Monday, March 9, 2020

எம்.ஜி.ஆரின் அனிமேஷன் திரைப்படம் வெளிவருவதாக சொன்னீர்கள் இன்னும் காணோமே..?

ஆர்.சிவராம்- மாங்குளம்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற திரைப்படம் தயாராகி வந்தது உண்மைதான், ஆனால் சில பணப் பிரச்சினைகள் காரணமாக அதன் தயாரிப்பு வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது எம்.ஜி.ஆரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், ‘வந்தியதேவன்’ என்ற பெயரில் அனிமேஷனில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்துள்ளார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது.
சனீஷ்வர் அனிமேஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது.  இந்த படம் வெளியானால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நிச்சயம் சந்தோசப்படுவார்கள்.


இந்த வயசுல ரஜினிக்கு, தர்பார் தேவையா..?

கே. குணசேகரன்- இரத்தினபுரி.

இந்த கேள்வியை இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள்தான் கேட்க வேண்டும், ஏனென்னறால் ரொம்பவும் வயிறு எரிந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்.
70பது வயதில் வயதானவர் ஒரு மூலையில் உட்கார்ந்து, ஓய்வு எடுக்கணும், அல்லது முதியோர் இல்லத்தில் இருக்கணும் என்பதுதானே நம்மவர்களின் எண்ணமாக இருக்கிறது.
ஆனால் ரஜினி விடயத்தில் அது தலைகீழாகவே இருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறைகளை பின்னுக்குத் தள்ளி, ஆக்ஷன், காதல், நகைச்சுவை என்று பட்டையை கிளப்புறாரே…!
உண்மையை சொல்லணும்னா, ரஜினி ஒரு மேஜிக் மேன்தான். இந்த வயசுல இத்தினை ஆட்டமா என்று, நாம் ஆச்சரியப்பட்டு போகிறோம்.
தர்பார் படம் வெளியாகி 10 நாட்களில் இந்திய மதிப்பில் 200 கோடி வசூலை அள்ளியிருக்கிறது என்றால் சும்மாவா!, ரஜினி ஒரு பந்தயக் குதிரை இன்னும் சில காலத்துக்கு ஓடும்.
தமிழ் திரையுலகுக்கு ரஜினியின் அவசியமும், தேவையும் இருக்கிறது.


சமந்தாவுக்கு குழந்தை பிறந்து விட்டதா..?

கே. அர்ச்சனா- கொழும்பு-15


திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் எந்த அறிகுறியும் இல்லைன்னு அவரின் ரசிகர்கள் பலர் டுவிட்டரில் எழுதி வருகிறார்கள்.
ஆனால் இப்போதைக்கு குழந்தை இல்லை என்பதில் சமந்தாவும், நாகசைத்தன்யாவும் உறுதியாக இருக்கிறார்கள்.
‘குழந்தை பிறந்து விட்டால் நான் சினிமாவை விட்டு விலக வேண்டியிருக்கும். அதேவேளை நான் குழந்தையாக இருக்கும் போது, பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன். அப்படியொரு சூழல் என் குழந்தைக்கு வந்து விடக் கூடாது.
ஆனாலும், வருகின்ற 2022-ம் ஆண்டு, ஓகஸ்ட் 7ந் திகதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.


நம்ம அன்னக்கிளி கோபிகா இப்போ என்ன செய்றாங்க..?

கே. சுகுமார்- அகலவத்தை.

ஆட்டோகிராஃப், எம் மகன் போன்ற படங்களில் நடித்த கோபிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தது. ஆனால் அவரின் திருமணத்துக்கு பிறகு ஆள் காணமல் போய்விட்டார்.
மலையாள நடிகையான இவர், கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூரில் 1985ல் பிறந்த இவர் சிறுவயதில் இருந்து பரதநாட்டியம் பயின்று வந்தார். சமூகவியலில் பட்டம் பெற்றார். விமானப் பணிப்பெண்ணாக ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டவருக்கு 2002ம் சினிமா உலகில் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு முன்னணி நடிகையாக உச்சம் தொட காத்திருந்தவர் காதல் வலையில் வீழ்தார்.
ஜூலை 17 - 2008ல் அகிலேஷ் என்றவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோபிகா தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்🔴

Sunday, March 8, 2020

தமிழர்களின் அந்தக்கால ஆபரணங்கள்

மணி  ஸ்ரீகாந்தன்

இந்திய தமிழர்கள் இலங்கைக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட போதே பாம்படமும் அவர்களின் காதுகளில் தொங்கியபடி இலங்கைக்கு புலம் பெயர்ந்து வந்திருக்கிறது.


நவீன காலமாற்றம் நமது பண்பாட்டு விழுமியங்களை அழித்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழர் பாரம்பரிய பழங்கால பொருட்கள் பல காணாமல் போய்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள் அந்த பட்டியலில் இணைந்து கொண்டிருக்கும் பொருள்தான் பாம்படம்.

‘அது என்னப்பா பாம்படம் புதுசா இருக்கே’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பாம்படம் என்பது அந்தக் காலத்து இளம் பெண்களின் காதுகளை அலங்கரிக்கும் தங்க ஆபரணம்.
நம் பாட்டிகளின் காதுகளில் மட்டும் அது தொங்கியதால் அது பாட்டிகளுக்கு மட்டுமே உரித்தானதாக நாம் நினைத்து விட்டோம்.
பாம்படம் அந்தக் காலத்து ஃபேஷன் ஆபரணமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றைய துரதிஷ்டம் பாம்படம் அருங்காட்சியகத்திலும், அதை அணிந்து அழகு பார்த்த பாட்டிகள் முதுயோர் இல்லத்தில் மட்டுமே உள்ளன.
பாம்படங்கள்  முருக்கச்சி, தண்டட்டி, கொப்பு, ஓணப்பு தட்டு, எதிர்தட்டு, குறுக்கு தட்டு, நாகவட்டம், முடிச்சு உள்ளிட்ட பெயர்களில் இந்த கனமான காதணி ஆபரணம் அழைக்கப்படுகிறது.
இந்த ஆபரணங்கள் உடல் அமைப்புக்கும், காதின் உறுதிக்கும் ஏற்றவாறே அணியப்பட்டது. பாம்படம் சில பாட்டிகளுக்கு தோள் வரையும், சில பாட்டிகளுக்கு மார்பு வரையும் தொங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
பாம்படம் குறிப்பாக திராவிட கலாசாரம், தமிழ்நாட்டு பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. ஆனால் நம் நாட்டில் இந்த ஆபரணம் அணியும் முறை புழக்கத்தில் இருந்ததில்லை. இந்திய தமிழர்கள் இலங்கைக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட போதே பாம்படமும் அவர்களின் காதுகளில் தொங்கியபடி இலங்கைக்கு புலம் பெயர்ந்து வந்திருக்கிறது.

