Saturday, September 14, 2019

வியக்கத்தக்க வேலூர்

மணி ஸ்ரீகாந்தன்.

இந்திய மாநிலங்களில் தமிழகம் மிகவும் தொன்மையான பெருநிலமாக இருந்து வருகிறது. இதில் அமையப்பெற்றுள்ள பல ஊர்கள் வரலாற்று சிறப்புப் பெற்ற இடங்களாக நமது புராணங்களில் பதியப்பெற்றுள்ளது.
இதில் சில நகரங்கள் அழிந்து விட்டாலும் அதன் எச்சங்கள் இன்றும் நம்மை மிரட்டும் தோரணையோடு நிமிர்ந்து நிற்கிறது.

பண்டைய நகரங்களில் ஒன்றான நமது காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் நகரம்தான் வேலூர் தமிழக நகரங்களில் இந்த வரலாற்று மண் பல ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

அஷ்ரப் அலி

வேலூரை சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு மலைகள் தெரிகிறது. அதோடு வேலூரின் கம்பீரத்துக்கு இன்னொரு சாட்சியாக இருப்பது வேலூர் கோட்டை இந்த வரலாற்று மண்ணைப் பற்றி சுமார் நாற்பது ஆண்டுகள் ஆராச்சி செய்திருப்பவர்தான் வரலாற்று ஆர்வலர் அஷ்ரப் அலி திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்ட ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு அதிகாரி.
வரலாற்று ஆர்வலரான இவர் மலையேறுதல் மற்றும் நடைப்பயணங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் தேடல்களின் பயனாக ‘வியக்கத்தக்க வேலூர்’என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியாகும் நெஷனல் ஜியோகிராபி நூலுக்கு நிகராக படைத்திருக்கிறார்.
தமிழக வரலாற்றில் ஒரு ஊரைப்பற்றிய ஆவண படைப்பாக இந்த நூல் முதன் முதலாக வெளியாகி இருக்கிறது. என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம்.


“நான் இருபது வயது வரை திருநெல்வேலியில்தான் இருந்தேன்.திருச்செந்தூருக்கு பக்கத்திலிருக்கும் உடன்குடிதான் என் சொந்த ஊர். எனக்கு இந்த வரலாற்று தேடல்களின் மீதான ஆர்வத்துக்கு காரணம் ஒருநாள் நான் என் தந்தையோடு பள்ளிக்கு பஸ்சில் செல்லும் போது ஆதிச்சநல்லூரில் பாதையை அகலமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
அப்போது பாதையின் ஒரு பக்கத்தில் வெட்டப்பட்ட மண் மேட்டில் பழங்காலத்தில்  சவங்களை அடக்கம் செய்யும் தாழிகளை கண்டேன். எனக்கு அவைகளை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை, என் தந்தையிடம் என் ஆவலை சொல்ல அவரும் நானும் அந்த இடத்திலேயே பஸ்சிலிருந்து இறங்கிச் சென்று பார்த்தோம்.
அதன் பிறகு நான் வேலூருக்கு பணியின் நிமித்தமாக வந்துவிட்டப் பிறகு ஒருநாள் சென்னை சென்றிருந்த வேளையில் அங்குள்ள மியூசியத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளை கண்டேன். அது நான் சிறுவனாக இருந்த காலத்தில் கண்டதுதான் என்பதை புரிந்து கொண்டேன்.

அதன் பிறகு எனக்கு வரலாறுகளை தேடும் ஆர்வம் என்னுள் வளரத் தொடங்கியது. என்று சொல்லும் அஷாப் அலி வேலூர் விருதம்பட்டில் வசித்து வருகிறார்.
இவரின் குடும்பம் ஒரு புகழ்பெற்ற ஓவிய குடும்பம்.   ‘அப்பாவு சித்திரக்காரத் தெரு’ என்று பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தெருவுக்கு அவரின் தாத்தாவின் பெயரை சூட்டியிருக்கியிருக்கிறார்கள் என்றால் சும்மாவா!
தினத்தந்தியில் கருத்துப் படங்களை வரையும் நிமல் இவரின் சகோதரர்தான். என்பதும் கூடுதல் ஆச்சர்யம்.

