Sunday, November 24, 2019

கமலின் கனவுப் படம் மருதநாயகம் வருமா?

ஆர். சுமித்திரா- நிவித்திகலை.

1997ல் மருதநாயகம் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதோடு, பெரிய பட்ஜெட் படம் என்பதால் கணக்கு போட்டு மலைத்துப் போன மருதநாயகம் படக்குழு படத்தை நிறுத்திவிட்டது.
அந்தப் படத்தை இப்போது தொடர்ந்தால், அதில் நடித்தவர்கள் தோற்றம் மாறி இருக்கும் என்றும் நீங்கள் நினைக்கலாம்.
ஆனாலும் படத்தின் மிகவும் கடினமாக காட்சிகள் முப்பது நிமிடம் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த காட்சி  12 ஆண்டுகளுக்கு பிறகு என்று காட்சிகள் விரிவதால் அந்தப் படத்தை தொடர்வதிலும் பிரச்சினை இல்லை.
ஆனாலும் கமல் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்றும் தனக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்றும் கூறியிருக்கிறார். சமீபத்தில் ‘கடாரம் கொண்டான்’ படத்தை பார்த்து விட்டு நடிகர் விக்ரமை கமல் பாராட்டியிருக்கிறார். எனவே மருதநாயகமாக விக்ரம் நடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மருதநாயகம் வெளியாகும்.

இந்த ஆண்டில் கீர்த்தி சுரேஷின் படங்கள் எதுவுமே வெளியாகாததால், அவரின் மார்க்கெட் சரியுமா..?
சி. அட்சயன், அம்பாறை.
கீர்த்திக்கு ‘2018 காட்டில் அடை மழை’ என்றே சொல்லணும். சாமி-2, சண்டைக் கோழி-2, நடிகையர் திலகம், சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார் என்று அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. ஆனால் அம்மணிக்கு யாரு கண்ணு பட்டுச்சோ 2019இல் தமிழ்ப் படங்கள் எதுவும் அவரின் கைவசம் இல்லை.
‘நடிகையர் திலகம்’ படத்தின் தோல்விக்கு பிறகு கீர்த்திக்கு தமிழில் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது.
இதே வேளை தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக ‘ரங்தே’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு பெரிய பிரமாண்ட படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி கீர்த்திதான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் கீர்த்தியைதான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். எனவே அடுத்த ஆண்டில் கீர்த்தியின் நிறைய படங்கள் வெளியாகும். மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாக வருவதால், இந்த இடைவெளி அவருக்கு மார்க்கெட் சரிவை ஏற்படுத்தாது.

இந்திய நடிகர்களில் இன்றைய தேதியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
கே.கௌதமன்- வவுனியா.

பொலிவுட்டில் நடிகர்; ஹிருத்திக் ரோஷன் ‘வார்’ படத்திற்கு 100 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறுகிறார்கள்.
இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வார்.’ இந்தியில் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படியே மெகா வெற்றியைப் பெற்றிருக்கிறது ‘வார்’ திரைப்படம். இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும் பொலிவுட்டில் இந்தப் படம் மாறியிருக்கிறது. படம் வெளியான 15 நாட்களிலேயே ரூ.300 கோடியை தாண்டியிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக் ரோஷனுக்கு படத்தின் வருமானத்தில் 40 சதவீதம் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.170 கோடி. இதுவரை படத்தின் தியேட்டர் உரிமை, டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, இன்னும் சில உரிமைகள் என ரூ.350 கோடிக்கும் மேல் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும் போது, ‘வார்’ படத்திற்கு ஹிருத்திக் ரோஷனின் சம்பளமாக எப்படியும் ரூ.100 கோடியாவது போய் சேரும் என்று பொலிவுட் சினிமா உலகினர் அடித்து சொல்கிறார்கள்.

விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறாராமே உண்மையா..?
என்.மயூரி- வாழைச்சேனை.
பேட்டையில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததற்காக எல்லா முன்னணி நடிகருக்கும் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
அதன்படியே விஜய்க்கு, விஜய்சேதுபதியை வில்லனாக்கி பார்க்க ஆசைப்பட்ட ஒரு இயக்குநர் விஜய்சேதுபதியை அணுகி அவரிடம் பேசினாராம். உடனே விஜய்சேதுபதி சம்மதம் சொன்னதால் சந்தோசப்பட்ட இயக்குநர் அவரிடம் சம்பளம் பற்றி கேட்டதற்கு 20 கோடி தாருங்கள் என்று விஜய்சேதுபதி கேட்டதால் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆடிப்போய் விட்டார்களாம்.
வில்லனாக நடிப்பதை தவிர்க்கவே அவர் அவ்வளவு பெரிய தொகையை கேட்டதாக சொல்லப்படுகிறது.🔴

No comments:

Post a Comment