Thursday, December 26, 2019

தமிழர்களின் அந்தக்கால ஏ.டி.எம். மெஷின்!

மணி ஸ்ரீகாந்தன்.

லகிலேயே தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்று கீழடி ஆய்வுகள் மீண்டும் உலகுக்கு நிரூபித்திருக்கிறது.
ஆங்கிலேயேர்கள் ஆதிவாசிகளாக காடுகளுக்குள் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் நாங்கள் வீட்டு மனைகள், மாட மாளிகைகள், கோயில் கோபுரங்கள் என்று நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
பழந்தமிழர் நாகரிகம் படிப்படியாக அழிந்து இன்று கடைசி விளிம்பில் நிற்கிறது. இன்றைய தமிழ் குழந்தைகளுக்கு அம்மி, ஆட்டுகல், உரல், உலக்கை, முறம், திருகைக்கல் என்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் எதுவுமே தெரியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை.
சொன்னால் ‘அப்படியா’ என்று ஆச்சரியப்படுகிறார்கள். இந்தப் பொருட்கள் நம் வீடுகளிலிருந்து மறைந்து இப்போது 20 வது ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. இதனையே மறந்துவிட்ட நம்மவர்களுக்கு எங்கே, சங்க காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் தெரியப் போகிறது!
‘கல்வெட்டு, வரிகயிரு, தாம்புக்கயிறு, வடகயிறு, பூட்டாத்தல, ஒலவாரம்,  மோத்தடி, வாங்கருவா, மட்டப்பலகை, பரம்புசெட்டு, தாருகுச்சி, கடமலக்குச்சி, கருக்கருவா,’ இந்த வார்தைகளை படிக்கும் நீங்கள் நம் நாட்டில் வைக்கப்பட்டுள்ள ஏதோ தமிழ் கொலை பதாகை என்று எண்ணியிருப்பீர்கள்.
ஆனால் இவைகள் எல்லாம் நம் முன்னோர்கள் விவசாயத்தில் பயன்படுத்திய பொருட்களின் பெயர்கள் என்பதுதான் உண்மை.

இப்படி நாம் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பொருட்கள் அழிந்து போய்விட்டதை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து உங்களுக்கு அடையாளப்படுத்தவே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுகிறோம்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆரணியை அடுத்துள்ள கள்ளப்புலியூர் என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அது ஒரு விவசாய மண். பழங்கால தமிழர் அடையாளம் ஏதாவது இருக்குமா என்று அந்த மருத நிலத்தில் நடந்தேன்.
அப்போது ஒரு பழங்கால வீடு என் கண்ணில் பட்டது. நிச்சயம் அந்த வீட்டில் ஏதாவது கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டுக்குள் எட்டிப்பார்த்தேன்.
என்ன ஆச்சர்யம் அங்கே நான் புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்ட ‘குதிர்’ ஒன்று கவனிபாரற்று கிடப்பதை கண்டேன்.  வீட்டுமுற்றத்தில் உள்ள ‘குதிர்’ யானையின் கால் போன்று இருப்பதாக ஒரு சங்ககால புலவன் பாடியிருப்பது என் நினைவுக்கு வந்தது.


பணத்திற்கு பதிலாக தானியங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் தானியங்களை சேமித்து வைக்கும் கொள்கலன் பெட்டகமாக இந்த ‘குதிர்’  இருந்திருக்கிறது. குறிப்பாக எல்லா வீடுகளிலும் இந்த ‘குதிர்’ தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது.
வரகு மற்றும் வைக்கோலை பெரிய கயிறாக திரித்து வட்ட வட்டமாக கட்டி நாலடி அகலத்தில் ஆறடி உயரத்தில் ஒரு பெரிய குவளையை செய்து அந்த வைக்கோல் மீது களிமண்ணால் பூசி அதனை திடமான, வட்டமான சுவராக எழுப்பி பிறகு அந்தக் குதிரின் அடிப்பாகத்தில் சாணத்தால் மெழுகி இருக்கிறார்கள். இந்த குதிர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப சிறிது, பெரிதாக வடிவமைக்கப்படும்.