அப்படி வந்த நம்மவர்களின காதுகளை சிங்கள சமூகம் ஆச்சர்யமாக பார்த்து வியந்ததெல்லாம் ஒரு தனி வரலாறுதான். என்றாலும் இந்த பாம்படம் அணியும் முறையை கௌதம புத்தனும் பின்பற்றியிருக்கிறார் என்பதை புத்தனின் நீளமான காதுகளை பார்த்தாலே புரிந்து விடும்.
தமிழகத்தில் அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் இந்த பாம்படம் பாட்டிகள் இருந்திருக்கிறார்கள். இப்போது அவர்களை பார்ப்பது ரொம்பவும் அரிதாக இருக்கிறது.

கருப்பாயி
தமிழகத்திலேயே இந்த நிலை என்றால் நம் நாட்டில் அவர்கள் இருப்பதற்கான வாய்ப்பு  மிக, மிக குறைவுதான். ஆனாலும் சில காலமாகவே இந்த பாம்படம் பாட்டிகள் எங்காவது இருப்பார்களா என்று தேடி வலைவீசி, அலைந்ததில், ஒரு நாள் களுத்துறை நகருக்கு அருகில் ஒரு வீதியின் ஓரத்தில் நடந்து சென்ற ஒரு பாட்டியின் காதுகளை கவனித்த எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
ஓர் காது வளர்த்த பாட்டி காது அவரின் தோளை தொட்டுவிடும் நிலையில்தான் இருந்தது. நான் அவரிடம் சென்று அவரின் இந்த பாம்படக் கதையை கேட்டறிந்தேன்.

“எங்க பூர்வீகம் திருநெல்வேலிதான், எங்க பாட்டி, அம்மா எல்லோரும் பாம்படம், தண்டட்டி என்ற நிறைய நகைகளை காதுகளில் அணிந்து ரொம்பவும் அழகாக இருப்பார்கள். எனக்கு அந்த நகை போடணும் என்று ஆசை. நான் வயசுக்கு வந்ததும், எனக்கு பாம்படம் போட்டாங்க ஆனாலும் அதனை நினைத்தவுடன் போட முடியாது அதுக்கு முதலில் காது வடிப்பாங்க, அதாவது மரத்துண்டு, ஈயக்குண்டு போன்ற கனமான பொருட்களை காதில் மாட்டி தொங்க விடுவார்கள் அது பல நாட்களுக்கு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும். பிறகு அந்தக் காதுல பாம்படம் போட்டு விடுவாங்க.” என்று சொல்லும் கருப்பையா கருப்பாயிக்கு இப்போது வயது எண்பதை கடந்திருக்கும் அவருக்கு சரியாக வயதை சொல்ல முடியவில்லை.
காதுல தொங்கிய பாம்படத்துக்கு என்ன நடந்தது என்று பாட்டியிடம் கேட்டதும்,

“இன்னைக்கு சின்ன தம்மா துண்டு கம்மல் காதுல கிடந்தாலே அதை கொண்டு போய் வங்கியில அடமானம் வச்சுடுறானுங்க, நம்ம காதுல கிடந்தது எப்படியும் நூறு கிராம் தேறும் அந்தக் காலத்துலேயே வித்து திண்ணுட்டானுங்க” என்று சொல்லிவிட்டு கருப்பாயி பாட்டி ஏக்கமாக பார்க்கிறார்.

பாம்படம் போட்டு விடுவதற்காக அந்தக் காலத்தில் அதற்கென்று கைதேர்ந்த குறவர்கள் பெரிய ஊசிகளுடன் வீடுகளுக்கு வந்து காது குத்தி விடுவார்களாம். கூடவே அவர்களின் பைகளில் காது இழுப்பட்டு நீளமாக வளர்வதற்கு போடும் கனமான இரும்புத் துண்டுகள், ஈயக்குண்டுகள், மரக்குச்சு போன்றவற்றை காதுமடலில் போட்டு காதுத் துளையை பெரிதாக்குவார்கள். சில காது குத்தும் குறவர்கள் பனையோலையை சுருட்டி அதனை காது துளையில் நுழைத்தும் வைப்பார்களாம். இப்படி காது மடல்களில் துளையை பெரிதாக்க பல வழிகளை பின்பற்றியிருக்கிறார்கள்.

இப்படி செய்யும் முறையை காது வடிப்பது என்று கூறியிருக்கிறார்கள். பாம்படம் என்பது பந்து, கனசதுரம், வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவக வடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை. இது ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும். அரிதுளுவன், பன்னீர் செம்பு, தாமரை கால், சுண்ணா கலயம் என இதில் பல வகைகள் உண்டு.
தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண அமைப்பில் இருக்கும்.
கிட்டத்தட்ட ஒரு பாம்படத்தின் எடை ஐம்பது கிராமுக்கு மேல் இருக்குமாம், இரண்டு காதுகளிலும் நூறு கிராமுக்கு மேல் கனமான குண்டுகள் தொங்குமாம். ‘இந்தப் பாம்படம் பிகருகளை அல்லேக்கா தூக்கிட்டு போயிருந்தா ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்’ என்று எண்ணம் வருகிறதா…?

அந்தக் காலத்தில் இந்த பாம்படம் ஆபரணத்துக்கு அதிக மவுசு இருந்ததால் இதனை வடிக்கவும் பரம்பரை, பரம்பரையாக கைதேர்ந்த பொற்கொல்லர்கள் ஒவ்வொரு நகரத்திலும் இருந்திருக்கிறார்கள்.
அவரவர் வசதிக்கேற்ப பாம்படங்கள் உருவாக்கப்படும், சிலர் அந்த குண்டுகளை அப்படியே தங்கத்தில் வார்த்தெடுத்திருப்பார்கள். சிலர் அந்த ஆபரணத்தின் உள்ளே ஒருவித மெழுகு வைத்து மேலே தங்கத்தால் வார்த்தெடுத்திருப்பார்களாம்.

