அப்பமும் கருவாட்டுக்கறியும் சிவாஜிக்குக் கொடுக்காதே! என்றார் எம். ஜி. ஆர்.
சிவாஜி நினைவுகளில் மூழ்கும் சிவாஜி மௌலானாவுடன் சில நிமிடங்கள்....
-மணி ஸ்ரீகாந்தன்
"சிவாஜி பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...."
இது சினிமாவில் ரஜினி பேசிய வசனம். உண்மையில் அந்தப் பெயருக்கு அப்படி ஒரு மகத்தான சக்தி இருக்கத்தான் செய்கிறது.
"ஏண்டா படுவா.... என்ன கிண்டலா?" என்று சிவாஜியின் செல்லக் கோபத்திற்கு ஆளானவர் நமது சிவாஜி மௌலானா. இருவருக்கும் இடையே அப்படி ஒரு இறுக்கம், நெருக்கம்.
![]() |
| மௌலானாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு அலுவல் பார்ப்பது சிவாஜியின் வழக்கம் |
"ஒரு நாளைக்கு சிவாஜி சுமார் 40 சிகரெட்டுகள் பிடிப்பார். ஆனால் நான் முப்பதைத் தாண்ட மாட்டேன். அன்னை இல்லத்தில் அவரோடு சேர்ந்து சிகரெட்டை பிடிக்கும் போது... அவரை என்னால் வெல்ல முடியவில்லை" என்று சொல்லும் மௌலானாவின் பேச்சில், உடல் அசைவில், உருவத்தில் சிவாஜி தெரிகிறார். "நான் ஒரு தடவை ராம்குமாரிடம் எனக்கு சிவாஜி வசந்தமாளிகை படத்தில் பயன்படுத்திய 'விக்' வேண்டும் என்று கேட்டபோது,
"நீங்கள் எப்போதும் சிவாஜியைப் போல தானே காட்சியளிக்கிறீர்கள்? 'விக்' வைத்துதான் சிவாஜியாக நீங்கள் மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே" என்று ராம்குமார் சொன்னாராம். இந்த மௌலானாவை நீங்கள் நேரில் பார்த்தீர்களானால் சிவாஜியைப் பார்த்தமாதிரியே இருக்கும்.
![]() |
| .சிவாஜி வீட்டு விருந்தில் எம்.ஜி.ஆர் |
"அது எம். ஜி. ஆர் புகழை தொட்டுக் கொண்டிருந்த காலப்பகுதி. 1943 கள் என்று தான் சிவாஜி சொன்னார். சென்னை சென்றல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒற்றைவாடை தியேட்டருக்கு பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் குடியிருந்தார். அந்த வீட்டிற்கு சிவாஜியும் காக்கா ராதாகிருஷ்ணனும் அடிக்கடி போய் வருவார்களாம். அந்த வீட்டில்தான் தினமும் சிவாஜிக்கு சாப்பாடு. அதில் ஒரு விஷேசம் என்னவென்றால், எம். ஜி. ஆர் தன் தாயிடம் 'பசிக்குதும்மா... சாப்பாடு போடுங்கம்மா...' என்று கேட்டால் அகப்பையை கையில் பிடித்தபடி, "சித்த இருடா.... கணேசன் வந்திடட்டும்" என்று சொல்வாராம் தாயார் சத்யா. எம். ஜி. ஆரும் தானும் ஒரே மேஜையில் அமர்ந்து உணவருந்திய அந்தக் காலத்தை நினைத்து பெருமூச்சுவிடும் நடிகர் திலகம் மற்றொரு முக்கிய சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டாராம்.
![]() |
| தாதா பார்கே விருது பெற்ற சிவாஜியை வாழ்த்தச் சென்றிருந்த மௌலானா |
"அண்ணே உங்க உடம்புக்கு என்ன ஆச்சு சொல்லுங்கண்ணே... டாக்டர் என்ன சொன்னார்?" என்று சிவாஜி தழுதழுத்த குரலில் கேட்டபோது எம். ஜி. ஆரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, சிவாஜியும், எம். ஜி. ஆரும் கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டார்களாம். அங்கே எம். ஜி. ஆருக்கு உதவியாக இருந்த டொக்டர் ராமமூர்த்தியும், பழனிசாமியும் இருவரையும் பிரித்தெடுத்து ஆறுதல் சொன்னார்களாம். அதே மருத்துவமனையில் பக்கத்துக் கட்டிலில் எம். ஜி. ஆரின் துணைவியார் வி. என். ஜானகியும் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அவரோடு சிவாஜியின் துணைவியார் கண்ணீர் மல்க பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது கமலாவை அழைத்த எம். ஜி. ஆர்,
"அவன் ரொம்பவும் முன் கோபக்காரன். ஆப்பமும், கருவாட்டுக்குழம்பும்தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா இனி அவனுக்கு அதைக் கொடுக்காதே. அதை சாப்பிட்டுத்தான் என் உடம்பு கெட்டுப்போச்சு!" என்று அறிவுரை சொன்னாராம் கமலா அம்மாளுக்கு.