இந்தக் குதிரில் விவசாயிகள் நெல் அறுவடையின் போது களத்து மேட்டில் விற்பனையாகும் தானியத்தில் மீதமாக இருப்பதை இந்த குதிரில் கொட்டி மூடி வைப்பார்கள்.
குதிரை மூடுவதற்கு களி மண்ணால் பெரிய வட்டமான மூடியும் செய்து வைத்திருப்பார்கள். தானியங்கள் கெட்டுப் போகாமல் இருக்க கருநொச்சி, வேப்பிலைகளைப் போட்டு வைப்பார்கள்.
அப்படி கொட்டப்படும் தானியங்கள் இரண்டு வருடங்களுக்கு பழுதாகாமல் இருக்குமாம். இந்த குதிர் பெட்டகத்தில், முக்கியமாக நெல், பெரும்பாலும் பாதுகாக்கப்படும்.


வீட்டின் உணவுத் தேவைகளுக்கு இந்தக் குதிரின் அடிப்பாகத்தில் இருக்கும் சிறிய துவாரத்தை திறந்து நெல்லை எடுப்பார்கள். அப்படி எடுத்த பிறகு அந்த துவாரத்தில் தேங்காய் சிரட்டையை வைத்து அடைத்து மண்ணால் மூடிவிடுவார்கள்.
திருமணம், காதுகுத்து, பிள்ளை வயசுக்கு வருதல் என்று வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் இந்த குதிர் நெல் தான் பணமாக பண்டமாற்றுதலுக்கு கைக்கொடுக்குமாம்.
வீட்டு விஷேசத்துக்கு அணிவதற்காக வாங்கும் தங்கம், சேலை, வளையல் முதல்கொண்டு சிறுவர்கள்; வீட்டில் சாப்பிடும் குச்சு மிட்டாய் வரை இந்த குதிரில் எடுக்கப்படும் தானியத்தால்தான் அந்தக் காலத்தில் காரியம் நடந்திருக்கிறது.

காங்கு, தொம்பைகூண்டு என்று பலப்பெயர்களில் இந்த குதிர் பெட்டகத்தை அழைக்கிறார்கள். வசதியான வீடுகளில் இரண்டு, மூன்று குதிர்கள் இருக்குமாம். இந்தக் குதிரின் எண்ணிக்கையில்தான் அந்தக் குடும்பத்தினர் வசதியானவரா என்று கண்டுப்பிடிப்பார்களாம்.
அந்தக் காலத்தில் கிராமத்தில் நடைபெறும் திருமண பேச்சு வார்தையில் ‘உங்கள் வீட்டில் ‘குதிர்’ இருக்கா’ என்றுதான் கேட்பார்களாம்.
‘குதிர்’ இருக்கும் வீடு செல்வந்த வீடாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது.
குதிரோடு
கட்டுரையாளர்
..

“எங்கப் பொண்ணு வாக்கப்பட்டு போன வீட்டுல மூணு ‘குதிர்’ இருக்கு அவ நல்லா சீரும் சிறப்போடு இருக்கா”   என்று கிராமத்தில் பெண்கள், கிணத்தடியில் கதையளப்பார்களாம்.
பணக்காரர்கள், ஏழைகள் என்று எல்லோரிடமும் தானியங்களை சேமித்து வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. குறிப்பாக தலித்துகளின் வீடுகள் ரொம்பவும் சிறிதாக இருந்ததினால் அவர்களின் வீட்டினுள் குதிர் வைக்க இடமில்லாததால் வீட்டுக்கு வெளியே ஒரு சிறிய குடிசை அமைத்து அதற்குள் இந்த குதிரை செய்து வைத்திருப்பார்களாம். அதனை ‘சேர்’ என்று அழைத்திருக்கிறார்கள்.

விவசாய நிலம் இல்லாதவர்கள் கூட கூலி வேலைக்கு சென்று ஊதியமாக தானியங்களை பெற்று வந்து இந்த குதிரில் போட்டு சேமித்து வைப்பார்களாம்.
இதில் தானியங்களை போடும் போது நல்ல நேரம் பார்த்து தம் வீட்டு சிறுவர்களின் கையில் ஒரு பிடி தானியத்தை கொடுத்து குதிரில் கொட்டச் சொல்வார்களாம். அப்படிப் போட்டால் தானியம் குறையாமல் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

‘சேர்’

