Thursday, July 2, 2015

சினிமானந்தா பதில்கள் -23

 திருட்டு டி.வி.டியை ஒழிக்க புதிய திட்டமொன்று வந்திருக்கிறதாமே?
எம்.ரமேஸ், கொழும்பு

நடிகர்/ இயக்குநர் சேரனின் C2H (CINEMA TO HOME) திட்டத்தைத்தானே சொல்கிறீர்கள்?
திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கும் படங்களை அதிகாரபூர்வ டி. வி. டிக்களாக வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பதே இந்தத் திட்டம். கடந்த மாதம் (மார்ச்) 5 ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சேரனின் 'ஜி.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' தான் இத்திட்டத்தில் வெளியான முதல் படம். முதல் நாளே 10 இலட்சம் டி.வி.டிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது. C2H திட்டம் 'அர்ஜூனனின் காதலி' 'அப்பாவின் மீசை' 'ஆவிகுமார்' ஆகிய படங்களே C2H மூலம் வெளிவர தயாராக உள்ளன.
ஏற்கனவே கமல் வகுத்த D2H திட்டத்தின் மறு உருவம்தான் சேரனின் C2H திட்டம். கமலின் திட்டத்தில் அனுமதி பெற்ற கேபள்காரர்களிடம் இருந்து படம் தொலைக்காட்சி பெட்டிக்குள் வந்தது. சேரனின் திட்டத்தில் அவரது நிறுவனம் வழங்கும் டி.வி.டி நேரே தொலைக்காட்சிக்கு வருகிறது. அதாவது கமலின் போர்வையில் சேரன் குளிர் காய்கிறார்.

சேரனின் C2H இன் இலங்கை வாய்ப்புகள் பற்றி ஆராய நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி மற்றும் நடிகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அண்மையில் இலங்கை வந்திருந்தனர். ஆனால் சேரனின் C2H இலங்கையில் சொதப்பிவிட்டது. தமிழ் நாட்டில் வெளியான அதேநாளில் இலங்கையின் சி.டி. கடைகளில் 'ஜே.கே' ஒரிஜனல் கிடைத்தது. சேரனுக்கு நட்டம், இலங்கை சி.டி. விற்பனை, பகிரங்கமாகவும் அதிகார பூர்வமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் கோவில்பட்டி நகரில் உள்ள சண்முகா திரையரங்கு திருட்டு டி.வி.டிக்கு எதிராக புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி ஒருமுறை ஆயிரம் ரூபா கொடுத்து இந்த திரையரங்கில் டிக்கட் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் அந்த தியேட்டரில் ரிலீஸாகும் ஒவ்வொரு படத்தையும் ஒருமுறை பார்க்கலாம். பார்க்க விரும்பவில்லை என்றால் வேறொருவருக்கு கொடுத்து அந்த படத்தை பார்க்கச் சொல்லலாம்.

இந்த திட்டம் இந்த மாதம் (ஏப்ரல்) முதல் அமுலுக்கு வருகிறது. இதுவரை 5 ஆயிரம் டிக்கட்டுகள் விற்றுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் டிக்கட்டுகளை விற்கத் திட்டமாம்!

உள்ளுர் நகைக் கடையொன்றில்தான் இந்த டிக்கட் விற்கப்படுகிறது. அங்கு ஒரு சவரன் நகையையும் வாங்கினால் 1250 ரூபா தள்ளுபடியும் தருகிறார்கள். டிக்கட்டை வாங்கியவர்கள் திரையரங்குக்கு வரலாம். கிடைக்கும் இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்கலாம். தியேட்டர்களுக்கு ரசிகர்களை இழுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, பார்த்தீர்களா?

படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைக்காவிட்டால் வேட்டியை நடு ரோட்டில் குறுக்காக ஸ்கிறீன் போலக் கட்டி படத்தை திரையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் ரைடக்டர் ஜகன்னாதன். அதுவும் திருட்டு டி.வி.டி ஒழிப்புத் திட்டம்தான். தமிழ் நாட்டின் சினிமா மோகத்தை பார்க்கும்போது அதுவும் கூட நடக்கலாம்!

தமிழ் சினிமாவில் அண்மையில் இடம்பெற்ற ருசிகரமான சம்பவமொன்றை கூறுங்கள்!
கவிதா, ஹேவாகம, பாதுக்க

ருசிகரமான சம்பவங்கள் மூடை மூடையாக தொன் கணக்கில் உள்ளன. எனவே சோகமான ஒரு சம்பவத்தை கூறுகிறேன் கேளுங்கள்.

