Wednesday, June 15, 2022

நித்தியானந்தாவுக்கு நடந்தது என்ன?



‘தன்னை தாழ்த்துகிறவன் எவனோ
அவன் உயர்த்தப்படுகிறான்’ என்பது ஒரு வேத நூல் சொல்லும் அழகான வார்த்தை.  அதை அப்படியே, அச்சுப் பிழைக்காமல் நகலெடுத்ததுபோல் தமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இன்றைய இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர்தான் நம்ம நித்தியானந்தா.
“நான் ஒரு எச்ச சோறு. நான் ஒரு பொறம்போக்கு. என்னையெல்லாம் யாரும் கண்டுக்கப்படாது. அப்படியே ஓடுகாலி ஓடட்டும்னு வேடிக்கை மட்டும்தான் பார்க்கணும்”ன்னு நித்தி என்னதான் சொன்னாலும் அவர் என்ன செய்கிறார், அவர் சாப்பிட்டாரா, தூங்கினாரான்னு அவரைப் பற்றி என்ன செய்தி வந்திருக்குதுன்னு நெட்டில் தேடும் நெட்டிசன்களின் ஆர்வத்தை அவ்வளவு ஈசியாக கட்டுப்படுத்திவிட முடியாது. இப்படி தினமும் நித்தி பற்றிய செய்திகளை தேடும் நெட்டிசன்களுக்கு பேரிடியாக வந்த செய்திதான் அவரின் மரணச் செய்தி.

சுவாமி நித்தியானந்தா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார், அவர் சமாதி நிலையில் இருக்கிறார் என்பது போன்ற செய்திகளின் உண்மைத்தன்மைதான் என்ன என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தோம்.நித்தியானந்தா தினமும் தமது ‘சத்சங்’ உரைகளை தமது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதை வழமையாக கொண்டிருந்தார். நித்தியின் ‘சத்சங்’ உரைகளை கேட்பதற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள், பக்தர்கள் என பலரும் காத்துக்கிடந்தார்கள். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக நித்தியின் ‘சத்சங்’ உரை திடீரென நிறுத்தப்பட்டிருந்தது, இதனையடுத்து நித்தியின் மீது ஆர்வமுள்ள ரசிகர்கள் அவரைப் பற்றிய செய்திகளை பலவிதமாக திரிபுபடுத்தி தமது வலைத்தளங்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்.இந்திய தொலைக்காட்சிகளும் இதே வேலையைதான் செய்து வருகின்றனவாம். “செய்தி நிறுவனங்கள் பரப்பும் பொய்களை நம்பவேண்டாம். எத்தனை விளக்கம் கொடுத்தாலும் வாங்கிய பணத்திற்காக கூவியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்து விரோத ஊடகங்கள், பகவான் நித்தியானந்தா பரமசிவத்தின் உடல்நிலை பற்றிய வதந்தியைப் பரப்பி, மக்களிடம் வெறுப்பு பிரசாரம் செய்து வருகின்றார்கள்" என்று நித்தியானந்தாவின் கைலாசா பிரதிநிதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருக்கு அருகே அமைந்திருக்கும் பிடதி ஆசிரமம் மற்றும் அகமதாபாத் ஆசிரமங்களில் நடைபெற்றதாக கூறப்படும் பெண் சிஷ்யைகள் மீதான பாலியல் சீண்டல்கள், சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, வடிவேலு ஸ்டைலில் கோயில் கட்டுவதாக சொல்லியும், தம்மை நம்பி வந்தவர்களிடம் சித்து வேலைக் காட்டியும் வசூலித்த பல கோடி ரூபா பணத்தையெல்லாம் தங்கக்கட்டிகளாக மாற்றி, நேபாளம் வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும் அதன்பிறகு அவர் பசுபிக் பெருங்கடலில் ஒரு தீவை சொந்தமாக வாங்கி அதற்கு ‘கைலாசா’ என்று பெயர் வைத்து தனிக் கொடி, தனிப் பாஸ்ப்போட், கைலாசா ரூபா நோட்டுகள் என்றெல்லாம் செய்திகளைப் பரவவிட்டு நம்மை அதிரவைத்ததெல்லாம் சுவாரஸ்யமான தனிக் கதை.


