரு..."

 

 "சிலருக்கு டிக்கி பிடிக்கும்... சிலருக்கு பொனட் பிடிக்கும்...


தமிழ்த் திரையுலகை மிரட்டும் வில்லன்களில் மன்சூர் அலிகான் முதன்மையானவர். திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக வாழ்ந்துவரும் ஒரு மனிதர் என்பதனால்தான் அவர் முதன்மையானவராகிறார். நல்ல தமிழ் பற்றாளர். சிறைநிரப்பு போராட்டம், சாலை மறியல், அடிதடி என்று மாதந்தோறும் நீதிமன்றத்துக்கும் சில சமயம் சிறைக்கும் செல்வது என்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணியில் வெளிவந்த படங்களில் வில்லனாக அறிமுகமாகி இன்று கிடைக்கும் வேடங்களில் தலைகாட்டி வருகிறார்.

தற்போது அவர் கதநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் 'லொள்ளு தாதா பராக் பராக்' படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் பொறுமை இழந்த மன்சூர் அலிகான் சென்னை முழுவதும் ஒரு வித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டினார். அதில் 'எல்லா தியேட்டர்லையும் உங்க படத்தையே ரிலீஸ் பண்ணினா என் படத்தை கக்கூசிலும் கெண்டீனிலுமா ரிலீஸ் பண்ணுவேன்?' என்று அச்சிடப்பட்டிருந்தது. இது துப்பாக்கி வெளியான சமயத்தில், விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர். ஆனால் இந்த போஸ்டர்தான் எம்மை மன்சூரின் இல்லம் அமைந்திருக்கும் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு இழுத்துச்சென்றது.

'லொள்ளு தாதா' சூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. நல்ல கொமடி படம். நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க. பெரிய படங்கள் வருவதால் என் படம் தள்ளித் தள்ளிப் போகுது.  'கொச்ச கொச்சன்னு எல்லாரும் கட்டப்பஞ்சாயத்து பண்ணுறவன், கொலைகாரன், கொள்ளையடிக்கிறவன், மொள்ளமாறி, முடிச்சுமாறி, கேப்மாறி பசங்கதான்... கொஞ்சம் நல்லவனும் படம் எடுக்க வர்றாங்க. எல்லாமே சினிமா ஹீரோ ஆகனும்னு வர்ரான்... அதனால் 'வச்ச வச்ச'ன்னு ஓவரா படம் வருது. நாட்டுல சாராய கடைதான் எல்லா இடத்திலும் இருக்கு. அதே மாதிரி நிறைய சினிமா எடுக்கிறாங்க... அதனால் தியேட்டர் இல்லாம நம்ப படத்தை ரிலீஸ் பண்ண முடியல. இன்னும் ரெண்டு வாரத்தில் ரிலீஸ் பண்ணிறலாம்..." என்று நம்பிக்கை தெரிவித்தார் மன்சூர்.

"நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்." நீங்க எத்தனை கெரக்டரில் நடிக்கிறீர்கள்? என்று கேட்டோம்

"அதில கேரட்டு இருக்கு, பீன்ஸ் இருக்கு, பீட்ரூட் இருக்கு அது மாதிரி நிறைய கேரக்ட்ரு, கேரக்ட்ரு இருக்கு!" என்றார்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் ரசனை எப்படி இருக்கிறது? சுண்டு விரலை அசைக்கிறவனை எல்லாம் சுப்பர் ஹீரோன்னு சொல்லுறாங்களே? என்றோம்.

"சிலருக்கு டிக்கி பிடிக்கும்... சிலருக்கு பொனட் பிடிக்கும்... சிலருக்கு லஸ்ஸி பிடிக்கும்... சிலருக்கு மோர் பிடிக்கும்... அதெல்லாம் அவங்கவங்க ருசியை பொருத்தது. காலம் மாறுது அதனால் அவங்கவங்க விருப்பத்திற்கு சினிமா பார்க்கிறான். விசிலடிக்கிறான். உங்களுக்கென்ன கொள்ள போகுது? நீங்க  பார்த்தா பாருங்க பார்க்காட்டி போங்க.." என்று கோபமாக பார்த்தவரிடம் "நீங்க நிஜத்திலும் வில்லனா" என்று மேலும் அவரை உசுப்பேத்தினோம்.

"நிஜத்தில் உங்களுக்கு வில்லன் கெட்டவனுங்களுக்கு வில்லன்" என்று சொல்லி மன்சூர்  முறைத்தபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

உங்களின் அரசியல் வாழ்க்கை எப்படிப்போகிறது? இன்னும் திருமாவளவனோடுதான் இருக்கிறீர்களா? என்று மன்சூரின் கோபப் பார்வையை திசை திருப்பினோம்.

"நான் யார் கூடவும் இல்ல. தனியாத்தான் இருக்கேன். அரசியல்வாதிகள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள்," என்று நச்சென்று பதில் வந்தது...

தீபாவளிக்கு நீங்கள் ஒட்டிய போஸ்டரில் பலகாரம் ஜீரணம் ஆன பின் வெளியிடுவேன் என்று போட்டிருந்தீர்களே...?

"ஆமா பலகாரம் நிறைய சாப்பிட்டதால இன்னும் ஜீரணமாகலை. ஜீரணம் ஆன உடன் வெளியிடுவேன். அப்படியும் வெளிவரவில்லை என்றால் மவனே சென்னையில் உள்ள தியேட்டர்களை எல்லாம் நொருக்குவேன். நானும் கொஞ்சகாலமாக ஜெயிலுக்கு போகல... போய் வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று கர்ஜித்தார்.