சில வசதி குறைந்த பாட்டிகள் வெறும் ஈயக்குண்டுகளை அணிந்திருப்பார்களாம். இந்த பாம்படங்கள் அழகுக்காக மட்டுமல்லாது அந்தஸ்த்திற்காகவும் இதனை அணிந்திருக்கிறார்கள். காதுமடலின் நீளத்தை வைத்து அவரின் செல்வாக்கை புரிந்து கொள்வார்களாம்.
இதில் முக்கியமாக தமிழ்ச் சமூகத்துக்குள் இருக்கும் சாதி பிரிவையும் இந்த பாம்படங்கள் வெளிப்படையாக சொல்லும் தன்மையில் இருந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு பாம்படத்தின் வடிவமும் ஒரு சாதிக்குரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தண்டட்டி, முடிச்சு, பாம்படம் உள்ளிட்ட நகைகளை தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள வேளாளர் இனப் பெண்கள் அதிகளவில் அணிந்திருக்கிறார்கள்.
பாம்படத்தின் வடிவமைப்பு உலகத்தின் வேறு எந்த நாகரிகத்திலும் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. பந்து, கனசதுரம், முக்கோணம், வளையம் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவக வடிவங்களும் கொண்ட வடிவில் உருவங்களால் செய்யப்பட்டிருக்கிறது. இது போன்று வடிவமைக்கப்பட்ட ஓர் அணிகலன் உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை என்று வரலாற்று ஆய்வாலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நமது செவிமடலின் கீழ் பகுதியில் உள்ள சில புள்ளிகள் அழுத்தப்பட்டால் மூளையின் நினைவாற்றல் செல்கள் தூண்டப்படும் அதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது வர்மக் கலை பாடம். இந்த கருத்து இன்றைய அறிவியலாலும் நிரூபணமாகியிருக்கிறது. அந்தக் காலத்தில் பள்ளிக் கூடத்தில் சரியாக பாடம் படிக்காத மாணவனை தோப்புக்கரணம் போடும்படி ஆசிரியர் சொல்வாராம். அந்த சமயத்தில் அந்த மாணவனின் காதுமடல் இழுப்படும் போது நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது அறிவியலாக பார்க்கப்பட்டது.

எனவே அந்தக் காலத்து பெண்களின் நினைவாற்றல் ரொம்பவும் அதிகமாக இருந்ததுக்கு இந்த பாம்படங்கள் அணிந்ததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
எனவே இப்படி உடல் ரீதியான மருத்துவ தன்மையும் கலை அம்சத்தில் ஒரு தனித்துவமும் ஒருங்கே அமையும் விதத்தில் பாம்படத்தை வடிவமைத்த நமது முன்னோர்களின் அறிவு செழுமையை என்னவென்று சொல்வது.
உலகத்தில் இன்று புதுவகை டிசைன் ஆபரணங்கள் பல சந்தைக்கு வந்திருந்தாலும் அவற்றுக்கு ஓரிரண்டு பெயர்களே இருக்கும். ஆனால் பண்டைய தமிழர்கள் எண்ணிலடங்காத நகைகளை உருவாக்கி அதற்கு 
அழகான தமிழ்ப் பெயர்களையும் சூட்டியிருக்கிறார்கள்🔵

 தலையணி

     தாழம்பூ
     தாமரைப்பூ
    சொருகுப்பூ
    சாமந்திப்பூ
    அடுக்குமல்லிப்பூ
    இலை
    அரசிலை
    இராக்குடி
    இலம்பகம்
    கடிகை
    கன்னசரம்
    குச்சம்
    குஞ்சம்
    கொண்டைத்திருகு
    கோதை
    சடாங்கம்
    சடைநாகம்
    சடைத்திருகு
    சந்திரப்பிரபை
    சரம்
    சுடிகை
    சுட்டி
    சுரிதம்
    சூடிகை
    சூடாமணி
    சூடை
    சூட்டு
    சூரியப்பிரபை
    சூழி
    சூளாமணி
    சேகரம்
    சொருகுப்பூ
    தலைப்பாளை
    தெய்வ உத்தி
    தலைப்பட்டம்
    பதுமம்
    பிறை
    புல்லகம்
    பூரப்பாளை
    பொலம்பூந்தும்பை
    பொற்பூ
    பொற்றாமரைப்பூ
    பொன்வாகை
    பொன்னரிமாலை
    மாராட்டம்
    முகசரம்
    முஞ்சம்
    வயந்தகம்
    வலம்புரி.
    திருகு பூ

காதணி

    தோடு
    கொப்பு
    ஓலை
    குழை
    இலை
    குவளை
    கொந்திளவோலை
    கன்னப்பூ
    முருகு
    விசிறி முருகு
    சின்னப்பூ
    வல்லிகை
    செவிப்பூ
    மடல்
    டோலாக்கு
    தண்டட்டி.
    பாம்படம்

கழுத்தணிகள்


    கொத்து
    கொடி
    தாலிக்கொடி
    கொத்தமல்லி மாலை
    மிளகு மாலை
    நெல்லிக்காய் மாலை
    மருதங்காய் மாலை
    சுண்டைக்காய் மாலை
    கடுமணி மாலை
    மாங்காய் மாலை
    மாதுளங்காய் மாலை
    காரைப்பூ அட்டிகை
    அரும்புச்சரம்
    மலர்ச்சரம்
    கண்டசரம்
    கண்டமாலை
    கோதை மாலை
    கோவை.
    பவளத்தாலி

புய அணிகலன்கள்

    கொந்திக்காய்.

கை அணிகலன்

    காப்பு
    கொந்திக்காய்ப்பூ
    கொலுசு.


கைவிரல் அணிகலன்கள்

     சிவந்திப்பூ
    மோதிரம்
    அரும்பு
    வட்டப்பூ.


