Wednesday, September 4, 2019

தமிழர்கள் மறக்கும் தமிழ்

mani srikanthan

மணி  ஸ்ரீகாந்தன்

லங்கைக்கு தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக  புலம்பெயர்ந்து வந்த சரித்திரம் இப்போது நூற்றி ஐம்பது வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறது.
பெருங்காடுகளை அழித்து வளமாக்கிய நம் உறவுகள் இப்போது மூன்று தலை முறைகளை கடந்து இந்த மண்ணின் மைந்தர்களாக மாறிப்போனார்கள்.
சில காலங்களுக்கு முன்னால் வரை வாழ்ந்த வயதான நம் பெரியவர்கள்  “எப்படியாவது ஈந்தியாவுக்கு போகனும்யா” என்ற கனவுகளோடு வாழ்ந்து அந்த கனவு நிறைவேராமலேயே மடிந்து போனார்கள்.

mani srikanthan
நம்மவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று சில வருடங்கள் உழைத்து விட்டு வருவதைப்போலவே தமிழகத்திலிருந்து தற்காலிமாக தங்குவதற்காக வந்த இந்த தமிழர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்கள்.

“வெள்ளைக்காரன் ஆடு,மாடுகளை வளர்க்கும் தொழுவங்களைப் போல லயன்களை அமைத்து விட்டார்கள்” என்று திட்டுவோர்கள் ஒரு புறமிருக்க “வெள்ளைக்காரன் நமக்கான நிரந்தர குடியிருப்புகளை அமைக்கவில்லை தற்காலிக குடியிருப்புகளைதான் அமைத்திருக்கிறான். நாம்தான் வேலையை முடித்து விட்டு தாயகம் திரும்பாமல் இங்கேயே தங்கிவிட்டோம்,தவறு நம்மளோடது” என்று ஆங்கிலேயேனுக்கு ஆதரவாக பேசுவோரும் உண்டு.
வசதியான வீடு, போக்குவரத்துக்கு வாகனம், கோயில், கல்வி, அரச உத்தியோகம் என்று பல மாற்றங்களுக்கு பிறகு, இந்த இந்திய வம்சாவழி தமிழர்கள் தமது கனவு தேசமான தமிழகத்தை அடியோடு மறந்து போனார்கள்.

புதிய தலை முறைக்கு தமிழகத்திலிருந்து வந்தோம் என்பது கூட சிலருக்கு தெரியவில்லை.
“நம்ம நாடு போல வருமாங்க, இது மாதிரி ஒரு நாடு நமக்கு கிடைச்சது நாம் செய்த புண்ணியம்” என்று அவர்கள் சொல்லும் போது எனக்கு மிகவும் பூரிப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

mani srikanthan
நாம் பிறந்த இந்த தேசத்தை மதிப்பதும், கௌரவிப்பதும் நமது ஒவ்வொருவரினதும் கடமைதானே! ஆனால் எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை கிரிக்கெட் மேட்ச் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நடைபெறும் போது இந்த தமிழர்களில் அனேகமானவர்கள் இந்தியாவைதான் ஆதரிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் மலையகத்தில் சில தமிழர்கள் தமிழில் உரையாடுவதை அவமானமாக எண்ணி சிங்களத்தில் உரையாடுகிறார்கள். அவர்களும் இந்திய அணியை ஆதரிப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

சிங்கள கலாச்சார வாழ்வியலோடு கலந்து விட்ட இந்த தமிழர்கள் தங்களின் பேச்சு வழக்காக மணிப்பிரவாள நடைப்போல தமிழோடு சிங்களத்தையும் கலந்து பேசுவதை ஃபேஷனாக்கி விட்டார்கள்.
ஹொரணை வலயத்தில் உள்ள யஹலகெலே என்ற தோட்டத்தில் வாழும் தமிழர்கள் எவருக்கும் தமிழ் பேச்சு மொழியாக இல்லை. அவர்களில் எவருக்கும் தமிழ் தெரியவில்லை என்பது வேதனையான விடயம்.
இப்படியான அவல நிலை மலையகத்தில் இல்லாவிட்டாலும் களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை பகுதிகளில் உள்ள சிறுதோட்டப் பகுதிகளில் நிலவி வருகிறது.