என்னதான் நித்தியானந்தா கிரிமினல் குற்றவாளி என்றாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்தளவுக்கு வசீகரமான கலகலப்பு நிறைந்ததுதான் அவரது ஆன்மீகப் பேச்சு. தமது உரையில் மிகவும் எளிய தமிழ் சொல்லாடல்களைப் பயன்படுத்தி சோஷியல் மீடியா மாம்சுகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்தான் நித்தி.

சாமியார்களுக்கு சூடு, சொரணை இருக்கவே கூடாது என்பதை நோ சூடு, நோ சொரணை என்று நகைச்சுவையாக பேசிய நித்தி, தற்போது ஒரு மரக்கட்டையை போல் மெலிந்த தேகத்துடன் உணர்வில்லாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், நித்தி, தாம் வேறொரு உலகத்தில் சஞ்சாரம் செய்வதாகவும் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வதாகவும் சொல்கிறார்.சமாதி நிலையில் இருக்கும் அவரின் உடம்புக்குள் நித்தியின் ஆத்மா உள்ளே வந்ததும் திடுக்கிட்டு விழித்துக்கொள்வதாகவும் அப்போது அவரின் பக்கத்தில் இருக்கும் சிஷ்யைகளை (குறிப்பாக ரஞ்சிதாவை) அடையாளம் தெரிவதில்லை என்றும், தாம் ஒரு பலூன்போல மிதப்பதை உணர்வதாகவும் சொல்கிறார். இரண்டு, மாதங்களாக உணவு, தண்ணீர் என்று எதுவுமே இல்லாமல் இருக்கும் நித்திக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பியிருப்பதாகவும் 27 மருத்துவர்கள் பரிசோதனை செய்தும் நித்தியின் உடம்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நித்தியானந்தாவின் முகநூல் கணக்கில் முகம் காட்டாத அவரின் பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பதினெட்டு வயது இளைஞனைபோல் இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்றும், நித்திய சிவ பூஜையும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறு வயதில்


இந்நிலையில், நித்தியானந்தா ஒரு புதிய அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறார் அதில், தன்னால் முழுமையாக தூங்க முடியவில்லை என்றும் ஒரு இட்லியை கூட சாப்பிட முடியவில்லை எனவும் எனவே தமது ஆசிரமத்தின் நிர்வாகத்தை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
“நான் தற்போது பெரிய காற்று பலூனாக உணர்கிறேன். அத்தோடு எனது அடையாளங்கள் பிரபஞ்சத்துடன் நகர்வதை உணர முடிகிறது. முழுமையான தனிமை. நான் என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஆனால், தனிமையின் சோர்வு, சளிப்பு இல்லை. இப்போது நான் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போது அனைத்து நாடிகளும் சமாதிக்குள் இறங்குகின்றன. சுவாசம் இல்லை, விசித்திரம் இல்லை, விசித்திரமே இல்லாத அனுபவம் ஏற்படுகிறது. நான் என் உடலை வலுவாக வைத்திருப்பதாக என்னை கவனித்துக்கொள்ளும் மருத்துவர் சொல்கிறார்” என்று குறிப்பிட்டுள்ள நித்தி,
“இன்னும் சில மருத்துவ சோதனை முடிவுகள் வந்துள்ளன. மருத்துவ அறிக்கையின்படி உடல் முழுமையான ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், இன்னும் ஒரு இட்லி சாப்பிட வரல. 21 நிமிசம் தூங்க வரல. பனி மூடிய மலைகள் என்னை மிகச் சிறந்த ஆற்றல் உள்ளவனாக உயிரோடு வைத்திருக்கிறது. நான் குரு பராம்பராவுக்கு விருப்பமான முழு பாவ வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன்.
நான் நீண்டகாலமாக வாழ வேண்டும் என்று விரும்பியிருந்தேன். இந்த உலகிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்பியதில்லை.
நான் முற்றிலும் நிறைவடைந்து விட்டேன். சமாதியை பற்றிய ஒவ்வொரு விபரமும் தெளிவாகப் புரிகிறது. நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பதால் இதை அனுபவிக்கலாம்” என்ற நித்தி, தம்மை பரமசிவன் மக்களுடன் பேசுவதற்கான ஒரு ஒலிப்பெருக்கியைப் போன்று பயன்படுத்த எண்ணுகிறார் என்று அந்தப் பதிவில் நித்தியானந்தா ஒரு குழப்ப நிலையில் பதிவிட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதிதான் நித்தி சமாதி நிலையை
அடைந்துவிட்டதாக செய்திகள் உலா வந்தன. அதனைத் தொடர்ந்து நித்தியானந்தாவின் சீடர்கள் தமது இணையப் பக்கங்களிலும், ஆசிரமத்திலும் நித்தியானந்தாவின் புகைப்படங்களை வைத்து விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக, ராஜமாதா என்றழைக்கப்படும் நடிகை ரஞ்சிதாவின் இணையப் பக்கத்திலும் பிரார்த்தனைப் படங்களே பகிரப்பட்டுள்ளதால் நித்தியானந்தா விடயத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தா, தாம் 200 வருடங்கள் வாழப்போவதாகவும் அதற்கான வழிமுறைகளை தாம் செய்துவிட்டதாகவும், வேப்பிலை, அருகம்புல், கடுக்காய், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்டவைகளை உணவில் சேர்த்து, நீராகாரத்தை உண்டு வருவதாகவும். தாம் ஐந்து தலைமுறைகளை பார்க்கப்போவதாகவும் தாம் சொல்லும் ஆயுர்வேத மருத்துவ முறைகளை நம்பாமல் மீம்ஸ் போட்டு கிண்டலடிப்பவன் செத்துப் போவான்னு நித்தி சொல்லியிருந்ததை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்தோம்.


