Thursday, March 4, 2021

அம்மை நோயாளர்களை தனிமைப்படுத்திய

மணி  ஸ்ரீகாந்தன்

கொரோனாவின் கோரத் தாண்டவம் முழு உலகையும் ஆட்டிப் படைத்து நாளுக்கு நாள் அதிர்வலையை உருவாக்கி வருகிறது.
இந்த மனித இனம் கொள்ளை நோயிலிருந்து எப்படி தப்பிக்கப்போகிறது என்பது வைரல் கேள்வியாக எழுப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கோடிக்கணக்கான வருடங்களை கடந்து வந்த இந்த பூமிப் பந்தின் வரலாற்றில் இந்த மனித இனம் பல கொள்ளை நோய்களை வென்று வந்திருக்கிறது என்பதுதான் இரத்தக்கறை படிந்த வரலாறு.


பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, பிளேக், கொலரா, எபோலா, காசநோய் என்று காலத்துக்கு காலம் லட்சக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கிய இந்த கொள்ளை நோய் இன்று கொரோனாவாக நம் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பல நூற்றாண்டுகளை கடந்துவிட்ட இந்த கொள்ளை நோய்களை நினைவு கூறும் பல வரலாற்றுச் சின்னங்கள் மேலைத்தேய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு அந்த கொள்ளை நோய்களின் தீவிரத்தை நமக்கு இன்று வரை ஞாபகப்படுத்திகொண்டே இருக்கிறது.

 பத்து காம்பரா மாதிரி தோற்றம்


நம் நாட்டில் அப்படியான சின்னங்கள், வரலாற்று பதிவுகள் ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்ததில் ஒரு புதுத் தகவல் கிடைத்தது.  பெரியம்மை நோய் உலகம் முழுவதும் மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய போது, அதன் தீவிரம் இலங்கையிலும் இருந்திருக்கிறது.
இந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்களாக ஆங்கிலேயேர்களால் அழைத்து வரப்பட்டு பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட தமிழர்களை பெரியம்மை நோய் காவு வாங்கத்தொடங்கியிருக்கிறது.
அப்போது அந்த நோய்க்கு மருந்து கிடையாது. அதோடு பெருந்தோட்டங்களில் அதற்கான மருத்துவ வசதிகளும் இல்லை. அதனால் நோய் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துவதே நோய் பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்பட்டது.
இப்போது போன்று நோய் தொற்றுக்காளனவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. மாறாக அவர்களை மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் அடைத்து வைத்து அவர்களை மரணிக்க செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடிகர் சூர்யா நடித்து வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தை பார்த்தவர்கள் அந்த விபரீதத்தை புரிந்திருப்பார்கள். நோய் தொற்றுக்குள்ளானவர்களை அடர்ந்த காட்டில் துணியால் சுற்றி கட்டிப்போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அப்படி விடப்படுபவர்கள் அந்த வனப்பகுதியிலேயே இறந்து போவார்கள்.
உலகின் எல்லா இடங்களிலும் இந்த முறையே பின்பற்றபட்டு வந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பிளேக் பரவியபோது ஒரு வீட்டில் ஒருவருக்கு நோய் கண்டிருந்தால் அவர் படுத்திருக்கும் அறையை செங்கற்கள் வைத்து சீமந்து பூசி அந்த அறைக்குள்ளேயே சிறைப்படுத்தி மரணிக்க செய்து நோய் பரவலை தடுத்தார்களாம்! 


இதே முறைதான் நம் நாட்டிலும் இருந்தது. அந்தக்காலத்தில் மக்களை தனிமைப்படுத்திய இடங்கள் எங்காவது இருக்கிறாதா என்று தேடிப்பார்த்ததில் கொழும்புவிற்கு அருகில் அமைந்திருக்கும் இங்கிரிய, றைகம தோட்டத்தில் ஒரு தனிமைப்படுத்தல் முகாம் இருந்ததற்கான தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அங்கே ஒரு விசிட் அடித்து தேடிப்பார்த்தோம்.

