Tuesday, November 19, 2013

மெகா சலவைத் தோட்டம்

பெரடைஸ் பிளேஸ் சலவைத் தோட்டம்


மணி  ஸ்ரீகாந்தன்

உலக அதிசயங்களில் ஒன்றான பாலிலோனின் தொங்கும் தோட்டம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் வண்ண வண்ண துணிகள் வரிசையாய் அணிவகுத்து கொடியில் தொங்கும் சலவைத் தோட்டம் பார்த்திருக்கிறீர்களா?

இப்படி ஒரு மெகா சலவைத் தோட்டம் அமைந்திருக்கிறது கொழும்பு ஆமர்வீதி பெரடைஸ் பிளேஸில்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட இச்சலவைத் தோட்டம் நூறு ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகத்தான் இருக்கிறது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இத் தோட்டத்தில் சுமார் 125 குடும்பங்கள் வசிக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் துணிகள் கொடியில் தொங்கி கொண்டிருக்க... வரிசையில் கட்டப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் இறங்கி ஆண்கள் துணிகளை துவைத்து புழிந்து கொண்டிருக்க, பிழியப்பட்ட துணிகளை கொடியில் காயப் போடுவது, காய்ந்த துணிகளை எடுத்து அயன் பண்ணி அடுக்குவதுமாக எப்போதும் பரபரப்பாக இருக்கிறது சலவைத் தோட்டம். இந்த பெரடைஸ் பிளேஸிற்கு காளியும் முனியப்பரும் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள்.
 "முனியப்பர்தான் எங்களுக்கு வெள்ளாவிசாமி. அந்தக் காலத்துல வெள்ளாவி வச்சு துணிகளை வெளுக்கும் போது வருடந்தோறும் முனிக்கு ஒரு பலி கொடுக்கனும். ஆனா இப்போ வெள்ளாவி இல்லை... ஆனால் முனியப்பருக்கு கொடுக்கும் பலியும் பூஜையும் மட்டும் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார் நாம் சந்தித்த ஒரு சலவைக்காரர்.

சரி, டோபி மார்க் என்று சொல்வார்களே, ஞாபகம் இருக்கிறதா? செங்கொட்டை என்ற வித்தில் உள்ள பாலை ஊசியால் குத்தி எடுத்து துணியில் அடையாளம் போடுவார்கள். இந்த செங்கொட்டைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகி வந்தன. இன்று செங்கொட்டையை இவர்கள் உபயோகிப்பது இல்லை. மார்க்கர் பேனாவில்தான் மார்க் பண்ணுகிறார்கள்.

"என் தாத்தா பாட்டன் காலத்தில் கை ரிக்ஷாவில துணி மூட்டைகளை அடுக்கி இழுத்துச் சென்றார்கள். ஆனா இப்போது ரிக்ஷா போய் ஆட்டோ வந்து விட்டது. துணி மூட்டைகளை சுமந்து செல்லும் கழுதை வளர்க்கும் வண்ணான் முறை இலங்கையில் இருந்ததில்லை. அது இந்தியாவில் தான் இருந்ததாம் என்று எமக்கு விளக்கம் தந்தார் பெரடைஸ் பிளேசின் சலவை தொழிலாளர் சங்கத் தலைவர் முத்துசாமி.

"இன்னும் பதினைந்து, இருபது வருடங்களில் இப்படி ஒரு தோட்டத்தை நீங்கள் பார்க்க முடியாது. எமது இளைய தலைமுறை இந்தத் தொழிலை விரும்பவில்லை. சலவை தோட்டத்தின் கடைசி தொழிலாளர்கள் நாங்கள் மட்டும்தான்" என்று அடித்து சொல்கிறார் முத்துசாமி.
இதே போன்ற ஒரு சலவைத் தோட்டம் அலரி மாளிகைக்குப் பின்னால் முன்னர் அமைந்திருந்தது. அது இப்போது அங்கில்லை. இங்கும் ஒரு குடியிருப்புத் திட்டத்தை கொழும்பு மாநகரசபை கொண்டு வந்திருக்கிறது. இக்குடியிருப்புத் திட்டம் இந்த சலவைத் தோட்டத்தை விழுங்கி விடும் என்ற அச்சம் இங்குள்ளவர்கள் மத்தியில் உள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் இருந்து இங்கே ஆயிரக்கணக்கான துணிகள் சலவைக்கு வருகின்றன. ஆனால் ஆஸ்பத்திரி துணிகள் வருவதில்லையாம். கப்பல் துணி மணிகள், தொகையாக இறக்குமதியாகும் பயன்படுத்திய ஆடைகள், லொன்ட்ரிகளில் இருந்து வரும் ஓடர்கள் என்பன இவர்களின் பிரதான வருமான வழிகள். ஒருவர் மாதம் 35 ஆயிரம் ரூபா வரை சம்பாதிக்க முடியும். சிலர் ஆள் நியமித்து வேலை செய்கிறார்கள். பலர் பழகி விட்டோம். அதனால் இதையே தொழிலாக செய்கிறோம் என்கிறார்கள்.