'பரதேசி', 'ஆடுகளம்', 'எங்கேயும் எப்போதும்' என்ற தனித்துவமான படங்கள்மூலம் கலைப் பயணத்தை தொடங்கியவர் எடிட்டர் கிஷோர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் என்ற கிராமத்தில் இருந்து வந்தவர்.

'ஆடுகளம்' படத்துக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார். பாலாவின் 'தாரை தப்பட்டை' வெற்றிமாறனின் 'விசாரணை' போன்ற பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி வந்தவர். அண்மையில் திடீரென மயங்கி சரிந்திருக்கிறார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் நினைவு திரும்பாமலேயே மரணத்தை முத்தமிட்டார்.
ஓயாமல் வேலை செய்ததுதான் கிஷோரின் மரணத்துக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இப்போது HDV தொழில்நுட்பம் வந்துவிட்டதால் நிறைய படங்கள் வெளிவருகின்றன. எடுக்கும் படத்தையும் நிறையவே ஒளிப்பதிவு செய்கிறார்கள். பல கோணங்கள், பல கெமராக்கள் என்ற ரீதியில் 8,10 படங்களுக்கான அளவு டேப் அல்லது CHIP இல் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. இதை வெட்டிச் சுருக்கி முதலில் 31/2 மணி நேர ROUGH CUT (முதற் கட்டிங் எடிட்டிங்) அதில் இருந்து FINE CUT (முறையான எடிட்டிங்) மூலம் அது 21/2 மணிநேரத்துக்கு குறைக்கப்படுகிறது ROUGH CUT சில நேரம் உதவியாளர்களால் செய்யப்படும். இப்போதைய நிலையில் ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம் எடிட்டிங் மேசைக்கு வந்து விடுகிறது. எனவே எடிட்டருக்கு ஓய்வில்லாத வேலை நிரந்தரமாகவே இருந்து வருகிறது.

கிஷோருக்கு இது போலத்தான் ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவாராம். எப்போதாவதுதான் வீட்டுக்குப் போவாராம்.

சன் டி.வியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அண்மையில் தோன்றியிருந்த கிஷோர் கூறிய ஒரு விடயம் இது.

எடிட்டிங் வேலைகளின் போது மேலே உள்ள அவரது அறைக்கு சாப்பாடு, டீ எல்லாமே வந்து விடுமாம். எனவே எந்தவித தொந்தரவும் இன்றி எடிட்டிங் வேலையை முடிந்த வரை செய்துவிட்டு அங்கேயே ஒரு குட்டித்தூக்கம் போடுவாராம். எப்போது எழும்புகிறாரோ அப்போது மீண்டும் எடிட்டிங் வேலை தொடங்கிவிடுமாம். ஒருநாள் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்த போது வெளியே நிறைய நாற்காலிகளைக் கண்டிருக்கிறார். என்னவென்று கீழே விசாரித்திருக்கிறார்.

அந்த வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனதாக சொன்னார்களாம். 'ஐயோ ரொம்ப நல்லவங்க எப்போ இறுதிக் கிரிகைகள், போகணுமே' என்று சொன்னபோது கிடைத்த பதில் அவரை திக்குமுக்காடச் செய்திருக்கிறது. அந்த அம்மா இறந்து ஒருவாரமாம். அன்று 8 ஆம் நாள் திதிக்காகத்தான் நாற்காலிகள் போடப்பட்டிருந்தனவாம்.

அதாவது 8 நாட்கள் அந்த அறையை விட்டு கிஷோர் வெளியே செல்லவில்லை என்பதுதான் அதன் பொருள். அத்தனை பிசி. இப்படி இரவு பகலென சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்து ஓய்ந்திருக்கிறது அந்த ஆத்மா.

மௌனாஞ்சலி

Tuesday, June 30, 2015

இருள் உலகக் கதைகள்

தம்பதியினரை பிடித்தாட்டிய எச்சில் பிசாசுகள்


திலக்கராஜா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்


"உழைக்கிறது நான்... ஆனா தின்றுவிட்டு தூங்குறது அவ!" என்று எந்தவித சலனமும் இன்றி தூங்கிக் கொண்டிருந்த அனோமாவை கோபத்துடன் பார்த்தபடியே சமரவீர சமையலறைக்குள் நுழைந்தான். சமரவீர ஒரு விவசாயி. ஐந்து மாதத்திற்கு முன்புதான் அவனுக்குத் திருமணம் நடந்தது. புத்தளத்திற்கு பக்கத்தில் சுமார் ஏழு ஏக்கரில் விவசாய நிலம் வாங்கி அங்கேயே குடியேறி வசித்து வருகிறான்.

