Thursday, November 28, 2019

எமது நடிகை நிரஞ்சனியுடன் ஒரு பரபரப்பு உரையாடல்

மணி ஸ்ரீகாந்தன்.

‘வடபகுதி தமிழ்ப் பெண்ணாக தோன்றும் என்னை நிர்வாணமாகக் குளிக்கும் காட்சியொன்றில் நடிக்கும்படி என்னிடம் இயக்குநர் கேட்டுக் கொண்டார். தமிழ் பெண்கள் குளியல் ஆடை இல்லாமல் நீராடும் வழக்கம் இல்லை என்றும் அது யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் அவரிடம் விளக்கியதும் அவர் காட்சியை மாற்றிவிட்டார்’

லங்கை சிங்கள திரையுலகில் ரொம்பவும் பிஸியாக இருக்கும் நடிகைதான் நிரஞ்சனி சண்முகராஜா, கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தமிழச்சிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இலங்கையின் முன்னணி இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க இயக்கியுள்ள ‘சுனாமி’ படத்தில் நாயகியாக இவர் நடித்துள்ளார்.
“அடுத்தடுத்து ஐந்து படங்களில் நாயகியாக நடித்திருக்கிறேன். விரைவில் திரைக்கு வரவுள்ள சுனாமியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்த படத்திற்கு பிறகு நம்ம ரேஞ்சே வேற” என்று நம்பிக்கையோடு கெத்துக் காட்டும் நிரஞ்சனி தனது ‘சுனாமி’ படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
2000 ம் ஆண்டு சோமரத்னவின் ‘சரோஜா’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில நித்தியவாணி என்ற ஒரு குழந்தை நட்சத்திரம் அறிமுகமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ‘சின்ன தேவதை’ என்று ஒரு படம் அந்தப் படத்திலையும் நித்தியவாணிதான் நடித்திருந்தாள். அப்போ நானும் சின்னப் பொண்ணுதான். எனக்கு நித்தியவாணியை பார்க்கும் போது ஒரு பொறாமை ஏற்பட்டது. ‘அந்தப் பொண்ண விட என்னால நல்லா நடிக்க முடியுமே’ என்று நினைச்சேன்.
ஆனால் நடிகையாவேன் என்று கனவில கூட நினைச்சுப் பார்த்ததில்ல. என் அதிர்ஷ்டம் திடீர்னு நடிகையாயிட்டேன். எல்லோரும் நினைப்பது போல நானும் இயக்குநர் சோமரத்னவின் படத்தில் நடிக்கனும்னு ஆசையோடுதான் இருந்தேன். சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் சோமரத்னவை சந்திக்கும் போது ‘நாங்களும் நடிப்போம், எங்களுக்கும் ஒரு சான்ஸ் தாங்களேன்’ என்று கிண்டலாக கேட்பதுண்டு.
ஆனால் இவ்வளவு சீக்கிரமாக அவரின் படத்தில நாயகியாவேன்னு நான் கனவிலேயும் நினைக்கவில்லை.
ஒரு நாள் 2017ல் நான் ‘கிரிவெசிபுர’ படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் இருந்தபோது எனக்கு ஒரு போன் கோல் வந்தது அழைப்பில் இயக்குநர் சோமரத்ன, “நீ அடிக்கடி கேட்பியே ‘நானும் உங்க படத்தில் நடிக்கலாமா’ன்னு, நீதான் என்னோட அடுத்த படத்தின் நாயகி” என்று அவர் சொன்னதும் நான் அப்படியே ஒரு கனம் ஷொக்காகி நின்னுட்டேன்.

