Saturday, April 23, 2022

கோயில் சொல்லும் கதைகள்- 1

 

மணி  ஸ்ரீகாந்தன்

சித்தர்களின் ஜீவ சமாதிகளுடன் அமையப் பெற்றுள்ள திருக்கோயில்கள் இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.
இலங்கையில் ஓரிரு இடங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஜீவ சமாதிகளுடன் அமையப் பெற்றுள்ள சில கோயில்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஜீவசமாதி என்றால் உயிருடன் சமாதியாவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்- ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்- ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள்.



குறிப்பாக சித்தர்களே ஜீவ சமாதி நிலையை அடைவார்கள்.உலகில் கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகள் கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது  அசைக்க முடியாத நம்பிக்கை.
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம  சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள்.


இப்படி அதித சக்தி கொண்ட சித்தர்கள் தமிழர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கானோர் வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்களின் ஜீவ சமாதிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் அமையப்பெற்றிருந்தாலும் தமிழகத்திலேயே அதிகமான தலையாய சித்தர்களின் ஜீவ சமாதிகள் அமையப்பெற்றிருக்கின்றன.

இலங்கையில் தென் பகுதியில் குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஜீவ சமாதியுடன் கோயில்கள்  உள்ளதா என்று தேடிப் பார்த்ததில் களுத்துறை, மாவட்டத்தில் அமைந்திருக்கும் இங்கிரிய, றைகமை தோட்டத்தில் ஒரு கோயில் இருப்பதாக கேள்விப்பட்டு அந்தப் பகுதிக்கு ஒரு விசிட் அடித்தோம்.
70பது வருடங்களுக்கு மேல் புதர் மண்டிக் கிடந்த அந்த ஜீவ சமாதி ஆலயத்தை சில தன்னார்வ இளைஞர்கள் புனர்நிர்மாணம் செய்து இருக்கிறார்கள்.
நொண்டி அழகர் திருக்கோயில் என்ற பெயரை கொண்டிருக்கிறது அந்த ஆலயம்.
ஆலயத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் ஒரு பிரமாண்டமான ஆலமரம் முதிர்ந்த விருட்சங்களுடன் மிரட்டுகிறது, அதன் அருகிலேயே ஒரு சமாதி. ஆலமர வேர்களின் ஆக்கிரமிப்பில் சில பகுதிகளே எட்டிப்பார்த்தப்படி காட்சி தருகிறது.
ஆலயத்தில் மூலவராக சமீபத்தில் அமைக்கப்பட்ட அழகரின் திருவுருவம் வெட்ட வெளியில் பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் கீழ் நம் முன்னோர்கள் வழிப்பட்ட கருங்கல் அழகர் சாமி காணப்படுகிறது. அதன் அருகிலேயே வழிப்பிள்ளையார்.
சமாதியின் முகப்பை மறைத்து வளர்ந்திருக்கும் ஆல வேர்களின் வயது நூறைக் கடந்திருக்கும் என்பதை யாரும் சொல்லாமலேயே புரிந்துக்கொள்ள முடிகிறது.
சந்தனம்

“அந்தக் காலத்துல இந்தக் கோயிலை நொண்டிப் பிச்சை கோயிலுன்னும் நொண்டி அழகர் கோயிலுன்னும் சொல்லுவாங்க. அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியாது” என்று சொல்லும் நடேசன் சந்தனத்திற்கு இப்போது 81 வயதாகிறது.
“எனக்கு அப்போ ஏழு வயதிருக்கும் அப்போதே இந்த ஆலமரமும் இந்தக் கோயிலும் இப்படியே இருந்தது. இது ஒரு ஜீவ சமாதியாதான் இருக்கணும் ஆனா இந்தியாவில இருந்து பிடிமண் கொண்டு வந்தும் இந்த இடத்தில் நிறுவி இருக்கலாம்.” என்று சொல்லும் சந்தனம், “நான் சின்னப் பையனா இருக்கும் போது அந்த சமாதியின் முகப்பு பக்கத்தில் விளக்கேற்றுவதற்கு இரண்டு வாயில்கள் போன்று சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்தது, அதில்தான் விளக்கேற்றுவார்கள். 

முகப்பு பக்கத்தில் ‘கரூர் கிழவி’ என்று எழுதியிருந்ததை நான் பார்த்திருக்கிறேன் அதுவும் முழுமையாக இல்லாமல் அப்போதே சிதிலமடைந்தே காணப்பட்டது. வள்ளிப் பாட்டி என்ற மூதாட்டிதான் இந்தக் கோயிலை அந்தக் காலத்தில் நடத்தி வந்தார்.
வெள்ளி, செவ்வாய் நாட்களில் தவறாமல் சமாதிக்கும், அழகருக்கும் விளக்கேற்றி வழிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.


ஸ்ரீமா- சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் வள்ளிப்பாட்டி இந்தியாவுக்கு போகும் போது அவர் வாழ்ந்த வீட்டையும் நாலு தென்னை மரத்தையும் அந்த குடியிருப்பு பகுதிகளில் வாழ்ந்த மாரியப்பன்(செட்டி) என்பவருக்கு தானமாக கொடுத்து விட்டு ‘தென்னை மரத்துல கிடைக்கும் தேங்காய்களை விற்று அதில வார பணத்துல எண்ணை வாங்கி அழகருக்கும், சமாதிக்கும் தவறாமல் விளக்கு போடுன்னு சொல்லிட்டுப் போச்சு! நான் பக்கத்து வீட்டுல குடியிருந்ததால அந்த சம்பவத்தை நான் நேரிலேயே பார்த்தேன்”ன்னு சொல்லும் சந்தனம் ஒரு அமானுஷ்யமான சம்பவத்தையும் சொல்கிறார்.