சமரவீர முழுநேரமும் விவசாயத்திலேயே ஈடுபட்டு வந்தான். அனோமாவும் இடை இடையே அவனுக்கு உதவியாகத்தான் இருந்து வந்தாள். ஆனால் சமீபகாலமாக கணவன், மனைவி இருவருக்குமிடையே சிறு சிறு சண்டைகள் அவ்வப்போது எழ ஆழம்பித்தன.

சமையலறைக்குள் நுழைந்த சமரவீர சோற்றுப்பானையை திறந்தபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பானை கழுவிச் சுத்தமாக்கப்பட்டதுபோல காலியாக இருந்தது. பசியால் தவித்துக் கொண்டிருந்த அவனுக்குப் பானை காலியாக இருந்ததால்  கோபம் பொத்துக்கொண்டு வராதா என்ன?

அனோமாவை எட்டி உதைத்து எழுப்பி, "எங்கடி எனக்கு சாப்பாடு?" என்று கொதிக்கக் கொதிக்கக் கேட்டபோது அவள் மலங்க மலங்க விழித்தாள். ஏன், உங்கள் பங்கு சோறு இருக்கிறதே என்றாள் சாதாரணமாக.

"சாப்பிட்டு விட்டு உங்கள் பங்கு சோறை மிச்சம் வைத்தேன்" என்று சத்தியம் செய்தாள். ஆனால் அந்தப் பகுதியில் ஒற்றையாக இருக்கும் அந்தத் தனி வீட்டுக்குள் வெளியாள் வர வாய்ப்பில்லை என்பதை சமரவீர உணர்ந்ததால் மனைவியின் பேச்சை அவன் நம்பத் தயாராயில்லை.

இப்படித் தினமும் அந்த வீட்டில் மனைவிக்கு மிச்சம் வைக்காமல், கணவனும், கணவனுக்கு மிச்சம் வைக்காமல் மனைவியும் சாப்பாட்டை கபளீகரம் செய்வதில் கடும் போட்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால் இருவருமே அப்படிச் செய்யவில்லை என்று சத்தியம் செய்து மறுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் அனோமா பூனைபோல் பதுங்கி, பதுங்கி செல்வதை சில நாட்களுக்கு முன் அங்கே வந்து தன் மகன் சமரவீரவோடு தங்கியிருந்த அவனது தாயார் கவனித்திருக்கிறார். பிறகு அனோமாவை அவள் பின்தொடர்ந்ததில் அவள் சமையலறைக்குள் நுழைந்து, பானையில் உள்ள உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவதைக் கண்டாள். அவள் நாக்கை சுழற்றி உணவை கபளீகரம் செய்யும் அந்தக் காட்சியை பார்த்த அவளுக்கு அச்சம் ஏற்பட்டது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு சில நாட்கள் கழித்து ஒரு நள்ளிரவு வேளையில் சமரவீரவும் திருடன் போல பதுங்கிச் செல்வதை அவளின் தாய் கவனித்து அவனை பின் தொடர்ந்ததில், மூன்று நாளுக்கு முன்பு எப்படி அனோமா சாப்பாட்டை ஆவலோடு நாக்கைச் சுழற்றி சாப்பிட்டாளோ அதே மாதிரி சமரவீரவும் திருடன் போல அங்கும் இங்கும் பரபரப்பாக பார்த்தவாறே சாப்பாட்டை பேராசை பிடித்தவன் போல சாப்பிட்டு முடித்ததைப் பார்த்த அவளுக்கு உடல் நடுங்கியது. அப்போதுதான் அந்த வீட்டில் ஏதோ விபரீதம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை சமரவீரவின் தாயார் உணர்ந்தாள்.
திலக்கராஜா பூசாரி
அடுத்து வந்த சில நாட்களில் வேறு சில அமானுஷ்யங்களும் அந்த ஒற்றை வீட்டில் அரங்கேறத் தொடங்கியிருந்தன. நள்ளிரவு தாண்டிய பிறகும் சமரவீரவும், அனோமாவும் பலமாக சிரித்த வண்ணம் படுக்கையறையில் பேசிக் கொண்டிருப்பது சமரவீரவின் தாயார் காதில் விழுந்தது. அடுத்த நாள் காலையில் அனோமாவிடம் "நடுசாமம் வரைக்கும் அப்படி என்னத்த பேசிட்டு இருக்கிறீர்களோ? கொஞ்சம் மெதுவா பேசி சிரிக்க வேண்டியது தானே!" என்று கொஞ்சம் கோபமாகச் சொல்லி வைத்தாள் மாமியார்.

