Saturday, April 23, 2022

கோயில் சொல்லும் கதைகள்- 1

 

மணி  ஸ்ரீகாந்தன்

சித்தர்களின் ஜீவ சமாதிகளுடன் அமையப் பெற்றுள்ள திருக்கோயில்கள் இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.
இலங்கையில் ஓரிரு இடங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஜீவ சமாதிகளுடன் அமையப் பெற்றுள்ள சில கோயில்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஜீவசமாதி என்றால் உயிருடன் சமாதியாவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்- ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்- ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள்.



குறிப்பாக சித்தர்களே ஜீவ சமாதி நிலையை அடைவார்கள்.உலகில் கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகள் கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது  அசைக்க முடியாத நம்பிக்கை.
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம  சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள்.


இப்படி அதித சக்தி கொண்ட சித்தர்கள் தமிழர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கானோர் வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்களின் ஜீவ சமாதிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் அமையப்பெற்றிருந்தாலும் தமிழகத்திலேயே அதிகமான தலையாய சித்தர்களின் ஜீவ சமாதிகள் அமையப்பெற்றிருக்கின்றன.

இலங்கையில் தென் பகுதியில் குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஜீவ சமாதியுடன் கோயில்கள்  உள்ளதா என்று தேடிப் பார்த்ததில் களுத்துறை, மாவட்டத்தில் அமைந்திருக்கும் இங்கிரிய, றைகமை தோட்டத்தில் ஒரு கோயில் இருப்பதாக கேள்விப்பட்டு அந்தப் பகுதிக்கு ஒரு விசிட் அடித்தோம்.
70பது வருடங்களுக்கு மேல் புதர் மண்டிக் கிடந்த அந்த ஜீவ சமாதி ஆலயத்தை சில தன்னார்வ இளைஞர்கள் புனர்நிர்மாணம் செய்து இருக்கிறார்கள்.
நொண்டி அழகர் திருக்கோயில் என்ற பெயரை கொண்டிருக்கிறது அந்த ஆலயம்.
ஆலயத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் ஒரு பிரமாண்டமான ஆலமரம் முதிர்ந்த விருட்சங்களுடன் மிரட்டுகிறது, அதன் அருகிலேயே ஒரு சமாதி. ஆலமர வேர்களின் ஆக்கிரமிப்பில் சில பகுதிகளே எட்டிப்பார்த்தப்படி காட்சி தருகிறது.
ஆலயத்தில் மூலவராக சமீபத்தில் அமைக்கப்பட்ட அழகரின் திருவுருவம் வெட்ட வெளியில் பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் கீழ் நம் முன்னோர்கள் வழிப்பட்ட கருங்கல் அழகர் சாமி காணப்படுகிறது. அதன் அருகிலேயே வழிப்பிள்ளையார்.
சமாதியின் முகப்பை மறைத்து வளர்ந்திருக்கும் ஆல வேர்களின் வயது நூறைக் கடந்திருக்கும் என்பதை யாரும் சொல்லாமலேயே புரிந்துக்கொள்ள முடிகிறது.
சந்தனம்

“அந்தக் காலத்துல இந்தக் கோயிலை நொண்டிப் பிச்சை கோயிலுன்னும் நொண்டி அழகர் கோயிலுன்னும் சொல்லுவாங்க. அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியாது” என்று சொல்லும் நடேசன் சந்தனத்திற்கு இப்போது 81 வயதாகிறது.
“எனக்கு அப்போ ஏழு வயதிருக்கும் அப்போதே இந்த ஆலமரமும் இந்தக் கோயிலும் இப்படியே இருந்தது. இது ஒரு ஜீவ சமாதியாதான் இருக்கணும் ஆனா இந்தியாவில இருந்து பிடிமண் கொண்டு வந்தும் இந்த இடத்தில் நிறுவி இருக்கலாம்.” என்று சொல்லும் சந்தனம், “நான் சின்னப் பையனா இருக்கும் போது அந்த சமாதியின் முகப்பு பக்கத்தில் விளக்கேற்றுவதற்கு இரண்டு வாயில்கள் போன்று சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்தது, அதில்தான் விளக்கேற்றுவார்கள். 