அதே மாதிரி குதிரில் இருந்து தானியத்தை எடுக்கும் போது நல்ல நேரத்தில்தான் எடுப்பார்களாம். அதே மாதிரி தீபாவளி, பொங்கல் சித்திரை போன்ற பண்டிகை நாட்களில் குதிருக்கு திருநீரு, குங்குமம் வைத்து கற்பூரம் காட்டி கும்பிடுவார்கள். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் விளக்கேற்றும் போது, மறக்காமல் குதிருக்கும் சாம்பிராணி காட்டப்படுமாம்.
சில குதிர்கள் பெரிதாக இருந்தால் அவற்றுக்கு ஒரு ஏணி வைத்து ஏறித்தான் தானியங்களை குதிருக்குள் கொட்டுவார்களாம். குதிரில் தானியம் குறைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்கு குதிரின் நுனிக்கும், அடிப்பாகத்துக்கு இடைப்பட்ட நடுப்பகுதியில் ஒரு சிறிய துவாரம் வைத்து அதனை திறந்து தானிய அளவை கண்காணிப்பார்கள்.

பெரிய செல்வந்தர்களின் வீடுகளில் குதிருக்கு பதிலாக ‘பத்தாயம்’ இருக்குமாம். இது மா, பலா பலகையில் செய்யப்பட்ட ஒரு பெரிய உயரமான பெட்டி இதில்தான் தானியங்களை சேமித்திருக்கிறார்கள். இந்த பெட்டியின் அடிவாரத்தில் ஒரு சிறிய கதவு இருக்கும் அதை ஒரு பூட்டு போட்டு பூட்டியிருப்பார்கள். அதன் வழியேதான் தேவையான போது தானியங்களை எடுத்துக்கொள்வார்களாம்.
பத்தாயம்

‘இந்த ‘பத்தாயம்’ குதிருக்கு பிறகுதான் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும், சங்க இலக்கியங்களில் ‘பத்தாயம்’ பற்றி எதுவும் குறிப்பிடபடவில்லை’ என்பது ஆய்வாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

அந்தக் காலத்தில் நெல் அறுவடை என்பது வருடத்திற்கு ஒரு முறைதான் நடக்கும். அதனை ஒரு போகம் என்று சொல்வார்கள். அதனால் அவர்களுக்கு நெல்லை சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம்; இருந்தது. அறுவடைக் காலங்களில் நெல் குறைந்த விலைக்குதான் விற்பனையாகும் ஆனால் கோடை காலத்தில் அதன் விலை பல மடங்காக உயர்ந்து விடும். அந்த சமயத்தில் குதிரில் சேமிக்கப்பட்டிருக்கும் நெல் விவசாயிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும்.


ஆனால் இன்று நிலமை அப்படி அல்ல. நீர் இறைக்கும் இயந்திரம், ஆழ்துளை கிணறு என்பன வந்து விட்டதால் தமிழகத்தில் வருடத்திற்கு மூன்று போகம் நெல் அறுவடை நடக்கிறது. அதனால் நெல்லை சேமித்து வைக்க வேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது.
அதனால் தமிழர்களின் அந்தக் கால ஏடிஎம் மெஷினாக பயன் படுத்தப்பட்டு வந்த குதிர், பத்தாயம், தொம்பை உள்ளிட்டவைகளை தமிழர்கள் மறந்து போனார்கள்.🔵
                      

முத்துசாமி வேடத்தில் நடித்த எல்றோய் அமலதாஸ் பேசுகிறார்

 மணி ஸ்ரீகாந்தன்

லங்கையில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படம் ‘கிரிவெசிபுர’. கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை கதைக் கருவாக கொண்டு படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் இராஜாதி இராஜசிங்கனின் மனைவியின் தம்பியான முத்துசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்தான் எல்றோய் அமலதாஸ். இவர் பல்வேறு துறைகளில் நுழைந்து அதகளம் செய்யும் ஒரு துடிப்புமிக்க இளைஞர்.
தோள்பையை முதுகில் சுமந்தபடியே காடு, மலை, ஏரி, குளம் என்று அசால்ட்டாக ஏறி, இறங்கி தனது கேமரா கண்ணில் பட்ட காட்சிகளையெல்லாம் அற்புதமாக சுட்டெடுக்கும் நல்லதொரு புகைப்படக் கலைஞனாக இருக்கும் இவர், மிகவும் பின்தங்கிய கிராம பள்ளிகளில் கற்கும் மாணவர்களுக்கு இசையையும் அட்சரம் பிசகாமல் பாடம் நடத்தும் ஒரு நல்லாசனாகவும் இருக்கிறார். பல்கலைக்கழகங்களில் புகைப்படம் பற்றிய விரிவுரை செய்பவராகவும்  பணியாற்றுகிறார்.

