எட்னா, சுமனாவதி நினைவுகளில் கிறங்கிப்போன ஜெயபாலன்
மணி ஸ்ரீகாந்தன்
அது உச்சி வெயில் சுட்டெரிக்கும் பகல் ஒரு மணி. களுத்துறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மத்துகமை புனித மரியாள் கல்லூரி அருகே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அங்கே கல்வி கற்கும் 540 மாணவ மாணவிகளும் வீடு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் நாங்கள் ஒரு கடா மீசைக்காரருடன் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தோம். நாங்கள் மீசையை முறுக்கியபடி வந்தவருடன் பள்ளி வாசலடியை நெருங்கியதுமே மாணவர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தம் சட்டென ஒடுங்கியது. ஒரு சில மாணவர்கள் கடா மீசைக்காரரை அடையாளம் கண்டு கொண்டு பரபரத்தனர்.
![]() |
| சுமனா ஊருக்குப் போகும் பாதையோரமாக |
பாடசாலை அதிபர் எம். இஸட். எம். வசீர், சக ஆசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் ஆடுகளம் ஜெயபாலனுக்கு வணக்கம் செலுத்தி பள்ளிக் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவில் தேசிய விருது பெற்ற ஜெயபாலன், மத்துகமை சென் மேரிஸ் பாடசாலையில் பழைய மாணவர். அதனால் தான் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் திடீர் விசிட். அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.
ஜெயபாலனின் வருகையை அடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை கௌரவிக்க உயர் வகுப்பு மாணவர்களை அழைத்து கலந்துரையாடலை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் பள்ளி மாணவர்களோடு பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்வை ஆசிரியர் எஸ். கமல் தொகுத்து வழங்கினார் பள்ளி மாணவன் எஸ். டிலான் ஜெயபாலன் பற்றி எழுதிய கவிதையை வாசித்தார்.
நிகழ்வில் ஜெயபாலன் பேசும் போது தாம் படித்த நாட்களில் தன்னோடு படித்தவர்களில் சிலரை ஞாபகப்படுத்தினார். அவர்களில் பலர் இறந்து விட்டதாக பள்ளி மாணவர்கள் கூறினார்கள். குறிப்பாக கலேவத்தை எஸ்டேட்டில் இருந்து வந்த ஜெயமங்களம் இறந்து விட்டதாகவும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் வவுனியாவுக்கு சென்று விட்டதாகவும் சொன்ன போது ஜெயபாலனின் முகத்தில் ஒரு ஏக்கம் தெரிந்தது. 'அப்போது மத்துகமையில் கடை வைத்திருந்த கிருபாகரன்...' என்றதும் அவரும் உயிரோடு இல்லை என்ற பதில் வந்தது.
காலம் ஒரு பரம்பரையை திண்று வருகிறது என்பதை நினைத்து பாலன் பெருமூச்சு விட்டார். என்னோடு படித்தவர்களை பார்க்க வந்தேன். அவர்களை காண முடியவில்லை, ஆனால் நான் தேடி வந்தவர்களின் உருவங்கள் இந்த பிள்ளைகளின் முகங்களில் தெரிகிறது. அவர்களின் சந்ததிகள் தானே இவர்கள் என்று மனதை ஆறுதல்படுத்திக் கொண்ட அவர் பாடசாலை பிள்ளைகள் சிலரோடு பள்ளி மைதானம் நோக்கி நடந்தார்; "அதோ தெரிகிறதே அந்த காட்டுப் பகுதியில்தான் நான் என் நண்பர்களோடு சென்று திருட்டுத்தனமாக மங்கூஸ் பறித்து வருவேன்" என்று ஜெயபாலன் சுட்டிக்காட்டிய இடத்தை பட்டமுள்ள கந்த என்று இப்போது அழைக்கிறார்கள். அங்கே மங்கூஸ் மரங்கள் இப்போதும் இருப்பதாக மாணவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
"அப்போது இந்த ஸ்கூல் வளாகத்திற்குள் சாரைப் பாம்புகள் வரும். அதன் வாலை சிங்கள மாணவர்கள் பிடித்து சுழற்றி வீசி எறிவார்கள். எனக்கு அது ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது" என்று ஜெயபாலன் சொல்வதை இடைமறித்த ஒரு மாணவி, "நீங்கள் பாம்புக்கு பயமா சார்?" என்றாள்.
"நான் பயமில்ல... ஆனா பாம்மை கண்டால் ஓடிடுவேன்" என்றார். இவரு அட்டைக்கத்தி ஹீரோடா என்று ஒரு மாணவன் சொல்ல.. மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.
"சார் இப்படி கம்பீரமா மீசை வச்சிருக்கீங்களே எப்படி?" என்று ஒரு மாணவி கேட்க,
"அதுவா நான் இவங்கள மாதிரி சின்னப் பையன் கிடையாது.. நான் ஆண்புள்ள சிங்கம்" என்றபடி மீசையை முறுக்கியவரிடம், "அப்போ உங்களுக்கு என்ன வயசு?" என்று அவரை நோக்கி இன்னொரு கேள்வி பறந்தது.
"சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.." என்று தமது கவிதை பாணியில் பதிலளித்து சமாளித்தார் ஜெயபாலன்.
"உங்க முகத்தில் ஏதோ கருப்பா மச்சம் மாதிரி..." என்று ஒரு மாணவி ஆள் காட்டி விரலை நீட்டினாள்.
![]() |
| அதிபர் மற்றும் ஆசிரியர்களோடு ஜெயபாலன் |
"என் பள்ளியில் கால் வைத்து மாணவ மாணவிகளோடு சிரித்து பேசிய அந்த நிமிடங்களில் என் வயசு குறைந்து பள்ளி மாணவனாகவே மாறிப்போனேன்... எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத ஒரு சுகமான அனுபவம் அது... அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் உலாவந்த பெரிய வகுப்பு மாணவி பெயர் எட்னா அவள் பந்து விளையாட மைதானத்திற்குள் வரும் வரை நான் என் வயது மாணவர்களோடுதான் விளையாடிக்கொண்டிருப்பேன்.
அவள் வந்ததும் நான் பெரிய வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து விளையாட முயற்சி செய்வேன். எட்னா என்னைக் கவனிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அப்படி ஒரு நாள் அவள் டீமோடு சேர்ந்து நான் விளையாட முனைந்த போது அவர்கள் அடித்த பந்து என் தலையில் பட்டு கீழே விழுந்தேன். ஆனால் எட்னா இப்போ எங்கே என்றே தெரியவில்லை என்று பெருமூச்சு விட்டு கண்களை மூடிக்கொண்டார் பாலன்.
தான் வசித்த கல்வெல வெளிகொடல என்ற இடத்தில் இருந்த சுமனாவதியையும் ஞாபகப்படுத்திக் கொண்டார்.
"சித்திரை வந்து விட்டால் சுமனாவதி வீட்டில் ஊஞ்சல் கட்டி மேளம் அடிக்க ஆரம்பித்து விடுவார்களாம். நானும் அவளோடு சேர்ந்து மேளம் வாசித்திருக்கிறேன் ஒரு நாள் ஊஞ்சல் ஆடிய சுமனா உனக்கு ஊஞ்சல் ஆடத் தெரியுமா? என்று கேட்டாள். அவள் கேட்டு விட்டாலே என்று நானும் ஊஞ்சலில் ஏறி நின்று ஆடி எனக்கும் முடியும் என்று சுமனாவதிக்கு நான் ஜாடை காட்டினேன்.








No comments:
Post a Comment