Wednesday, May 22, 2024

நரேந்திரா விவேகானந்தன் பேட்டி

 நரேந்திரா விவேகானந்தன் எனும் இவர், கனடா நாட்டில் வசித்துவரும் ஒரு சமூக தன்னார்வலர் மட்டுமன்றி, தமிழ் வளர்ச்சி, தமிழர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும் கரிசனையும் கொண்ட ஒரு உயர்ந்த மனிதரும் கூட, ‘விழித்தெழு பெண்ணே’ என்ற பெண்களுக்கான உலகளாவிய தமிழ் அமைப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சமீபத்தில் இலங்கை வந்திருந்த டாக்டர் நரேந்திரா விவேகானந்தனை கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் சந்தித்தோம். அவர் ‘தமிழன்’ நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். அவருடனான முழுமையான நேர்காணல்: வருமாறு,

உங்களைப் பற்றிய சில பொதுவான தகவல்களை அறிய ஆவல். இளமை முதல் இன்றுவரை? 


எனது பெயர் நரேந்திரன் விவேகானந்தன. நான் கனடா நாட்டில் வசித்து வருகின்றேன். நானொரு சமூக சேவையாளர். எனது தொழில் வேறு. அதேநேரத்தில், உலகளாவிய ரீதியில் தமிழர்களின் எதிர்காலம், தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட விடயங்களில் நான் கவலையும், கரிசனையும் கொண்டிருந்தேன். அதன் காரணமாக நம் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நானும் எனது மனைவி சசிகலாவும் இணைந்து உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைத்து ‘விழித்தெழு பெண்ணே’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, நடத்தி வருகின்றோம்.
எனது மனைவி சசிகலா பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இந்த சர்வதேச விழித்தெழு பெண்ணே அமைப்பை மிகவும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆண்டுதோறும் தமிழ் ஆளுமைப் பெண்களைத் தேர்வுசெய்து அவர்களில் சிறப்பாகக் களப்பணியாற்றும் பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறார். இந்த மாபெரும் விருது விழா இந்த ஆண்டுடன் இலங்கையில் மூன்றாவது தடவையாகவும் நடைபெற்றது. ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்றுதான் நாம் காலாகாலமாக சொல்லிப் பழகியிருக்கிறோம். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பது போன்று ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பலமான வலுவான ஆண் இருக்க வேண்டும். அது மாதிரிதான் எனது மனைவியின் வெற்றிகளுக்குப் பலமாகவும் வலுவாகவும் நான் இருந்து செயற்படுகின்றேன்.
எமது அமைப்பில் 18 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரியாக நான் இருக்கின்றேன்.
குறிப்பாக, தையல் வேலை தெரிந்த ஒரு பெண்ணுக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கிக்கொடுப்பது, ஓவியம் வரையத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு ஓவியக் கருவிகள் வாங்கிக்கொடுப்பது மட்டுமே அவர்களுக்கான நிரந்தரத் தீர்வாகுமா என்று சிந்தித்தோம்.
குறிப்பாக, இலங்கையிலும் இந்தியாவிலும் வாழுகிற பெண்களுக்கு ஓர் அழகான ஆடையைத் தைத்து அதனை மார்க்கெட் பண்ணத் தெரிவதில்லை அதனை எங்கே எப்படி விற்பனை செய்வதென்று தெரிவதில்லை பொருளாதாரத்தோடு போட்டியிடும் திறமை அவர்களிடம் இல்லை பத்து ரூபாவுக்கு ஓர் ஆடையைத் தைத்து அதனை இருபது ரூபாவுக்கு மார்க்கெட் செய்கிறார்கள் அவ்வளவுதான். ஆனா வெளிநாட்டில் வாழும் ஒரு பெண் இருபது ரூபாவுக்கு தைத்த ஆடையை நூறு டாலருக்கு விற்பனை செய்து விடுகிறாள்.
எனவே இப்படியான தடங்கல்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்து சரியான மார்க்கட்டிங் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது. அதோடு ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகள், புரிந்துகொள்ளாமை இப்படியான விடங்கள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இதையெல்லாம் ஏன் செய்கின்றோம் என்றால் சில குக் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரையிலும் சில பெண்களால் கலாச்சார கட்டுபாடுகளிலிருந்து வெளியே வரமுடிவதில்லை. அந்த கட்டுபாடுகளை அவர்களின் குடும்பமோ, அல்லது அவர்களை சுற்றி வாழும் சமூகமோ வெளியே வர விடுவதில்லை. அப்படியானவர்கள் பெண்களாகவும் இருக்கலாம் அல்லது ஆண்களாகவும் இருக்கலாம். அப்படியான பெண்களுக்கு அறிவூட்டல், அவர்களுக்கு அவர்களை யாரென்று புரியவைப்பது, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவது போன்ற விடயங்களை வைத்துதான் எமது விழித்தெழு பெண்ணே அமைப்பை மேற்கொண்டு வருகின்றோம்.

எத்தனை நாடுகளில் இப்படியான சமூக பணிகளை நீங்கள் செய்து வருகிறீர்கள்?

