Friday, March 6, 2020

அந்தக்கால ஆவணப் பெட்டகம்

மணி ஸ்ரீகாந்தன்.

டிரங்குப் பெட்டி! இந்தப் பெயரை இன்று எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
அந்தக் காலத்தில் நம்வர்களின் பீரோ, அலுமாரி எல்லாம் இந்த டிரங்குப் பெட்டிதான். எல்லோர் வீடுகளிலும் பரண் மேல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த டிரங்குப் பெட்டி விட்டுச் சென்ற நினைவுகள் பசுமையாக இன்று எம் அனைவர் மனதிலும் கருப்பு, வெள்ளை படமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

குறிப்பாக இந்தப் பெட்டியை திறந்தால், ஆடைகள், நைந்து போன கடிதங்கள், டயறி, மற்றும் ஆவணங்கள். பொட்டலமாக துணியில் கட்டப்பட்டிருக்கும் தங்க ஆபரணங்கள் என்று பலவிதமான பொருட்களின் காப்பக பெட்கமாக இருந்தது இந்த டிரங்குப் பெட்டிதான்.
வீடுகளுக்கு அலுமாரி வராத காலத்தில் கோலோச்சிய இந்த டிரங்குப் பெட்டி இன்று வீடுகளிருந்து வெளியேறி விட்டது.
எல்லாம் கால மாற்றம் தான்.
அந்த நாட்களில் வீடுகளின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிரங்குப் பெட்டிகள் கலர் கலராக வண்ணம் பூசப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும்.
பெட்டியின் உரிமையாளர் அதற்கு ஒரு பூட்டைப் போட்டு தமது உடமைகளை அதில் வைத்திருப்பார். வண்ணங்களின் அடிப்படையில் அவைகள் அடையாளம் காணப்படும்.

சாதரண ஏழைகளின் வீடுகளில் ஒரு டிரங்குப் பெட்டிதான் இருக்கும். அந்தக் குடும்ப உறுப்பினர்களின் உடமைகள் அனைத்தையும் உள்வாங்க முடியாமல் விழி பிதுங்கியபடி டிரங்குப் பெட்டிகள் காட்சியளிக்கும்.
அந்தக் காலத்தில் எமது பயணத்தின் தோழனாக நம்மோடு பயணிப்பது இந்த டிரங்குப் பெட்டிகள்தான். இந்திய வம்சாவளி தமிழர்கள் புலம்பெயர்ந்து இலங்கைக்கு வரும் போதும் இந்த டிரங்குப் பெட்டிகளோடுதான் வந்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இலங்கையில் எல்லா நகரங்களிலும் உள்ள கடைகளில் இந்த டிரங்குப் பெட்டிகள் விற்பனைக்கு இருந்திருக்கின்றன. இதே வேளை தலைநகர் கொழும்புவில் உள்ள சென்றல் வீதி மட்டுமே டிரங்குப் பெட்டிகள் மொத்த சில்லரை வியாபாரம் நடைபெறும் இடமாக இருந்திருக்கிறது.
அந்த வீதியில் நெடுகிலும் டிரங்குப் பெட்டிகள் விதவிதமான அளவுகளில் வண்ணமயமாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அந்த வீதிகளில் டிரங்குப் பெட்டிகளை பார்க்க முடியவில்லை. டிரங்குப் பெட்டிகளுக்கு என்ன நடந்தது என்று அந்த தெருவில் வசிக்கும் கோவை கணேஷிடம் கேட்டோம்,

கோவை கணேஷ்
“நம்மவர்கள் எல்லோரும் இன்று பீரோ, அலுமாரிக்கு மாறிவிட்டதால் டிரங்குப் பெட்டிகள் மறைந்துவிட்டன.
பயணங்களுக்கு கொண்டு செல்லவும் துணிகளிலான மொடர்ன் பைகள் வந்துவிட்டதால் டிரங்குப் பெட்டிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். நான் அறிந்து இந்த தெருவில் ஓரிரண்டு கடைகளில் மட்டும் சிறிய அளவிலான டிரங்குப் பெட்டிகள் விற்பனைக்கு இருந்தன. ஆனால் அது உறுதியான தகரத்தில் செய்யப்பட்டதல்ல. மிகவும் மெலிதான தகரத்தில் தயாரிக்கப்பட்டவை.
இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் ஒரு சிலர் மட்டுமே  அந்தப் பெட்டிகளை வாங்கிச் செல்வதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
வீடுகளுக்கு யாரும் டிரங்குப் பெட்டிகளை வாங்கிச் செல்வதும் இல்லை.
அந்தக் காலத்தில் நாங்கள் குடும்பத்துடன் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது இந்த டிரங்குப் பெட்டிகளில்தான் இனிப்பு உள்ளிட்ட எல்லாப் பொருட்களையும் வைத்து எடுத்துச் செல்வோம்.” என்று சொல்லும் கோவை கணேஷ் இன்னொரு விடயத்தையும் ஞாபகப்படுத்தினார்.