பெரடைஸ் சலவைத் தோட்டத்துக்குள் சென்றால், அது ஒரு தனி உலகம்!

சேங்கொட்டை மரம்

செங்கொட்டை, சேங்கொட்டை, சேராங்கொட்டை என இம் மரத்தை அழைக்கிறார்கள். கஜூ பழத்தைப் போலவே இதன் கொட்டையும் வெளிப்புறமாகவே அமைந்துள்ளது.
ஆங்கிலத்தில் : Marking nut
தாவரவியல் பெயர் : Semecarpns Cinacardumlin
இந்தியா, மலேசியா நாடுகளில் செழித்து வளரும் மரம்



Sunday, November 17, 2013

தாயகம் திரும்பிய ஒருவரின் கதை -3

உணவு தேவைக்கு கேரளா தமிழகத்தை நம்பியிருப்பது ஏன்?


மணி  ஸ்ரீகாந்தன்

ஏறக்குறைய இலங்கையை ஒத்த இயற்கைச் சூழலைக் கொண்ட ஒரு மாநிலமே கேளரா. படித்தவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலம். ஆனால் அரிசி, காய்கறிகளுக்கு இது தமிழகத்தையே நம்பியே உள்ளது. இது கொஞ்சம் விசித்திரமானதுதான். இதுபற்றி கேட்டபோது பாபு சொல்லத் தொடங்கினார்.
தோட்ட மாரியம்மன் கோவில்
"அதனாலேயே இன்னமும் கேரள அரசு உணவுத் தேவைகளுக்கு தமிழகத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு காய்கறிகளின் விலை ரொம்பவும் அதிகம். அதனால் நான் தமிழ் நாட்டிற்கு போய்த்தான் காய்கறிகளை வாங்கி வருகிறேன். புனலூருக்கு பக்கத்தில்தான் தமிழ்நாட்டின் தென்காசி எல்லை இருக்கிறது. அதனால் பஸ்சில் நாற்பது ரூபா டிக்கட் எடுத்து தென்காசிக்கு சென்று மலிவு விலையில் காய்கறிகளை வாங்கி வருகிறோம். ஆனால் அரிசி மட்டும் கொண்டு வர முடியாது. அரிசி கொண்டு வந்தால் கேரளா எல்லை காவல் படை கைது செய்யும். ஆனாலும் நம் ஆளுங்க கில்லாடிகள் ஆச்சே! அவங்க கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு அரிசியைக் கொண்டு வாராங்க.