 
எமது இந்த சமூக பணி, ஒன்று எமது அமைப்பின் ஊடாகவும் மற்றது
எனது தனிப்பட்ட குடும்ப ரீதியாகவும்  செய்து வருகின்றோம்.
தனிப்பட்ட குடும்ப ரீதியாக என்று சொல்வது பகிர்ந்து வாழ்தல் என்பதே எனது குடும்பத்தின் நோக்கம். அதாவது என்னிடம் இரண்டு ஆடைகள் இருந்தால் அதில் ஒன்றை இல்லாவனுக்கு கொடுப்பது. இது உதவியல்ல பகிர்ந்து வாழ்தல். தானத்துக்கும் தர்மத்திற்கும் உள்ள வித்தியாசமும் இதுதான்.
தனிப்பட்ட ரீதியாக நான் யாரையும் குறை சொல்லவில்லை, அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் தானம் செய்வதை விட தர்மம் செய்வது மிகச் சிறப்பானது என்று நான் நினைக்கின்றேன்.
ஆயிரம் பேருக்கு தானம் கொடுத்து விட்டு அதை படம்பிடித்து ஃபேஸ்புக்குல போடுறதுக்கு பெயர் தானமல்ல. ஆனாலும் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
நம்மில் நிறைய பேரு சொல்லுற விசயம் “நான் லைப்ல செட்டில் ஆகிட்டேன்” னு, ஆனா யாரும் லைப்ல செட்டில் ஆகிட்டதா சொல்ல முடியாது டொனால்ட் டிரம்பில் இருந்து நரேந்திர மோடி, ஜோ பைடன்னு எல்லோருக்கும் இன்னும் ஏதோ ஒரு தேவை இருந்துகிட்டுதான் இருக்கும் அதை யாரும் மறுக்க முடியாது.
இரண்டு காரு, மூணு பங்களா இருந்தாளும் ஒரு வீட்டுலதான் படுத்து தூங்க முடியும் அதுக்குன்னு மூணு வீட்டுலயும் ஒரே நேரத்துல தூங்கத்தான் முடியுமா..?
அதனால் இந்த உலகத்துல யாரும் செட்டில் இல்லை, இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொண்டு சிந்திக்க தொடங்கினால் இந்த உலகத்தில் ஏழ்மை என்று ஒன்றிருக்காது!
எமது இந்த சமூக சேவையில் எனது குடும்பத்தின் சார்பில் சொந்த வருமானத்தில் செய்வதை நாங்கள் வெளியில் சொல்வதில்லை.
சொல்ல விரும்புவதும் இல்லை. எனவே எமது இந்த மக்கள் பணியில் குறிப்பாக நான் இலங்கையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் போது ஒரு விசயம் இருக்கிறது அதாவது எனது பெற்றோர்கள் இலங்கை மண்ணைச் சேர்ந்தவர்கள் என்றால் ஒரு பூர்வீக ஜெனடிக் தொடர்பில் நான் அந்தப் பணியை செய்வதாக நினைக்கலாம் அதுவே ஐதராபாத்தில் உள்ள ஒருவருக்கு செய்யும் போது அவரை எனக்கு யாரென்று தெரியாது அதே மாதிரி அவர்களுக்கும் என்னைத் தெரியாது  எனவே இப்படியான விசயத்தைதான் நாங்கள் கூடுதலாக விரும்புகிறோம்.
எனவே இலங்கை, இந்தியாவில் செய்யும் போது இந்த அமைப்பின் ஊடாக செய்கின்றோம் மற்ற இடங்களில் தனிப்பட்ட ரீதியில் செய்யும் போது யாருக்கும் தெரியாத இடத்தில் செய்கின்றோம்.
இதனை சிலபேர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் சொல்வதாக இருந்தால் என்னால் யாருக்கும் உதவி செய்ய முடியாது ஏனென்றால் என்னுடைய தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை, எனக்கே உதவி தேவை எனும் போது நான் எப்படி மற்றவர்களுக்கு  உதவ முடியும் அதனால்  பகிர்ந்து வாழலாம். இது அந்தக் காலத்தில் இருந்த பண்ட மாற்று முறை மாதிரி அரிசி வைத்திருப்பவன் அதனை பருப்பு வைத்திருப்பவனிடம் கொடுத்து விட்டு மாற்றி கொள்வது போல அனைவரும் பகிர்ந்து வாழலாம் அதுதான் இந்த நவீன காலத்தில் வாழும் வாய்ப்புகள் இல்லாத மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் நல்ல வழி என்று நான் நினைக்கின்றேன்.

தனது துணைவியாருடன்

கனடாவை வாழ்விடமாக கொண்டுள்ளீர்கள் ஏன்?

இந்த உலகம் தோன்றி அதில் மனித இனம் உருவாகி அறிவுப்பூர்வமாக சிந்திக்க தொடங்கிய போதே இந்த நகர்தல் தொடங்கி விட்டது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன் இந்தியாவுக்கு வந்து குடியேறியதும் இந்தியன் லெபனானில் குடியேறியதும் நடந்திருக்கிறது ஆனால் தமிழ் சமூகத்திற்கு இந்த புலம் பெயர்தல் புதுசு மிகக் குறுகிய காலத்தில்தான் நம் சமூகம் நகர்ந்து வாழப் பழகியிருக்கிறார்கள்.
என்னைக் கேட்டால், கனடா மிகச் சிறந்த நாடு என்றுதான் சொல்வேன். ஒரு தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு குடும்பமோ நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்க்கூடிய நாடு.
நான் இந்தியாவுக்கு நிறைய தடவைகள்  சென்றிருக்கிறேன். அங்கே நான் கவனித்த ஒரு விடயம் பிரதான வீதிகளின் சிகப்பு விளக்கு எரியும் போது அதை யாரும் கவனிப்பதில்லை. கனக்கில் எடுப்பதே இல்லை ஆனாலும் இந்தியாவில் வீதி சமிக்சைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற சட்ட இருக்கிறது ஆனால் அதனை யாரும் மதிப்பதில்லை. நான் வாழும் கனடாவில் அப்படி அல்ல வாகன நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் கூட வீதி விளக்கு சமிக்ஞைகளை மதித்து வண்டிகள் நிற்கும். யாரும் வீதியில் இல்லையே என்று வண்டியை யாரும் நகாத்துவதில்லை. வீதி கட்டுப்பாட்டு விதிகளை அந்தளவுக்கு அங்கே பின்பற்றுகிறார்கள்.
எனக்கு தொழில் ரீதியாக நல்ல வாய்ப்பு அமையப்பெற்ற நாடு அதனால் நான் வாழ்வதற்கு அந்த நாட்டை தேர்ந்தெடுத்தேன்.