முகப்பு பக்கத்தில் ‘கரூர் கிழவி’ என்று எழுதியிருந்ததை நான் பார்த்திருக்கிறேன் அதுவும் முழுமையாக இல்லாமல் அப்போதே சிதிலமடைந்தே காணப்பட்டது. வள்ளிப் பாட்டி என்ற மூதாட்டிதான் இந்தக் கோயிலை அந்தக் காலத்தில் நடத்தி வந்தார்.
வெள்ளி, செவ்வாய் நாட்களில் தவறாமல் சமாதிக்கும், அழகருக்கும் விளக்கேற்றி வழிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.


ஸ்ரீமா- சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் வள்ளிப்பாட்டி இந்தியாவுக்கு போகும் போது அவர் வாழ்ந்த வீட்டையும் நாலு தென்னை மரத்தையும் அந்த குடியிருப்பு பகுதிகளில் வாழ்ந்த மாரியப்பன்(செட்டி) என்பவருக்கு தானமாக கொடுத்து விட்டு ‘தென்னை மரத்துல கிடைக்கும் தேங்காய்களை விற்று அதில வார பணத்துல எண்ணை வாங்கி அழகருக்கும், சமாதிக்கும் தவறாமல் விளக்கு போடுன்னு சொல்லிட்டுப் போச்சு! நான் பக்கத்து வீட்டுல குடியிருந்ததால அந்த சம்பவத்தை நான் நேரிலேயே பார்த்தேன்”ன்னு சொல்லும் சந்தனம் ஒரு அமானுஷ்யமான சம்பவத்தையும் சொல்கிறார்.

ராஜம்மா

“அந்தக் காலத்துல நாங்க வாழ்ந்த பகுதிகளில அழகரோட நடமாட்டம் இருந்ததாகவும். நடுநிசி வேளைகளில் அழகர் நகைகளையும், சலங்கைகளையும் கிலோ கணக்குல போட்டுக்கிட்டு குடியிருப்பு பகுதிகளில் ஜல்…ஜல்லுன்னு நடந்து சென்றதை எனது தாத்தா பெருமாள் கங்காணி தூக்கத்தில் பல தடவைகள் அசரீரியாக கேட்டதாக அவர் சொல்லக் கேட்டிருக்றேன்.”என்று சொல்லி சந்தனம் சிலீர்த்துப் போகிறார்.
சந்தனம் சொல்லும் தகவல்களின்படி ‘கரூர் கிழவி’ என்பவரின் ஜீவ சமாதிதான் அழகர் கோயில் சமாதி என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. தமிழில் ஆண், பெண் என்பதை சங்ககாலத்தில் கிழவன்,கிழவி என்றுதான் அழைத்திருக்கிறார்கள். இப்போதுதான் அந்த வார்த்தை வயதானவர்களை குறிக்கும் வார்த்தையாக மாறியிருக்கிறது.
எனவே கரூர் கிழவி, கரூர் சித்தர் பெண்ணாக இருந்திருக்கலாம். கரூர் பகுதியில் நிறைய ஜீவ சமாதிகள் இப்போதும் நிறையவே காணப்படுகின்றன. அவற்றிலிருந்து பிடிமண் கொண்டு வந்து றைகமையில் ஒரு ஜீவ சமாதியை நிறுவியிருக்கலாம் என்பது ஒரு ஐதீகம்

நிர்வாகக் குழுவினர் :
தியாகராஜா, மனோகரன்,சதாசிவம்,தனலட்சுமி,
மோகன்ராஜ்,லங்கேஸ்வரன்,கனகர், கமல்ரஜ்,