முடியை கோதிவிடுறவனெல்லாம் முதலமைச்சர் ஆகமுடியாது. சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கிறவனெல்லாம் 'சி எம்' ஆக முடியாதுன்னு  சொல்லிட்டு படையப்பாவில்  ரஜினியிடம் பதுங்கி நடித்தீர்களே என்று மன்சூரை மீண்டும் சீண்டினோம்.

"ஆமா நான் சொன்னது உண்மைத்தான். நான் சொன்னப்படிதான் அந்த நேரத்தில் நடந்தது. அவரு சூப்பர் ஸ்டாருன்னா இருந்துட்டு போகட்டும். தமிழ் நாட்டில் கேனையன்கள் நிறைய. தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலத்துக்கு போயி அங்கே எவனும் கோலோச்ச முடியாது. இங்கே பார்த்தீங்கன்னா பத்தில ஒன்பது பேரு வெளி மாநிலத்துக்காரன்தான். நமக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவிற்கு போய் கதாநாயகனா நிற்க முடியாது. ஏதோ சின்ன சின்ன ரோல்களில் நடிக்கலாம். அவ்வளவுதான். தமிழ்நாட்டுல மட்டும்தான் எல்லா பயலுகளும் வந்து குப்பை கொட்டுறானுங்க. இங்க உள்ள சொத்தையெல்லாம் கர்நாடகாவில் கொண்டுபோய் சேர்க்கிறானுங்க...

இதனால் ரஜினிகாந்த் என்பவர் ஒரு நல்ல மனிதர். மிகச் சிறந்த பண்பாளர். கே. எஸ். ரவிகுமார்  கூப்பிட்டாரு நடிச்சேன். மக்கள், என் மன்னன் என்று வரும்போது நான் மக்களுக்காகத்தான் பேசுவேன். தமிழ் நாட்டில் அரசியல் தடம் புரண்டு கிடக்கு. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு துதிப்பாடிக்கொண்டு, கையாலாகாத நாடாக இருக்கிறது. கிட்டத்தட்ட நானும் ஒரு நடைப்பிணமாகத்தான் வாழ்ந்து இருக்கிறேன்..."என்று நொந்துப்போய் பதிலளித்த அவரிடம் ,  கொடூர வில்லனாக நடித்த நீங்கள் இப்போது நகைச்சுவை நடிகராக மாறிவிட்டீர்களே? என்று கேட்டோம் அவரிடம்.

"ஆமா, எவ்வளவு காலத்துக்குத்தான் நானும் அப்படியே நடிக்கிறது? சந்தன வீரப்பனை போட்டுட்டாங்க. அதுக்கப்புறம் நானும் வீரத்தை விட்டுட்டு காமடி நடிகராக மாறிட்டேன்," என்றவரிடம் வில்லன் சான்ஸ் வந்தா நடிப்பீங்களா என்று கேட்டோம்.

"நாட்டில என்னைத் தவிர எல்லாமே வில்லனாகத்தான் இருக்கிறானுங்க. ஆடுறவனுங்க... பே...றவனுங்க" என்று எழுத முடியாத வசனங்களை உபயோகித்து வெறுப்பில் பதிலளிக்கும் அவரிடம் தமிழகத்தில் புது அவதாரம் எடுத்திருக்கும் பவர்ஸ்டார் பற்றி கேட்டோம். "பவர்ஸ்டார் ரொம்பவும் பெரிய ஆளு. (அவரு தமிழர்தானா என்பதை பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் கேட்டு உறுதிபடுத்திய பின்) வயிசில பெரியவரு, தொப்பையில பெரியவரு, வழுக்கையில பெரிய ஆளு. அவரோட தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்.

சினிமாவில ஒரு இடம் காலியாக இருந்தது. அதனால அவரு நடிக்கிறாரு. பவர் ஸ்டார் இஸ் கிரேட். ஐ சப்போர்ட் பவர் ஸ்டார். பிக் ஸ்டார் எல்லாம் தூரமா இருக்கிறார்கள். நாம இப்படியான ஸ்டாரைதான் பார்த்துக்கணும்..."என்றவர் எம்மை பார்த்து, "இருங்க சார் டீ சாப்பிட்டு போகலாம் என்றார். அவரின் கடுமையான கட்டளைக்கு உடன்பட்டு டீக்காக காத்திருந்தோம். டீ வர தாமதிக்கவே அங்கே என்ன புடுங்குறீங்க. சீக்கிரமா டீயைக் கொண்டுவாமா என்று சத்தம் போட்டார். போட்ட சத்தத்தில் வீடே அதிர்ந்தது. ஒரு வயதான பெண்மணி கிளாசை கையிலெடுத்து ஓடி வந்து என்னிடம் நீட்ட,"சர்க்கரை கரக்டா இருக்காணு சொல்லுங்க சார்" என்றார் மன்சூர். நாமும் ருசி பார்த்து விட்டு ஓகே! சொல்ல அந்த அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டப்படி இடத்தை காலி செய்தார். அந்த பெண்மணி அவசரத்தில் ஓடி வந்ததில் டீ சிந்தி கிளாஸை; நனைத்திருந்தது. எங்கே மன்சூர் அதைப் பார்த்து விடுவாரோ என்று அவசர அவசரமாக டீயை குடித்து டீ கிளாசை ஒரு ஓரமாக வைத்து விட்டு விடைபெற்றோம்.