“நான்தான் சோமரத்னவின் படத்தில் கதாநாயகி!!” என்று ‘கிரிவெசிபுர’ படப்பிடிப்பு தளத்திலேயே சந்தோசத்தில் கத்தி துள்ளிக் குதிச்சேன்.
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பெரிய இயக்குநரின் படத்தில் எனக்கு கதாநாயகி சான்ஸ் கிடைத்ததை கிரிவெசிபுர படக்குழு என்னை ‘அதிர்ஷ்டசாலி’ என்று பாராட்டினார்கள்.
இலங்கையின் பெரிய டைரக்டரின் படத்தில் நடிக்கப்போவதை நினைத்து எனக்குள் ஒரு கர்வமும் வந்துவிட்டது.
அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் சோமரத்னவிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை, அதன் பிறகு சோமரத்னவை பல நிகழ்வுகளில் நான் பார்த்தாலும் திரைப்படம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அதன் பிறகு நானும் அதை மறந்துவிட்டேன்.
ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் சோமரத்னவிடமிருந்து அழைப்பு வந்தது. “திரைக் கதை ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டன. இனி சூட்டிங்தான். நீ என்னை நேரில் வந்து சந்தி. கோல்சீட் பற்றி பேசணும்”என்றார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தொலைபேசி அழைப்பாகவும் அது அமைந்துவிட்டது" என்று நிரஞ்சனி சிலீர்த்து கொண்டார்.

“நிரஞ்சனி குடும்பப் பாங்கான வேடத்தில் மட்டும்தான் நடிப்பீங்களா, அல்லது கிளாமரும் பண்ணுவீங்களா..?”என்று கேட்டதும்,
“எனக்கு அதில் அப்படியொன்றும் வரையரை கிடையாது. நிர்வாணமா இருந்தால்தான் அந்தக் காட்சிக்கும், அந்தக் கதைக்கும் நூற்றுக்கு நூறு வீதம் உயிரோட்டம் வரும் என்றால் நான் நிர்வாணமாக நடிக்கவும்; தயார்! ஒரு நடிகையோ, நடிகரோ தண்ணீர் மாதிரி இருக்கணும், அப்போதுதான் நாம் நடிக்கும் பாத்திரத்துக்குள் புகுந்து அப்படியே நாங்களும் அந்த பாத்திரம் மாதிரியே மாற முடியும். அப்போதுதான் அந்த முழு வடிவத்தை நாங்கள் திரையில் காட்ட முடியும்.
சமீபத்தில் நான் நடித்த ‘ரது சமனல சிஹினய’ என்ற படத்தில் நான் நிர்வாணமாக குளிப்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இயக்குநர் காட்சியை எனக்கு விபரித்தார், ‘இந்த காட்சியின் கதாபாத்திரமான ராகினி ஒரு சுத்த தமிழ்ப் பெண். அதுவும் வடக்கில் போர் சூழலில் வளர்ந்து, இறுதி யுத்தத்தில் தன் தங்கையை தொலைத்துவிட்டு, பிறகு தங்கையை தேடிக்கொண்டு  கொழும்பிற்கு வருகிறாள். அவளுக்கு சிங்களம் பேச வராது. அந்த சூழலில் தமிழ் பேசக்கூடிய ஒரு சிங்கள நண்பனை நம்பி அவன் வீட்டில் வந்து தங்குகிறாள். அந்த வீட்டில் இன்னொரு ஆணும் தங்கியிருக்கிறான்.
ஒருநாள் ராகினி குளிப்பதை அவர்கள் இருவரும் ஒளிந்திருந்து பார்க்கிறார்கள்” என்றார்.
அதற்கு நான் அவரிடம், “வடக்கில் வாழும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அப்படி நிர்வாணமாக குளிக்க வெட்கப்படுவாள், பொதுவாக நாங்கள் வீட்டில் குளிக்கும் போது மார்பு வரை ஒரு துண்டை கட்டிக்கொண்டுதான் குளிப்போம். தமிழர் கலாச்சாரம் அப்படிதான் சொல்லித்தந்திருக்கிறது. எனவே வேறு ஒரு வீட்டில் தங்கும் தமிழ்ப் பெண் அப்படி நிர்வாணமாக குளிப்பது சாத்தியமில்லை.
எனவே இந்தப் படத்தில் எனக்கு நிர்வாணமாக நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் யதார்த்தத்துக்கு பொருந்தாமல் காட்சி அமைக்கப்பட்டால் நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அந்த ராகினி பாத்திரம் வீணாகிவிடுமே”  என்றேன்.
நான் சொன்னதை கேட்டு உண்மையை உணர்ந்து கொண்ட அந்த இயக்குநர் உன்னோடு பணியாற்ற கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசம். நல்ல நேரத்தில் அந்த காட்சியின் தன்மையை புரிய வைத்தாய் என்று அந்தக் காட்சியில் உடனே மாற்றத்தை ஏற்படுத்தினார்.
எனவே நிர்வாணமாக நடிக்கணும் என்பதற்காக எல்லாக் காட்சியிலும் அவர்கள் சொல்வதை கேட்டு நடித்துவிட முடியாது.” என்று ரொம்பவே தைரியமாகவும், தெளிவாகவும் பேசும் நிரஞ்சனியிடம்,