“அந்தக் காலத்தில் நான் ராமானுஜம் கப்பலில் வியாபார நோக்கில் தமிழகத்துக்குச் செல்வேன் அப்போது அந்த கப்பலில் தமிழகத்துக்கு தாயகம் திரும்பும் நம் உறவுகள் எல்லோரும் ஆளுக்கொரு டிரங்குப் பெட்டி வைத்திருப்பார்கள்.
அந்தப் பெட்டியில் அவர்களின் பெயர் வெள்ளை நிற பெயிண்டால் எழுதப்பட்டிருக்கும்.      உதாரணத்துக்கு ராசையா ஆதிமூலம், மண்டபம் முகாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
தமிழர்களின் வாழ்வியலோடு நீண்ட காலம் பயணம் செய்தது இந்த டிரங்கு பெட்டிகளாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டிலும் ஒரு பழங்கால டிரங்குப் பெட்டி இருக்கிறது. அந்தப் பெட்டியை ராமநாதபுரம், சாயல்குடியை சேர்ந்த என் அப்பா முத்துக்கருப்பன் பயன்படுத்தினாரு. அவரின் மறைவுக்குப் பிறகு என் அம்மா அந்தப் பெட்டியை பாதுகாத்து வந்தாரு. இப்போ நான் அதனை வைத்திருக்கிறேன்.
சில வீடுகளில் இன்று கேட்பாரில்லாமல் குப்பைகளில் வீசப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு டிரங்குப் பெட்டிகளும் எத்தனையோ பசுமையான நினைவுகளை சுமந்துக் கொண்டு மௌனமாக கிடக்கின்றன என்பதுதான் உண்மை!” என்று டிரங்குப் பெட்டிகளின் நினைவுகளில் மூழ்கிப் போனார் கோவை கணேஷ்.

சதாசிவம்
டிரங்குப் பெட்டிகளை பெரும்பாலும் வலையல், சீப்பு, சோப்பு விற்பனை செய்வோர் சுமந்து வருவார்கள். அந்த டிரங்குப் பெட்டிகள் பார்க்க ரொம்ப அழகாக வண்ணம் தீட்டப்பட்டு இருக்கும். பெரும்பாலான பெட்டிகளில் ஒட்டப்பட்டிருக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டிருப்பார்.
நம் மக்களிடையே டிரங்குப் பெட்டிகளின் பாவனை அமோகமாக இருந்தக் காலத்தில் அதனை சார்ந்து பல தொழில்களும் இயங்கி வந்துள்ளன. அதில் ஒன்றுதான் டிரங்குப் பெட்டிகளுக்கு வர்ணம் தீட்டும் தொழில். மலையக தோட்டப் பகுதிகளுக்கு அந்தக் காலத்தில் இந்த டிரங்குப் பெட்டி பெயிண்டர்கள் பவனி வருவார்களாம். அந்த அனுபவம் பற்றி ஹொரணையைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் எம்மிடம் ரொம்பவும் மகிழ்ச்சியுடன் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

“அந்தக் காலத்துல வருடத்துக்கு ஒரு முறை தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் இந்த டிரங்குப் பெட்டி பெயிண்டர்கள் ஊருக்குள் வருவார்கள். வெற்றிலை கறைப் படிந்த பற்கள், கட்டம் போட்ட சாரம், முண்டா பணியனோடு ஒரு சிறிய சாக்குப் பையில் பெயிண்ட் டப்பாக்கள், பிரஷ், மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்களையெல்லாம் போட்டு எடுத்து வருவார்கள். பம்பை தலையோடு, அவங்களை பார்க்கிற போது, நடிகர் யோகி பாபு மாதிரி இருப்பார்கள்.
அவங்க வந்ததும் அவங்கள சுற்றி சின்னப் பசங்க நாங்கள் எல்லோரும் ரவுண்டு கட்டிடுவோம். அவங்களும் உட்கார்ந்திடுவாங்க பிறகு வீடுகளிலிருந்து டிரங்குப் பெட்டிகளை கொண்டு வந்து பெயிண்ட் அடிக்க கொடுப்பார்கள். அவர்கள் பெயிண்ட் அடிக்கும் அழகை வச்சக் கண்ணு வாங்காம பார்த்திட்டு இருப்போம். அவ்வளவு அழகாக இருக்கும். வளைவு கோடுகள், பூக்கள் போன்ற டிசைன் போடுறதுக்கு சில அச்சுகளை செய்து வைத்திருப்பார்கள் அதில் டிசைன் போடுவார்கள். சில பெட்டிகளுக்கு பெயிண்ட் பூசி விட்டு அது காயவில்லை என்றால் அடுத்த நாள் வந்து அதற்கு டிசைன் போட்டு அதனை முடித்து கொடுப்பார்கள்.
நாடோடிகள் மாதிரி வரும் அவர்கள் அந்தந்த ஊரில் உள்ள கோயில்களில் தங்கியிருந்து இந்த வேலையை முடித்து விட்டு தொழிளாலர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நாளில் அவர்களுக்குரிய கூலியை வீடுகளுக்கு வந்து பெற்றுக் கொள்வார்கள். ஒரு ரூபா, அல்லது இரண்டு ரூபான்னு பெட்டிகளின் அளவைப் பொறுத்த கூலி விலையை நிர்ணயம் செய்திருப்பார்கள்.
எல்லோர் வீடுகளிலும் டிரங்குப் பெட்டி இருந்ததால் அவர்களும் கை நிறைய நல்லா காசும் சம்பாதிப்பார்கள். அவர்கள் பெயிண்ட் அடிக்கும் பெட்டிகளில் பெரும்பாலும் பச்சை நிறமும், வெள்ளை நிறத்தில் கோலம் போட்டது போல டிசைன்னும் இருக்கும்” என்று சொல்லும் சதாசிவம் பழைய நினைவுகளில் பூரித்துப் போகிறார்.