அப்புறம் எங்கே ஆளையே காணோம்னு தேடினால் முகத்தில் அரிதாரம் பூசிய நடிகனாக கூத்துக்கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்.
இப்படி பன்முக ஆளுமைகளில், அசாத்திய திறமையோடு பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் எல்றோய் அமலதாஸை ஒரு இனிய மாலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.

“எனது கலைப் பிரவேசத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எனது தந்தைதான். அவர் யாழ் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றியவர். அதோடு மேலேத்தேய வாத்தியங்களை இசைப்பதில் விற்பனராக இருந்திருக்கிறார். அந்தத் துறையில் அவர் நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவரின் பாதிப்புத்தான் என்னை இந்த துறைக்குள் பயணிக்கச் செய்தது.
நான் போரின் வலிகளை சுமந்தவன். நிறைய இடம்பெயர்வுகளை சந்தித்திருக்கிறேன். எனது இடம்பெயர்வின் நெடும் பயணம் என்னை இறுதியாக கொழும்புக்கு கொண்டு வந்து விட்டது.
அங்கேதான் என் கலைப் பயணத்தின் முதல் பிள்ளையார் சுழி போடப்பட்டது.” என்று படபடத்து நிறுத்தினார்.

எல்றோய் அமலதாஸ் கொழும்பில் உள்ள ஒரு முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிறைவேற்று தயாரிப்பாளராக பணியாற்றியவர். அதோடு ஒரு தொலைக்காட்சி நாடகத்தின் 54 பாகங்களை இயக்கியதோடு, ஐந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இசைக் கலைஞரான இவரின்  இசையில் சிங்கள திரைப்படம் ஒன்று விரைவில் திரைக்கு வரவிருப்பதோடு, சில தொலைக்காட்சி நாடகங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
இவரின் கலைப்பயணத்தில் ஜனாதிபதி விருதுகள் முதல் கொண்டு அனைத்து துறைகளிலும் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இவர், தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

வரலாற்று திரைப்படமான கிரிவெசிபுர பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கேட்டோம்,
“எனக்கு இந்தப் பட வாய்ப்பை இலங்கையின் முன்னணி நடிகையும் சகோதரியுமான நிரஞ்சனி சண்முகராஜா எனக்கு வழங்கியிருந்தார். ஒரு நாள் அழைப்பில் வந்த அவர் கிரிவெசிபுர படம் பற்றி சொல்லி என்னை பட அலுவலத்துக்குச் சென்று இயக்குநர் தேவிந்த கோங்கஹகேயை சந்திக்கும்படி சொன்னார். இயக்குநரும் என்னை பார்த்ததும் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட, என்னை முத்துசாமி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி கூறினார்.
எனக்கு வரலாற்று தேடுதல்களில் ரொம்பவும் ஆர்வம். அதனால் அந்தக் கதாபாத்திரத்தில்  ரொம்பவும் விருப்பத்துடன் நடித்தேன்.” என்றார்.
கண்டி மன்னரின் வரலாற்றுக் கதையின்படி இராஜாதி இராஜசிங்கனின் நான்கு மனைவிகளில் ஒருத்திக்கு ஏழு சகோதரர்கள். அவர்களில் ஒருவர்தான் முத்துசாமி. மன்னருக்கு பிள்ளைகள் இல்லாததால் அவருக்கு பிறகு இந்த சகோதரர்களில் யாராவது ஒருவர் மன்னராக அரியாசனம் ஏறலாம் என்பது நாயக்க வம்சத்தின் வழக்கமாக இருந்தது.