ராஜம்மா

“அந்தக் காலத்துல நாங்க வாழ்ந்த பகுதிகளில அழகரோட நடமாட்டம் இருந்ததாகவும். நடுநிசி வேளைகளில் அழகர் நகைகளையும், சலங்கைகளையும் கிலோ கணக்குல போட்டுக்கிட்டு குடியிருப்பு பகுதிகளில் ஜல்…ஜல்லுன்னு நடந்து சென்றதை எனது தாத்தா பெருமாள் கங்காணி தூக்கத்தில் பல தடவைகள் அசரீரியாக கேட்டதாக அவர் சொல்லக் கேட்டிருக்றேன்.”என்று சொல்லி சந்தனம் சிலீர்த்துப் போகிறார்.
சந்தனம் சொல்லும் தகவல்களின்படி ‘கரூர் கிழவி’ என்பவரின் ஜீவ சமாதிதான் அழகர் கோயில் சமாதி என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. தமிழில் ஆண், பெண் என்பதை சங்ககாலத்தில் கிழவன்,கிழவி என்றுதான் அழைத்திருக்கிறார்கள். இப்போதுதான் அந்த வார்த்தை வயதானவர்களை குறிக்கும் வார்த்தையாக மாறியிருக்கிறது.
எனவே கரூர் கிழவி, கரூர் சித்தர் பெண்ணாக இருந்திருக்கலாம். கரூர் பகுதியில் நிறைய ஜீவ சமாதிகள் இப்போதும் நிறையவே காணப்படுகின்றன. அவற்றிலிருந்து பிடிமண் கொண்டு வந்து றைகமையில் ஒரு ஜீவ சமாதியை நிறுவியிருக்கலாம் என்பது ஒரு ஐதீகம்

நிர்வாகக் குழுவினர் :
தியாகராஜா, மனோகரன்,சதாசிவம்,தனலட்சுமி,
மோகன்ராஜ்,லங்கேஸ்வரன்,கனகர், கமல்ரஜ்,


கரூரில் வாழ்ந்த கரூரார் என்ற சித்தர் தலையாய 18 சித்தர்களில் ஒருவர் அவரின் ஜீவ சமாதி இன்னமும் கரூரில் அமைந்திருக்கிறது. எனவே இந்த சமாதிக்கும் அதற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாகவே தோனுகிறது.
ஒருவேளை கரூரார் பரம்பரையில் வந்த ஒரு சித்தர் பெண்ணின் சமாதியாக கூட அழகர் ஆலய சமாதி இருக்கலாம்.
பெண் சித்தர்களுள் ஒளவையாரும், காரைக்கால் அம்மையாரும் மனித உடலோடு கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனை நேரில் தரிசித்தவர்களாம். இம்மண்ணுலகில் அவர்களைப் போல் மானிடப் பிறப்பெடுத்து, இறையை நாடிச் சென்று, இறை அனுபவத்தைப் பெற்று, சித்த நிலை கண்டு, ஜீவ முக்தி அடைந்த பெண் சித்தர்கள் பலருண்டு.
கண்ணன் ராஜம்மா (70) என்பவர் எம்மிடம் பேசும்போது, “வள்ளிப் பாட்டி இந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தததை நானும் பார்த்திருக்கிறேன்.
அந்தக் காலத்துல எங்க ஊரு மாரியம்மா கோயில்ல சாமிக்கு கரகம் பாலித்து சாமி ஆடி வரும் போது இந்த இடத்துக்கு வரும் சாமி ஆடிகள் ஒற்றைக் காலில ஆடுவதை பார்த்திருக்கிறேன். அது ஏன்னு எனக்கு தெரியல,” என்று புதிர் போடும் ராஜம்மா,
“புதர் மண்டிக் கிடந்த இடம் இப்போது புதுப் பொழிவு கண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்றார்.
கள்ளழகர், நரசிம்ம அழகர், கேள்விப்பட்டிருக்கிறோம் இது
என்ன புதுசா நொண்டி அழகர் என்பதற்கு விடை இல்லை
சேர நாட்டு துறைமுகங்களில் ஒன்றுதான் ‘தொண்டி’ இந்தப் பகுதியை கரூவூர்ச் சேரன் ஆட்சி செய்ததாக வரலாறுகள் குறிப்பிடுகிறது. எனவே ‘தொண்டி அழகர்’ என்பதே மருவி நொண்டி அழகராக மாறியிருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்தாக இருக்கிறது.

இதேவேளை தமிழக கிராமங்களில் அமையப்பெற்றுள்ள கோயில்களில் பெரும்பாலும் காரணப் பெயர்களாக அமையப் பெற்றுள்ளதை நாம் காணலாம் உதாரணத்துக்கு காட்டு மாரியம்மா, ஊத்துக் காட்டு மாரியம்மா, சடையாண்டி முனி, செவிட்டு முனி உள்ளிட்ட இந்த ஆலயங்கள் போன்றுதான் இந்த நொண்டி அழகரும் ஒரு வேளை ஊனமாக வந்த பக்தனின் நொண்டியை இந்த அழகர் குணப்படுத்தியிருக்கலாம் அல்லது தவறு செய்தவனுக்கு தண்டனையாக ஊனத்தை தந்திருக்கலாம் என்பதும் சிலரின் கருத்தாக உள்ளது.
சித்தர்களின்; ஜீவசமாதிகளில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்படுவது வழமையான ஒன்று இந்த அழகர் கோயில் சமாதியிலும் சிவலிங்கம் போன்று அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். தற்போது ஜீவ சமாதி ஆலயம் மீள் எழுப்பட்டுள்ளதால் இங்கிரியாவில்  நொண்டி அழகருக்கு மவுசு அதிகமாகி வருகிறது.🔴

No comments:

Post a Comment