கூர்ம மலை

“வேலூர் மிகவும் பழமையான ஊர் கற்கால ஆதி மனிதர்கள் இங்கே வாழ்ந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் இங்கே கிடைத்திருக்கிறது. மக்கள் வாழும் இடங்களைதான் ஊர் என்று அழைக்கிறார்கள். வேலூர் புராதான காலத்திலிருந்தே மக்கள் வாழும் உறைவிடமாக இருந்திருக்க வேண்டும்.
வரலாற்றின்படி கி.பி 965ல் கன்னரத்தேவன் என்னும் இராட்டிரக்கூட மன்னனது  கல்வெட்டில் ‘வேலூர்பாடி’என்று குறிப்பிட்டிருக்கிறான். வேலூரில் உள்ள பகவதி மலையில் உள்ள ஒரு கல்வெட்டில் இந்த பெயர் ஒரு பட்டயமாக எழுதப்பட்டுள்ளது.

பினிக்ஸ் என்ற எகிப்திய வரலாற்று ஆய்வாளர் அர்கோடாஸ் என்று ஆற்காட்டை குறிப்பிடுகிறான். அவனின் கூற்றின்படி வேலூரில் குரும்பர்கள் ஆடுமேய்ப்பவர்கள் அதிகம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

வேலூரில் பெரிய கோட்டைகள் 20 இருக்கிறது. செஞ்சியிலிருந்து திருப்பத்தூர் வரையிலும் 200 கோட்டைகள் இருக்கிறது. அவற்றில் 130 கோட்டைகளை நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.
முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வேலூர் உருவானதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதோடு 2ம் நூற்றாண்டில் சமணர்கள் வேலூருக்கு வருகிறார்கள். இவர்கள் வள்ளிமலை, திருமலை உள்ளிட்ட மலைப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்ந்த குகைகள், சமணர் படுக்கைகள் பல இன்றும் இருக்கிறது. சமண ஆலயங்கள் பல இந்து ஆலயங்களாக மாறி இருப்பதோடு சமணர்களின் கல்வெட்டுகள் பலவற்றை சாந்து பூசி மறைத்து விட்டார்கள்.

அப்புக்கல்

வேலூர் திமிரி,கரடிக்குடி சமவெளிப் பகுதியில் கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள் பலவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.”ன்னு சொல்லும் அஷ்ரப் அலிக்கு மலையேற்றம்  செய்வது மிகவும் பிடித்த விடயமாம்.
“எனக்கு வேலூர் மலைகளில் புதையல் தேடும் ஒரு நண்பரின் நட்பு கிடைத்தது. அவரின் துணையோடுதான் வேலூர் மலைகளைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். தமிழக ஊர்களில் வேலூரில்தான் அதிகபட்ச வெப்பம் நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் வேலூரைச் சுற்றியுள்ள மலைகளில் கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகிறது.
முக்கியமாக வேலூரின் மலைகளில் எல்லாம் இரும்பு தாதுக்கள் இருக்கிறது. அவைகள் வெப்பத்தை உள்வாங்கி வெளியிடுவதால் அதிகபட்ச வெப்பம் ஏற்படுகிறது.

வேலூர் மலைகளில் தங்கம், வைரம், சில்வர் உள்ளிட்ட கனிமங்கள் கிடைத்திருக்கிறது. இன்றும்  தங்க கனிமங்களின் படுகைகளை சில இடங்களில் இருக்கிறது.”னு சொல்லும் அஷ்ரப் அலி தங்கம் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை விபரித்தார்.
“தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்துக்கு அடுத்ததாக சோழர்களின் இன்னொரு தலைநகராகவும் சோழர்கள் மறைவாக வாழும் இடமாகவும் வேலூர் சோழவரம் இருந்திருக்கிறது. இப்போது அந்த ஊர் ஒரு சிற்றூராக மாறிப்போயிருக்கிறது.