அனோமாவோ,"நான் நேத்து பத்து மணிக்கெல்லாம் தூங்கிட்டேனே நீங்க கனவு ஏதும் கண்டுட்டு உளறாதீங்க!" என்று பொட்டில் அடித்தமாதிரி பதிலளித்தாள். சமரவின் அம்மாவின் சந்தேகம் மேலும் வலுத்தது.

அடுத்து வந்த சில நாட்களில் ஒரு நாள் இரவில் வயலில் யாரோ வேலை செய்வது போல சத்தம் கேட்கவே சமரவீரவின் தாயார் வெளியே எட்டிப்பார்க்க அங்கே சமரவீர நடுவயலில் இறங்கி நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தான்.

"ஏய் இந்த நேரத்துல என்ன பண்ணுற?" என்று அவள் சத்தமாகக் கேட்டாள். சமரவீர பிரமை பிடித்தவன் போல சிலையாக நிற்பதைக் கண்டாள். பிறகு பக்கத்தில் இருந்த ஊர் வாசிகளை அழைத்து வந்து அவனை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகும் பொறுமை காப்பது ஆபத்து என்பதை உணர்ந்த சமரவீரவின் தாயார், ஊரில் இருந்த பூசாரியிடம் மை பார்த்தாள். அந்த வீட்டில் ஒரு தீய சக்தி குடியிருக்கிறது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இதைக்கேட்ட அவள் ஆடிப்போனாலும் தன் சந்தேகம் சரியே என்பதை உணர்ந்து அமைதியானாள். பிறகு அந்த தீய சக்தியை விரட்ட பெரிய ஒரு பூசாரியைத்தான் களத்தில் இறக்க வேண்டும் என்பதை உணர்ந்து திலக்கராஜா பூசாரியிடம் வந்து பரிகாரம் பார்த்திருக்கிறார்கள்.

தீய சக்திகளை மட்டுமே படம் பிடித்துக் காட்டும் அவரின் மனக்கண்களுக்கு ஒரு பாழடைந்த வீடு மட்டும் மின்னல் வெட்டு மாதிரி திடீரென்று தோன்றி மறைந்தது. "நீங்கள் வசிப்பது ஒரு பழைய வீட்டிலா?" என்று வந்தவர்களிடம் அவர் கேட்டார். ஆனால் அப்படி ஒரு வீட்டில் தாம் வசிக்கவில்லை என்று வந்தவர்கள் சொல்லவும் திலக்கராஜாவுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பிழையான தகவலை மனக்கண் காட்டாதே!

பிறகு ஒரு நாளைக் குறித்துக் கொடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார் பூசாரி.

பூஜைக்கான ஏற்பாடுகள் தயாரானதும் அந்தக் குறிப்பிட்ட அமாவாசை தினத்தில் தனது உதவியாளர்களோடு திலக்கராஜா புத்தளம் நோக்கிப் பயணமானார். அவர் அங்கே சென்றபோது நடுநிசி வேளை. நடுரோட்டில் ஒரு கரியநிற எருமை ஒன்று வழி மறித்து நின்றது. இது  ஒரு சகுனத் தடை என்பதை அவரின் சகாக்கள் சொல்ல "அதையும் பார்த்து விடலாம்" என்ற தைரியத்தில் திலக்கராஜா மேலே பயணமானார். பிறகு குறிப்பிட்ட அந்த வீட்டின் முன்பாக வேன் நின்றது. திலக்கராஜா இறங்கினார். அவரின் கால்கள் தரையில் பட்டபோதே அந்தப் பகுதியில் ஏதோ ஒரு தீய சக்தியின் வாடை இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். உடம்பும் சிலிர்த்து அடங்கியது. ஒரு மணித்தியாலத்தின் பின்னர் திலக்ராஜா தமது பேயோட்டும் படலத்தை தொடங்க அந்தப் பிரதேசமே அதிர்ந்தது.