கால் அணிகலன்கள்


    மாம்பிஞ்சுக் கொலுசு
    அத்திக்காய்க் கொலுசு
    ஆலங்காய்க் கொலுசு

கால்விரல் அணிகள்


    கான் மோதிரம்
    காலாழி
    தாழ்
    செறி
    நல்லணி
    பாம்பாழி
    பில்லணை
    பீலி
    முஞ்சி
    மெட்டி

ஆண்களின் அணிகலன்கள்

    வீரக்கழல்
    வீரக் கண்டை
    சதங்கை
    அரையணி
    அரைஞாண்
    பவள வடம்
    தொடி
    கங்கணம்
    வீரவளை
    கடகம்
    காப்பு
    பதக்கம்
    வகுவலயம்
    கழுத்தணி
    வன்னசரம்
    முத்து வடம்
    கடுக்கண்
    குண்டலம்

நகைகள் பட்டியல்

    நெற்றிப் பட்டம்
    சடைநாகம்
    மூக்குத்தி
    தோடு
    கடுக்கன்
    தொங்கட்டான்
    சங்கிலி
    அட்டியல்
    தாலி
    பாம்படம்
    பதக்கம்
    காப்பு, வளையல்
    மோதிரம்
    ஒட்டியானம்
    வளை
    சதங்கை
    காற் சங்கிலி
    சிலம்பு
    மெட்டி

Friday, March 6, 2020

அந்தக்கால ஆவணப் பெட்டகம்

மணி ஸ்ரீகாந்தன்.

டிரங்குப் பெட்டி! இந்தப் பெயரை இன்று எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
அந்தக் காலத்தில் நம்வர்களின் பீரோ, அலுமாரி எல்லாம் இந்த டிரங்குப் பெட்டிதான். எல்லோர் வீடுகளிலும் பரண் மேல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த டிரங்குப் பெட்டி விட்டுச் சென்ற நினைவுகள் பசுமையாக இன்று எம் அனைவர் மனதிலும் கருப்பு, வெள்ளை படமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

குறிப்பாக இந்தப் பெட்டியை திறந்தால், ஆடைகள், நைந்து போன கடிதங்கள், டயறி, மற்றும் ஆவணங்கள். பொட்டலமாக துணியில் கட்டப்பட்டிருக்கும் தங்க ஆபரணங்கள் என்று பலவிதமான பொருட்களின் காப்பக பெட்கமாக இருந்தது இந்த டிரங்குப் பெட்டிதான்.
வீடுகளுக்கு அலுமாரி வராத காலத்தில் கோலோச்சிய இந்த டிரங்குப் பெட்டி இன்று வீடுகளிருந்து வெளியேறி விட்டது.
எல்லாம் கால மாற்றம் தான்.
அந்த நாட்களில் வீடுகளின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிரங்குப் பெட்டிகள் கலர் கலராக வண்ணம் பூசப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும்.
பெட்டியின் உரிமையாளர் அதற்கு ஒரு பூட்டைப் போட்டு தமது உடமைகளை அதில் வைத்திருப்பார். வண்ணங்களின் அடிப்படையில் அவைகள் அடையாளம் காணப்படும்.

சாதரண ஏழைகளின் வீடுகளில் ஒரு டிரங்குப் பெட்டிதான் இருக்கும். அந்தக் குடும்ப உறுப்பினர்களின் உடமைகள் அனைத்தையும் உள்வாங்க முடியாமல் விழி பிதுங்கியபடி டிரங்குப் பெட்டிகள் காட்சியளிக்கும்.
அந்தக் காலத்தில் எமது பயணத்தின் தோழனாக நம்மோடு பயணிப்பது இந்த டிரங்குப் பெட்டிகள்தான். இந்திய வம்சாவளி தமிழர்கள் புலம்பெயர்ந்து இலங்கைக்கு வரும் போதும் இந்த டிரங்குப் பெட்டிகளோடுதான் வந்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இலங்கையில் எல்லா நகரங்களிலும் உள்ள கடைகளில் இந்த டிரங்குப் பெட்டிகள் விற்பனைக்கு இருந்திருக்கின்றன. இதே வேளை தலைநகர் கொழும்புவில் உள்ள சென்றல் வீதி மட்டுமே டிரங்குப் பெட்டிகள் மொத்த சில்லரை வியாபாரம் நடைபெறும் இடமாக இருந்திருக்கிறது.
அந்த வீதியில் நெடுகிலும் டிரங்குப் பெட்டிகள் விதவிதமான அளவுகளில் வண்ணமயமாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அந்த வீதிகளில் டிரங்குப் பெட்டிகளை பார்க்க முடியவில்லை. டிரங்குப் பெட்டிகளுக்கு என்ன நடந்தது என்று அந்த தெருவில் வசிக்கும் கோவை கணேஷிடம் கேட்டோம்,

கோவை கணேஷ்
“நம்மவர்கள் எல்லோரும் இன்று பீரோ, அலுமாரிக்கு மாறிவிட்டதால் டிரங்குப் பெட்டிகள் மறைந்துவிட்டன.
பயணங்களுக்கு கொண்டு செல்லவும் துணிகளிலான மொடர்ன் பைகள் வந்துவிட்டதால் டிரங்குப் பெட்டிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். நான் அறிந்து இந்த தெருவில் ஓரிரண்டு கடைகளில் மட்டும் சிறிய அளவிலான டிரங்குப் பெட்டிகள் விற்பனைக்கு இருந்தன. ஆனால் அது உறுதியான தகரத்தில் செய்யப்பட்டதல்ல. மிகவும் மெலிதான தகரத்தில் தயாரிக்கப்பட்டவை.
இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் ஒரு சிலர் மட்டுமே  அந்தப் பெட்டிகளை வாங்கிச் செல்வதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
வீடுகளுக்கு யாரும் டிரங்குப் பெட்டிகளை வாங்கிச் செல்வதும் இல்லை.
அந்தக் காலத்தில் நாங்கள் குடும்பத்துடன் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது இந்த டிரங்குப் பெட்டிகளில்தான் இனிப்பு உள்ளிட்ட எல்லாப் பொருட்களையும் வைத்து எடுத்துச் செல்வோம்.” என்று சொல்லும் கோவை கணேஷ் இன்னொரு விடயத்தையும் ஞாபகப்படுத்தினார்.