மன்னர் இராஜாதி இராஜசிங்கன் மரணப் படுக்கையில் இருந்தபோது தனக்குப் பிறகு ராணிமார்களின் தம்பிகளில் ஒருவரை அவர்கள் தெரிவு செய்து அரியாசனத்தில் அமர வைக்கும் வரை, தற்காலிகமாக முத்துசாமியை நியமிக்க முடிவெடுத்தப்போது முதலமைச்சராக இருந்த பிலிமத்தலாவை அவனை பதவியேற்க விடாமல் தடுத்து விட்டான்.
பிலிமத்தலாவையின் கைப்பாவையாக வைத்து ஆட்டிப்படைப்பதற்கு கண்ணுசாமியை அரியாசனத்தில் அமரவைத்தான். ஆனாலும் அரியாசனத்துக்கு தகுதியுடைய முத்துசாமி கண்ணுசாமிக்கு எதிராக கலகம் செய்து ஆட்சியை கைப்பற்றலாம் என்று எண்ணி முத்துசாமியை கொல்வதற்கு பிலிமத்தலாவை திட்டம் போட்டான்.

பிலிமத்தலாவையின் சதித்திட்டம் தெரிந்து, அரண்மனையிலிருந்து தப்பிய முத்துசாமி, கொழும்பிலிருந்த பிரித்தானிய தேசாதிபதி நோர்த்திடம் சென்று முறையிட்டான்.
முத்துசாமியின் நிலைமையை புரிந்துகொண்ட நோர்த் அவனுக்கு அபயம் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து ஒரு மெய்க்காப்பாளனுடன் யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த அரண்மனையில் போய் தங்குமாறு பணித்தார்.

யாழ். கோட்டைக்குள் முத்துசாமி சிறிது காலம் தங்கியிருந்தான். அப்போது ஒருநாள் விஸ்வநாத சாத்திரியாரை அழைத்து ‘தனக்குரித்தான பட்டம் கிடைக்குமா?’ என்று கேட்டான்.
அதற்கு சாத்திரியார் ‘பட்டம் சமீபத்திலேயே கிடைத்து விடும். ஆனால் பட்டத்துக்கு முன்பும், பின்பும் அரிப்பகை’ என்றாராம். இதனைக் கேட்டு உச்சிக் குளிர்ந்து போன முத்துசாமி சாத்திரியாருக்கு இராஜ ஜோதிடர் என்ற பட்டமும், பணமும் கொடுத்து அவரை கௌரவப்படுத்தினான்.
பதவிக்கு முன்னால் பாம்பு பகையும், அதற்குப் பிறகு தலையை அரியும் பகையும் இருக்கிறது என்று சாத்திரியார் சொன்னதின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் முத்துசாமி மகிழ்ச்சியில் திளைத்தான். அடுத்து வந்த இரண்டு நாட்களில் அவனை நாகம் தீண்டியது. உடனே யாழ்ப்பாணத்தின் பிரபல விஷக்கடி வைத்தியரான இருபாலை செட்டியார் அழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்குச் சென்ற முத்துசாமி காப்பாற்றப்பட்டான்.
அதன் பிறகு சாத்திரியாரின் வாக்குப்படி முத்துசாமி அரியணை ஏறினான். சில நாட்களிலேயே பிலிமத்தலாவை, கண்ணுசாமியின் சதியால் மீண்டும் பதவியை இழந்ததோடு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு சிரச்சேதமும் செய்யப்பட்டது. இதுதான் அந்தக் கதை.