அனோமாவின் உடம்பிற்குள்தான் பேய் பதுங்கி இருக்கிறது என்று ஊர்வாசிகள் நம்பினார்கள். திலக்கராஜா மந்திரங்களை உச்சாடனம் செய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வீட்டில் இருந்து ஆவேசமாக வெளியே ஓடி வந்த அனோமா, தலைவிரி கோலமாக ஆடத் தொடங்கினாள். அந்த சமயத்தில் அவள் பின்னால் யாரோ பயங்கரமாக சிரிக்கவே எல்லோரும் ஓசை வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே சமரவீர கைகளை சுழற்றியபடி ஆடிக் கொண்டிருந்தான். அவன் கையில் நெல் அறுக்கும் அரிவாலும் இருந்தது. அவன் வயலுக்கு நெல் அறுக்கச் செல்வதாகக் கூறி ஒரு பக்கம் போக, இன்னொரு பக்கமாக அனோமாவும் நடந்தாள். இது திலக்கராஜாவுக்கு புதுக் குழப்பமாக மாறிவிட்டது. ஒரே உடம்பிற்குள் எத்தனை ஆவிகள் இருந்தாலும் சமாளித்து விடுவார். ஆனால் இரண்டு உடல்களுக்குள் இருக்கும் இரண்டு பேய்களை எப்படி வளைத்துப் பிடிப்பது? திலக்கராஜா ரொம்பவே திணறித்தான் போனார்.

வெவ்வேறு திசைகளில் செல்லும் பேய்களுக்கு முரசு கொட்ட முடியாமல் முரசுக்காரர்கள் விழி பிதுங்கிப் போனார்கள். ஒரு இடத்தில் சமரவீரவின் உடம்பிற்குள் இருக்கும் ஆவி உயரமான பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி எடுக்க திலக்கராஜாவின் முயற்சியால் அந்தத் திட்டம் கைகூடாமல் போனது. பிறகு இரண்டு பேரையும் பிடித்து ஒன்றாக அமரவைத்து மிரட்டி விசாரிக்கத் தொடங்கினார். அப்போதும் திலக்கராஜாவின் ஞானக் கண்களுக்கு ஒரு பாழடைந்த வீடு தெரிந்தது. பிறகு அதுபற்றி அவர் சத்தமாக சொல்ல அங்கே நின்றிருந்த ஊர்ப் பெரியவர் ஆளரவமற்ற ஒரு பாழடைந்த வீடு காட்டுக்குள் இருப்பதாகவும் அங்கே பல வருடத்துக்கு முன்னால் ஒரு தம்பதி வசித்து வந்ததாகவும் தகவல் சொன்னார். அவ்விருவரும் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்களாம்.

இது போதுமே திலக்கராஜாவுக்கு! புதிரை விடுவிப்பதற்கு தனக்கு ஒரு 'சாவி' கிடைத்த மகிழ்ச்சியில் தீப் பந்தத்தை கையில் எடுத்தபடி அந்த வீடு இருக்கும் காட்டுப் பகுதிக்குள் தன்பரிவாரத்துடன் நுழைந்தார் பூசாரி. அங்கே புதர் மண்டிய பகுதியில் ஒரு வீடு சிதிலமடைந்த நிலையில் பயங்கரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த வீட்டுக்குள் ஒரு விளக்கு வெளிச்சம் தெரிவதாக சகாக்கள் கூறினர். ஆனால் பூசாரிக்கோ எந்த வெளிச்சமும் தெரியவில்லை. அந்த வீட்டை யாரோ இரண்டு விதமாகக் காட்டுகிறார்கள் என்பதை திலக்கராஜா உணர்ந்து கொண்டார். பலம் வாய்ந்த ஒரு தீய சக்தி அங்கே உறைந்திருப்பதையும் தயார்படுத்திக் கொள்ளாமல் மோதினால் கபளீகரம் செய்து விடும் என்பதையும் உணர்ந்து கொண்டார் பூசாரி.