“அந்தக் காலத்தில் நான் ராமானுஜம் கப்பலில் வியாபார நோக்கில் தமிழகத்துக்குச் செல்வேன் அப்போது அந்த கப்பலில் தமிழகத்துக்கு தாயகம் திரும்பும் நம் உறவுகள் எல்லோரும் ஆளுக்கொரு டிரங்குப் பெட்டி வைத்திருப்பார்கள்.
அந்தப் பெட்டியில் அவர்களின் பெயர் வெள்ளை நிற பெயிண்டால் எழுதப்பட்டிருக்கும்.      உதாரணத்துக்கு ராசையா ஆதிமூலம், மண்டபம் முகாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
தமிழர்களின் வாழ்வியலோடு நீண்ட காலம் பயணம் செய்தது இந்த டிரங்கு பெட்டிகளாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டிலும் ஒரு பழங்கால டிரங்குப் பெட்டி இருக்கிறது. அந்தப் பெட்டியை ராமநாதபுரம், சாயல்குடியை சேர்ந்த என் அப்பா முத்துக்கருப்பன் பயன்படுத்தினாரு. அவரின் மறைவுக்குப் பிறகு என் அம்மா அந்தப் பெட்டியை பாதுகாத்து வந்தாரு. இப்போ நான் அதனை வைத்திருக்கிறேன்.
சில வீடுகளில் இன்று கேட்பாரில்லாமல் குப்பைகளில் வீசப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு டிரங்குப் பெட்டிகளும் எத்தனையோ பசுமையான நினைவுகளை சுமந்துக் கொண்டு மௌனமாக கிடக்கின்றன என்பதுதான் உண்மை!” என்று டிரங்குப் பெட்டிகளின் நினைவுகளில் மூழ்கிப் போனார் கோவை கணேஷ்.

சதாசிவம்
டிரங்குப் பெட்டிகளை பெரும்பாலும் வலையல், சீப்பு, சோப்பு விற்பனை செய்வோர் சுமந்து வருவார்கள். அந்த டிரங்குப் பெட்டிகள் பார்க்க ரொம்ப அழகாக வண்ணம் தீட்டப்பட்டு இருக்கும். பெரும்பாலான பெட்டிகளில் ஒட்டப்பட்டிருக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டிருப்பார்.
நம் மக்களிடையே டிரங்குப் பெட்டிகளின் பாவனை அமோகமாக இருந்தக் காலத்தில் அதனை சார்ந்து பல தொழில்களும் இயங்கி வந்துள்ளன. அதில் ஒன்றுதான் டிரங்குப் பெட்டிகளுக்கு வர்ணம் தீட்டும் தொழில். மலையக தோட்டப் பகுதிகளுக்கு அந்தக் காலத்தில் இந்த டிரங்குப் பெட்டி பெயிண்டர்கள் பவனி வருவார்களாம். அந்த அனுபவம் பற்றி ஹொரணையைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் எம்மிடம் ரொம்பவும் மகிழ்ச்சியுடன் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

“அந்தக் காலத்துல வருடத்துக்கு ஒரு முறை தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் இந்த டிரங்குப் பெட்டி பெயிண்டர்கள் ஊருக்குள் வருவார்கள். வெற்றிலை கறைப் படிந்த பற்கள், கட்டம் போட்ட சாரம், முண்டா பணியனோடு ஒரு சிறிய சாக்குப் பையில் பெயிண்ட் டப்பாக்கள், பிரஷ், மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்களையெல்லாம் போட்டு எடுத்து வருவார்கள். பம்பை தலையோடு, அவங்களை பார்க்கிற போது, நடிகர் யோகி பாபு மாதிரி இருப்பார்கள்.
அவங்க வந்ததும் அவங்கள சுற்றி சின்னப் பசங்க நாங்கள் எல்லோரும் ரவுண்டு கட்டிடுவோம். அவங்களும் உட்கார்ந்திடுவாங்க பிறகு வீடுகளிலிருந்து டிரங்குப் பெட்டிகளை கொண்டு வந்து பெயிண்ட் அடிக்க கொடுப்பார்கள். அவர்கள் பெயிண்ட் அடிக்கும் அழகை வச்சக் கண்ணு வாங்காம பார்த்திட்டு இருப்போம். அவ்வளவு அழகாக இருக்கும். வளைவு கோடுகள், பூக்கள் போன்ற டிசைன் போடுறதுக்கு சில அச்சுகளை செய்து வைத்திருப்பார்கள் அதில் டிசைன் போடுவார்கள். சில பெட்டிகளுக்கு பெயிண்ட் பூசி விட்டு அது காயவில்லை என்றால் அடுத்த நாள் வந்து அதற்கு டிசைன் போட்டு அதனை முடித்து கொடுப்பார்கள்.
நாடோடிகள் மாதிரி வரும் அவர்கள் அந்தந்த ஊரில் உள்ள கோயில்களில் தங்கியிருந்து இந்த வேலையை முடித்து விட்டு தொழிளாலர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நாளில் அவர்களுக்குரிய கூலியை வீடுகளுக்கு வந்து பெற்றுக் கொள்வார்கள். ஒரு ரூபா, அல்லது இரண்டு ரூபான்னு பெட்டிகளின் அளவைப் பொறுத்த கூலி விலையை நிர்ணயம் செய்திருப்பார்கள்.
எல்லோர் வீடுகளிலும் டிரங்குப் பெட்டி இருந்ததால் அவர்களும் கை நிறைய நல்லா காசும் சம்பாதிப்பார்கள். அவர்கள் பெயிண்ட் அடிக்கும் பெட்டிகளில் பெரும்பாலும் பச்சை நிறமும், வெள்ளை நிறத்தில் கோலம் போட்டது போல டிசைன்னும் இருக்கும்” என்று சொல்லும் சதாசிவம் பழைய நினைவுகளில் பூரித்துப் போகிறார்.