“தென்னிந்திய திரையுலகுக்குச் சென்று சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நம்மவர்கள் தமிழகத்துக்கு செல்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டோம்,
“அப்படியான எண்ணத்தோடு போறவங்கள பற்றி தப்பு சொல்லுவதற்கு எனக்கு உரிமையில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் நிரஞ்சனி என்கிற இந்த மனுஷி பிறந்தது இலங்கையில்தான், எனக்கான அத்திவாரமும், அங்கீகாரமும் இங்கேதான் கிடைத்தது.
எனக்கு கிடைத்த அத்திவாரத்தை உறுதியாக வைத்துக்கொள்வதும், கொள்ளாததும் என் கையில்தான் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் நான் எனக்கான அஸ்த்திவாரத்தை இன்றைய நாள் வரையிலும் நான் ரொம்பவும் உறுதியாக போட்டுவைத்திருக்கிறேன். அதோடு என்னை நடிகையாக்கிய இந்த மண்ணுக்கும், என்னை ஒரு நடிகையாக ஏற்றுக்கொண்ட என் மக்களுக்கும் நான் முதலில் ஏதாவது  ஒன்றை செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனாலும் எல்லோருக்கும் இருப்பது போல தென்னிந்திய சினிமா மீதான மோகம் எனக்கும் இருந்தது. நான் அதற்கான முயற்சியையும் செய்தேன்.
ஆனால் பிறகுதான் நான் ஒன்றை புரிந்துகொண்டேன். பெரிய ஒரு கடலில் நான் நெத்திலியாக இருப்பதைவிட, ஒரு சின்னக் குளத்தில் நான் திமிங்கிலமாக இருப்பது எவ்வளவோ மேல். என்பதை இப்போது இந்த சிறிய நாட்டில் ஒரு திமிங்கலமாகத்தானே இருக்கிறேன். இது எனக்கு பெரிய மன நிறைவைத் தருகிறது.
ஆனாலும் நல்ல வாய்ப்புகள், நல்லவிதமாக எந்த நாட்டிலிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்” என்று யதார்த்தம் புரிந்து பேசும் அவரின் முகத்தில் ஆளுமை அப்படியே பளீச்சிடுகிறது….
நிரஞ்சனி திரைத்துறையில் சாதனைகள் பல கண்டு, சரித்திரம் படைத்திட, நெஞ்சார்ந்த எமது வாழ்த்துக்களையும் கூறி விடைப் பெற்றோம்.🔴

Wednesday, November 27, 2019

பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் இலங்கை வருகை



மிழ்நாடு கோயம்புத்தூர் வம்சம் மருத்துவமனையின் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவ நிபுணரான டாக்டர் சிலம்பு செல்வி இன்று (28-11-2019) வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.

இலங்கை வரும் டாக்டர் சிலம்பு செல்வி மகப்பேறு தொடர்பான கருத்தாடல்களை நடத்தவுள்ளதால் அவரிடம் தமது குழந்தைப்பேறு தொடர்பான பிரச்சினைகள், சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற விரும்புவோர் 0778978792 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.🔵

Sunday, November 24, 2019

இலங்கை வந்திருந்த பகுத்தறிவுப் பெண் சபரிமாலா

சந்தித்தவர்:  மணி ஸ்ரீகாந்தன்

மிழகத்தின் பட்டிமன்ற பேச்சாளர்களில் சபரிமாலா ஜெயகாந்தனுக்கு என்று ஒரு தனியிடம் இருக்கிறது. இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேச்சாளராக, நடுவராக களம் கண்டிருக்கிறார்.
சமீபத்தில், ‘பெண்மைதான் பேராற்றல்’ என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதற்காக இலங்கை வந்திருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