அதன்பிறகு சில மாதங்களில் சென்னை வந்து சேர்ந்தார் எம். ஜி. ஆர். அதன் பின்னர் எம். ஜி. ஆரை ஒரு பொதுக் கூட்டத்தில் அன்றைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனோடு சிவாஜி பார்த்தாராம். சிவாஜியைக் கண்ட எம். ஜி. ஆர் மேடைக்கு வந்து தம் அருகில் அமரும்படி அழைக்க "வேணாம்ணே நான் பார்வையாளர்கள் பகுதியிலேயே உட்காருகிறேன்" என்று சிவாஜி மறுக்க, எம். ஜி. ஆர் சிவாஜியை வலுக்கட்டாயமாக அழைத்து தம் அருகில் அமரவைத்தாராம்.
அந்த இடத்தில் குளிர் ரொம்பவும் அதிகமாக இருந்ததால் ஒரு போலிஸ்காரர் ஒரு போர்வையை எடுத்து வந்து எம். ஜி. ஆருக்கு போர்த்த முற்பட்ட போது எம். ஜி. ஆர் அதைத் தட்டி விட்டிருக்கிறார். சிவாஜி இருக்கும் போது தனக்கு மட்டும் போர்வை எதற்கு என்று நினைத்தாரோ அல்லது அதை ஒரு தொந்தரவாக நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால் சிவாஜி அந்த போலிஸ்காரரை அழைத்து அவர் கையில் இருந்த போர்வையை வாங்கி எனக்கே குளிரா இருக்கும்போது நீங்க எப்படி குளிர்தாங்குவீங்க என்று அன்பாகச் சொல்லியபடியே போர்வையை எம். ஜி. ஆருக்கு போர்த்தி விட்டிருக்கிறார். பாசத்துடன் சிவாஜியின் கரங்களைப் பற்றிய எம். ஜி. ஆர், "மறுபடியும் அடுத்தவாரம் ஜனாதிபதியோட ஒரு விழா இருக்கு... அது முடிஞ்சு ஒரு நாலு நாளில் நீ என் வீட்டுக்கு வா. உனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு தரப்போகிறேன்னு" சொல்லியிருக்கிறார் எம். ஜி. ஆர்.
சிவாஜியும் அந்த நாளுக்காக காத்திருந்திருக்கிறார். ஆனால் அவர் சொன்ன அந்த நாள் நெருங்கிய சமயம் எம். ஜி. ஆரின் நேரத்தை இறைவன் முடித்து விட்டானாம். எம். ஜி. ஆர் தனக்கு என்ன தர இருந்தார் என்று அறியாமலேயே சிவாஜி தவித்துக் கொண்டிருந்தாராம். பின்னர் ஜானகியை சந்தித்து சிவாஜி ஆறுதல் சொன்னபோது,
"அண்ணே... ஆப்பமும், கருவாட்டுக்குழம்பும் செய்து வை.. அவன் வருவான். நானும் அவனும் ஒண்ணா சாப்பிடனும் என்று சொல்லிட்டு இருந்தாரு" என்று சொல்லி ஜானகி கதறி அழுதாராம்!
இவ்வாறு மக்கள் திலகத்திற்கும், நடிகர் திலகத்திற்கும் இடையே இருந்த நட்பின் நெருக்கத்தை உணர்ச்சியுடன் சொல்லி முடித்தார் சிவாஜி மௌலானா.
சிவாஜியை ஒரு தசாவதாணி என்பதற்கும் ஒரு சம்பவத்தை எடுத்துச் சொன்னார் மௌலானா.
"ஒரு நாள் அன்னை இல்லத்தில் நானும் சிவாஜியும் அருகருகே அமர்ந்திருந்தோம். அவரை சந்திக்க சில பிரமுகர்கள் வந்திருந்தார்கள். சிவாஜி அவர்கள் பக்கம் முகத்தைத் திருப்பி பேச ஆரம்பித்தவர் தொடர்ச்சியாக அரைமணி நேரத்திற்கு மேலாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் தனிமைப்படுத்தப்பட்டதையும் சிவாஜி என்னை மறந்து விட்டார் என்பதையும் உணர்ந்துகொண்டேன். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளியே போய் ஒரு 'தம்' அடிக்கலாம் என்று கதிரையில் இருந்து மெல்ல எழும்பத் தயாரானபோது சிவாஜியின் கரங்கள் என் கரத்தைப் பற்றிப் பிடித்தது. என் பக்கம் முகத்தை திருப்பியவர் 'ஏண்டா படவா வெளியே தம் அடிக்கப் போறீயா? நான் உன்ன மறக்கல, இரு' என்றார். நான் ஆடிப்போனேன்.