கரூரில் வாழ்ந்த கரூரார் என்ற சித்தர் தலையாய 18 சித்தர்களில் ஒருவர் அவரின் ஜீவ சமாதி இன்னமும் கரூரில் அமைந்திருக்கிறது. எனவே இந்த சமாதிக்கும் அதற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாகவே தோனுகிறது.
ஒருவேளை கரூரார் பரம்பரையில் வந்த ஒரு சித்தர் பெண்ணின் சமாதியாக கூட அழகர் ஆலய சமாதி இருக்கலாம்.
பெண் சித்தர்களுள் ஒளவையாரும், காரைக்கால் அம்மையாரும் மனித உடலோடு கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனை நேரில் தரிசித்தவர்களாம். இம்மண்ணுலகில் அவர்களைப் போல் மானிடப் பிறப்பெடுத்து, இறையை நாடிச் சென்று, இறை அனுபவத்தைப் பெற்று, சித்த நிலை கண்டு, ஜீவ முக்தி அடைந்த பெண் சித்தர்கள் பலருண்டு.
கண்ணன் ராஜம்மா (70) என்பவர் எம்மிடம் பேசும்போது, “வள்ளிப் பாட்டி இந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தததை நானும் பார்த்திருக்கிறேன்.
அந்தக் காலத்துல எங்க ஊரு மாரியம்மா கோயில்ல சாமிக்கு கரகம் பாலித்து சாமி ஆடி வரும் போது இந்த இடத்துக்கு வரும் சாமி ஆடிகள் ஒற்றைக் காலில ஆடுவதை பார்த்திருக்கிறேன். அது ஏன்னு எனக்கு தெரியல,” என்று புதிர் போடும் ராஜம்மா,
“புதர் மண்டிக் கிடந்த இடம் இப்போது புதுப் பொழிவு கண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்றார்.
கள்ளழகர், நரசிம்ம அழகர், கேள்விப்பட்டிருக்கிறோம் இது
என்ன புதுசா நொண்டி அழகர் என்பதற்கு விடை இல்லை
சேர நாட்டு துறைமுகங்களில் ஒன்றுதான் ‘தொண்டி’ இந்தப் பகுதியை கரூவூர்ச் சேரன் ஆட்சி செய்ததாக வரலாறுகள் குறிப்பிடுகிறது. எனவே ‘தொண்டி அழகர்’ என்பதே மருவி நொண்டி அழகராக மாறியிருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்தாக இருக்கிறது.

இதேவேளை தமிழக கிராமங்களில் அமையப்பெற்றுள்ள கோயில்களில் பெரும்பாலும் காரணப் பெயர்களாக அமையப் பெற்றுள்ளதை நாம் காணலாம் உதாரணத்துக்கு காட்டு மாரியம்மா, ஊத்துக் காட்டு மாரியம்மா, சடையாண்டி முனி, செவிட்டு முனி உள்ளிட்ட இந்த ஆலயங்கள் போன்றுதான் இந்த நொண்டி அழகரும் ஒரு வேளை ஊனமாக வந்த பக்தனின் நொண்டியை இந்த அழகர் குணப்படுத்தியிருக்கலாம் அல்லது தவறு செய்தவனுக்கு தண்டனையாக ஊனத்தை தந்திருக்கலாம் என்பதும் சிலரின் கருத்தாக உள்ளது.
சித்தர்களின்; ஜீவசமாதிகளில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்படுவது வழமையான ஒன்று இந்த அழகர் கோயில் சமாதியிலும் சிவலிங்கம் போன்று அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். தற்போது ஜீவ சமாதி ஆலயம் மீள் எழுப்பட்டுள்ளதால் இங்கிரியாவில்  நொண்டி அழகருக்கு மவுசு அதிகமாகி வருகிறது.🔴

Wednesday, April 20, 2022

உதயம் இளைஞர் மன்றத்தின் சித்திரை கிரிக்கெட் கொண்டாட்டம்.


 சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக உதயம் இளைஞர் மன்றம் நடத்திய பெண்கள் மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி 16ம் திகதி ஏப்ரல், ஞாயிற்றுக்கிழமை காலை றைகம், மேற்பிரிவு, சரஸ்வதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இங்கிரிய, பிரதேச செயலக இளைஞர் மன்ற பொறுப்பதிகாரி  சின்தக்க மகேஸ் கங்கந்த மற்றும் செயலகத்தின் இளைஞர் மன்ற தலைவர் நுவான் சுஜீவ ரணசிங்க, உதயம் இளைஞர் மன்றத்தின் தலைவர் ராமராஜ் மனோ உள்ளிட்ட மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹொரணை பிரதேச சபை உறுப்பினர்களான எம். நடராஜ், பொன். சரவணராஜா  உள்ளிட்டோருடன் தோட்ட தலைவர்கள் பெருமாள் ராமராஜ், தம்பிராஜா பிரசாத் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் மணி ஸ்ரீகாந்தன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஸ்ரீநாத் உள்ளிட்டோருடன் பெருந்திரளான இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வின் இறுதியில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு, வெற்றிக் கிண்ணமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
































 

Wednesday, April 13, 2022

டைனோசர்களின் பரிணாமமா யாளி?



-மணி ஸ்ரீகாந்தன்.

கோயில் சிற்பங்களில் தவறாது இடம் பிடிக்கும் ஒரு மிருகம் யாளி. தமிழர்களின் கற்பனையில் உருவாக்கம் பெற்றதாகவே இந்த மிருகம் இதுவரை சித்தரிக்கப்பட்டுள்ளது.
சீனர்களின் அடையாளமாக இருக்கும் டிராகன், எகிப்தியர்களின் அடையாளமாக இருக்கும் பீனிக்ஸ் பறவை போன்று தமிழர்களின் அடையாளமாக ஏன் இந்த யாளி மிருகம் இருக்க கூடாது?
யாளி ஒரு கற்பனை கதாபாத்திர விலங்குதான் என்றாலும், இந்த யாளியின் தோற்றம் இந்திய பெரு நிலப்பரப்பில் அமைந்திருக்கும் அனைத்து கோயில்களிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர இலங்கை, மலேசிய, பிஜி உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள ஆலயங்களிலும் இந்த யாளி இடம் பெற்றிருக்கிறது.
யாளி ஒருவரின் கற்பனை படைப்புதான் என்றாலும், இதனை ஏன் எல்லோரும் பின்பற்றினார்கள், இந்திய பெரு நிலப்பரப்பில் உள்ள அனைத்து கோயில்களிலும், தேர்களிலும் இந்த யாளி எப்படி இடம் பெற்றது என்பதுதான் புதிராக உள்ளது.


ஆனாலும் சில வரலாற்று ஆய்வாலர்களின் கருத்துப்படி யாளி அழிந்து போன குமரிக்கண்டத்தில் வாழ்ந்த ஒரு இராட்சத விலங்காக இருக்க வேண்டுமாம்.
அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சக்தி வாய்ந்த ஒரு மிருகமாக இந்த யாளி இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்தாக உள்ளது.
யாளியை சங்க காலத்தில் வியாழம், சர்பம், அலி என்ற பெயர்களிலும் அழைத்திருக்கிறார்கள்.
இதுதவிர யாளிகளில் ஆறு வகையான யாளிகள் இருந்திருக்கின்றனவாம். இதில் சிம்மயாளி, மகரயாளி, கஜயாளி, நமனியாளி, பெருயாளி, யானையாளி உள்ளிட்டவைகளை கோயில் சிற்பங்களில் நாம் காணலாம்.
இந்த ஆறு வகையான யாளிகளில் மிகவும் பயங்கரமான யாளியாக சிம்மயாளியும், கஜயாளியும்  இருப்பதாகவும் இவை மிகுந்த சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த யாளிகளின் தோற்றத்தில் சிங்கத்தைப் போன்ற உடலமைப்பும் யானைகளின் தலையும் சேர்ந்ததாக இருக்கும், சிலவற்றில் சிங்க உடம்பும் ஆட்டின் தலையையும் இணைந்ததாக இருக்கும்.
இது தவிர சங்ககால தமிழர்கள் யாளிகளுக்கு தனியிடம் வழங்கியிருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் உள்ள தூண்களில் உள்ள யாளிகளை,  யாளி வரிசை என்றே அழைக்கின்றார்கள்.
ஒரு கற்பனை மிருகத்துக்கு ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்? ஒருவேளை இந்த மிருகம் உண்மையிலேயே இருந்திருக்குமோ என்பது கேள்விக்குறியும் இருக்கிறது.