பழைய கிணறு


றைகம், தோட்டம் அமைந்திருக்கும் பகுதி அந்தக்காலத்தில் ‘மாகெலே’ என்ற சிங்களப் பெயரில் அழைக்கபட்டிருக்கிறது. மாகெலே என்றால் பெரிய காடு என்பது அர்த்தம். ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்கள் பெரியகாட்டை வளமான பூமியாக மாற்றியதன் பின்னர்  ஆங்கிலேயர்களால் மாகெலே எஸ்டேட் என்ற பெயரிலும், றைகம என்ற பெயரிலும் அந்த தோட்டம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
அந்த தோட்டத்தில் தேயிலை பயிற்செய்கை செய்யப்படாத சில பகுதிகள் பெருங்காடகவே இருந்திருக்கின்றன. அப்போதுதான் மனித இனத்தை கபளீகரம் செய்யும் வேகத்துடன் பெரியம்மை நோய் வீரியத்துடன் பரவத்தொடங்கியது. இதனால் அதிர்ந்து போன வெள்ளையர்கள் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்காக நோய் தொற்றாளர்களை வேறு இடத்திற்கு மாற்றி அவர்களை தனிமைப்படுத்தினார்கள். அதற்காக பத்து அறைகளைக்கொண்ட ஒரு குடியிருப்பை அந்தப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் அமைத்திருக்கிறார்கள். 


வெள்ளையர்களால் தனிமைப்படுத்தல் முகாமாக அமைக்கப்பட்ட இடம் இன்றும் ‘பத்து காம்பரா’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை தேடிப் போனோம் அந்த இடத்தின் ஒரு பகுதி காடாகவே இன்றும் இருக்கிறது.

திரவியராஜா
ஆள் நடமாட்டமில்லாத ஒரு நிசப்தம் அங்கே நிலவுகிறது. இப்போதே இப்படி என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே உள்ளுர ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது.
அம்மை நோய் வந்தவர்களை பாடை கட்டி அதில் அவர்களை படுக்க வைத்து இந்த பத்து காம்பரா பகுதிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
நோய் தொற்று அடையாளம் காணப்பட்டதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஊர் மக்களும் இணைந்து அவர்களை தனிமைப்படுத்தல் இடத்திற்கு கொண்டு வந்து அவர்களை அறைகளில் போட்டுவிட்டு அழுகையும், ஒப்பாரியுமாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்களாம்.
அதன் பிறகு அந்த அறைகளில் அடைந்து கிடக்கும் நோயாளிகளின் மரண ஓலங்கள் அவர்களின் உடலில் உயிர் இருக்கும் வரை பெருங் கதறலாக ஒலித்து ஓய்ந்து போகுமாம்.


அப்படி மரண ஓலம் அந்தப் பகுதியில் அடிக்கடி கேட்பதால் அந்தப் பகுதிகளுக்கு மக்கள் போகவே அஞ்சுவார்களாம். எண்ணிக்கையில் அடங்காத பெரு மரணங்கள் அந்த இடத்தில் சம்பவித்துள்ளதால் ‘மரண கந்த’ (மரண மலை) என்ற பெயரும் அந்தக்காலத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த மரண கூடாரம் அமையப்பெற்றிருந்த இடத்திற்கு அருகிலேயே இன்று ‘மெரேகந்த’ என்ற சிங்கள கிராமம் ஒன்று அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பத்து அறைகள் கொண்ட தனிமைப்படுத்தல் வீடுகள் அமையப்பெற்றிருந்த இடத்தில் இன்று தேயிலை செடிகள் காணப்படுகிறது. 

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த இடத்தில் குடியிருப்பு இருந்ததற்கான கட்டட அஸ்திவாரம் இருந்தது. தேயிலை பயிரிடப்பட்டப்போது அவற்றைப் பெயர்த்து அப்புறப்படுத்தி விட்டார்கள், கிணறு ஒன்று இருந்ததற்கான அடையாளம் ஒன்று இருக்கிறது” என்று கூறிய அந்தப் பகுதியில் வசிக்கும் திரவியராஜா, எம்மிடம் அதனை காண்பித்தார்.
அவர் காண்பித்த இடம் புதர் மண்டிக் கிடந்தது. அம்மை நோய்க்கு பலியானவர்களின் அவலச் சாவுகளை கண்டவர்கள் இன்று எவரும் உயிரோடு இல்லைதான் என்றாலும் பத்து காம்பராவின் மரண ஓலங்களையும், கதறல்களையும் கேட்டுக்கொண்டிருந்த மெரேகந்த மலைப் பகுதி மட்டும் மௌன சாட்சியாக அங்கே நின்று கொண்டிருக்கிறது🔴 
 

No comments:

Post a Comment