அப்புறம் ஒரு நாள் சிவாஜி வீட்டில் நடந்த ஒரு விசேசத்திற்கு நான் சென்றிருந்தேன். என்னுடன் அலவி மௌலானாவின் மகன் நஜீப்பும் வந்தார். சிவாஜி வீட்டில் தடல்புடலாக விஷேசம் களைகட்டிக் கொண்டிருந்தது. ஆனால் சிவாஜி அங்கே இல்லை. மாடியில் இருப்பதாக கமலாம்மாள் என்னிடம் சொன்னார். பிறகு என்னிடம் வந்த கமலாம்மாள், "சொந்தக்காரங்கள் எல்லாம் வந்து இருக்காங்க. அவங்கள அழைச்சி சாப்பிட சொல்லணும். அவரை அழைச்சிட்டு வாங்க" என்று கேட்டுக்கொண்டார். நான் மாடிக்குச் சென்றேன். சிவாஜி மது அருந்திக் கொண்டிருந்தார். அவரிடம் விசயத்தைச் சொன்னேன். "ஏன் கமலா கூப்பிட்டா வந்து சப்பிட மாட்டாங்களா....? எல்லாம் சாப்பிடுவாங்க. நீயும் போய் சாப்பிடு" என்று அவர் கட்டளை போட்டார். மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல நானும் நஜீப்பும் சாப்பிட அமர்ந்தோம். சில நிமிடங்களில் சிவாஜி கீழே இறங்கி நாங்கள் இருக்கும் மேசையை நோக்கி வந்தார். வந்தவர் என்னை சுட்டிக் காட்டி "இவரு யாரு தெரியுமா? என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட்" என்று என் தோளில் தட்டி எனக்கு சாப்பாட்டைப் பரிமாறியவர் பிறகு அந்த இடத்தை விட்டும் அகன்றார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த விஷேத்தில் சிவாஜி எனக்கு பெரிய கௌரவத்தைக் கொடுத்து என்னை மகிழ்ச்சிப்படுத்தினார். ஆனால் நான் அவரை ஒரு விடயத்தில் கோபப்படுத்தி விட்டேன் என்ற மௌலானா ஒரு சிகரெட்டை எடுத்து சிவாஜி பாணியில் இரண்டு தம் அடித்து விட்டு பேசத் தொடங்கினார்.
"அப்போ அவருக்கு தாதா சாஹேப் விருது வழங்கப்பட்டிருந்த நேரம். என்னால் அவரைப் பார்க்கப் போக முடியவில்லை. எனவே அவரோடு தொலைபேசியில் பேசி வாழ்த்தலாம் என்று அழைப்பை எடுத்தேன். அன்னை இல்லத்திற்கு அழைப்பு எடுத்தால் அதை கமலாம்மாள்தான் எடுப்பார். ஆனால் அன்று சிவாஜியே அழைப்பை எடுத்தார்.
'ஹலோ! என்றவர். என் குரலை வைத்து நான் யார் என்பதை புரிந்துகொண்டார். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே' என்றேன்.
"ஏன் நீங்க அவ்ளோ பெரிய ஆளாகிவிட்டீங்களா? போனில்தான் வாழ்த்துவீர்களா, நேரில் வரமாட்டீர்களா?" என்றார் கரகரத்த குரலில். நான் பதில் சொல்வதற்கு முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது. சிவாஜிக்கு என்மீது கோபம் வந்து விட்டது என்பதை நான் உணர்ந்து விட்டேன்.
உடனே சென்னையில் இருந்த இலங்கை நெய்னாருக்கு சொல்லி அவருக்கு ஒரு மலர்க் கிரீடமும் மாலையும் ரெடி பண்ண சொல்லிட்டு அடுத்த நாளே சென்னைக்குப் பறந்தேன். நெய்னாரையும் அழைத்துக்கொண்டு அன்னை இல்லத்தில் நுழைந்தேன். அவர் ஒரு நாட்காலியில் அமர்ந்திருந்தார். அவரை மனமார வாழ்த்திவிட்டு அண்ணை எழும்புங்க என்றேன். என்னத்திற்கு? என்றார்.
"இல்லண்ணே உங்களுக்கு கௌரவம் பண்ணனும்" என்றேன்.
"எனக்கு கௌரவம் பண்ணப் போறீயா? ஒன்றும் வேணாம்.. நீயே வந்துவிட்டியே அப்புறம் எதற்கு கௌரவம்?" என்று மறுத்தார்.
"அப்போ நான் வாங்கிட்டு வந்த பொன்னாடை கிரீடத்தை வீட்டுக்கு திரும்ப எடுத்திட்டுப் போகச் சொல்றீங்களா?" என்று சொல்லி அவரை எழுப்பி கௌரவம் செய்தேன்" என்று கூறி சிவாஜியுடனான தமது கடந்த கால நினைவுகளில் மௌலானா மூழ்கிப்போனார்.






No comments:
Post a Comment