“பதினைந்து ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது பட்டிமன்ற பேச்சாளராக  பல மேடைகளில் பேசியிருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் நாம் பேசுகிற பேச்சுக்கும் வாழ்கிற வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லாமல் பணத்துக்காக பேசுகிற கூட்டமாகவே இது இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.
அதன் பிறகு  பட்டிமன்றங்களில் பேசுவதை நிறுத்திவிட்டு, எனது முழு பேச்சாற்றலையும் மாணவர்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது என்று முடிவெடுத்து, பேச்சாற்றலை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையே பேச்சாளராக்கி நடுவர் என்ற பொறுப்பை நான் எடுத்து சமூக விழிப்புணர்வுக்கான பட்டிமன்றங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறேன் இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை மாணவர்களை மட்டுமே வைத்து நடத்தியிருக்கிறேன்.
அப்போது ஊடகங்கள் எமக்கு வழங்கிய ஆதரவு எனக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. பேச்சு என்பது வெறுமனே பணத்துக்காக அல்ல அது சமூக மாற்றத்துக்கானது என்பதை தெரிந்து கொண்டதோடு, சமூக விழிப்புணர்வு களப்பணிகளுக்காக அதனையே கையில் எடுத்தோம். நான் ஒரு ஆசிரியராக இருந்ததினால் இந்த விடயத்தை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்கும், அவர்களை உருவாக்குவதற்கும் எனக்கு பெரிய பலமாக இருந்தது. அதன் பிறகு கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட நிறைய பேர் எம்மோடு இணைந்தார்கள்.

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை ‘நீட்’ தேர்வுக்கான எதிர்ப்பு போராட்டமாக வலுப்பெற்றிருந்த நேரம் அப்போது நான் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக அனைவருக்கும் ஏற்றத் தாழ்வில்லாத கல்வி முறை இந்தியா முழுவதும் வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தேன். ஆனால் எனது பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. அதன்போது எனது குழந்தைகள், மாணவர்களின் கல்வி சிக்கல்களுக்கு குரல் கொடுக்க எனது வேலை தடையாக இருக்குமென்றால் அந்த வேலையே தேவையில்லை என்று எனது அரசு ஆசிரியர் வேலையை இராஜினாமா செய்து விட்டு தொடர்ந்து மாணவர்களுக்காக களம் காணுவது என்கிற இலட்சியத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக களப் பணியில் இறங்கியிருக்கிறேன்.”
என்ற சபரிமாலா பட்டிமன்ற பேச்சுப்போலவே படபடத்தவர் விடாமல் தொடர்ந்தார்,

“தமிழகத்தில் கடந்த ஓராண்டில் முப்பத்தைந்து பள்ளி வயது பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெளியில் வராத கொடுமைகள் எத்தனையோ, வழக்கு என்று வராத செய்திகள் எத்தனையோ ஆனால் கொல்லப்பட்டது மாத்திரம் முப்பதைந்து குழந்தைகள். அதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து பள்ளிக் கல்லூரி பிள்ளைகளை சந்தித்து வருகிறேன். எனக்கு நானே வீடு திரும்பாத போராட்டம் என்று அறிவித்துக்கொண்டு வீட்டுக்கே போகாமல், இந்த ஓராண்டில் தமிழகம் முழுவதுமாக ஐந்து லட்சம் பிள்ளைகளை சந்தித்து இருக்கிறேன்.

இலங்கைக்கு இதுதான் முதல் வெளிநாட்டு பயணம். இலங்கை வரும்போதுதான் முடிவு செய்தேன் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ்க் குழந்தைகளிடமும் பெண்மைதான் பேராற்றல் என்னும் பரப்புரையைச் செய்ய வேண்டும். அந்தப் பரப்புரையைத்தான் தமிழ் நாட்டிலும் செய்திருக்கிறேன். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கொடுமைகள் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகிறது.

இலங்கையில்...
கல்வி, சுதந்திரம், உளவியல் சிக்கல்கள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைககள் இருக்கின்றன. இங்கும் மலையகத்து பிள்ளைகளுக்கு இன்னும் சரியாக கல்வி போய்ச் சேரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனை முடிந்த அளவு அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால் எனது முதல் கட்ட வெளிநாட்டு பரப்புரையை உலகத்தின் மிகவும் தொன்மையான ஓலைச் சுவடிகளை கொண்டிருந்த யாழ். நூலகத்திலிருந்து தொடங்குவது என்று முடிவு செய்து. எனது இந்தப் பயணம் யாழ். நூலகத்திலிருந்து தொடங்கப்பட்டிருக்கிறது.