எனவே, நித்தியானந்தா தமது வழமையான உணவு
முறைகளிலிருந்து மாறி 200 வருடங்கள் உயிர் வாழ்வதற்கான முயற்சியில் இறங்கி, உடலை வருத்தி செய்த உணவுப் பயிற்சிகளில் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே அவருக்கு கல்லீரல் அலர்ஜி, சிறுநீரகத் தொந்தரவு என ஏற்பட்டதோடு தற்போது நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சுவிடவே கஷ்டப்படுவதாகவும் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.



இதனை மறுத்துள்ள நித்தியானந்தாவின் சிஷ்யை மாணிக்க ஜோதியானந்தா சுவாமி, பரமசிவம் சமாதி நிலையில் இருப்பதாகவும் அவர் விரைவில் நம் முன்னே வந்து ‘சத்சங்’ உரையாற்றுவார் என்றும் தாங்கள் வெறும் பாவாடை சாமியார்கள் அல்ல என்றும், பரமசிவனிடமிருந்து நேரிடையாக தீட்சை பெற்றவர்கள் என்றும் தாங்கள் ஆசிரம புனர்நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
சமாதி நிலை என்றால் என்ன? என்று தமிழகத்தில் வசிக்கும் நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவரிடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம்,
“சமாதி நிலை என்பது பிரபஞ்ச சக்திகளை உள்வாங்குவது. இந்த நிலை முற்றிலும் ஆரோக்கியமான விடயம்தான். உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அது உண்மையிலேயே பிரபஞ்ச ஒழுங்கு முறை. ஞானிகள், மகான்கள் ஆழ்ந்த தவத்தில் இருக்கும்போது இந்த உடலின் வெளிப்புறம் எந்த செயலையும் செய்ய முடியாத ஒரு மரக்கட்டைபோன்றுதான் இருக்கும். அந்தக் காலத்தில் வாழ்ந்த சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் சமாதி நிலையில் இருந்தவர்தான், ஒரு முறை சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் காவிரி கரையின் ஓரத்தில் சமாதி நிலையில் தவமிருந்தார்.