நம்மவர்களின்  வாழ்வியலில் பிரிக்க முடியாததாக இருந்த டிரங்குப் பெட்டிகள். இன்றோ அவை அருங்காட்சியகக் காட்சி பொருள்கள்போல ஆகிவிட்டன. நம்மூரில்தான் டிரங்குப் பெட்டிகளுக்கு இந்த நிலைமை. ஆனால், வெளிநாடுகளில் டிரங்குப் பெட்டிகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவே இல்லை. இன்னும் பல வெளி நாடுகளில் டிரங்குப் பெட்டிகள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஷிவாஸ் ரீகல் என்ற நிறுவனம் ‘மேட் ஃபார் ஜென்டில்மேன்’ என்ற பெயரில் டிரங்குப் பெட்டியைத் தயாரிக்கிறது. இது ஒரு சொகுசு டிரங்குப் பெட்டி. ஓக் மரத்தில் இந்த டிரங்குப் பெட்டி செய்யப்படுகிறது. பாரம்பரிய வடிவமைப்பை மாற்றாமல் நேர்த்தியான வசதிகளுடன் இந்தப் பெட்டி தயாரிக்கப்படுவதுதான் இதன் சிறப்பு.
இப்போது உள்ள நவீனப் பெட்டிகளில் இருப்பதுபோல இதில் டிரோலி வசதியும் உள்ளது. எனவே கையிலோ தலையிலோ தூக்கி வைத்துக்கொண்டு அலையத் தேவையில்லை. எளிதில் இழுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துவிட்டுப் பயணத்தில் மூழ்கலாம். இந்தப் பெட்டிக்குள் தண்ணீர், உணவு, துணிகள், கடிகாரம், பாதணிகள் வைக்கக் கச்சிதமாக இடங்கள் உள்ளன. நவீன வசதிகளுடன் பாரம்பரிய முறையிலும் தயாரிக்கப்படும் இந்த டிரங்குப் பெட்டியின் விலை வெறும் 18 ஆயிரத்து 800 அமெரிக்க டொலர் மட்டுமே!
இங்கிலாந்தில் மட்டுமல்ல இத்தாலியில் கையினால் இழைத்துச் செய்யப்பட்ட டிரங்குப் பெட்டிக்கும் வரவேற்பு அமோகமாக உள்ளதாம். குக்சி நிறுவனம் இந்த டிரங்குப் பெட்டியைத் தயாரித்திருக்கிறது. மர டிராயர், நகைகள் வைக்க லினன் துணி டிராயர் என இதில் வசதிகள் உள்ளன. பாதுகாக்கப் பிரத்யேகமான பூட்டு வசதியும் உண்டு. இந்த டிரங்குப் பெட்டியின் விலை 49 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்தான்.
இந்த சொகுசு டிரங்குப் பெட்டிகளின் விலை வாயைப் பிளக்க வைத்தாலும்,
காலம் கடந்தும், அசராத அழகுப் பெட்டிகள் இவை!
இப்படியாவது உயிர் வாழ்கிறதே என்பது  ஒரு வகையில் மகிழ்ச்சிதான்🔴

1 comment:

  1. Your Affiliate Profit Machine is waiting -

    And making money online using it is as simple as 1 . 2 . 3!

    Here is how it all works...

    STEP 1. Tell the system which affiliate products you want to push
    STEP 2. Add some PUSH BUTTON traffic (it LITERALLY takes JUST 2 minutes)
    STEP 3. Watch the affiliate system grow your list and sell your affiliate products on it's own!

    Do you want to start making money??

    Click here to make money with the system

    ReplyDelete