அவரின் கண்களுக்கு அந்த வீட்டில் எந்த வெளிச்சமும் தெரியாவிட்டாலும் அங்கே நின்றிருந்த ஒரு பட்டுப்போன மரத்தில் அவலட்சனமான உருவத்தோடு ஒரு பெண் தலைவிரி கோலமாக அமர்ந்து எதையோ பறிகொடுத்த மாதிரி பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருப்பது அவர் கண்களுக்கு மட்டும் தெரிந்து மறைந்தது. இந்த நிலையில் அந்த வீட்டிற்குள் நுழைவது புத்திசாலித்தனமல்ல என்பதை புரிந்து கொண்ட பூசாரி வந்த வழியே திரும்பினார். அந்த தீய சக்திகள் தற்போது குடி கொண்டிருக்கும் அனோமா, சமரவீரவின் உடம்பை விட்டு அவற்றை விரட்டுவதே புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்து கொண்ட அவர் அதிலேயே குறியாக இருந்தார். இருவரிலும் குடியிருந்த துஷ்ட ஆவிகள், "அய்யோ, எங்களை விட்டுடுங்க பூசாரி. நாங்க பட்டினியா கிடந்தே செத்துப் போனோம். ஆனால் இப்போது எங்களுக்கு மூன்று வேளையும் நல்ல உணவும் கிடைக்குது. நாங்க இங்கேயே இருந்து விடுகிறோம்" என்று இருவரும் ஒருமித்த குரலில் பூசாரியின் காலில் விழுந்து கெஞ்சத் தொடங்கினர். ஆவிகளை ஒருவழிக்குக் கொண்டுவந்து விட்ட திருப்தி திலக்கராஜாவின் முகத்தில் தெரிந்தது.
"அன்றைக்கு அனோமா விறகு பொறுக்க எங்க வீட்டுப் பக்கம் வந்தபோது நான் அந்த பட்ட மரத்துல உட்கார்ந்திருந்தேன். சரி அவள் உடம்பிற்குள் போய்த்தான் பார்ப்போம் என்று யோசித்து அவள் உடலுக்குள் புகுந்தேன். அவளோடு வீட்டுக்கு போய் சாப்பிட்டது எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. பிறகு சும்மா ஏன் அந்த வீட்டுல தனிய இருக்கணும் என்று நினைத்து என் புருஷனை அழைச்சிட்டு வந்தேன். ரெண்டு பேரும் இங்கேயே தங்கிட்டோம்" என்று கணவன், மனைவியின் உடம்பிற்குள் இருந்த ஆவிகள் சொல்லவும் ஊர்வாசிகள் வெலவெலத்துப் போனார்கள். அந்த இருவரும் கடன் தொல்லையின் காரணமாகவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விசயத்தைப் பின்னர் தெரிந்து கொண்டார் பூசாரி. பிறகு அவர்கள் விரும்பிக் கேட்ட உணவுகளையெல்லாம் கொடுத்து அந்தப் பேயை விரட்ட பேரம் பேசினார். ஆனாலும் அந்த ஆவிகள் மசிவதாகத் தெரியவில்லை. உடலை விட்டுச் சென்றாலும் பழைய வீட்டிலேயே தஞ்சமடைந்து விடுவோம் என்று பூசாரியிடம் விடாப்பிடியாக பேசின. பூசாரி அவைகளை சக்கர வியூகத்தின் மூலமாக துண்டாக்கி, மாவில் உருட்டி பொம்மையாக்கி அந்த இரண்டு பொம்மைகளையும் ஆற்றில் கரைத்தார். ஆவிகள் ஆற்றில் கரையும் போது அவை போட்ட கதறல் சத்தம் பூசாரியின் காதுகளுக்கு மட்டுமே கேட்டது. இப்போது அனோமாவும் சமரவீரவும் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

ஜெகஜால செல் பேய்கள்!

செல்ஃபோனில் உலாவரும் பேய்கள்!

செல்லில் ஒரு படம் எடுத்தேன், பார்த்தால் ஒரு பேய் நிற்கிறது
என்று யாராவது செல் படமொன்றை உங்களிடம் காட்டினாரா?


மணி ஸ்ரீகாந்தன்

'வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க உன்
வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற
வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
உந்தன் வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே...'
என்கிறது பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள்.

இது தமிழகத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரம் சூடுபிடித்திருந்த வேளையில் வெளியாகி பட்டித் தொட்டியெங்கும் சக்கைபோடு போட்ட பாடல் எம். ஜி. ஆர் வேறு நடித்திருந்தார்.

