Friday, May 27, 2022

சோப்பின்றி குளிக்கலாமா..?




ன்றைய நவீன காலகட்டத்தில் சவர்க்காரம் இல்லாத வீடுகளோ, நாடுகளோ இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு சவர்க்காரம் மனிதர்களின் வாழ்க்கையோடு இன்றியமையாததொரு பொருளாகிவிட்டது.
சவர்க்காரத்தைப் பயன்படுத்தாமல் குளிப்பது ஒரு முழுமையான குளியலாக இருக்காது என்பதுதான் நம் எண்ணமாக இருக்கிறது. பிறந்து சில மாதங்களேயான குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கும் நாம் சவர்க்காரத்தையே இன்று பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், சென்ற தலைமுறையின் குளியலில் சவர்க்காரம் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை என்றே கூறவேண்டும்.

வாகை மரம்

நமது பாட்டனும் பூட்டனும் குளியலுக்கு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் சவர்க்காரத்தின் வரலாறு ரொம்பவும் பழசுதான். சவர்க்காரத்தை சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பண்டைய பாபிலோனியர்கள் என்னும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் உலகிலேயே முதன்முதலில் சோப்புகளை தயாரித்து பயன்படுத்தியவர்களாம்.
மெசபடோமிய பிரதேசத்தின் புகழ்பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ் கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 - கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கான கருவை வித்திட்டது. 


சவர்க்காரம் குறித்து, மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்தப் பொருள் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்கவேண்டும். அதேநேரம், இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்கவேண்டும். மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, சாம்பலுடன் விலங்குகளின் கொழுப்புகளிலிருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை சூடுபடுத்தி கொதிக்கவைத்து வற்றச்செய்தனர். காரகரைசல் வற்றி திண்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டன. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரமாகும்.

சீயக்காய்

உலகத்தில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட சவர்க்காரம் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
இந்த சவர்க்காரம் படிப்படியாக வணிகர்களின் வாயிலாக சிரியா, உரோம், எகிப்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.  Soap என்ற சொல் Sapo என்ற லத்தின் சொல்லிலிருந்து பிறந்ததாகும். கி.மு. 7ஆம் நூற்றாண்டில் உரோமாபுரி பேரரசின் தலைநகரான ரோமில்  Sapo என்றொரு மலை இருந்தது. அந்த மலை எதிர்பாராத விதமாக ஒரு நாள் தீப்பற்றிக்கொள்ள அந்த மலையில் வசித்த விலங்குகள் உட்பட மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. அக்காலகட்டங்களில் சோப்பு தயாரிக்க விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்த காரணத்தினால், முற்றிலும் எரியாமல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து கொழுப்பை நீக்கிய பின்பே அவற்றின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்துபோன அந்த விலங்குகளின் நினைவாக அந்த மலையின் பெயரை சோப்புக்கு Sapo என்று பெயரிட்டதாகவும் கி.பி.78ஆம் ஆண்டளவில் புகழ்பெற்று விளங்கிய உரோமானிய எழுத்தாளரான பிளினி தி எல்டர் 'இயற்கையின் வரலாறு” என்ற தனது நூலில் சோப்பை பற்றி குறிப்பிடுகையில்,  Sapo  என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக Soap என்று குறிப்பிட்டுவிட்டார்,

மன்னர் நபோனிதஸ்

உச்சரிப்பதற்கு Sapo என்பதை விட Soap என்பது மிக எளிதாக இருந்ததால் அன்று முதல் இன்றுவரை அந்த பெயரே நிலைத்துவிட்டது.16ஆம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளை துவைப்பதற்கும் குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
கி.பி.1788ஆம் ஆண்டுவரை சோப்பு. தயாரித்தல் என்பது ஒரு குடிசை தொழிலாகவே இருந்து வந்தது. இந்நிலையில், 1789ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூவ் பியர்ஸ் என்பவர் முதன்முதலில் மிக எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமணத்துடன் கூடிய மென்சோப்புகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவரது மருமகனான தோமஸ் ஜே. பார்ட் என்பவர் லண்டனிலுள்ள

Isleworth GTOOTH இடத்தில் 1862ஆம் ஆண்டு சோப்பு தயாரிக்கும் கம்பனி ஒன்றை தொடங்கினார். தயாரிக்கப்பட்ட சோப்புக்கும் அந்த சோப்பு கம்பனிக்கும் தனது மாமனாரின் நினைவாக ‘பியர்ஸ்’ என்று பெயரிட்டார். இதுதான் உலகில் முதன்முதலில் வணிக நோக்கில் தொடங்கப்பட்ட முதல் சவர்க்கார கம்பனியாகும். ஆரம்பத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த சவர்க்காரத்தை மேல் தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஆனாலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சவர்க்கார பயன்பாடுகள் வெள்ளையர்களின் ஆட்சிக்குப் பிறகே புழக்கத்திற்கு வந்ததாகவும், அதுவும் குறிப்பாக வெள்ளைக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்திய ஒரு ஆடம்பரப் பொருளாகவும் சவர்க்காரம் பார்க்கப்பட்டது.