எரிமலை குழம்பால் 
உருவான குரங்குமலை

ஒரு முறை சோழவரம் கோயிலுக்கு எனது நண்பருடன் சென்றிருந்தேன். அந்தக் கோயிலுக்கருகில் இருந்த பாறைகளில் நிறைய கல்வெட்டுகள் இருந்தது. அவைகளை ஒவ்வென்றாக படித்துப் பார்த்தபோது,  ‘கூர்மம் மலையில் பொக்கிசம்’ என்று ஒரு கல்வெட்டில் இருந்தது அது எமக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ‘அப்போ வேலூரில் இருக்கும் கூர்மையான ஏதோ ஒரு மலையில் பொக்கிஷம் இருக்கும்’னு நினைச்சு கூர்மையான மலைகளில் ஏறி அந்த பொக்கிஷத்தை தேடத் தொடங்கினோம் வேலூரில் இருந்த பாதி மலைகளில் ஏறி களைத்துப்போன போதுதான் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டோம். நாம் கல்வெட்டில் படித்து புரிந்து கொண்டதில் ஏதோ தவறு இருப்பது மூளைக்கு உறைத்தது. பிறகு தமிழ் அகராதியின் துணையோடு கூர்மம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடியபோது ‘ஆமை’ என்று பதில் கிடைத்தது. உடனே மீண்டும் சோழவரத்துக்கு சென்று அந்த பாறையில் உள்ள வார்த்தையை படித்துவிட்டு திரும்பி பார்த்தபோது தூரத்தில் ஆமை ஒன்று மலை உச்சியில் படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் ஒரு மலைத் தெரிந்து. ‘அப்போ அதுதான் கூர்மம் மலை’ (ஆமை மலை) என்பதை புரிந்து கொண்டு
அந்த மலையில் உச்சிக்கு ஏறினோம். அந்த மலை உச்சியில் உள்ள பாறைகளில் ஒரு பளபளப்பு தென்னபட்டது. ஆனால் புதையல் எதுவும் கிடைக்கவில்லை. எமக்கு முன்னே அங்கே மனிதர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே மண்ணைத் தோண்டியதற்கான தடயங்கள் தெரிந்தது.

கனிம கற்கள்

நாம் அந்த பாறை படிவங்களில் இருந்த பளபளப்பு கற்கள் சிலவற்றை உடைத்து எடுத்து வந்து அவற்றை சயனைட் உதவியுடன் பரிசோதித்ததில் சுத்தமான தங்கத் துகள்கள் கிடைத்தது.
இதேப் போன்று வேலூர் கண்ணமங்களத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையில் உள்ள கோட்டையில் தங்கத்தை உருக்கியதற்கான சுண்ணாம்பிலான கொப்பரைகள் இருக்கிறது. இங்கேதான் தங்க காசுகள் தயாரித்து இருக்கிறார்கள்.

இப்படி பல ஆச்சர்யங்களை கொண்டிருக்கும் இந்த ஊரில் சில பழங்கால பெயர்கள் புதுமையாக இருக்கிறது.
ஊசூர் பக்கமாக அப்புக்கல் என்று ஒரு கிராமம் இருக்கிறது. இங்கே உள்ள மலையில் கற்கள் பறவைகள் உள்ளிட்ட விநோதமான வடிவங்களில் ஒட்டி வைக்கப்பட்டது போல இருக்கிறது. அந்தக்காலத்தில்  அப்பி வைக்கப்பட்டது போல இருக்கிறது என்ற வார்த்தைதான் அப்புக்கல்; என்ற பெயரில் இன்றும் காட்சியளிக்கிறது. இந்த பாறைகள் முப்பது லட்சம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