நம்மவர்களின்  வாழ்வியலில் பிரிக்க முடியாததாக இருந்த டிரங்குப் பெட்டிகள். இன்றோ அவை அருங்காட்சியகக் காட்சி பொருள்கள்போல ஆகிவிட்டன. நம்மூரில்தான் டிரங்குப் பெட்டிகளுக்கு இந்த நிலைமை. ஆனால், வெளிநாடுகளில் டிரங்குப் பெட்டிகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவே இல்லை. இன்னும் பல வெளி நாடுகளில் டிரங்குப் பெட்டிகள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஷிவாஸ் ரீகல் என்ற நிறுவனம் ‘மேட் ஃபார் ஜென்டில்மேன்’ என்ற பெயரில் டிரங்குப் பெட்டியைத் தயாரிக்கிறது. இது ஒரு சொகுசு டிரங்குப் பெட்டி. ஓக் மரத்தில் இந்த டிரங்குப் பெட்டி செய்யப்படுகிறது. பாரம்பரிய வடிவமைப்பை மாற்றாமல் நேர்த்தியான வசதிகளுடன் இந்தப் பெட்டி தயாரிக்கப்படுவதுதான் இதன் சிறப்பு.
இப்போது உள்ள நவீனப் பெட்டிகளில் இருப்பதுபோல இதில் டிரோலி வசதியும் உள்ளது. எனவே கையிலோ தலையிலோ தூக்கி வைத்துக்கொண்டு அலையத் தேவையில்லை. எளிதில் இழுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துவிட்டுப் பயணத்தில் மூழ்கலாம். இந்தப் பெட்டிக்குள் தண்ணீர், உணவு, துணிகள், கடிகாரம், பாதணிகள் வைக்கக் கச்சிதமாக இடங்கள் உள்ளன. நவீன வசதிகளுடன் பாரம்பரிய முறையிலும் தயாரிக்கப்படும் இந்த டிரங்குப் பெட்டியின் விலை வெறும் 18 ஆயிரத்து 800 அமெரிக்க டொலர் மட்டுமே!
இங்கிலாந்தில் மட்டுமல்ல இத்தாலியில் கையினால் இழைத்துச் செய்யப்பட்ட டிரங்குப் பெட்டிக்கும் வரவேற்பு அமோகமாக உள்ளதாம். குக்சி நிறுவனம் இந்த டிரங்குப் பெட்டியைத் தயாரித்திருக்கிறது. மர டிராயர், நகைகள் வைக்க லினன் துணி டிராயர் என இதில் வசதிகள் உள்ளன. பாதுகாக்கப் பிரத்யேகமான பூட்டு வசதியும் உண்டு. இந்த டிரங்குப் பெட்டியின் விலை 49 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்தான்.
இந்த சொகுசு டிரங்குப் பெட்டிகளின் விலை வாயைப் பிளக்க வைத்தாலும்,
காலம் கடந்தும், அசராத அழகுப் பெட்டிகள் இவை!
இப்படியாவது உயிர் வாழ்கிறதே என்பது  ஒரு வகையில் மகிழ்ச்சிதான்🔴

தமிழகத்தில் கோலோச்சும் இலங்கைக் கவிஞர்

மணி ஸ்ரீகாந்தன்.

சமீபத்தில் நாகசைத்தன்யா நாயகனாக நடித்து வெளிவந்த ‘லைலா ஓ லைலா’ படத்தின் அறிமுகப் பாடலான ‘இந்த லைப் நமக்கு ஒன்றே..’ என்ற பாடலை ஈழத்தைச் சேர்ந்த மீசை முளைக்காத சின்னப் பையன் மகேந்திரன் குலராஜ் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து அவரைப் பற்றி கூகுல் தெய்வத்திடம் குறிக் கேட்டதில் அவர் தற்போது பிரான்சில் இருப்பது பதிலாக கிடைக்கவே அவரை வாட்சாப்பில் வலை விரித்துப் பிடித்தோம்…
“எனக்கு இப்போ வயசு 21, மீசையும் முளைத்து விட்டது…” என்று சிரித்தவர் தொடர்ந்தார்,

“என் குடும்பத்தில் யாருமே இலக்கிய துறையில் இல்லை, ஆனால் எனக்கு தமிழ் மொழி மீது ரொம்பவும் ஆர்வம். படித்து ஒரு தமிழ் வாத்தியாராக வரணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இலக்கிய உலகுக்கு திடீர்னு பிரவேசம் செய்து விட்டேன். இது ஒரு விபத்து மாதிரிதான் நடந்தது.
பண்ணாகம் மெய்கண்டான் தமிழ் வித்தியாலயத்தில் 6வது படித்துக் கொண்டிருக்கும் போது, படம் பார்த்து கவிதை எழுதணும் என்று ஒரு பாடம் நடந்தது. பொதுவாக கணிதம், தமிழ், விஞ்ஞானம் என்று எந்தப் பாடம் நடந்தாலும் நாங்கள் கொஞ்சம் பேர் வகுப்பில் பின்னாடிதான் இருப்போம்.
ஆனால் இந்தக் கவிதை பாடத்தில் நான் முதல் ஆளாக கவிதையை எழுதி ஆசிரியையிடம் கொடுத்து விடுவேன். கவிதையை படித்த அவர் என் கவிதையை மற்ற சக ஆசிரியர்களிடம் காட்டி ரொம்பவும் வியந்து பாராட்டியதால், என் புகழ் அந்தப் பள்ளி முழுவதும் காட்டுத் தீப்போல பற்றிக் கொண்டது.

அதன் பிறகு பெரிய வகுப்புகளில் கல்வி கற்கும் அண்ணாமார்களும் என்னிடம்தான் கவிதை எழுதி வாங்கி போட்டிகளில் பங்கு பற்றினார்கள். அப்படி அவர்கள் என்னிடம் கேட்டு எழுதி வாங்கிய பல கவிதைகள் போட்டிகளில் பரிசு வென்றதால் நான் அந்தப் பள்ளியில் சின்னக் கவிஞனாக உலா வரத் தொடங்கினேன்.
கவிதைகள் மீதான எனது ஆர்வம் இப்படிதான் வளரத் தொடங்கியது. அந்த நேரத்தில் நான் எழுதிய சில கவிதைகள் பாடசாலை சஞ்சிகைகளிலும் வெளியாகின.
11வது வயதில் எழுத தொடங்கிய எனது அனைத்து கவிதைகளையும் எல்லாவற்றையும் தொகுத்து ‘வைரம்’ என்ற பெயரில் ஒரு கவிதை நூலை எனது 13வது வயதில் வெளியிட்டேன்.

பண்ணாகம் பள்ளியின் தமிழ்த் தின விழாவில் எனது கவிதை நூல் முதல் முறையாக ஒரு அழகிய நூலாக வெளியானது.
இதற்கு பாடசாலை அதிபர், தமிழ் ஆசிரியர், பள்ளியின் நூலகர் உள்ளிட்டோர் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தார்கள். அதன் பிறகு எனது இரண்டாவது நூலாக ‘சீரழிந்து போகும் தமிழரின் பண்பாடு’ என்ற நூல் எனது 14வது வயதில் வெளியானது. அந்த நூலை அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சடகோபன் வெளியிட்டு வைத்தார்.” என்று தமது பசுமையான நினைவுகளை பூரிப்புடன் குலராஜ் சொல்லும்போதே அவர் முகத்தில் குதூகலம் தெரிந்தது.
கம்பியூட்டர் தொழிநுட்பவியல் படித்துக்கொண்டிருக்கும் மகேந்திரன் குலராஜின் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறதாம்.
தமிழ் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கேட்டதும், குட்டிக் கவிஞர் குலராஜ் ரொம்பவும் உற்சாகமானார்…
“தமிழ்த் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு எனக்கு முகநூலில் தான் கிடைத்தது. எனது முகநூலில் நான் படைக்கும் கவிதைகளை கவனித்த இயக்குநர் ஏ.ஆர்.கே ராஜராஜன் எனக்கு ‘திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு தருகிறேன்’ என்று சொன்னப்போது நான் நம்பவில்லை. ஆனால் நிஜத்திலும் அது நடந்து விட்டது.

