Tuesday, July 31, 2018

இருள் உலகக் கதைகள்

 
முத்து பூசாரியின் பேய்க் கதை
 
கேட்டு எழுதுபவர் : மணி ஸ்ரீகாந்தன்

ன்னியில் பெரும்போர் முடிந்து அந்த செந்நிற பூமி அமைதியின் களமாக மாறிப்போயிருந்தது. துப்பாக்கி சூடு வாங்கிய வீட்டு மனைகள். குண்டுப்பட்டு தகர்ந்து போன ஆலயங்கள். ஊனமாகிப்போன மனிதர்கள் என்று போரின் வடுக்கள் மட்டும் அப்படியே ஆறாத ரணமாக இருந்தது.
தாரணிக்கு அவைகளை பார்த்த போது எதையோ பறிக்கொடுத்த மாதிரி மனது வலித்தது. தாரணி கொழும்பிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பல வருடங்களாக தொழில் செய்து வருபவள்.
போருக்கு முன்பாகவே அவளின் நண்பியின் துணையோடு கொழும்புவிற்கு வந்து தங்கிவிட்டாள். ஆரம்பத்தில் தாரணிக்கு சிங்களம் சரியாக பேச வராது, இப்போது சரளமாக சிங்களவர்களுக்கு சமமாக சிங்களம் கதைக்க பழகிவிட்டாள்.
mani srikanthan
பார்ப்பதற்கு நல்ல அழகியாகவும் ஒரு தைரியமான பொண்ணு மாதிரியான தோற்றமும் கொண்டவள். ஆடைத் தொழிற்சாலையில் அவளின் நண்பிகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தாரணிதான் முதல் ஆளாக நிற்பாள். அவள் ஓங்கி அடித்தால் ஒன்றரை தொன் வெயிட் என்பதை அவளின் நண்பிகளும் நன்றாகவே அறிவார்கள். அதனால் அவள் சண்டைக் களத்துக்கு வந்து விட்டால் எல்லோரும் அமைதியாகி விடுவார்கள்.
தாரணியின் அறிமுகம் இப்படிதான் என்றாலும் அவளின் இன்னொரு முகம் ரொம்ப பலவீனமானது. என்றால் நீங்கள் நம்ம மாட்டீர்கள். எப்படி  ‘பில்டிங் ஸ்ட்ரோங்கு, பேஸ்மன்ட் வீக்’ என்று ’ வடிவேலு சொல்லுவாரே அது மாதிரிதான். ஆடைத் தொழிற்சாலையில் இவ்வளவு வாய் சவடால் காட்டும் அந்தப் பெண்னை ஆறு மணிக்கு பிறகு எங்கேயேயும் பார்க்க முடியாது.
இரவாக போகிறது என்றாலே எங்கிருந்தாலும் ஓடி வந்து ரூமுக்குள் வந்து விடுவாள். அவளுக்கு பேய் பயம் ரொம்பவும் அதிகம். அவளின் பயத்தை அதிமாக்குவது போல சமீபத்தில் அவளின் நண்பியின் வீட்டில் நடந்த தொவில் பூஜையில் ஒரு பூசாரி அவள் மணிக்கட்டில் மந்திரித்த கயிறு கட்டும் போது அந்தக் பூசாரி “உனக்கு களுக்குமார தோசம்” இருக்கு என்று சொல்ல, அன்றிலிருந்து தாரணியின் பயம் மேலும் பல மடங்கானது.
இரவில் அவள் தூங்கும் போது அவளை யாரோ அமுக்குவது போலவும் பக்கத்தில் யாரோ படுத்திருப்பது போலவும் உணர்ந்து பயத்தில் அவள் ‘வீல்’  என்று அலறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் அவளுக்கு கைகூடி வந்த எத்தனையோ திருமணங்களும் கடைசி நேரத்தில் கைவிட்டு போவதும் தொடர் கதையாகி இருந்தது.