இங்கிலாந்து நாட்டு மனோதத்துவ மற்றும் நரம்பியல் வல்லுனரான பிரைட் லைட், காந்தவியல் மின்புலம் மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்து விட்டு அதை மக்கள் உணர்வதற்காக பேய் பிசாசு இருப்பதாகக் கூறப்படும் 800 வருடகால பழைய கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய், பிசாசு பிடித்தவர்கள் தங்களுக்கு அமானுஷ்யமான சில சத்தங்கள் கேட்டதாகவும் குழந்தையின் அழுகுரல் கேட்டதாகவும் கூறினார்கள். வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டு விட்டு மறைந்து விட்டதாகவும் கூறினார்கள்.
பேய் பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளியிட்டிருக்கலாம். பேய் பீதியால் பாதிக்கப்பட்டவர்கள் பேய், பிசாசு இருக்கக் கூடும் எனக் கருதப்படும் இடங்களுக்குச் செல்லும் போது அல்லது எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அத்தகைய இடங்களுக்கு செல்ல நேர்கையில் மூளையின் சில நரம்புகள் பய உணர்ச்சியால் பாதிக்கப்படலாம். இத்தகைய சூழலில் அவர்கள் அமானுஷ்ய நிகழ்வுகளைக் காணவும் கேட்கவும் கூடும் என்பது இது தொடர்பில் அந்த மனோ வல்லுநர் விளக்கம் அளித்தார். இந்த உணர்வுகளுக்கு அல்லது பிரமைகளுக்கு சிலர் ஆளாவதினால் மாத்திரம் ஆவி, பேய், பிசாசு இருப்பதற்கான ஆதாரங்களாக அவற்றைக் கொள்ள முடியாது என்பது அறிவியல் விளக்கம். எனவே பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு விஞ்ஞானக் கருவிகளின் உதவியோடு அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தாராம்.
ஸ்மார்ட் போன்களில் உள்ள 
பேய் சொஃப்ட்வெயார்களில் ஒன்று
'மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று ஒரு முதுமொழி இருக்கிறது. ஆனால் பேய் இருக்கிறதா இல்லையா என்பதற்கு ஆராய்ச்சியாளர் பிரைட்லைட் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர இதுவரை யாரும் சரியான ஆதாரங்களைக் காட்டவில்லை. சைத்தான், பிசாசு, ஆவி என்றெல்லாம் சகல மதங்களிலும் தீய சக்தி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேய்க்கதை நாவல்களும், சினிமா படங்களும் உலகம் முழுவதும் மக்கள் ஆதரவோடு பெரும் வரவேற்பை இன்றுவரை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதை நம்பாதவர்களும் அரண்மனையையும், முனியையும், டார்லிங்கையும் பார்த்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொழில்நுட்பங்களும் நாகரிகமும் எவ்வளவோ வளர்ந்து விட்டப் பிறகும் பேய், ஆவி சமாச்சாரம் மட்டும் இன்றுவரை அப்படியேதான் இருக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த பெரிய நாடுகளிலும் பேய் நம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சில வியாபார ஊடகங்களும் துணை நிற்கின்றன. சி. சி. டி. வி. கெமராவில் பதிவாகியதாக கூறி ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகக் காட்டும் வீடியோக்களை இணையத்தளங்களில் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை உருவாக்கி பணம் சம்பாதிப்பதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள். அந்த வீடியோக்களின் நம்பகத் தன்மையை அறிவியல் ரீதியாக பரிசோதித்து அதன் விளக்கத்தை மக்களுக்கு புரிய வைக்க எவரும் முன்வருவதும் இல்லை. "ஏன் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள். மாதா மாதம் ஒரு பேய்க் கதையை வானவில்லில் அவிழ்த்து விடுகிறீர்களே?" என்று வாசகர்களாகிய நீங்கள் கேட்பதும் காதில் விழத்தான் செய்கிறது.
வண்ணவானவில்லில் வாசகர்களின் அபிமானம் பெற்றதாக இருள் உலகக் கதைகள் விளங்குகின்றன. அதற்காக வண்ணவானவில் பேய் இருப்பது உண்மை என்று சொல்லவில்லை. பூசாரிகள் சொல்வதைக் கேட்டு எழுதி அதை அப்படியே வாசகர்களுக்கு தருகின்றோம் அவ்வளவுதான். இப்போ விடயத்துக்கு வருவோம்.
இதுதான் அந்தப் போட்டோ,
தூரத்தில்
நிற்கும் பேயின் ஆடை 
முன்னாள் நிற்கும்
பெண்ணின் கைகளை 
மறைப்பது எப்படி சாத்தியம்?
"பேய் இருக்கிறது அதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்" என்று தடாலடியாக ஆதாரத்தோடு ஒரு புகைப்படத்தை காட்டி எம்மை சிலர் குலைநடுங்கச் செய்கிறார்கள். அண்மையில் எமது அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு சகோதரி தனது செல்போன் திரையில் ஒரு போட்டோவை எம்மிடம் காட்டினார். அதில் ஒரு பெண்மணி குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு நிற்கிறார். அவரின் பின்னால் ஒரு ஆவி நிற்கிறது.