‘யாவும் காதலே’ என்ற படத்திற்குதான் நான் முதல் முதலில் பாடல் எழுதினேன் ஆனால் என் துரதிஷ்டம் அந்தப் படம் வெளியாகவில்லை. அதற்கு பிறகு இரண்டாவதாக எழுதிய ‘லைலா ஓ லைலா’ என்ற படத்தின் பாடல்தான் சமீபத்தில் வெளியானது. இதுவரையும் 18 படங்களில் பாடல் எழுதியிருக்கிறேன். அவற்றில் ஒரு சில படங்கள்தான் வெளியாகியிருக்கிறன.
இங்கே பிரான்சில் பெரிய மாஸ் நடிகர்களின் படங்களை மட்டுமே திரையிடுவதால் இன்னும் நான் பாடல் எழுதிய திரைப்படத்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இயக்குநர்கள் அனுப்பும் யூடியுப் லிங்க் உதவியுடன்தான் அந்த திரைப்படங்களை பார்க்கிறேன்.” என்றார்.

“உங்களின் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு பிரான்ஸ் ஒரு நல்ல களமாக இருக்கிறதா” என்றோம்,
“நிச்சயமாக இல்லை!” என்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்,
“கலை, இலக்கியம் என்று வரும்போது நாம் தமிழகத்தையோ அல்லது ஈழத்தையோதான் சார்ந்து இருக்க வேண்டும். இதுதான் யதார்த்த உண்மை.எனது படைப்புகள் இன்றும் தமிழகத்தில்  வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.

“தமிழகத்தில் வெளியாகும் ‘நம்ம குடும்பம்’, ‘இனிய நந்தவனம்’ உள்ளிட்ட பல சஞ்சிகைகளில் எனது கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது மூன்று புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று மணிமேகலை பிரசுரத்தில் வெளியாகவுள்ள எனது கவிதை புத்தகம். அந்தப் புத்தகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த மாதம் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அது வெளியிடப்படவுள்ளது.
அதுதவிர ‘உடல் விதைத்த பூமி’ என்ற ஒரு நாவலும் எழுதியிருக்கிறேன். அதை வெளியிடுவதற்கு ஒரு பதிபகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். ஈழத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகளை ஆவணப்படுத்தும் விதமாக அந்த நூல் அமைந்திருப்பதால் அதனை இலங்கையிலேயே வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி எமது படைப்புகளுக்கு களமாக இருப்பது தமிழகமும், இலங்கையும் தான். இங்கே பிரான்சில் தமிழக்ததை சேர்ந்தவர்களால் கம்பன் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இருந்தாலும் அவர்கள் தமிழ் இலக்கியத்துக்கு எதுவும் செய்த மாதிரித் தெரியவில்லை. தை பிறந்தால் பொங்கல் விழாவும், மாட்டுப் பொங்கலும் பொங்குவதோடு அவர்களின் பணி முடிந்துவிடுகிறது.
இது தவிர சூர்யா மியூசிக்கல் அக்காடமி என்ற குழுவில் நானும் இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஏப்பரல் மாதத்தில் கிராமிய நடனப் போட்டிகளை நடத்துகிறோம். இந்த ஆண்டு கிராமியப் பாடல் போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.  இந்த அமைப்பு தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை தமிழர்களிடம் அதனை அடையாளம் காட்டி அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.

தந்தை பெரியார்
குறிப்பாக யாழ் இசைக் கருவியை ஈழத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் இருக்கின்றோம்.” என்று பெருமிதத்தோடு பேசும் குட்டிக் கவிஞரிடம்,
“கிராமிய நடன நிகழ்ச்சிகளை ஏப்ரல் மாதத்தில் நடத்துகிறீர்கள் என்றால் அது சித்திரை புத்தாண்டில் நடக்குமா?” 
“அட நீங்க வேற, இந்த சித்திரையும், தீபாவளியும் தமிழர்களின் புத்தாண்டோ,கொண்டாட்ட நாளோ இல்லை. அவைகளை நாங்கள் கொண்டாடுவதும் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் தை முதல் நாள்தான் எங்களுக்கான புத்தாண்டு, அந்த நாளில்தான் நாங்கள் வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்கிறோம்.
இங்குள்ள மேயர் முதற் கொண்டு அரசியல்வாதிகள் வரை தை முதல் நாளில்தான் எங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்கள் அதனையே நாங்கள் வழக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.” என்றவரின் பேச்சில் ஒரு கெத்து தெரிந்தது.
“அப்போ நீங்கள் பகுத்தறிவுவாதியா?” என்று குலராஜை ரவுண்டு கட்டினோம்.

“நான் பெரியாரிஸ்ட் கிடையாது. பெரியாரின் சில கொள்கைகளை நான் முழுமையாக எதிர்க்கிறேன். குறிப்பாக தமிழை காட்டுமிராண்டி மொழி என்று அவர் கூறிய கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு அவர் ‘தமிழை 33 எழுத்துக்களுக்குள் அடக்க வேண்டும்’ என்று சொன்னது ஒரு மொழி அழிப்புக்கான அடித்தளமாக நான் பார்க்கிறேன்.
அதே வேளை பெண் விடுதலை, தீண்டாமை எதிர்ப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக பெரியாரை மதிக்கிறேன். இதே வேளை எங்கள் மண்ணில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் தமிழ் வளர்த்தார், சைவம் வளர்த்தார் என்று சொல்லப்பட்டாலும் அவர் சாதி வெறியராகவே வாழ்ந்தார் என்பதுதான் உண்மை. கீழ் சாதியினர் கல்வி கற்கக் கூடாது என்பதிலும் அந்த மக்களை தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கியதும் அவர்தான். இதற்கான ஆதரமாக அவரின் சைவ வினாவிடை, மற்றும் பாலர் பாடசாலை நூல்களை பார்த்தாலே புரியும். இந்த விடயங்களுக்காக நாவலரை நான் எதிர்க்கிறேன்.
ஆரியக் கடவுள்களை எதிர்கிறேன், அவர்களை வெறுக்கிறேன்!” என்று கோபப்பட்டவரை இடைமறித்து “அப்போ முருகன் முப்பாட்டன் என்று சொல்கிறீர்களா?” என்றோம்.