திருகோணமலையில் சென்மேரிஸ் பள்ளி, முள்ளிக்குளம் பள்ளி, தேவிபுரத்தில் உள்ள கணேஷா கல்வி நிலையம் மற்றும் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் என்று மூவாயிரம் பெண் குழந்தைகளை இலங்கையில் சந்தித்து இருக்கிறேன்.” சபரிமாலா முகம் மலர்ந்தார்.
“தங்களின் இலங்கைப் பயணம் திட்டமிட்டப்படி நிறைவுப் பெற்றதா?”என்றதும்,

“உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இங்கு யாரையும் தெரியாது. எனது சமூக செயற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் அறிந்த சமூக ஆர்வலர்கள் இங்கே கொஞ்சம் பேர் இருக்கிறார்கள், அவர்களை சந்தித்து எனது பரப்புரைக்கான திட்டமிடலை செய்து விட்டு பிறகு ஒருநாள் பிள்ளைகளை சந்திக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் இங்குள்ள ஆர்வலர்கள் எல்லா ஏற்பாடுகளையும் அதிரடியாக செய்து மூவாயிரம் தமிழ்க் குழந்தைகளுடனும் என்னை கலந்துரையாட வைத்தார்கள். எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
எனது அடுத்த பரப்புரை பயணத்தை ஜனவரியில் இலங்கையில் மேற்கொள்ள இருக்கிறேன். அதில் முக்கியமாக மலையகத்தில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளை சந்திக்க வேண்டும். அவர்களுடன் பத்து நாட்கள் தங்கியிருந்து எனது கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கணும் என்று நினைக்கிறேன்.” என்றார்
இலங்கை பள்ளியில்..
“சபரிமாலா பகுத்தறிவுவாதியா” என்று எமது சந்தேகத்தை க்ளீயர் செய்தோம்.
“நான் சாதி மதம் கடந்தவள். எல்லோரையும் பார்க்கும்போது மனிதர்களாக தெரிகிறார்கள். அதனால் நாடுகள், கடல், எல்லைகள், இனம், மொழி அனைத்தையும் கடந்து மனிதர்களாக பார்க்கிறேன். குறிப்பாக பெண் குழந்தைகளை பேராற்றல் மிக்கவர்களாக எல்லா இடத்திலையும் பார்க்கிறேன். அந்த மனநிலையில்தான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட ரீதியில் இவர்களை பின்பற்றுகிறேன் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நான் பெரியாரையும், விவேகானந்தரையும், அன்னை திரேசாவையும், நபிகளையும் பின்பற்றுகிறேன். எனக்கு யாரெல்லாம் நல்ல செய்திகளை தருகிறார்களோ அவர்களிடமிருந்து நிறைய விசயங்களை எடுத்துக்கொள்கிறேன். அவற்றில் மாற்று இருக்கும் போது அதில் சிலவற்றை விட்டுவிடுகிறேன், அவ்வளவுதான்.” என்ற சபரிமாலாவை இடைமறித்து “அப்படியென்றால் உங்களை ஆன்மீகவாதின்னு சொல்லலாமா?”என்றோம்,