இந்தப் பாத்திரத்தில் எல்றோய் அமலதாஸ் நடிக்கும் போது சில விசயங்கள் முத்துசாமியின் வரலாற்றில் நடந்தது போன்று படப்பிடிப்பிலும்  நடந்திருக்கிறதாம். தனக்கும் முத்துசாமிக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு எதுவும் இருக்குமோ என்று நினைத்து பூரித்துப்போகும் எல்றோய் அந்த சம்பவங்கள் பற்றி விபரித்தார்.
“ஒரு நாள் படப்பிடிப்பில் இயக்குநர் என்னிடம் வந்து ‘எல்றோய் வெளியே வந்து பாருங்கள் உங்க நண்பர் வந்திருக்கிறார்’ என்று அழைத்தார். அப்போது நானும் ஆவலாக
வெளியே வந்து பார்த்தேன். அப்போது ஒரு பாம்பாட்டி ஒரு நாகத்தை கொண்டு வந்திருந்தான். அதனைப் பார்த்து சந்தோசப்பட்டு போன நான் ‘பாம்புக்கு பல்லு பிடுங்கிருக்கு’ என்று பாம்பாட்டி சொன்னதை நம்பி ரொம்பவும் தைரியமாக பாம்பைப் பிடித்தேன். பிடித்த அடுத்த நொடியே பாம்பு என் கையை தீண்டியது அதன் இரண்டு பற்களும் என் கையின் தசைகளுக்குள் ஆழமாக இறங்கி நின்றது.
அவசரமோ, அதிர்ச்சியோ அடையாத நான் மிகவும் நிதானமாக அந்த பாம்பின் வாயை பிடித்து என் தசைக்குள் அமிழ்ந்திருந்த பற்களோடு வெளியே எடுத்தேன்.
அப்போது பாம்பு சீண்டிய இடத்திலிருந்து இரண்டு சொட்டு இரத்தம் வெளியே வந்து எட்டிப்பார்த்தது. அந்த நாகத்துக்கு பல்லு பிடுங்கவில்லை என்பது அப்போதான் அந்த பாம்பாட்டிக்கே தெரிந்தது.
பாம்பு பிடிப்பதிலும் எனக்கு ரொம்பவும் பரீட்சியம் இருக்கிறது. பல்லு பிடுங்காத பாம்பை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனாலும் பாம்பாட்டியின் வார்த்தையை நம்பிதான் அந்த பாம்பை நான் சரியாக கையாளவில்லை.
வைத்தியசாலைக்கு போகலாமா என்று படப்பிடிப்பு குழு பதறிப்போய் கேட்டபோது நான் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று சொன்னேன். நான் ஒரு நிமிடத்தை கூட சும்மா வெட்டியாக கழிப்பதில்லை, எனக்கு கிடைத்த அந்த சில நிமிட ஓய்வில் போனில் தேடி என்னைக் கடித்த ராஜநாகம் பற்றிய குறிப்புகளையும் எடுத்து அதற்கான முதலுதவிகளையும் தெரிந்து அதனை மேற்கொள்ளவும் செய்தேன்.

ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றம் உணர்ந்து வைத்தியசாலைக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சிறிது நேரத்துக்கு பிறகு என் பார்வைக்கு எல்லாம் இரண்டாக தெரிந்தது அப்படியே மயங்கிப் போனேன். அதன் பிறகு அடுத்த நாள்தான் கண்விழித்தேன்.

முத்துசாமியை போலவே நானும் மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பியிருகிறேன். அந்த இராஜ நாகம் கடித்தால் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று கூகுலில் படித்தபோது கொஞ்சம் ஆடித்தான் போனேன்.
ஆனாலும் பாம்பு என்னைக் கடித்தபோது நான் அதனை பெரிதாக எடுக்கவும் இல்லை, பயப்படவும் இல்லை. ஒன்று தெரியுமா, பாம்பு கடித்ததும் எமக்குள் ஏற்படும் பயமே அந்த விஷத்தை சில நிமிடங்களுக்குள் உடம்பு முழுவதும் பரவச் செய்து நம்மை கொன்று விடுமாம்.
பாம்புக் கடியை நான் அசால்ட்டாக எடுத்துக்கொண்டதுதான், அதிர்ஷ்டவசமாக நான் உயிர் பிழைக்கவும் காரணமாக இருந்தது.” என்று எல்றோய் தமது அனுபவத்தை மெய்சிலிர்த்து கூறினார்.
ஏழாம் அறிவில் வருவது போல அவருதான், இவரோ? நாமும் நம்ப முடியாத ஆச்சர்யங்களோடு அவரிடமிருந்து விடைப்பெற்றோம்.🔴

Saturday, December 14, 2019

காதல் சந்தியா இப்போது என்ன செய்கிறார்?

mani srikanthan
கே.சுமதி- வவுனியா.

செப்டம்பர் 27ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை சந்தியா. இவரின் தந்தை அஜித் இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். இவரின் அம்மா அழகுக் கலை நிபுணராக இருக்கிறார். மேலும், கேரள மாநிலம் கொச்சி தான் இவர்கள் பூர்வீகம். ஆனால், சந்தியா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். மேலும், சந்தியாவிற்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் இருக்கிறார்.
சந்தியா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழித் திரைப் படங்களிலும் நடித்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் காதல் திரைப் படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்று உள்ளார். தற்போது கூட இவரை (நீங்கள் உட்பட) அனைவரும் ‘காதல் சந்தியா’ என்று தான் அழைப்பார்கள்.
இவர் நடித்த காதல், ‘டிஸ்யும்’ படங்கள் தந்த வெற்றிக்குப் பிறகு வேறு எந்தப் படமும் பெரிய அளவு வெற்றியைத் தரவில்லை. மேலும், இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்திருக்கும் சந்தியா, பின் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் சந்திரசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குருவாயூர் கோயிலில் டிசம்பர் 6 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மேலும், இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஷீமா என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது கணவர், குழந்தையுடன் கேரளாவில் வசித்து வரும் சந்தியா முழுநேர குடும்பத்  தலைவியாக இருக்கிறார்.