தாரணிக்கு காதல் என்றாலும் பிடிக்காதாம். அப்படி யாராவது நெருங்கினாலும் ‘போடா லூசு’ன்னு திட்டி விரட்டி விடுவாளாம். அவள் இப்படி நடந்து கொள்வதற்கெல்லாம் காரணம் களுக்குமார தோசம்தான் என்று உணர்ந்து கொண்ட அவள் ஒரு நாள் தமது சொந்த ஊரில் இருக்கும் பூசாரியிடம் சொல்லி தனக்குள்ள பிரச்சினைக்கு ஏதாவது பரிகாரம் கிடைக்குதா என்று பார்ப்பதற்காக வேலைக்கு லீவு போட்டுவிட்டு பூநகரியில் இருக்கும் அவளின் வீட்டுக்கு சென்றிருந்தாள்.
mani srikanthan
முத்து பூசாரி
தமது மண்ணில்  யுத்தம் தின்று துப்பிய மிச்சத்தை பார்த்து மனம் நொந்தவளாக இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்தவள். தமது அண்ணனை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு பூசாரியை பார்த்து வரலாம் என்று கிளம்பினாள்.
அந்த ஊரில் உள்ள பூசாரியை சந்திப்பதென்றால் இரவில்தான் சந்திக்கணுமாம். பகலில் கூட்டம் அதிகமாக இருக்குமாம். அதனால் அவளின் அண்ணனின் ஆலோசனையின் படி இரவு பத்து மணிக்கு அண்ணனின் பைக்கில் அமர்ந்த தாரணி பயணத்தை தொடர்ந்தாள்.
சில நிமிடங்களில் அந்தக் காட்டு பாதையின் ஓரத்தில் ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் நின்று கொண்டு லிப்ட் கேட்டாள். அவளை பார்த்து பரிதாபப்பட்ட தாரணி அண்ணனிடம் சொல்லி வண்டியை நிறுத்தி அவளையும் பின்னால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.
பைக் சீட்டில் அமார்ந்த அந்தப் பெண் ‘இந்த நேரத்துல எங்கே போறீங்க’ என்று பேச்சு கொடுத்து வளவளன்னு பேசிட்டே வந்திருக்கிறாள். சில நிமிடங்களில் அவள் பேச்சை நிறுத்தியிருக்கிறாள். என்னாச்சு ஏன் இப்படி அமைதியானாள்னு சந்தேகப்பட்ட தாரணி பைக்கின் சைட் கண்ணாடியின் வழியாக பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.

பின்னாள் இருந்த அந்தப் பெண் தமது கையிலிருந்த குழந்தையை பிய்த்து கடித்து தின்றுக் கொண்டிருந்தாள். அவளின் வாயிலிருந்து இரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. குலை நடுங்கிப் போன தாரணி பின்னால் திரும்பினாள் ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்து அவளின் அண்ணனின் காதில் ‘பின்னாடி ஒரு பிரச்சினை நடக்குது கொஞ்சம் தள்ளி ஏதாவது கோயில் இருந்தா பைக்கை நிறுத்து என்று சொல்லியிருக்கிறாள். நிலமையை புரிந்து கொண்ட அவளின் அண்ணன் பைக்கை வேகமாக குளக்கட்டு பகுதியில் இருக்கும் எல்லை தெய்வமான ஆஞ்சனேயர் ஆலயத்தை நோக்கி வேக மெடுத்தான்.

ஆலயம் தொட்டடுவிடும் தூரத்தில் இருந்த போது உசாரான அந்த தீய சக்தி தாரணியின்  முதுகில் ஓங்கி ஒரு அடிப்போட்டிருக்கிறது. அந்த நிமிடத்தில் பைக்கும் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதி குப்புற விழுந்தது. மயக்க முற்ற தாரணியை அவளின் அண்ணன் பூசாரியிடம் சேர்த்திருக்கிறான். ஆனாலும் தாரணி ஏழு நாட்கள் மயக்த்திலேயே இருந்திருக்கிறாள்.

அவளை ஆஞ்சநேயர் ஆலயத்திலேயே குரங்கு குடித்துவிட்டு வைக்கும் மிச்ச இளநீரை இவளுக்கு ஆகாரமாக கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள். அதன் பிறகு உள்ளம் கலங்கிய நிலையிலேயே தாரணி கொழும்பு வந்திருக்கிறாள்.

வந்தவளை பேய் பயம் தொடர்ச்சியாக வாட்டி எடுத்திருக்கிறது. கடைசியில் தாரணியின் நண்பிகள் இரத்தினபுரியிலுள்ள முத்து பூசாரியை அழைத்து வந்து ஒரு பரிகார பூஜையை நடத்த தாரணியின் கழுத்தில் ஒரு மந்திரித்த தாயத்தை கட்ட வைத்திருக்கிறார்கள்.
‘தாரணிக்கு ஆஞ்சநேயர் துணை இருக்கிறதால இவளை தேடி வார எந்த தீய சக்திக்கும் இவளை நெருங்க முடியாது அப்படியே நெருங்கினாலும் இவளின் உடம்புக்குள் நுழைய முடியாது. என்று உத்தரவாதம் கொடுத்த பூசாரி, ''ஆனாலும் சீக்கிரமாக இவளுக்கு ஒரு கல்யாணத்தை நடத்தி விட்டால் எல்லா பிரச்சினையும் முடிந்து விடும்,'' என்று அருள் வாக்கு சொல்லிவிட்டு கிளம்பினார்.

இந்தக்கதையை ஒரு உளவியலாளரிடம் சொன்னபோது, இக்கதையில் சில ஓட்டைகள் இருப்பதால் தான் இதை நம்பப் போவதில்லை என்றார்.ஆனால் தாரணி விரைவிலேயே திருமணம் செய்து கொள்வதன் மூலம் ‘களுகுமாரயா’ பிரச்சினையிலிருந்து விடுபட முடியும் என்ற அவர், உளவியல் சிக்கல் தீர்ந்துபோகும் என்ற விளக்கத்தையும் தந்தார்.

No comments:

Post a Comment