“நிச்சயமாக இல்லை, நான் ஆன்மீகத்தை மனிதர்களுக்குள்தான் பார்க்கிறேன் கோயில்களில் இல்லை, ஆன்மாவுக்குள் இருக்கிற கருணையை பார்க்கும் ஆன்மீகவாதி என்று நீங்கள் சொல்லலாம்.” என்று நச்சென்று பேசும் சபரிமாலாவிடம்,
“நடந்து முடிந்த சட்ட மன்ற இடைத்தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள், தமிழக மக்கள் சரியானதை தெரிவு செய்கிறார்களா, அல்லது தடுமாறுகிறார்களா..?
என்று கேட்டதும்,
“இன்னும் அந்த மக்கள் சரியாக அரசில்படுத்தப்படும் சூழலில் இல்லை. இன்னும் நிறைய மூடப்பழக்கம், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுகிற நிலையிருக்கிறது. கல்வி அறிவு போய் சேரவில்லை, இப்படி நிறைய விசயங்களில் அவங்க பின்தங்கி இருக்கும் போது சரியானதைதான் தெரிவு செய்கிறார்கள் என்று எந்த விடயத்திலும் சொல்லிவிட முடியாது. ஓட்டுக்கு காசு வாங்கிட்டு நம் கண் முன்னாலயே அவங்க ஓட்டுப்போடுறதை நாம் பார்க்கிறோம். அதனால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அந்த தலைமுறை, அந்த நிலம் வளருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு ஐந்து சதவீத மக்கள்தான் தெளிந்த விழிப்புணர்வோடு அரசியலை அணுகுகிறார்கள். அதனால் அரசியல்வாதிகளை திருத்துவது, மாற்றுவது என்பதனைத் தாண்டி மக்களை அரசியல்படுத்துவதுதான் பெரும் பணியாக இருக்கிறது”
இலங்கை பள்ளியில்..
“தமிழக மக்களின் இந்தப் பின் தங்கிய சிந்தனை செயல்பாடுகளுக்கு அடிப்படையாக மதம்தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே..?”என்று சபரிமாலாவுக்கு இன்னொரு செக் வைத்தோம்.
“சரியான சிந்தனையோடு இருக்கும் அவர்களின் சதவீதம் குறைவுதான். இதற்கெல்லாம் முக்கிய காரணம் கல்விதான் கல்வி இன்னும் அவங்களுக்கு சரியாக போய் சேரவில்லை. ஏழைக்கு, பணக்காரனுக்கு, பெரும் பணக்காரனுக்கு, வெளிநாட்டுக்கு போகணும் என்று நினைக்கிறவனுக்கு என்று இங்கே பலவிதமான கல்வியை இந்த நாடு வைத்திருக்கிறது. இலங்கையை பொருத்தவரையில் எனக்கு பெரிய மகிழ்ச்சியான விடயம் இங்கே எல்லோருக்கும் ஒரே வகையான கல்வி வழங்கப்படுவதுதான். இந்தச் சூழல் இந்தியாவில் இல்லை. கல்வியை இப்படி அவர்கள் பிரித்து வைத்ததினால் மக்களும் பிரிந்து, பிரிந்து இருக்கிறார்கள். கருணையின் அளவீடும் குறைந்துவிட்டது.

மூடப்பழக்கங்களை வளர்க்கணும் என்று நினைக்கும் கூட்டம் அப்படி தமக்கு வசதியாக ஒரு கோட்பாட்டை உருவாக்கி இந்த சமூகத்தை பிடித்து வைத்திருக்கிறது. இன்றைக்கும் கூட பெண்களை மாதவிடாயை தீட்டுன்னு சொல்லி ஒதுக்குகிறார்கள். மற்ற நாடுகளில் எல்லாம் பெண் பிள்ளைகளை படிக்க வைத்து விண்வெளிக்கு அனுப்புவோமா, விண்கலத்துக்கு அனுப்புவோமான்னு பேசிக்கொண்டிருக்கும் போது இவர்கள் இந்த காரணத்துக்காக வீட்டுக்குள் வரக் கூடாதுன்னு சொல்கிறார்கள். இந்த மாதிரி இங்கே ஆயிரம் கிராமம் இருக்கு. அந்த ஐந்து நாளும் வீட்டுக்கு வெளியேதான் இருக்கணும்.
இல்லன்னா மரத்தடியில் இருக்கணும், பொதுக் குளத்தில் குளிக்கணும். வீட்டுக்குள்ளேயே ஏன் எல்லா அறைக்குள்ளும் விடமாட்டேங்கிறீங்க என்று நாங்கள் உரத்து கேட்டுக்கொண்டிருக்கும் போது, அவர்கள் வீட்டுக்கு வெளியேதான் இருக்கிறார்கள். அம்மியும், ஆட்டுரலும் வீட்டுக்குள் இருக்கும்போது ஒரு பெண்ணுக்கு இயற்கையான இந்த விடயம் நடக்கும் போது வீட்டுக்குள் வருவதற்கே அனுமதியில்லேன்னா இது குலசாமிக்கு ஆகாது என்பதிலிருந்துதான் வருகிறது.
இதனை அரசியல்வாதிகள் தங்களுக்கான பெருங் கருவியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். எல்லாமே ஓட்டாகப் பார்க்கப்படுகிறது. ஆன்மீகமும், அரசியலும் தங்களை வளர்ப்பதற்காக இந்த நிலத்தை கெடுத்து வைத்திருக்கிறார்கள். மடத்தனமாக இவர்கள் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஒரு அரசியல் கூட்டம். இவர்கள் இப்படியே இருந்தால்தான் தான் வளர முடியும் என்று ஒரு மதக் கூட்டம்…”
என்று சமூகத்தின் மீதான சபரியின் கோபம் வார்த்தைகளாக வந்து விழுந்தது.