இளைய தலைமுறையினர் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் எவ்வாறு காக்க வேண்டும்?

இளைய தலைமுறையினர் காக்கனும்னு சொல்கிறோம் ஆனா நாம் காக்குறது இல்லையே..இப்போ என்னையே எடுத்துக்கோங்க ஐந்து தமிழ் வார்த்தைக்கு இடையில் நாலு ஆங்கில வார்த்தையை கலந்துதான் பேசுறேன்.
முதலில் இளைய தலைமுறைக்கு கலாசாரம் என்றால் என்னன்னு தெரியனும். வாழ்வியல்தான் கலாசாரம், வாழ்வியல் வேறு கலாசாரம் வேறுன்னு நாம் தேவையில்லாமல் குழம்பிக்கொண்டிருக்கின்றோம்.
இப்போ கனடாவுக்கு வாரவங்க மைனஸ் தர்ட்டீ குளிரில வேட்டிதான் கட்டிட்டுப் போவேன்னு அதை உடுத்திட்டு போனா நாம செத்துதான் போவோம். எனவே அங்கே கலாசாரம் மாறவில்லை, சூழல் அவ்வளவுதான். சென்னைக்கு வந்தவன் 34டிகிரியில் கோர்ட் சூட்தான் போடுவேன்னு அடம்பிடிச்சா அவுஞ்சி செத்துடுவான். எனவே இடத்துக்கு அமைய நாம் நமது வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனா கலாசாரம் என்பது நமது குடும்பத்தில் இருக்கணும்.
தமிழர்கள் மத்தியில் டாட்டூ பச்சை குத்தும் கலாசாரம் காலாகாலமாக அவ்வையார் காலத்திலிருந்து இருந்து வருகிறது. அது நமது கலாசாரம்தான் ஆனால் அந்த பச்சையை ஒரு பெண் அவள் உடம்பில் எந்த இடத்தில் குத்துகிறாள் அது எப்படி வெளியே தெரிகிறது என்பதில்தான் கலாசாரம் மாற்றம் ஏற்படுகிறது.

சில சமூக அமைப்புகளுடன் தாங்கள் செய்யும் தமிழ்ப்பணி குறித்து சொல்லுங்க?
சமூக பணி என்பது மற்றைய அமைப்புகளுடன் சேர்ந்துதான் செய்ய வேண்டும் என்பதல்ல ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் ஒரு சமூகப்பணியை செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.
சமூகப்பணி என்பது அந்தந்த சமூகம் சார்ந்த மனிதனின் காலத்தின் கட்டாயம் அதை செய்துதான் ஆகணும்.
எமது விழித்தெழு பெண்ணே என்ற அமைப்பு அரசாங்கமோ அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதியினை பெற்று நாம் இந்தப் பணியை செய்வதில்லை. அது சமூகப் பணி இல்லை அது ஒரு ஏஜன்ட் மாதிரி அங்கே காசு வாங்கி இங்கே கொடுப்பது.
எனவே எமது விழித்தெழு பெண்ணே அமைப்புக்கான நிதியை பெறுவதற்கு நாம் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கின்றோம்.
அதுதான் ஒல்வொரு வருடமும் கனடாவில் நடத்துகின்ற மிஸ் தமிழ் யுனிவர்சல் அழகு ராணி போட்டி இந்த போட்டியானது 2005ம் ஆண்டிலிருந்து இன்று வரை நடைபெற்ற வருகிறது.
இது ஒரு வியாபாரம்தான் இலாப நோக்கில் செய்யப்படும் ஒரு போட்டிதான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கிடைக்கும் இலாபம் எமது அமைப்புக்கு செல்கிறது.
இதனால் எமது அமைப்புக்கான நிதியை நாங்கள் வேறு யாரிடமும் கேட்பதில்லை இந்த போட்டியின் ஊடாக கிடைக்கும் இலாபத்தை எமது சுய தேவைகளுக்கு பயன்படுத்தாமல் இந்த அமைப்புக்கு கொடுத்து விடுகின்றோம். அதை அந்த அமைப்பு மக்களுக்கு கொடுக்கிறது.
இந்த அழகு ராணி போட்டி என்று சொல்லும் போது தமிழ் கலாசாரத்தில் அந்த வார்தை உங்களை ஏதோ பண்ணும் சங்கடத்தை ஏற்படுத்தும் ஆனால் இந்தப் போட்டி அப்படி அல்ல
உலகலாவிய ரீதியில் நடைபெறும் போட்டிக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
இந்த அழகுராணி போட்டியில் தமிழ் காலாசார உடையணிவது கட்டாயம் இதேவேளை எமது பாரம்பரிய அணிகலன்களான ஒட்டியானம், தண்டட்டி, ஒண்ணப்பு, உள்ளிட்ட ஆபரணங்கள் மீது ஆர்வமுள்ள பெண்கள் இதில் கலந்து கொள்வதோடு அந்த ஆபரணங்கள் பற்றிய தெளிவை விளக்கத்தை எடுத்து சொல்வது முக்கியமாகும்.
இந்தப் போட்டியில் டூபீஸ் டிரஸ், நீச்சல் உடைகளுக்கு அனுமதி இல்லை. மற்றது இந்த மிஸ் தமிழ் யுனிவர்சல் போட்டியின் உத்தியோகப்பூர்வ மொழி தமிழ். இந்தப் போட்டியில் தமிழர், மலையாளி, கன்னடர், தெலுங்கர், சிங்களவர் என்று இந்த உலகத்தில் எவரும் கலந்து கொள்ளலாம்.
ஆனால் அவர்களுக்கு தமிழ் பேச தெரிந்திருக்க வேண்டும்.
உலக அழகுராணி போட்டியில் ஆங்கிலம் பேசினால் யாருக்கும் கலந்து கொள்ளலாம். அதுமாதிரி நாங்கள் நடத்தும் போட்டியில் தமிழ் பேசத் தெரிந்தால் யாரும், எந்த நாட்டவரும் கலந்து கொள்ளலாம்.