அப்போது பெரிய காட்டாற்று வெள்ளம் வந்ததில் பிரமேந்திர சுவாமிகளும் அந்த வெள்ளத்தில் சிக்குண்டு அடித்துச் செல்லப்பட்டார். அந்தக் காட்சியை நேரில் பார்த்த மக்களும் “அய்யோ சாமியாரை வெள்ளம் கொண்டு போயிடுச்சே"ன்னு பதறினார்கள். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு காவிரி ஆறும் வற்றிப்போனது அப்போது ஓர் இடத்தில் விவசாயிகள், விவசாயத்துக்காக பூமியை மண் வெட்டியால் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவரின் மண்வெட்டி வேறு எதையோ வெட்டியதை உணர்ந்த விவசாயி, மண்வெட்டியை உற்றுப் பார்த்தார்.
அப்போது மண்வெட்டியின் ஓரத்தில் இரத்தம் இருந்ததை அவதானித்த அவர், பதறிப் போனார். பிறகு மற்றவர்களும் வந்துவிட கைகளாலேயே மண்ணை அப்புறப்படுத்திய போது அங்கே சில மாதங்களுக்கு முன்னாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் தியான நிலையில் அமர்ந்திருந்ததையும். அவரின் தலையிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருப்பதையும் அவதானித்தார்கள். அதன் பிறகு சுவாமி சுய நினைவுக்கு வந்து அந்த இடத்திலிருந்து நடந்து சென்றிருக்கிறார். இதே நிலையில்தான் தற்போது நித்தியானந்தா இருப்பதாகவும் அவரால் எந்த செயலையும் செய்ய முடியாது என்றும் அவர் சமாதி நிலையிலிருந்து பூரணமாக மீண்டதற்கு பிறகே நமக்கு அவர் அருள்பாலிப்பார்”ன்னு அந்த நண்பர் மெய்சிலிர்த்து சொன்னார்.
திருவண்ணாமலையில் நித்தியானந்தாவுக்கு 16ஆவது வயதில் யோக பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு அவரை குருபீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சமாதி நிலைக்கான பயிற்சிகளை எடுத்துவந்த நித்தியானந்தா தமது 44ஆவது வயதில் சமாதி நிலையை அடைந்துள்ளதாகவும் அவரின் பக்தர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.


இந்நிலையில், தமிழகத்தின் பிரபலமான சமூக ஆர்வலரும், டாக்டருமான சர்மிலா பாலாஜியிடம் நித்திக்கு என்ன வியாதி வந்திருக்கும் என்று கேட்டதற்கு, “அவர் செய்த அழிச்சாட்டியங்களுக்கு யாருக்கும் வரக்கூடாத வியாதி வந்திருக்கும். அவர் உடல் மெலிந்து கிடப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோணுகிறது” என்று நக்கலாகவே பதிலளித்திருக்கிறார்.
இதேவேளை, நித்தியின் பாலியல் வழக்கு, கைலாசா கணக்கு மற்றும் பண பரிமாற்றம் என்று அத்தனையையும் நித்தியானந்தா குருபீடத்தின் ராஜமாதாவான ரஞ்சிதாவின் கண் அசைவிலேயே நடப்பதாகவும், நித்திக்குப் பிறகு அவரின் ஆசிரமப் பணிகளை தொய்வின்றி தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்திருப்பதாகவும் நம்பகமாக செய்திகள் கிடைத்திருக்கின்றன.
இருந்தாலும் இந்திய பொலிஸ் ஒரு புதுக் கணக்கு போடுகிறது. அதாவது, நித்தி இறந்துவிட்டதாக ஒரு பொய் செய்தியை நம்பவைத்து நித்தியின் ஃபைலை மூடிய பிறகு நித்தி இன்னொரு கெட்டப்பில் மொட்ட பாஸ் ‘சிவாஜி’ பட ரஜினிபோல் இந்தியாவுக்குள் புதிய சாமியாராக ரீஎன்ரீ கொடுக்கலாம். என்று நம்புகிறார்கள்.
யாருக்குத் தெரியும் பக்த கோடிகள் சொல்வதைபோல் திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு நாளை அவர் கிறீன் மேட் உதவியுடன் ‘சத்சங்’ செய்யலாம்.
எது எப்படியோ, நித்தியின் ரசிகர்கள் அவரின் செய்திகளை கூகுலில் தேடிப்படித்து குஜாலாகவே இருக்கிறார்கள்🔴
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன்  நாளிதழில் 2022, ,ஜூன், 05ம் திகதி வெளியானது.

No comments:

Post a Comment