“மோடியின் ஒரே நாடு ஒரே தேசம் பற்றி என்ன சொல்கிறீர்கள்” என்றதும், (சபரிமாலா சிரித்து விட்டு தொடர்ந்தார்)
“ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்கிறவர்கள் ஏன் ஒரே சாதின்னு சொல்லமாட்டேங்கிறாங்க? ஏன் ஒற்றைக் கல்வின்னு சொல்லவில்லை? ஒரே கல்வி என்பது எந்த நிலத்திலும் சாத்தியமில்லை. ஊருக்கு ஊரு உணவு, கலாசாரம் என்று வேறுபடுகிறது அதனால் ஒற்றைக் கல்வியை கொடுத்துவிட்டு அந்தந்த மாநிலங்கள் அவர்களுக்கு அமைவாக பாடத்திட்டத்தை உருவாக்கலாம் என்பது சாத்தியம், அதனை செய்யலாம் ஆனால் அவங்க அதனை செய்யமாட்டார்கள்.
அதனால் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரே ஆதார் கார்டு என்பதெல்லாம் ஒற்றை ஆளுகைக்கு கீழ் வரணும் மீண்டும் ஒரு சர்வாதிகார போக்கு வரணும் என்பதற்கான திட்டமிடல்தான். ஒரு போதும் அது நடக்காது, வெல்லாது!”
என்று குரலை உயாத்தினார் சபரிமாலா.

“இந்தியும், சமஸ்கிரதமும் ஒரு மொழிதானே அதனை கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்..?”
“தவறு இல்லை, இந்தியை, சமஸ்கிரதத்தை கற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் உலகத்தில் உள்ள எத்தனை மொழியை வேண்டுமானாலும் உங்களின் அறிவுக்கேற்ப கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவற்றை தானாக கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இவங்க என்னா செய்றாங்கன்னா, எல்லா மொழிகளையும் எடுத்து துடைத்து தூர வாரிப் போட்டுவிட்டு, இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கணும் என்கிற வேலை நடைபெறுகிறது. சமஸ்கிரதத்தை மட்டும் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில்
பொது மொழியாக்கணும் சாமிக்கான மொழியாக இருக்கணும் என்று கொண்டு வருகிறார்கள்.
ஆனால் மாநிலங்களில் அவர்களுடைய தாய் மொழியில்தான் மரபணு கடத்தப்பட்டிருக்கும். இப்போ தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகளாக எங்களின் மரபணுவில் கடத்தப்பட்டிருக்கிறது. கீழடி ஆய்வு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகள் என்று ஆதாரப்பூர்வமாக கூறியிருக்கிறது.
இன்னும் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. என்றாவது ஒரு நாள் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது தமிழ் மொழி என்று நிறுவுவார்கள்.

இப்படி எங்களின் மொழிக் கொடுத்த உணர்வு, அது கடந்து வந்த பாதை, பண்பாடு என்றெல்லாம் இருக்கும் போது திடீர்னு இந்தி வந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இப்போதே தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும் இந்திக்காரர்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள். ‘எங்கள் நிலத்தின் வேலைவாய்ப்பு எங்களுக்கு மட்டும்தான்’ என்பதினை இப்போதுதான் வலியுறுத்தி போராட்டம் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு மொழியை வலிந்து திணித்து, எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது!”
என்ற சபரிமாலா மீண்டும் குரலை கம்பீரமாக உயர்த்தினார்.⚫

கமலின் கனவுப் படம் மருதநாயகம் வருமா?

ஆர். சுமித்திரா- நிவித்திகலை.