“முருகனையும், சிவனையும் நான் தமிழ் அரசர்களாக பார்க்கிறேன். இதே வேளை ஆரியக் கடவுள்களின் கதைகளை படிக்கும் போது ரொம்பவும் விந்தையாக இருக்கிறது.  இப்போ ஓரினச் சேர்க்கையைப் பற்றி பரவலாக பேசப்படுகிறது ஆனால் அந்தக் காலத்திலேயே சிவனுக்கும், விஷ்னுவுக்கும் பிறந்தவனாக ஐயனாhர் குறிப்பிடப்படுகிறார்.
சிவனுக்கும், நாரதருக்கும் பிறந்த அறுபது குழ்ந்தைகளின் பெயர்களைத்தான் சித்திரை புத்தாண்டுகளின் பெயராக  சூட்டப்பட்டிருக்கிறது.” என்று குலராஜ் எரிமலையாக வெடித்து ஓய்ந்தார்.
குடும்பத்தில் குலராஜ்தான் மூத்தவர். அவருக்கு பிறகு நான்கு தங்கைகள் இருக்கிறார்களாம். அவர்களில் இரண்டாவது தங்கைக்கு இலக்கியம் மீது ஆர்வம் இருக்கிறதாம்.
“என் தங்கை நான் படிக்கும் புத்தகங்களை வாசிப்பாள், இப்போது கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டுகிறாள்.
என் இலக்கிய ஆர்வத்துக்கு என் குடும்பத்தினர் முழுமையாக ஆதரவு தந்தார்கள் முக்கியமாக என் அம்மா எனக்கு பக்க பலமாக இருந்தார். ‘மீசை முளைக்காத வயதில் இவனுக்கு எதுக்கு கவிதையெல்லாம்’ என்று அண்டை வீட்டார்கள் கேலி பேசிய போதெல்லாம் என் அம்மா என் படைப்பிலக்கியத்தின் மீது நம்பிக்கை கொண்டு என்னை ரொம்பவும் ஊக்கப்படுத்தினார்.
கடந்த ஆண்டில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் ‘அங்கோர் தமிழ்ச் சங்கம்’ எனக்கு கவிஞருக்கான விருது வழங்கி கௌரவித்தது.” என்று குலராஜ் பெருமிதமாக பேசி முடித்தார்🔴

Thursday, March 5, 2020

எனது கனவு நாயகி திரிஷா முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்து விட்டாரா?

ஆர். கார்த்திக், மட்டக்குளிய.

ஒன்று, கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும்...இந்த ஆசை, ‘மன்மதன் அம்பு’ படத்தின் மூலம் நிறைவேறியது.
அடுத்து ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ரஜினிகாந்துடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை, ‘பேட்ட’ படத்தின் மூலம் நிறைவேறியது. சிரஞ்சீவியுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை ஒரு தெலுங்கு படத்தின் மூலம் நிறைவேறியது. ‘பாபநாசம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கும் ஒரு புதிய மலையாள படத்தில் திரிஷா, மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார்!
இதன் மூலம் திரிஷாவின் கனவுகள் அனைத்தும் நனவாகி விட்டது. அம்மணிக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது. கல்யாணம் பற்றிய பேச்சு எடுத்தாலே எரிந்து விழுகிறாராம். இதுதான் யாருக்கும் புரியலையாம்.


தமிழ் சினிமாவின் ஒரு முற்போக்கான நடிகையாக யாரைச் சொல்லலாம்?

கே.பானுஷா, இரத்தினபுரி.

வேறு யாரு நம்ம சமந்தா! அவரை நாம் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
ஐதராபாத்தில், ஒரு பெண் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் தெரியும். குற்றவாளிகள் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டதற்கு எல்லோரும் பொலிசாரை பாராட்டினார்கள்.
குறிப்பாக திரையுலக பிரமுகர்கள் தங்களின் கருத்துகளை துணிச்சலுடன் வெளியிட்டார்கள். நடிகை நயன்தாரா, “இது சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி” என்று அறிக்கை மூலம் பொலீசாரை பாராட்டினார். இந்த நிலையில் நடிகை சமந்தா, “என் கவுண்ட்டரை நான் கொண்டாட மாட்டேன். அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் அல்ல” என்று கூறியிருக்கிறார்! அப்போ அவரும் முற்போக்குவாதிதானே…


சீயான் விக்ரமின் மகன் ஜெயிப்பாரா?

எஸ். அலெக்ஸ், தெமட்டகொடை.

தெலுங்கில் மெகா வெற்றிப் பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ என்றப் படத்தை தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்கள். விக்ரமின் மகன் துருவ் அப்பாவை மிஞ்சுமளவுக்கு பின்னி எடுத்திருந்தார்.
போட்ட முதலுக்கு பாதகமில்லாமல் படம் லாபம் பார்த்திருக்கிறது. இதனால் துருவ் பிழைத்துக் கொண்டார் என்று சொல்லலாம். அடுத்த படத்தில் நடிப்பதற்கு துருவுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறதாம்.
வாரிசு நடிகர்களில் ஒரு சிலரை தவிர அனேகர் பிழைத்து, ஜெயித்து பெரிய மாஸ் நாயகர்களாக கல்லா கட்டும் இந்தக் காலத்தில் துருவ், விக்ரமின் செல்வாக்கில் ஜெயிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.


பிரசன்னாவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்களே உண்மையா?

ஏ.எப்.எச்.பாயிஷா, கண்டி.

சினேகா-பிரசன்னா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு விரைவில் ஒரு தம்பி அல்லது தங்கை பாப்பா வர இருக்கிறார். சினேகா, 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் 2 மாதங்களில் அவருக்கு பிரசவம் நடக்க இருக்கிறது.
இரண்டாவது குழந்தை வரப்போகிற ராசியில், பிரசன்னாவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம். இதனால் குழந்தை வரப்போகும் ராசிதான் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கு காரணம் என்று பிரசன்னா தனது நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம்.🔴