பிகில் எப்படி, வெற்றிப் படமா?
என். அஜந்தன்- யாழ்ப்பாணம்.
அட்லிகுமாரின் படம் என்பதால் சில வெற்றிப் படங்களின் தொகுப்பாக பிகில் அமைந்திருந்தது. விசில் அடிக்கும் ரசிகர்களுக்கு நல்ல தீனிதான் ‘பிகில்’ படம். அதுவும் வெற்றிப்படம்தான்.
தற்போது, ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையையும் படைத்துள்ளது. தமிழகத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் மொத்த வசூல் 135 கோடி ரூபாய்க்கும் அதிகம். இதனை ‘பிகில்’ படத்தின் மொத்த வசூல் முறியடித்து 140 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.

இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ‘பிகில்’. அதே போல் தென்னிந்தியாவிலிருந்து இந்திய அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த நடிகர்கள் பட்டியலில் ரஜினி, பிரபாஸ், யாஷ் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அந்தப் பட்டியலில் இப்போது விஜய்யும் இணைந்துள்ளார்.
வெளிநாடுகளில் அதிக வசூல் செய்யும் தமிழ் நடிகர்கள் பட்டியலில் ரஜினிதான் எப்போதுமே நம்பர் வன். தற்போது அந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டார் விஜய். ‘பிகில்’ படம் ரஜினி படங்களின் வசூல் பட்டியலுக்கு அப்புறமே இருந்தாலும், பல்வேறு வெளிநாடுகளில் ரஜினி படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது.
மலேசியாவில் ஷாருக்கானின் ‘தில்வாலே’, ரஜினி நடித்த ‘கபாலி’ ஆகிய படங்களுக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
‘பிகில்’ படத்தின் பிரம்மாண்டமான வசூலின் மூலம், ரஜினிக்குப் பிறகு வெளிநாடு, இந்தியா, தமிழ்நாடு என அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் வசூல் நாயகனாக வலம் வர ஆரம்பித்துள்ளார் விஜய்.


யோகிபாபுவுக்கு எப்போது திருமணம்?
ஆர். சதுர்ஷன்- கண்டி.
சமீப காலத்தில் திரைப்பிரவேசம் செய்திருந்தாலும் யோகி பாபு அவரின் பெயருக்கு அமைய ரொம்பவும் யோகமானவர்தான்.
கோலமாவு கோகிலாவில் நயன்தாரவுடன் டூயட் பாடியவர், பிறகு தர்மபிரபுவில் நாயகனாக நடித்தார்.
தற்போது, ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 18 படங்கள் உள்ளன.
சமீபத்தில்தான் தான் சிறுக சிறுக சேமித்த பணத்தில் சென்னையில் ஒரு வீடு கட்டி குடி புகுந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் யோகிபாபுவின் முகநூல் கணக்கில் அவர் யாரோ ஒரு பெண்ணுடன் இருப்பது போன்று ஒரு படம் ‘அவளும் நானும்’ என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.
அதை பார்த்த ரசிகர்கள் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவர்தான் என்று பேசினர். அதோடு யோகிபாபுக்கு பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். உங்களுக்கு மனைவியாக வருபவர் அழகாக இருக்கிறார் என்றும் பதிவிட்டனர். செல்போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினார்கள்.
இதுப் பற்றி யோகி பாபுவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டப்போது, “அந்த முகநூல் எனது பெயரில் இயங்கும் ஒரு போலியான கணக்கு, அந்த செய்தியும் உண்மையில்லை. எனக்கு பெண் பார்க்கும் வேலையை எனது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். எனது திருமணத்தை உங்கள் அனைவருக்கும் அறிவிப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.
யோகிபாபுவிடமிருந்து வரும் தகவலை சதுர்ஷனுக்கு முறையாக நாம் அறிவிப்போம்.🔴