"இது என் சித்தி. இந்தப் போட்டோவை செல்போனில் எனது சகோதரர் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தோடு நிறைய போட்டோக்களை க்ளிக் செய்திருக்கிறார்கள். பிறகு சில படங்களை மட்டும் பார்த்து விட்டு தமது கடமைகளில் ஈடுபட்டிருக்கிறார். சில நாட்கள் கழித்து எதேச்சையாக போனை எடுத்து தாம் எடுத்த படங்களை பார்த்தபோது சித்தியின் உருவத்திற்கு பின்னால் வெற்றிலை கொடிக்கு அருகில் ஒரு பேய் நிற்பதை கண்ட அவர் பதறிப்போய் தாம் எடுத்த படத்தை எல்லோரிடமும் காட்டியிருக்கிறார்" என்று மயிர்க்கூச்செரியும் உடலோடு சம்பவத்தை விவரித்தார்.

"இப்போது ஒரு பூசாரியை வைத்து சித்தி வீட்டில் ஒரு பரிகார பூஜை செய்யப் போறோம்" என்றும் கூறினார். ஆமாம், வீட்டுக்குள் பேய் இருந்தால் விரட்டத்தானே வேண்டும்?

படத்தைப் பார்த்து சம்பவத்தைக் கேட்ட எங்களுக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருந்தது! பிறகு 'சரி இது கம்யூட்டர் மாயா ஜாலமாகத்தான் இருக்கும்' என்ற எண்ணத்தோடு, இருபத்து நான்கு மணிநேரமும் போனே கதி என்று கிடக்கும் சில ஸ்மார்ட் போன் விற்பனர்களைக் கண்டு கேட்டோம்.

"வெள்ளைச் சேலை, காலில் கொலுசு சல், சல், சல்லென்ற சத்தத்தோடு நடுக்காட்டில் "நானும் வருவேன் இங்கும் அங்கும்" என்று பாட்டுப்பாடும் தமிழ் சினமா பேய்களாகட்டும், வானத்தில் வெளவால் மாதிரி பல்லை ஈ காட்டிய படியே பறந்து பறந்து சண்டை போடும் ஹொலிவூட் பேய்களாகட்டும்... இவை எல்லாம் சலித்துப் போய்விட்டது. இப்போதெல்லாம் போனில் பயம் காட்டினால்தான் பயப்படுவாங்க" என்ற முகவுரையோடு அவர் சொன்ன சில தகவல்கள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டின. இன்று சந்தையில் கிடைக்கும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பேய்ப்பட மாயாஜால வசதி வந்து விட்டதாம். ஸ்மார்ட் போனில் பிளே ஸ்டோருக்கு சென்று கெமரா கோஸ்ட் என்று டைப் செய்து சேர்ச் செய்தால் ஏகப்பட்ட பேய் சொப்ட் வெயார்கள் விதவிதமாகக் கிடைக்குமாம்.
அதில் உங்கள் மனம் கவர்ந்த பேயை இனம் கண்டு அந்த சொப்ட் வெயார் ஃபைலை உங்கள் போனில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டால் அப்புறம் நீங்களும் ஜமாய்க்கலாம். உங்கள் நண்பர் அல்லது நண்பியை ஒரு போட்டோ எடுத்து அந்தப் படத்தின் பின்னணியில் ஒரு பேயை வைத்து அடுத்த நிமிடமே அவர்களிடம் அதை காட்டி அவர்களை அதிர்ச்சியடையச் செய்யலாம். நீங்கள் தெரிவு செய்த பேய் படத்தின் அளவை சிறிதாக்கி, பெரிதாக்கிக் கொள்வதோடு அந்தப் பேயை மட்டும் ரொம்பவும் க்ளியராகவோ அல்லது தெரிந்தும் தெரியாமல் இருப்பது போலவோ மங்கலாகவும் தங்களின் ரசனைக்கு அமையவும் மாற்றிக் கொள்ளலாம். சதாகாலமும் போனில் தானே கிடக்கிறீர்கள். பேய்ப் பித்தர்கள் இதைக் கொஞ்சம் தோண்டிக் கிளறிப் பார்த்தால் பேய் உங்கள் போனில் தங்கி விடும். இனி யாராவது போனில் பேய் படம் காட்டுகிறேன் என்றால் நம்பி விடாதீர்கள். பேயை நம்பாதே அது உன்னை ஏமாற்றும்!