ஆனாலும் சங்க இலக்கியம் யாளிகள் மிகவும் பயங்கரமான மிருகம் என்றும் அது யானையைக் கூட அடித்துக் கொன்று விடும் என்று சொல்கிறதாம்.
சில யாளி சிற்பங்களில் ஒரு போர் வீரன் யாளியை அடக்குவது போல சிற்பங்கள் உள்ளன. எனவே யாளிகளை போரில் பயன்படுத்தினார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
யாளியை அடக்குபவன் ஒரு பெரிய மாவீரனாகவே இருந்திருக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் இதுப் பற்றி ஒரு குறிப்பு இருக்கிறதாம். அதாவது யாளியை அடக்குபவன் பேராற்றல் கொண்ட ஒரு மூலிகையை சாப்பிட்டால்தான் அதனை அடக்க முடியும் என்றும் அப்படியான வீரனை கஜகேசரி என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறதாம்.
ஒருவனை நேருக்கு நேர் மோதி வீழ்த்துபவன் வீரன் என்றும், போரில் நூறு பேரை வீழ்த்துபவன் மாவீரன் என்றும், ஆயிரம் யானைகளின் பலம் பொருந்திய யாளியை தனி ஒருவனாக மோதி வீழ்த்துபவன் கஜகேசரி என்றும் சங்க இலக்கியம் யாளியை வென்றவனுக்கு புகழாரம் சூட்டுகிறதாம்.
எனவே சங்கக்கால தமிழர்கள் கூறிச் சென்ற விடயங்களை வெறும் கற்பனை என்றோ விளையாட்டு என்றோ நாம் அவ்வளவு எளிதாக எண்ணிவிடவும் முடியாது. 

நாம் இன்றைக்கு அணு ஆயுதங்கள் பற்றியும் அணு குண்டுகள் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஒளவைப் பாட்டி ‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்று கூறியிருக்கிறார்.
ஒளவைப் பாட்டிக்கு என்னத் தெரியும், அவர் அப்படி என்ன படித்திருப்பார் என்று நாம்  சாதாரணமாக எண்ணிவிடத்தான் முடியுமா..?
எனவே சங்கத் தமிழர்களின் கருத்துகளை நகைப்புடன் கடந்து சென்றுவிட முடியாது.
‘இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி...’ என்று அகநானூறு பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் புலவர் நக்கண்ணையார்.
அதாவது, வாள் போன்ற வரிகளை உடலில் உடைய புலியானது தான் அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கம் விழுந்தால் அதை ஒருபோதும் சீண்டாத தன்மை உடையது. அத்தகைய புலியே பயந்து நடுங்கும் அளவிற்கு ஆளி அதாவது யாளியானது பாய்ந்து வந்து, உயர்ந்த நெற்றியையையுடைய யானையின் முகத்தில் தாக்கி அதன் வெண்மை நிறமான தந்தத்தையே பெயர்த்தெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது இதன் பொருள்.
இதே போன்று சங்க இலக்கிய நூலான நற்றிணையிலும்  இள நாகனார் பாடிய ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.
“அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம்’
என்று முடிகிறது அந்தப் பாடல்,
யாளிகள் பெரும்பாலும் சிங்கம் போன்ற உடல் மற்றும் முகத்துடன், முகத்தில் யானையின் துதிக்கை போன்ற உறுப்பையும் பெற்றிருக்கும். உடல் சிம்மமாக இருந்தாலும் சிலவகையில் யாளியின் முகங்கள் மட்டும் வேறுவேறு விலங்குகளாக மாறுபாடு அடைகின்றன.