இதே போன்று ‘செத்தவரை’ என்ற ஒரு விநோதமான மலை திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கிறது. இந்த மலை முழுவதும் பாறைகள் மட்டுமே இருக்கிறது. புல் பூண்டு மருந்துக்குகூட இல்லை. அதனால் இது செத்துப் போன மலை
தூயத் தமிழில் மலையை ‘வரை’என்றுதான் அழைப்பார்கள் அதனால்தான் இது செத்தவரை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
வேலப்பாடிக்கு அருகில் சமணர்கள் தங்கியிருந்த இடம் சமணர்குட்டை இன்று அந்தப் பெயர் மருவி அம்மணகுட்டை என்று அழைக்கப்படுகிறது.
இதுதவிர பூட்டுத்தாக்கு என்ற ஊரில் குரங்குமலை என்று ஒரு மலையிருக்கிறது அந்த மலை எரிமலை வெடிப்பிலிருந்து உருவானதாக சொல்லப்படுகிறது. ஒரே பாறையில் ஒன்றின் மேல் ஒன்றாக வரிசையாக ஐந்து குகைகள் இருக்கிறது. இவைகள் எரிமலை வெடித்து வரும்போது காற்று குமிழ்கள் உருவாகி அது வெடித்து அந்த காலி இடங்கள் குகைகளாக உருவானதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
வேலூரில் அஜந்தா ஓவியங்களை ஒத்த குகை ஓவியங்கள் பல இடங்களில் காணப்படுகிறது. இவைகள் பதினைந்தாயிரம் வருடங்கள் பழமையானது.” என்று வேலூரில் வியந்த விசயங்களை பிரமித்து சொன்னவரிடம்,
“வேலூர் பழங்காலத்தில் பசுமையான ஊராக இருந்திருக்குமா?”என்று கேட்டோம்.

“நிச்சயமாக இதற்கு ஆதாரங்களும் இருக்கிறது. பௌத்த நூல்களைத் தேடி யாத்திரை செய்தவர்களில் யுவான் சுவான் தமிழகம் வந்திருக்கிறார். அவரின் பயணக் குறிப்பின்படி பண்டு நாட்டில் கச்சி துறைமுகத்திலிருந்து படகில் பயணித்து விரிஞ்சிபுரம் படகுத் துறையில் இறங்கி கண்ணமங்களம் சிங்ககிரி சமணக்கோயிலிலுக்கு சென்றதாக எழுதியிருக்கிறார். பாண்டிய நாடு என்பதை யுவான் பண்டு நாடு என்றும், காஞ்சிபுரத்தை கச்சி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


அப்போ பாலாறு கடல் போன்று ரொம்பவும் பெரிதாக இருந்திருக்கும். அதனால் வேலூர் ரொம்பவும் செழிப்பான ஊராகத்தானே இருந்திருக்கும்.”
என்று சொல்லும் அஷ்ரப் அலி தமது வியக்கவைக்கும் வேலூர் என்ற நூலில் 32 சுற்றுலா இடங்களை அவர் குறிப்பிட்டிருந்தாலும் இன்னும் நாற்பதுக்கும் அதிகமான இடங்கள் இருக்கிறது அவைகளையும் வரலாற்று ஆதாரங்களோடு புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற யோசனையில் இருக்கிறார்.
தாம் அறிமுகப்படுத்திய 32 இடங்களில் 26 இடங்கள் பராமரிப்பு இல்லாம் அழிவடைந்து வருவதாகவும், இதேப் போல் காஞ்சிபுரத்தில் பல்லவ கால அரண்மனை ஒன்று மண்ணுக்குள் புதைந்து கிடப்பதாகவும் அவைகள் மக்கள் மலம் கழிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று சின்னங்கள் பல, தனியார்களுக்கு சொந்தமாக இருப்பதாகவும் அவைகளை அரசு பொறுப்பேற்று பாதுகாப்பது அவசியம்  என்றும் அஷ்ரப் அலி வேதனையோடு எமக்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment