பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒருங்கமைப்பில் பெருந்தொகையான நிவாரணப் பொருட்கள் நாடு முழுவதும் தமிழ், சிங்கள மக்களுக்கு கையளிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, “நம் இனத்தை மறக்காமல் நீங்கள் செய்த உதவி மகத்தானது” என்று, தமிழக முதல்வருக்கு, இலங்கை தமிழர்களும், சிங்களவர்களும் மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு தற்போது இலங்கை முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் உணவுப் பற்றாக்குறையும் குறிப்பாக அரிசி பஞ்சமும் ஏற்பட்டுள்ள இந்த வேளையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் அனுப்பப்பட்டுள்ள அரிசி, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
இந்திய வம்சாவளி தமிழர்களும், சிங்களவர்களும் அதிகம் வசிக்கும் களுத்துறை மாவட்டம், இங்கிரிய, றைகம, விபுலானந்தா உயர்நிலைப் பள்ளியில் சமீபத்தில் தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்களில் பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளையும் தமது அன்பினையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
“இக்கட்டான சூழலில் இலங்கை மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் தமிழக முதல்வருக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றும் முதல்வருக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என்றும் சிங்களவர்களும், தமிழர்களும் பெருமிதமாக தமது கருத்துகளை பகிர்ந்திருந்தார்கள்.
தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி, தற்போது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





















No comments:
Post a Comment