தன் இல்லத்தின் முன்பாக பாபு
 குறிப்பாக பெண்கள் அரிசியை மடியில் கட்டி முந்தானையில் மறைத்துக் கொண்டு வருவார்கள். அப்படிக் கொண்டுவந்தால் பொலிஸ்காரர்களுக்கு தெரியாது... நம்ம ஊரில் எப்பவும் தாய்குலத்துக்கு ஒரு மரியாதை இருப்பதால் அவங்களை கண்டுக்க மாட்டாங்க. எங்களைத் துருவித் துருவி பார்த்துத்தான் விடறாங்க... அப்படியும் பெண்களால் இரண்டு கிலோவுக்கு மேல் அரிசி கொண்டு வர முடியாது. மடியில் கட்டி அரிசிப் பொட்டலம் பெரிதாக தெரிந்தால் அது பொலிசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடும். அரிசியை கேரளா அரசு இறக்குமதி செய்வதால்தான் நாங்கள் அரிசி கொண்டு போவதை அந்த அரசு தடை செய்கிறது. இது தவிர தமிழகத்தைப் போல் இங்கே இலவச ரி.வி., மின்விசிறி, கேஸ், மூன்று ரூபா, ஐந்து ரூபாயில் பகல் உணவு மலிவு விலை உணவகங்கள் என்று எதுவும் இல்லை. இங்கே உழைத்தால்தான் சாப்பாடு. சும்மா இருந்தா பட்டினிதான்" என்று கேரளா பெருமைகளை விபரிக்கும் பாபு, இன்னொரு உண்மையை சொன்னார்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கேரள கல்வித்தரத்தில் உயர்ந்த இடத்தில்தான் இருக்கிறது. இங்கே இருக்கும் பெரும்பாலானோர் கோட் சூட் போட்டு வேலை பார்க்கவே விரும்புகிறார்கள். பாத்தி வெட்டி தண்ணீர் கட்டி விவசாயம் பார்க்க விரும்புவதில்லை. அதிலும் முக்கியமாக இவர்களின் உழைப்பு முழுவதும் வெளிநாடுகளுக்கே பயன்படுகிறது. இங்கே மலையாளிகளில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில்தான் வசிக்கிறார். அதை இவர்கள் கௌரவமாகவே கருதுகிறார்கள்.
கேரள தோட்ட வைத்தியசாலை
ஆனால் தமிழகத்தில் அப்படி அல்ல... வெங்காயத்தை கடித்துக் கேப்பை (குரக்கன்) கஞ்சியை குடித்து விட்டு வயலில் இறங்கி விவசாயம் பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் அங்கே உணவு தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் மக்களுக்கு இலவசங்களும் அதிமாகவே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிடைக்கும் இலவசங்களை பெற்றுக்கொள்வதற்காக இங்கு கேரளாவில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இடம் வாங்கி அங்கே ஒரு வீட்டையும் கட்டி அதில் தமது வாரிசுகளை குடியமர்த்தி விடுகிறார்கள். ஆனால் நமக்கு அந்த வசதி இல்லீங்க... நம்ம வாழ்க்கை இந்த ஆயிரம் நல்லூரிலதான்" என்று சொல்லும் பாபுவிடம் முல்லை பெரியாறு பிரச்சினையில் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்று கேட்டோம்.

"மலையாளியும், நாங்களும் தாய் பிள்ளைகளாகப் பழகுகிறோம். எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது. ஒற்றுமையா இருக்கலாம். இனவாதம் இங்கே கிடையாது. யாரோ ஒரு சிலர்தான் சில இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்றாங்க. எனக்கு அதுப்பற்றி எதுவும் தெரியாதுங்க" என்று கூறி முடித்தார் பாபு. இலங்கை தோட்டத் தொழிலார்களை விட தாம் வசதியாக வளமாகவளமாக இருப்பதாக சொன்னதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே!                            
                                                 (முற்றும்)

ஆயிரம் நல்லூர் எஸ்டேட் கேரளா


ஒருநாள் சம்பளம்                                           - 275 (இந்திய நாணயம்)
வருடத்திற்கு அரசு விடுமுறை                - 14
மருத்துவ விடுமுறை                                    - 30
வருடாந்த ஹொலிடே விடுமுறை       - 15

மருத்துசெலவு, வைத்திய காப்புறுதி    - 2 லட்சம் (இந்திய ரூபாய்கள்)
தீபாவளி முன்பணம்                                      - 14 ஆயிரம் (இ.ரூ)
போனஸ்                                                               - 18 ஆயிரம் (இ.ரூ)
வருடத்திற்கு                                                      - இரண்டு சோடி செருப்பு
ஒருவருக்கு - ஒரு குடை, ஆணாக இருந்தால் சேர்ட், கால்சட்டை காக்கி டிரஸ் இரண்டு சோடி, பெண்ணாக இருந்தால் ப்ளுகலர் சேலை, இரவிக்கை இரண்டு சோடி.


இலங்கை தோட்டங்களில் சம்பளம், சலுகைகள்


ஒரு நாள் சம்பளம் -
வருகை 19 நாட்களாக இருந்தால்                          - ரூ. 450
19 நாட்களுக்கு மேல்வரவு                                         - ரூ. 615
வருடத்திற்கு
போனஸ்                                                                              - 6000
போனஸ்                                                                              - 750
தீபாவளி                                                                               - 4500
முற்பணம் -
சவப்பெட்டிக்கு                                                                 - ரூ.1000

பாபர், டோபி - பெரும்பாலாள தோட்டங்களில்
சுத்திகரிப்பாளர் - இல்லை
தேயிலை - இலவசம் (அரைகிலோ)
பாக்கட்
வருடத்திற்கு - இரண்டு கிலோ
சுண்ணாம்பு பக்கெட்

face பக்கம்