சமீபத்தில் ஒரு சகோதரியை சந்தித்தேன். அப்போது அவர் “எங்க அத்தை சென்னையில இறந்து போய்ட்டாங்க என்ன கொடுமைன்னா ஒரே நாள்ல புதைச்சிட்டாங்களாம். நம்ம நாட்டுலன்னா ஒரு மூணு நாளைக்கு  வச்சிருப்பாங்க என்னா ஊருங்க அது?”ன்னு வேதனைப்பட்டார்.
அவரை பொருத்தவரையில் ஒருவர் இறந்தால் நாலு நாளைக்கு வைத்திருந்து புதைப்பதுதான் முறை, நாகரீகம் என்று நினைக்கிறார். ஆனால் தமிழர் கலாசாரத்தின்படி 24மணி நேரத்தில் அடக்கம் செய்து விடுவார்கள் இன்றும் தமிழகத்தில் இது நடைமுறையில் இருக்கிறது.

எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவர் தமிழகத்தை ஆள்பராகவே இருந்தாலும் அவர் இறந்த அடுத்த நாளே அடக்கம் செய்து விடுவார்கள்.
இங்கே நிலமை தலைகீழாக உள்ளது. இறந்த சவத்தை  முணு நாள் கட்டாயம் வைத்தாக வேண்டும் என்பது நியதி.
இப்படி நமது பாரம்பரியமும், மரபுகளும் அழிந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

mani srikanthan
சமீபத்தில் சென்னை சென்று வந்த எனது நண்பர் ஒருவரை சந்தித்தேன். ‘எப்படி இருந்தது தமிழக பயணம்?’ன்னு அவரிடம் கேட்டப் போது, “அடப் போங்கய்யா ஊராய்யா அது! சும்மா சினிமாவுல நம்மல ஏமாத்தி இருக்கானுங்க. அங்க ஹன்சிக்கா மோத்வானி, அனுஷ்கா மாதிரி ஒரு பொம்புள புள்ளையையும் பார்க்க முடியலை..எல்லாம் சுடிதாரும், தாவணி பாவடையும் போட்டுக்கிட்டு சுத்தப் பட்டிக்காடு மாதிரி வருதுங்க…
என் மனைவிக்கு ஹன்சிக்கா போடுற மாதிரி ஒரு குட்டை கவுன், பாவடை வாங்கலாம்னு கடைக்கு போனா ‘நீங்க கேட்கிற டிரஸ் வாங்கனும்னா மும்பைக்கு போங்க’ன்னு சொல்லுறானுங்க “போங்கடா நீங்களும் உங்க நாடும்”னு திட்டிட்டு வந்திட்டேன். என்றார். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்வென்றால் என்னிடம் பேசிய அந்த நபரின் தாத்தாவும் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்தவர்தான். ஆனாலும் அவரின் மூணாவது தலைமுறைக்கு தமிழர் கலாசாரம் முகம் சுளிக்க வைக்கிறது, இங்கே இருக்கின்ற ஆடை, நாகரீகத்தையே முகமலர்சியோடு வரவேற்கிறார்கள்.

சமீபத்தில் நான் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களுருவில் வசிக்கும் என் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.  அவரின் வீட்டிலுள்ள பிள்ளைகளின் பேச்சு மொழி தமிழாக இருந்தாலும்
அவர்கள் படிக்கும் மொழி கர்நாடகமாக இருந்தது. அவர்களிடம் அதுப்பற்றி வினவிய போது ‘இங்கே தமிழ் பள்ளிக்கூடம் இல்லை அதனால் கர்நாடகத்தை கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’என்பதை விளக்கினார்.

mani srikanthan
ஆனால் நம் நாட்டில் இங்கே தமிழ் கற்க கூடிய எல்லா வசதிகளும், வாய்ப்பும் இருந்தும் சில தமிழர்கள் சிங்களத்தில் மட்டும் தமது பிள்ளைகள் படித்தால் போதுமானது என்று நினைக்கிறார்கள். அதை கௌரவமாகவும் கருதுகிறார்கள்.

இப்படி இந்த தமிழர்களின்  அடையாளம் அழிந்து போகும் அபாயகரமான சூழலில் இருக்கும் இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் கௌதமாலா பகுதிகளில் அழிந்து போன மாயன்கள் போல இன்னும் நூறு ஆண்டுகளில் இங்கே வாழும் இவர்கள் அழிந்து போவார்கள் என்று ஆய்வாலர்கள் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
 

No comments:

Post a Comment