சமூகப் பணிகளில்
உங்க குடும்பம் பிள்ளைகள் குறித்து?

எனது மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாவது மகன் திருமணத்துக்கு தயாராக இருக்கிறார். எனது மூன்றாவது மகன் ஒரு டிகிரியை முடித்து விட்டு அடுத்த டிகிரிக்கு படிக்கிறார். எனக்கு மூன்று பேரப்பிள்ளைகள் அவர்களும் நன்றாக தமிழ் பேசுவார்கள். எனது குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ மொழி தமிழ்தான். நான் நன்றாக ஆங்கிலம் பேசுவேன் சிங்களம் பேசுவேன் ஆனால் நான் என் வீட்டுக்கு சென்றவுடன் அங்கே தமிழ்தான் பேசுவேன்.
இதைதான் எனது பிள்ளைகளும் கடைப்பிடிக்கிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்த்த எனது மனைவிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எத்தினை சிரமமாக இருந்தாலும் சமைத்து வைத்து விட்டே செல்வாள் அதனால் கடையில் சாப்பிட்டு அந்த ருசிக்கு பழக மாட்டார்கள் அதனால் நமது உணவு பழக்கங்களையே அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். எனவே உணவு, உடையும்தான் நமது கலாசாரத்தையும் மொழியையும் கடைப்பிடிப்பதற்கான ஆணிவேர். உணவை விட்டுவிட்டால் அப்புறம் நமது மொழியையும் விட்டுவிடுவோம்.

எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது ஆங்கிலம்தான் தெரியும் என்று பெருமை பேசும் வெளிநாட்டு வாழ்  தமிழர்கள் பற்றி?  

அவர்கள் ஆங்கிலம் பேசுவதை ஒரு கவுரவமாக கருதுகிறார்கள். அது தவறு ஆங்கிலம் என்பது அறிவல்ல அது ஒரு மொழி அவ்வளவுதான்.
இதேவேளை இன்னொரு விடயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் தமிழன் வேறு தமிழ் வேறு தமிழன் என்பது அது நமது இனம் தமிழ் என்பது அது ஒரு மொழி அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எப்படி தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேசிக்கொண்டு தமிழனாக இருக்குறீர்களோ அதுமாதிரிதான். ஆங்கிலம் பேசுபவன் எல்லாம்  வெள்ளைக்காரன் இல்ல, தமிழன் ஆங்கிலம் பேசினாலும் அவன் தமிழன்தான் அதனால் மொழியையும் இனத்தையும் போட்டு நாம் குழப்பிக்கொள்ள கூடாது!

சாதித்துக் காட்டவேண்டும் என உங்கள் மனதில் தோன்ற காரணம்?
பகிர்ந்து வாழ்ந்துவிட்டு போவோம் இதில் என்ன சாதிக்க இருக்கிறது.
உலகத்தில் ஏழ்மையே இல்லாமல் ஒழித்துவிட்டால் அது நான் செய்த சாதனையாக கருதலாம். அதை யாராலும் செய்ய முடியாது.


கடும் முயற்சிக்கும், சிரமத்திற்கும் கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் எதிர்பார்த்த அளவில் இருந்ததா?

இப்போ இந்தக் கேள்விக்கு அர்த்தமே இல்ல ஏனென்றால் நான்தான் எதையும் எதிர்பார்க்கலையே.. எனக்கு விருப்பமானதை நான் செய்துவிட்டு போகிறேன் இதில் என்னத்த நான் எதிர்பார்க்க. எதிர்பார்த்து செய்தால் அது பகிர்ந்து வாழ்தல் அல்ல. எதிர்பார்த்து ஒரு உதவி செய்தால் அது தானமல்ல அது தர்மமல்ல.

தமிழ்ச் சமூகத்திற்காக நீங்க சொல்ல விரும்புவது என்ன?

 
நீங்கள் ஜப்பான்ல இருந்தாலும் ஜப்பான் மொழியை பேசிவிட்டு தமிழனாக இருங்கள். பிரான்சில் இருந்தாலும் பிரெஞ்சு மொழி பேசிவிட்டு தமிழனாக இருங்கள்🔴


Monday, February 6, 2023

வேலூர் முத்து மண்டபத்தில் கண்டி ராஜா விழா




கண்டியை கடைசியாக ஆட்சி செய்த மன்னன்  ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை!
நமது பாடப் புத்தகத்திலும் கண்டி மன்னர் பற்றிய பாடம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் புதிய அறிமுகம் தேவையில்லைதான் ஆனாலும், மன்னரின் கைதுக்குப் பிறகு ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்பது நம்மில் பலருக்குத் தெரியாத விடயம்.

இலங்கையில் எழுதப்பட்டுள்ள வரலாற்றுகளின்படி சிங்களவர்கள் கண்டி மன்னனை கடைசி சிங்கள மன்னன் என்றும், கண்ணுசாமி நாயக்கர் என்ற இயற் பெயர் மன்னருக்கு இருப்பதால் தமிழர்கள் அவரை கண்டியின் கடைசி தமிழ் மன்னன் என்று அழைத்தார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல கண்டியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஆட்சி செய்திருந்தாலும் அவர் பிறப்பால் ஒரு தெலுங்கர் என்பதுதான் உண்மை.
அந்தக் காலத்தில் சிங்களத்தை கொச்சையாக பேசும் தமிழர்களின் பேச்சு வழக்கை ‘அந்தர தெமல’ என்று அழைப்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் ஆந்திர தமிழ் என்பதாகும்.  
கண்ணுசாமி நாயக்கருக்கு சகோதரர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு அக்கா மட்டும்தான் அம்மா பெயர் சுப்பம்மாள் வெங்கடபெருமாள்.
கண்டி மன்னரின் பூர்வீக மண் என்றால் அது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளிக்குறிச்சி என்ற ஊர்தான், அந்த ஊரில்தான் கண்ணுசாமி நாயக்கரின் இரத்த உறவுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட வாரிசு போட்டியின் காரணமாக கண்ணுசாமி குடும்பம் மதுரையிலிருந்து வெளியேறி புதுக்கோட்டை மகாராஜாவின் பாதுகாப்பில் பூலான் பட்டியில் சிறிது காலம் கண்ணுசாமியின் குடும்பத்தினர் வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இன்றைக்கும்  அந்த ஊரில் கண்டி ராஜாவுக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அந்த ஊரோட பேரு விராச்சிலை. அங்குள்ள அம்மன் கோவிலில் கண்டி மன்னரின் வாரிசுகளுக்கு புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் மூலமாக முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று வரை அங்கே அது வழக்கத்தில் இருந்து வருகிறது.


அந்தக் காலத்தில் தமிழகம் தனி மாநிலமாக இருக்கவில்லை தெலுங்கர்களும் தமிழர்களும் ஒரே நிலப்பரப்பில் செரிந்து வாழ்ந்த காலக்கட்டம். அதனால் அந்த நாட்களில் நாயக்கர்கள் எல்லோரும் சரளமாக தமிழ் பேசுவார்கள்.
பூலான் பட்டியில் வாழ்ந்த கண்ணுசாமி குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்துக்கு சென்றவர்கள் அங்கே ராமேஸ்வர பெரிய கோவிலில் தெய்வீக பணியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.அதன் பிறகு கண்ணுசாமியின் தந்தை இறந்துவிட கண்டியை ஆட்சி செய்த இராஜாதி ராஜசிங்கனின் மனைவியின் தம்பியான கண்ணுசாமியை கண்டிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.


அதன் பிறகு கண்ணுசாமி நாயக்கர் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனாக 1798 ல் முடிசூடிய மன்னன் ஆங்கிலேயேர்கள் 1815ல் கண்டியை கைப்பற்றும் வரை பதினேழு வருட காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார்.

மன்னரை கைது செய்த ஆங்கிலேயே அதிகாரிகள் மீண்டும் ஒரு புரட்சியை நாயக்கர்கள் செய்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மன்னரின் இரத்த உறவுகள் அனைவரையும் கூண்டோடு இந்தியாவிற்கு நாடு கடத்திவிட முடிவு செய்தார்கள் அதன்படி கண்டி ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது.

1815 பெப்ரவரி 2 ம் திகதி கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேய அதிகாரிகள் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. எஹலபொல நிலமே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந் நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள். ஒப்பந்தத்தின் ஆங்கில நகலை ஆளுனரின் சார்பில் கலந்துக் கொண்ட டொய்லி வாசித்தார். அதைத் தொடர்ந்து சிங்களத்தில் ஏப்ரகாம் டி. சேரம் வாசித்தார்.
ஒப்பந்தத்தில் 14 சிங்களத் தலைவர்கள் கைச்சாத்திட்டனர். அவர்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முப்பாட்டன் உட்பட ஏழு பேர் தமிழில் ஒப்பமிட்டனர். ஒப்பந்தத்தில் முக்கியமாக மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனுக்கு இனி கண்டியில் எந்த அரசுரிமையும் கிடையாது அதே போல் அவரது வாரிசுகளுக்கும் எந்த உரிமையையும் கோர முடியாது, மன்னரின் வம்சத்தை சேர்ந்த, உறவினர்களான ஆண்கள் எவரும் கண்டியில் தங்கக் கூடாது. கண்டி அரசுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் இனி பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இயங்கும். ஆளுனரின் எழுத்து மூல உத்தரவின்றி எவருக்கும் மரணதண்டனை வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
கண்டி ஒப்பந்தம் நிறைவுபெற்றவுடனேயே மன்னரின் உறவினர்கள் அனைவரும் இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படடார்கள். மன்னரும், மகா ராணிகளும் சில மாதங்களுக்கு பிறகு 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பலில் இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.

இலங்கை அப்போது மதராஸ் கவர்னரின் ஆளுகையிலே இருந்திருக்கிறது. வெலிக்கடை சிறைச்சாலை அமைவதற்கு முன்பாகவே அமைக்கப்பட்ட பெரிய சிறைச்சாலைதான் தமிழகத்திலுள்ள வேலூர் சிறைச்சாலை, அப்போது இலங்கையில் பெரிய குற்றங்களை செய்த கைதிகளை வேலூருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
எனவே கண்டி மன்னரை கைது செய்த ஆங்கிலேயர்கள் அவரை வேலூருக்கு குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார்கள்.
வேலூர் சிறைச்சாலையில் 16 ஆண்டுகளை கழித்த மன்னர் சிறையிலேயே 1832 ஜனவரி 30 ஆம் திகதி இறந்துவிட்டார். மன்னரின் மனைவிகளில் இருவருக்கு சிறைச்சாலையிலேயே குழந்தையும் பிறந்திருக்கிறது.
அதன் பிறகு மன்னரின் வாரிசுகள் தமிழகத்தில் பல பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.


மன்னர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வேலூர் பாலாற்றங்கரையிலேயே அடக்கம் செய்து, அந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் மன்னருக்கு ஒரு கல்லறையை அமைத்திருந்தார்கள் கால ஓட்டத்தில் கல்லறை கவனிப்பாரற்று சிதிலமடைந்து போக, 1990களில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முத்து மண்டபமாக கட்டியெழுப்பி அதனை உத்தியோகப்பூர்வமாக திறந்துவைத்தார்.
கண்டி மன்னர் உயிர் நீத்த ஜனவரி- 30ம் திகதியை மன்னரின் நினைவு நாளாக குருபூஜை விழா என்ற பெயரில் அவரின் வாரிசுகள் மன்னரின் கல்லறை அமையப் பெற்றுள்ள முத்து மண்டபத்தில் விழா எடுத்து வருகிறார்கள்.
இலங்கையின் பஞ்சாங்க கலண்டர்களில் ஜனவரி 30ம் திகதியை ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் நினைவு நாள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.


ஆனால் இலங்கையை பொருத்தவரையில் மன்னரின் நினைவு நாள் கலண்டரில் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கிறதே தவிர மன்னரின் நினைவு நாள் விழா இங்கே கொண்டாடப்படுவதில்லை.
தமிழ் நாட்டில் இந்த நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்படுவது இங்குள்ள அனேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மன்னரின் உறவினர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தமிழர்களாவே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு தமது தாய் மொழியான தெலுங்கு பேச முடியவில்லை.

கர்நாடகா, ஆந்திராவில் வாழ்பவர்கள் தெலுங்கிலேயே பேசுகிறார்கள் அவர்களால் தமிழ் பேச முடியவில்லை.

கண்டி மன்னரின் உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் மன்னரின் போட்டோ பூஜை அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. மன்னரின் குருபூஜை நடைபெறும் ஜனவரி 30ம் திகதி கண்டி மன்னரின் ரத்த உறவுகள் அனைவரும் தவறாமல் வேலூர்,  முத்து மண்டபத்திற்கு வந்து விடுகிறார்கள்.
இந்த ஆண்டும் மன்னரின் 191வது நினைவு நாள், குரு பூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கண்டி மன்னரின் ஏழாவது தலைமுறை வாரிசான மதுரைச் சேர்ந்த அசோக்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அசோக்ராஜா மதுரையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்டவர் பிறப்பால் தெலுங்கர் என்றாலும்,  தமிழை தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அசோக்ராஜாவின் தாத்தா இலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கண்டி பென்சன் பெற்றவர் பல ஆண்டுகளாக கண்டி பென்சன் பெற்றதற்கான பத்திரம் அவரிடம் இருக்கிறது.
அந்தக் காலத்தில் மன்னர்களின் ஆட்சிப் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதற்கு பிறகு மன்னர் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டாலும் அவர்கள் ராஜபோகமாக வாழ்வதற்காக மாதாந்தம் மானிய தொகையாக மன்னர் குடும்பங்களுக்கு பென்சன் அனுப்பப்படுவது வழமைதான் அதன்படியே கண்டி மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை திரைச் சேரியில் இருந்து இந்தியாவுக்கு  பணம் தொடர்ச்சியாக அனுப்பட்டு வந்த நிலையில் 1964ல் ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்டி பென்சன் முறைமையை அடியோடு நிறுத்தினார்.

“கண்டி பென்சன் இல்லேனாலும் கௌரவமாக வாழ்கிறோம் தொடர்ச்சியாக எமது பாட்டனான கண்ணுசாமி நாயக்கரின் நினைவு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் பரம்பரை என்பதில் பெருமை கொள்கின்றோம்.
கண்டி மன்னர் நினைவு நாளை, அரசு விழாவாக அறிவிக்கும்படி  தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.  
விரைவில் அதற்கான அரசாணை கிடைக்கும்னு எதிர்பார்க்கின்றோம் என்று” என்று தமிழன் நாளிதழுக்கு கண்டி மன்னர் வாரிசு அசோக்ராஜா தெரிவித்தார்.🔴

நன்றி: தமிழன் நாளிதழ்- 05-02-2023

Saturday, February 4, 2023

அகோரிகளின் ஆட்டம் - 1

 

களஆய்வு, படப்பிடிப்பு- ஒளிப்படக் காதலன் ஈஸ்வர்.

இந்து சமயத்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு பெரு நிகழ்வுதான் கும்பமேளா!
இந்தியாவில் லட்சக்கணக்காண மக்கள் ஒன்று கூடும் ஒரு பிரமாண்ட திருவிழாவாக கும்பமேளா நிகழ்வு பார்க்கப்படுகிறது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் இந்த பிரமாண்ட விழா நடைபெறுகிறது.
வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற போது பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களிலும் விழுந்தன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.


இவ் விழாவிற்கான சரியான திகதியை இந்து சோதிட சாத்திரத்தில் சொல்லப்படுவதை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. அதாவது குருபகவான் கும்ப ராசியிலும், சூரியபகவான் மேச ராசியிலும் பிரவேசிக்கின்ற நாளில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இந்த திருவிழா ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய அளவிலும் கொண்டாடப்படுமாம்.
அந்த கொண்டாட்டத்தை ‘அர்த் கும்ப்’ என்று அழைக்கிறார்கள். அரை கும்பமேளா என்பது அதன் அர்த்தம்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா கடந்த மார்ச் முதலாம் திகதியிலிருந்து சித்திரை 14 வரை ஹரித்துவாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பண்டைய நகரமான ஹரித்துவாரில் கங்கை நதியின் ஆற்றுப்படுகையிலே இந்த விழா நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனாலும் ஏறக்குறைய 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்று கும்பமேளா நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளாரக கலந்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த ஈஸ்வர் எம்மிடம் தெரிவித்தார்.



சென்னை நாளிதழ்களில் சுதந்திர புகைப்படக்கலைஞராக பணியாற்றும் ஈஸ்வர் ஒளிப்படக் காதலனின் நீண்டநாள் கனவுகளில் ஒன்றுதானாம் கும்பமேளாவுக்கு செல்வது. அந்தக் கனவு இந்த ஆண்டு நிறைவேறியதில் ஈஸ்வர்  ரொம்பவே மகிழ்ச்சியோடு இருக்கிறார்.

“கும்பமேளாவின் பெரிய ஹைலைட்டான விசயம் அகோரிகளின் வருகைதான். அகோரிகளின் மர்மம் நிறைந்த வாழ்க்கை பதிவுகளை நிறைய வாசித்திருக்கின்றேன். ஆனாலும் அவர்களை நேரில் பார்த்து படம் எடுத்தது ரொம்பவே வித்தியாசமான அனுபவம்தான்.
ஆட்டம், பாட்டம் என்று நிர்வாண அகோரிகள் ரொம்பவே ஜாலியாக இருக்கிறார்கள். கஞ்சா சுருட்டை வாயில் வைத்து அடி வயிறு வரை மூச்சை இழுத்து புகையை வெளிவிடும்  அழகு அலாதியானது. அவர்கள் விடும் கஞ்சா புகையில் அவர்களின் அகோரமான முகமும் மறைந்து விடுகிறது.
அந்த காட்சிகளை எனது கேமராவில் க்ளிக் செய்த போது சில அகோரிகள் இங்கேவா என்னைப் புகைப்படம் எடு என்று கூறி போஸ்சும் கொடுத்து நான் எடுத்த புகைப்படத்தை பார்த்து  கறை படிந்த பற்கள் காட்டி சிரித்தப்படியே, நன்றாக வந்துள்ளது என்று ஆசிர்வதித்தனர்.
அகோரிகள் ஆசீர்வதித்தில் மகிழ்ச்சிதான் என்றாலும், அவர்களின் தோற்றம் எனக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.”
என்று சொல்லி ஈஸ்வர் சிலீர்த்துப் போகின்றார்.

மகா சிவராத்திரிக்கு முந்தைய பத்து நாட்களும் சாதுக்களும்,  அகோரிகளும் ஹரித்துவாரின் வீதிகளில் ஊர்வலமாக சென்று மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார்களாம். தலைமை குரு தேரில் வலம் வரும்போது அவரோடு அகோரிகளும் வீதி உலா வருகிறார்கள்.
சாதுக்கள் மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் போது பக்தர்கள் காணிக்கைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களையும் சாதுக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனாலும் சாதுக்கள் அதனை பெற்றுக் கொள்ளவதில்லை சாதுக்களோடு வரும் உதவியாளர்கள் அவற்றை பெற்று கொள்வதையும் அவதானிக்க முடிக்கிறதாம்.

சென்னையிலிருந்து ஹரித்துவாருக்கு நேரிடையாக ரயில் சேவை இல்லை. அதனால் சென்னையிலிருந்து தில்லி நிஜாமுதீனுக்கு ரயிலில் சென்று அங்கிருந்து ஹரித்துவாருக்கு மற்றொரு ரயிலில் பயணிக்க வேண்டும்.
கோரோனா மெடிக்கல் ரிசால்ட் பெற்றவர்கள் மட்டுமே ஹரித்துவாருக்கு பயணிக்க முடியும் எனவே நானும் அதற்கு தயாராக அனைத்து மருத்துவ சான்றிதழ்களையும் முறையாக எடுத்துக் கொண்டு எனது பயணத்தை ஆரம்பித்தேன்.
“கடந்த மார்ச் 7ம் திகதி ஞாயிறு இரவு 7.30க்கு எமது ஹரித்துவார் பயணம் சென்னையிலிருந்து தொடங்கி ஒன்பதாம் திகதி காலை 8 மணிக்கு ஹரித்துவாரை சென்றடைந்தோம்.

இந்தியாவின் மிகவும் பழமையான நகாரங்களில் ஒன்றுதான் ஹரித்துவார். அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து விட்டு மஹா சிவராத்திரியான 11ம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி குளித்துவிட்டு அகோரிகளும், சாதுக்களும் புனித நீராடும் கங்கை நதிக்கரையில் அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றேன். அந்த அதிகாலையிலும் அத்தனை கூட்டம் அந்த கங்கை ஆற்றின் பாலத்தின் மேலிருந்து பார்க்கையில் கட்டெறும்பு கூட்டம் ஊர்ந்து செல்வது போல் தோன்றியது அவ்வளவு கூட்டம்.
இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி குரு சங்கராச்சாரியார் இந்துக்களையும், அவர்களது கோயில்களையும் காக்க வேண்டி ஏழுவகையான சாதுக்கள் சபைகளை அமைத்தார். அதன் பிறகு அப்பட்டியலில் மேலும் ஆறு சபைகள் இணைக்கப்பட மொத்தம் 13 வகையான சபைகள் உருவானதாக சொல்லப்படுகிறது.


கோவிட் நேரம் என்பதால் அஹாடா என்ற இடத்தில் ஒரு திறந்த வெளியில் சபைகளைச் சேர்ந்த சாதுக்கள் தங்குவதற்காக சமூக இடைவெளியுடன் கூடாரங்களை இந்திய அரசு அமைத்து கொடுத்திருந்தது.  அந்த கூடாரங்களில் அகோரிகள் குழுக்களாக தங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்த கூடாரத்துக்குள் கஞ்சா போதையிலேயே அகோரிகள் இருந்தார்கள், சிவனின் நினைவாக இருப்பதற்காகவே அவர்கள் கஞ்சாவை புகைப்பதாக ஒரு அகோரி அவருக்கு தெரிந்து உடைந்த ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார்.
அகோரிகளில் பெரும்பாலும் இந்தி மொழி பேசுகிற அகோரிகளே அதிகமாக இருந்தார்கள், தமிழ் அகோரிகள் யாராவது இருப்பார்களா என்று அகோரிகள் கூட்டத்திற்குள் புகுந்து தேடிப் பார்த்தேன் மருந்துக்கு கூட தமிழர்கள் அதில் இல்லை.
நாம் அறிந்து நான் கடவுள் ஆர்யா மட்டும்தான் தமிழ் அகோரியா இருக்கணும், என்று சிரித்துவிட்டு ஈஸ்வர் தொடர்ந்தார்.
“அகோரிகள் பெரும்பாலும் இந்தி, உருது, உள்ளிட்ட அவர்களின் தாய் மொழியிலேயே பேசுவதால் அவர்களிடம் எந்த தகவலையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
நாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ அல்லது ஒரு சுப நிகழ்ச்சிக்கு செல்லும்போது எப்படி உற்சாகமாக புறப்பட தாயாராவோமோ அதைப் போல் சாதுக்களும் அவர்களின் குருமார்களும் புனித நீராட தயாராகி கொண்டிருந்தனர் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது மணி காலை 7.30  அப்போது ஒரு தலைமை சாது அந்த இடத்திற்கு வந்து அனைவரிடமும் ‘எல்லோரும் தயாராகுங்கள் கங்கா நதிக் கரைக்கு புனித நீராட செல்லலாம் என்று கூறியதும் சாதுக்களும் அகோரிகளும் பெரும் ஆரவாரத்துடன் கங்கா நதிக் கரையை நோக்கிய உற்சாகமாக நடக்கத் தொடங்கினார்கள்.
குருமார்கள் அலங்கரித்த குதிரை வண்டியில் அமர்ந்து பயணித்தார்கள்.
பொது மக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி இருந்தனர் அவர்களை காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மக்கள் சாதுக்களின் ஊர்வலத்தைக்காண ஆவலுடன் ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் இருந்தனர்.
சரியாக காலை எட்டு பதினைந்துக்கு ஒரு ஹெலிகாப்டர் வானில் நான்கு முறை பறந்து லட்சக்கணக்கில் கூடியிருந்த சாதுக்கள் மீது மலர் தூவி விட்டு சென்றது.


காவல்துறையினர் ராணுவ வீரர்கள் மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்போடு கங்கா ஆரத்தி நடைபெறும் அர்கி பொடி எனும் இந்த இடத்திற்கு அதாவது இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த ஊர்வலம் நடந்தது.
கங்கை ஆற்றினை நெருங்கிய உடன் குருமார்கள் கங்கை ஆற்றின் படியில்  நிர்வான சாதுக்கள் சூழ்ந்து நிற்க கங்கை ஆற்றிற்கு பூஜை செய்து ஒரே நேரத்தில் அனைவரும் புனித நீராடினர்.
சாதுக்கள் நீராடும் இடத்திற்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கங்கையில் சாதுக்களின் நீராடல் காட்சிகளை விதவிதமான கோணத்தில் எனது கேமராவில் க்ளிக் செய்து கொண்டேன்.
நீராடல் முடிந்தது சாதுக்களும், அகோரிகளும் சிவனின் ஆலயத்தை நோக்கி ஆரவார ஆட்டத்துடன் நடக்க ஆரம்பித்தார்கள்…

நிர்வாண ஆட்டம் தொடரும்…