யாளிகள் மூன்று வகையாகக் கூறப்படுகின்றன.  சிம்ம யாளி எனப்படும் சிங்க முக யாளி, மகர யாளி எனப்படும் ஆடு முக யாளி மற்றும் யானை யாளி. ஆனால், எல்லா யாளிகளின் வடிவத்தையும் பாம்பின் வால் தோற்றமே முழுமை செய்கிறது.
யானையின் பலத்தையும், சிம்மத்தின் வேகம் மற்றும் ஆற்றலையும், பாம்பின் பய காரணியையும் ஒருங்கே கொண்டது யாளி என்பது இது உணர்த்தும் தத்துவமாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஆனந்த விகடனில் எழுத்தாளர் வெங்டேசன் எழுதிய ‘வேல் பாரி’ என்ற தொடரில் கபிலரும், பாரியும் பேசிக்கொள்வது போல ஒரு உரையாடல் வரும்
அதில், கோயில்களிலும், சங்க இலக்கியத்திலும் வரும் யாளி என்ற மிருகம் உமையிலேயே வாழ்ந்ததா என்பது பற்றிய உரையாடலாகவே அது அமைந்திருக்கும், அதில் கபிலர் “யாளி என்ற மிருகம் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை”ன்னு மறுப்பார், அதற்கு பாரி “யாளி உண்மையிலேயே வாழ்ந்த மிருகம்தான்” என்று கூறி அதற்கான ஆதாரம் ஒன்றை குறிப்பிடுவார்.  
அவர் வாழ்ந்த பகுதியில் ‘ஆழி மலை’ என்று ஒரு மலைப்பகுதி உள்ளதாம். அந்தப் பகுதிக்குள் யானைகள் செல்வதே இல்லையாம், ஏனென்றால் அந்தப் பகுதியில்தான் யானைகளை அடித்து சாப்பிடும் யாளிகள் வாழ்ந்ததாகவும். அதனால் இன்றுவரை யானைகளுக்கு ‘ஆழி மலை’ மீது ஒரு பயம் இருப்பதாகவும் மிருகங்களில் யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதால் யாளிகள் பற்றிய அச்சம் யானைகளின் இரத்தத்தில் இன்றுவரை கலந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.


குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகளை இளங்கோவடிகளே அதிகமாக எழுதியிருக்கிறார். குமரிக்கோடு எனும் ஒரு பெரிய காட்டு மலைப் பகுதியை அவர் குறிப்பிடுகிறார். யாளி அந்த காட்டுப் பகுதியில் வாழ்ந்து மறைந்திருக்கலாம் என்பது ஒரு சில ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
யாளி டைனோசரை விடவும் பலம் பொருந்திய ஒரு மிருகமாக இருந்திருக்கலாம் என்றும் யாளி ஒரு இறந்து போன யானையை தன் கால் நகத்தினால் சுலபமாக தூக்கி வருவது போன்றும் கோயில் சிற்பங்களில் செதுக்கியிருக்கிறார்கள். அவ்வளவு பெரிய அடங்கா மிருகத்தையே தமிழர்கள் அடக்கியிருக்கிறார்கள் என்பதையும் கோயில் சிற்பங்களே நமக்கு பறைசாற்றுகிறது.
பழங்காலத்தில் வாழ்ந்த ஆதிச் சோழர்களே இந்த மிருகத்தை அடக்கி ஆண்டதாகவும் அதனாலேயே கோயில்களில் அவற்றுக்கு தனியிடம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆயிரம் தூண்களிலும் இந்த யாளிகளின் சிற்பங்கள் காணப்படுகிறன்றன. எனவே இல்லாத ஒரு மிருகத்துக்கு எதற்காக இப்படியொரு முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பது இன்று வரை விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் டைனோசர் பற்றிய கதைகள் இருந்தாலும் அதனை யாரும் நம்பவில்லை, அதுவும் ஒரு கற்பனை கதைதான் என்று கூறிவந்த நிலையில்தான் அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு டைனோசர் என்ற பிரமாண்டமான உயிரினம் இந்த மண்ணில் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டது.
அதேப் போல் இந்த யாளிகள் பற்றிய ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அதுவும் கடலுக்குள் மூழ்கிக்கிடக்கும் குமரிக் கண்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.  சில சமயம் தமிழகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கக்கூடிய டைனோசர்கள் தான் யாளியாக குறிப்பிடப்படுகிறதோ என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 🔴