நம் முன்னோர்கள் குறிப்பாக, ராஜராஜ சோழனின் காலப்பகுதியில் குளியலுக்கு மூலிகைகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். குளியலுக்காகவும் கேச பராமரிப்புக்காகவும் நம்மவர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் முதன்மையானதாக கருதப்படுவது, அரப்பு எனும் குளியல் மூலிகை. இது உசிலை என்ற மரத்திலிருந்து கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உசிலம்பட்டியில் இந்த மரங்கள் அதிகமாக இருந்ததாகவும் அதனாலேயே அந்த இடத்திற்கு அப்படியொரு பெயர் வந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இலங்கையில் தேயிலை தோட்டப் பகுதியில் பெருமளவில் இந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன. இதனை வாகை மரம் என்றே இங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள். தமிழகத்தில் இந்த அரப்பு, மூலிகை பொடியை, கருவாகை, ஊஞ்ச, சீக்கிரி, துரிஞ்சில் போன்ற பெயர்களாலும் அழைத்திருக்கிறார்கள்.
இந்த மரத்திலிருந்து கிடைக்கும் இலைகளை பொடி செய்து நம் முன்னோர்கள் தலைக்கு பூசி குளித்திருக்கிறார்கள்.


இதேவேளை, சவர்க்காரத்துக்கு முன்னோடியாக பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் சீயக்காயிக்கும் முதலிடம் இருக்கிறது. சிகைக்காய் தலைக்கான காய் என்ற சொல்லே மருவி சீயக்காய் ஆனதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இந்த சீயக்காய் தாவரம் சரியாக வளராது. அதனால், தமிழகத்தில் காலங்காலமாக சீயக்காய்க்கு மாற்றாக உசிலை (வாகை) அரப்பு பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த குளியலுக்கான மூலிகைகளில் பச்சைப்பயறு, கடலைமாவு, அரிசிமாவு, கேழ்வரகு மாவு போன்றவற்றையும் அரைத்துப் பூசியிருக்கிறார்கள். சோப்புபோல் நுரைப்பதற்காக அதனுடன் வெந்தயம் சேர்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  நம் குளியலுக்காக இயற்கை தந்த பெருங்கொடைகளில் ஒன்றான சீயக்காய் பழத்தின் சதைப்பகுதிகளையே சவர்க்காரம் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் soapnuts என்று அழைக்கிறார்கள்.

பழங்காலத்தில் ஆசியாவைச் சேர்ந்த மக்களும் செவ்விந்தியர்களும் இந்த சீயக்காய் பொடியிலிருந்து கிடைக்கும் திரவத்தைக்கொண்டு அழுக்குகளை கழுவியதாகவும் சொல்லப்படுகிறது.
நமக்குத் தெரிந்து இலங்கையில் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரையும் ஆற்றோரங்களில் கிடைக்கும் குலு மணலை உடம்பில் பூசி குளித்திருக்கிறார்கள்,

அதனோடு உடம்பை தேய்ப்பதற்காக சிறிய குண்டான கற்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்போது துணிகளை துவைப்பதற்கு மட்டுமே அவர்கள் சவர்க்காரத்தை பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். அதன் பிறகுதான் குளிப்பதற்கான வாசனை சோப்புகள் சந்தைக்கு வந்திருக்கின்றன.
சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக எண்ணெய் படிந்துவிடும். இந்த கடின எண்ணெயை நீக்குவதற்காக சோப்பு பயன்படுத்தினார்கள். 

கப்பலில் மட்டுமல்ல, எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது. இப்படி உடலில் படியும் எண்ணெயை அகற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட சவர்க்காரத்தை பெரிய வியாபாரமாக்கிய வணிகர்கள், பல திட்டம் தீட்டி கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி நடிகர்களை நடிக்கவிட்டு நம் தலையில் கட்டிவிட்டார்கள். இப்போது சவர்க்காரத்துக்கு விலை உயர்வா, தட்டுப்பாடா என்றதும் நாம் அதிர்ந்துபோய் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகின்றோம்.
எனவே, குளியலுக்கு சவர்க்காரம் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குளிப்பது என்பது உடலின் அழுக்குகளை வெளியேற்ற என்பதை விட, உடலில் உருவாகியிருக்கும் சூட்டை வெளியேற்றி உடலை சமநிலையில் வைக்கவே.  அந்தக் கால குளியலில் வெறும் நீரும், தேவையான பட்சத்தில் எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரையும் பயன்படுத்தி “சனி நீராடு” என்று ஒளவையார் சொன்னதை பின்பற்றி குளித்து குளிர்ச்சி பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில்
கொள்ளவேண்டும். உண்மையில் சவர்க்காரம் பயன்படுத்துவதால், சருமம் அதிகம் வறண்டுபோய் விடுவதோடு சருமத்தின் செல்கள் இறந்து அல்லது விரைவில் முதுமையை அடைவதாகவும், முதுமையான தோற்றம் இளமையிலேயே ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அத்தோடு, சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நாம் தடுத்துவிடுவதாகவும் நமக்கு வாய், முகத்தில் மட்டுமல்ல, தோலின் மேல் இருக்கும் ஒவ்வொரு வியர்வை துவாரங்களும் சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயன நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் குளத்தில் கிடைக்கும் மண்ணையும் தேங்காய் நாரையும் வைத்து உடல் தேய்த்து குளித்துவிட்டு, ஈரத்துணியோடு அரச மரத்தை சுற்றிவந்து அந்த மரத்திலிருந்து கிடைக்கும் 100வீத சுத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக உள்வாங்கிக் கொண்டு நித்தம் பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றோம். ஆனால், இன்று சவர்க்காரம் நம்மை அடிமையாக்கிவிட்டது என்பதே நிதர்சன உண்மையாகும்!🔴

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன்  நாளிதழில் 2022, மே, 22ம் திகதி வெளியானது.

No comments:

Post a Comment