Saturday, December 14, 2019

காதல் சந்தியா இப்போது என்ன செய்கிறார்?

mani srikanthan
கே.சுமதி- வவுனியா.

செப்டம்பர் 27ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை சந்தியா. இவரின் தந்தை அஜித் இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். இவரின் அம்மா அழகுக் கலை நிபுணராக இருக்கிறார். மேலும், கேரள மாநிலம் கொச்சி தான் இவர்கள் பூர்வீகம். ஆனால், சந்தியா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். மேலும், சந்தியாவிற்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் இருக்கிறார்.
சந்தியா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழித் திரைப் படங்களிலும் நடித்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் காதல் திரைப் படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்று உள்ளார். தற்போது கூட இவரை (நீங்கள் உட்பட) அனைவரும் ‘காதல் சந்தியா’ என்று தான் அழைப்பார்கள்.
இவர் நடித்த காதல், ‘டிஸ்யும்’ படங்கள் தந்த வெற்றிக்குப் பிறகு வேறு எந்தப் படமும் பெரிய அளவு வெற்றியைத் தரவில்லை. மேலும், இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்திருக்கும் சந்தியா, பின் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் சந்திரசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குருவாயூர் கோயிலில் டிசம்பர் 6 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மேலும், இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஷீமா என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது கணவர், குழந்தையுடன் கேரளாவில் வசித்து வரும் சந்தியா முழுநேர குடும்பத்  தலைவியாக இருக்கிறார்.


பிகில் எப்படி, வெற்றிப் படமா?
என். அஜந்தன்- யாழ்ப்பாணம்.
அட்லிகுமாரின் படம் என்பதால் சில வெற்றிப் படங்களின் தொகுப்பாக பிகில் அமைந்திருந்தது. விசில் அடிக்கும் ரசிகர்களுக்கு நல்ல தீனிதான் ‘பிகில்’ படம். அதுவும் வெற்றிப்படம்தான்.
தற்போது, ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையையும் படைத்துள்ளது. தமிழகத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் மொத்த வசூல் 135 கோடி ரூபாய்க்கும் அதிகம். இதனை ‘பிகில்’ படத்தின் மொத்த வசூல் முறியடித்து 140 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.

இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ‘பிகில்’. அதே போல் தென்னிந்தியாவிலிருந்து இந்திய அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த நடிகர்கள் பட்டியலில் ரஜினி, பிரபாஸ், யாஷ் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அந்தப் பட்டியலில் இப்போது விஜய்யும் இணைந்துள்ளார்.
வெளிநாடுகளில் அதிக வசூல் செய்யும் தமிழ் நடிகர்கள் பட்டியலில் ரஜினிதான் எப்போதுமே நம்பர் வன். தற்போது அந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டார் விஜய். ‘பிகில்’ படம் ரஜினி படங்களின் வசூல் பட்டியலுக்கு அப்புறமே இருந்தாலும், பல்வேறு வெளிநாடுகளில் ரஜினி படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது.
மலேசியாவில் ஷாருக்கானின் ‘தில்வாலே’, ரஜினி நடித்த ‘கபாலி’ ஆகிய படங்களுக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
‘பிகில்’ படத்தின் பிரம்மாண்டமான வசூலின் மூலம், ரஜினிக்குப் பிறகு வெளிநாடு, இந்தியா, தமிழ்நாடு என அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் வசூல் நாயகனாக வலம் வர ஆரம்பித்துள்ளார் விஜய்.


யோகிபாபுவுக்கு எப்போது திருமணம்?
ஆர். சதுர்ஷன்- கண்டி.
சமீப காலத்தில் திரைப்பிரவேசம் செய்திருந்தாலும் யோகி பாபு அவரின் பெயருக்கு அமைய ரொம்பவும் யோகமானவர்தான்.
கோலமாவு கோகிலாவில் நயன்தாரவுடன் டூயட் பாடியவர், பிறகு தர்மபிரபுவில் நாயகனாக நடித்தார்.
தற்போது, ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 18 படங்கள் உள்ளன.
சமீபத்தில்தான் தான் சிறுக சிறுக சேமித்த பணத்தில் சென்னையில் ஒரு வீடு கட்டி குடி புகுந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் யோகிபாபுவின் முகநூல் கணக்கில் அவர் யாரோ ஒரு பெண்ணுடன் இருப்பது போன்று ஒரு படம் ‘அவளும் நானும்’ என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.
அதை பார்த்த ரசிகர்கள் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவர்தான் என்று பேசினர். அதோடு யோகிபாபுக்கு பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். உங்களுக்கு மனைவியாக வருபவர் அழகாக இருக்கிறார் என்றும் பதிவிட்டனர். செல்போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினார்கள்.
இதுப் பற்றி யோகி பாபுவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டப்போது, “அந்த முகநூல் எனது பெயரில் இயங்கும் ஒரு போலியான கணக்கு, அந்த செய்தியும் உண்மையில்லை. எனக்கு பெண் பார்க்கும் வேலையை எனது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். எனது திருமணத்தை உங்கள் அனைவருக்கும் அறிவிப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.
யோகிபாபுவிடமிருந்து வரும் தகவலை சதுர்ஷனுக்கு முறையாக நாம் அறிவிப்போம்.🔴

No comments:

Post a Comment