1997ல் மருதநாயகம் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதோடு, பெரிய பட்ஜெட் படம் என்பதால் கணக்கு போட்டு மலைத்துப் போன மருதநாயகம் படக்குழு படத்தை நிறுத்திவிட்டது.
அந்தப் படத்தை இப்போது தொடர்ந்தால், அதில் நடித்தவர்கள் தோற்றம் மாறி இருக்கும் என்றும் நீங்கள் நினைக்கலாம்.
ஆனாலும் படத்தின் மிகவும் கடினமாக காட்சிகள் முப்பது நிமிடம் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த காட்சி  12 ஆண்டுகளுக்கு பிறகு என்று காட்சிகள் விரிவதால் அந்தப் படத்தை தொடர்வதிலும் பிரச்சினை இல்லை.
ஆனாலும் கமல் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்றும் தனக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்றும் கூறியிருக்கிறார். சமீபத்தில் ‘கடாரம் கொண்டான்’ படத்தை பார்த்து விட்டு நடிகர் விக்ரமை கமல் பாராட்டியிருக்கிறார். எனவே மருதநாயகமாக விக்ரம் நடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மருதநாயகம் வெளியாகும்.

இந்த ஆண்டில் கீர்த்தி சுரேஷின் படங்கள் எதுவுமே வெளியாகாததால், அவரின் மார்க்கெட் சரியுமா..?
சி. அட்சயன், அம்பாறை.
கீர்த்திக்கு ‘2018 காட்டில் அடை மழை’ என்றே சொல்லணும். சாமி-2, சண்டைக் கோழி-2, நடிகையர் திலகம், சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார் என்று அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. ஆனால் அம்மணிக்கு யாரு கண்ணு பட்டுச்சோ 2019இல் தமிழ்ப் படங்கள் எதுவும் அவரின் கைவசம் இல்லை.
‘நடிகையர் திலகம்’ படத்தின் தோல்விக்கு பிறகு கீர்த்திக்கு தமிழில் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது.
இதே வேளை தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக ‘ரங்தே’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு பெரிய பிரமாண்ட படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி கீர்த்திதான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் கீர்த்தியைதான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். எனவே அடுத்த ஆண்டில் கீர்த்தியின் நிறைய படங்கள் வெளியாகும். மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாக வருவதால், இந்த இடைவெளி அவருக்கு மார்க்கெட் சரிவை ஏற்படுத்தாது.

இந்திய நடிகர்களில் இன்றைய தேதியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
கே.கௌதமன்- வவுனியா.

பொலிவுட்டில் நடிகர்; ஹிருத்திக் ரோஷன் ‘வார்’ படத்திற்கு 100 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறுகிறார்கள்.
இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வார்.’ இந்தியில் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படியே மெகா வெற்றியைப் பெற்றிருக்கிறது ‘வார்’ திரைப்படம். இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும் பொலிவுட்டில் இந்தப் படம் மாறியிருக்கிறது. படம் வெளியான 15 நாட்களிலேயே ரூ.300 கோடியை தாண்டியிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக் ரோஷனுக்கு படத்தின் வருமானத்தில் 40 சதவீதம் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.170 கோடி. இதுவரை படத்தின் தியேட்டர் உரிமை, டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, இன்னும் சில உரிமைகள் என ரூ.350 கோடிக்கும் மேல் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும் போது, ‘வார்’ படத்திற்கு ஹிருத்திக் ரோஷனின் சம்பளமாக எப்படியும் ரூ.100 கோடியாவது போய் சேரும் என்று பொலிவுட் சினிமா உலகினர் அடித்து சொல்கிறார்கள்.

விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறாராமே உண்மையா..?
என்.மயூரி- வாழைச்சேனை.
பேட்டையில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததற்காக எல்லா முன்னணி நடிகருக்கும் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
அதன்படியே விஜய்க்கு, விஜய்சேதுபதியை வில்லனாக்கி பார்க்க ஆசைப்பட்ட ஒரு இயக்குநர் விஜய்சேதுபதியை அணுகி அவரிடம் பேசினாராம். உடனே விஜய்சேதுபதி சம்மதம் சொன்னதால் சந்தோசப்பட்ட இயக்குநர் அவரிடம் சம்பளம் பற்றி கேட்டதற்கு 20 கோடி தாருங்கள் என்று விஜய்சேதுபதி கேட்டதால் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆடிப்போய் விட்டார்களாம்.
வில்லனாக நடிப்பதை தவிர்க்கவே அவர் அவ்வளவு பெரிய தொகையை கேட்டதாக சொல்லப்படுகிறது.🔴